Friday, September 16, 2016

போர்வை

"அப்பா... பைனரி டு டெஸிமல் இன்னொரு ஸம் சொல்லு...”
சின்னவள் ஆளை உலுக்கினாள். அப்போதே சரிந்து படுத்திருந்த எனக்கு கண்ணிரெண்டும் சொருகியது. நல்ல தூக்கம்.
அண்ட்ராயர் வயசில் படிக்கும் போது கையிலிருக்கும் புத்தகத்தை தொபகடீர்னு நழவவிட்டு திட்டுவாங்கியிருக்கிறேன். “எல்லாம் படிச்சப்பறம் தயிர் சோத்தைப் போடுங்கோன்னா.. யாரு கேக்கறா? இப்போ... மாந்தம் வந்த கொழந்தைக்கு சொருகறா மாதிரி தம்பிக்கு கண்ணு சொருகறது பாரு...” என்று பாட்டி எட்டூருக்குச் சிரிப்பாள்.
சின்னவள் என்னன்னமோ சந்தேகம் கேட்டாள். என்னவோ வாய்க்கு வந்தபடி உளறினேன். கண்களின் இமைகளிரண்டும் பாட்டில் பாட்டிலாக ஃபெவிகால் தடவியது போல பச்சென்று ஒட்டிக்கொண்டது. எப்போது கண் அயர்ந்தேன் என்று தெரியாது. கொஞ்ச நேரத்தில்...
“அப்பா.. அப்பா.. நேராப் படு... ம்.. மேலே.. தலகாணிக்குப் போ... ம்..ம்..” என்று பிஞ்சு விரல்கள் தலையைக் கலைத்தது. அரைத்தூக்கத்திலும் மனசுக்குள் ஒரு இனம்புரியாத சந்தோஷம். மேடம் சொன்னபடிஎழுந்திருக்காமல் உருண்டு உருண்டு மேலே ஏறி தலகாணிக்குத் தலைகொடுத்து கண் மூடினேன். உடனே தூங்கியிருந்தால் என் வாழ்நாளின் சொர்க்க நிமிடத்தை இழந்திருப்பேன். என்ன நடந்தது தெரியுமா?
பாசக்காரக் குட்டி எழுந்திருந்து அருகிலிருந்த போர்வையை எடுத்து, ”உன்ன அவ்ளோ பிடிச்சிருக்கு...” போல கையிரண்டையும் விரித்துப் பிரித்து, என் மேல் கழுத்துவரைப் போர்த்திவிட்டாள்.
"ராசாத்தி... என் செல்லமே.."
என் பெண்ணே என் அம்மாவான தருணம்!!

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails