Wednesday, March 3, 2010

ஹேப்பி ஹவர்ஸ் வித் பரமசுகர்

 
 ==========1===========
அடர்த்தியான மரங்களையுடைய அந்த கல்லூரி மைதானம் நிரம்பியிருந்தது. வழிநெடுக துணியில் ஆரஞ்சு மற்றும் வெள்ளை வண்ண பதாகைகளும், ப்ளெக்ஸ் பேனர்களும் 'வருக' மற்றும் 'வணக்கம்' சொல்லிற்று. வெள்ளை சுடிதார், வாயில் புடவை, பட்டு புடவை, குழந்தையை இடுப்பில் தூக்கியபடி, தள்ளாத வயதாதலால் மரத்தின் அடியில்  உள்ள  பெஞ்சியில் உட்கார்ந்து கண் மூடி என இள, மத்திம, வயதான பெண் பக்தைகளும், நைக்கி ஷூ ரேபான் கூல்ஸ், பெரிய கருப்பு எழுத்தில் சமஸ்கிருத ஓம் போட்ட மஞ்சள் டிஷர்ட் நீல ஜீன்ஸ், வெள்ளை வேட்டி மற்றும் சர்ட் என நிறைய ஆண் பக்த கோடிகளும் சாமியை தரிசிக்கும் பரவசத்துடன் மதியம் இரண்டு மணி முதல் குழுமியிருந்தார்கள். சரியாக மாலை ஆறு மணிக்கு 'ஹேப்பி ஹவர்ஸ் வித் பரமசுகர்' ஏற்பாடாகியிருந்தது.
 
"காவி கட்டின ஆசாமியெல்லாம் சா....மி...கன்றாவிடா .." எள்ளலாக குரல் வந்த திக்கில் அங்கே காவலுக்கு இருந்த இரண்டு தொப்பைகள் திருப்பி பார்த்தது. கன்னங்கள் ஒட்டி, கண் உள்ளே சென்று, பரட்டையுடன், சவரமே காணாத முகமுமாக ஒரு அழுக்கு சட்டையும், இடுப்பில் துண்டா வேட்டியா என்று புரியாத ஒன்றை சொருகிக்கொண்டு அது நின்றிருந்தது.
"சாமி சாமின்னு இவனே மாலையை மாட்டிகிறான்... இவன் ஏன் சாமியை கும்புடறான்.."
"ஏய்... போ அன்னாண்ட...." என்றது ஒரு காக்கி.
"பரம சுகம்னா .. எல்லா சுகமும் இவனுக்கா இல்லை மத்தவங்களுக்கு பல சுகங்கள் தருவானா..."
"யோவ்.... இங்கேருந்து போமாட்ட..." என்று லத்தியை சுழற்றியது இன்னொரு காக்கி.

"குருவே சரணம்! பரமசுகரே சரணம்!!" "ஜெய் குருநாதா! உயிரே...திருவே..பரமே சரணம்!!" என்ற சரணகோஷங்களுக்கிடையே யானை நிற ஹோண்டா சிவிக்லிருந்து சாமியார் காவியுமாய் சிஷ்யைகள் வெள்ளையுமாய் இறங்கினார்கள். அவரின் வருகையால் அந்த இடமே ஒளி நிறைந்து காணப்பட்டது. காமிராக்களின் உபயம். எட்டுத்திக்கிலும் பார்த்து சிரித்துக் கொண்டே சிகப்பு கலர் ராஜா ஆசனம் போடப்பட்ட மேடை நோக்கி அந்த சந்நியாசி நடந்தார். அவரது திருவடிகள் மலர்ப்பாதையின் மேல் நடந்தன. காலில் அவருக்கென்று  பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட மரக்கட்டை போல் இருக்கும் ஹவாய் பாதரட்சைகள். ஆசிரம பாத்ரூமிலிருந்து வந்திறங்கிய  கார் வரை குளிரூட்டப்பட்டிருந்ததால் ஒரு பிரிட்ஜில் இருக்கும் ஆப்பிள் போல் பிரகாசமாக புத்தம்புதுசாக இருந்தார். அவருடைய கண்களில் ஒரு மகா ஒளி தெரிவதாக ஒரு அறுபது வயது ஆந்திரா பக்தர் பக்கத்தில் இருப்பவரிடம் பரவசத்துடன் பகிர்ந்து கொண்டார்.

"ஒரு பத்து நாள் வெளியில இருக்கிற தூசி துரும்பு படாம வெய்யில படாம வீட்டுக்குள்ள ஏசி போட்டுகிட்டு  இருந்து பாரு... ஒன் கண்லயும் ஒளி தெரியும்......" இப்படி ஒரு அறிவு பிட்டை கேட்ட அந்த ஆந்திரா அன்பர் "அபசாரம் அபசாரம்" என்று கன்னத்தில் போட்டுக் கொண்டார். இதை கேட்டபடியே முன்னேறிய அது அவர் உபன்யாசம் செய்யும் மேடை அருகே அவருடைய கருணைப் பார்வை படும்படி மைக்செட் கட்டியவர் பக்கத்தில் போய் அமர்ந்தது.

சொற்பொழிவு ஆரம்பித்த பரமசுகரும் அவருடைய பரம 'பக்தையும்' பரம துக்கத்தில் ஆழ்ந்தார்கள்.

===========2===========
பஸ் ஸ்டாண்ட் அருகில் இருட்டு சந்தில் கஞ்சா விற்பான். ஒரு தெரு தள்ளி இருக்கும் லாட்ஜுக்கு ஐட்டம் அழைத்து வருவான். பைக் ரிப்பேர் செய்யும் பாண்டி அண்ணன் இரவில் சரக்கு போடும் போது சைடு டிஷ் வாங்கி வருவான். பகலில் அக்கம் பக்கம் இருக்கும் எல்லா கடைகளுக்கும் டீ வாங்கி கொடுப்பான். பசங்களோடு மட்டும் விளையாடுவது எப்படி என்று அவனுக்கு தெரியாது. பாலகனாக இருக்கும் போதே பைசா எண்ணி சம்பாதிக்க கற்றுக்கொண்டான். 
"டேய்.. அதைக் குடுடா..."
"மாட்டேன்...."
"பரமேசு... வேணாம் எங்கப்பா கிட்ட சொல்லுவேன்..."
"சொல்லு... அவன் என்ன பெரிய பருப்பா..."
"வேணாம்..குடுத்துரு... "
"போடா....ங்...க.... உங்கப்பன்ட்ட வேணா சொல்லு இல்ல உங்காத்தாட்ட வேணுன்னாலும் சொல்லு...எனக்கென்ன... ஏதாவது எவனாவது கேட்டான் சொருவிடுவேன்...."
"எங்கப்பனையேவா...."
"ஆமா.... டெய்லி பாருல சரக்கு நான் தான் வாங்கியாறேன்....முட்ட முட்ட குடிச்சிட்டு வெளியே வந்தப்புறம் அப்படியே ஒரே சொருவு... அவ்வளோதான்.. கதை முடிஞ்சிரும்..  "

அப்படி பால்ய பருவத்திலேயே சொருவிட்டு ஓடிய பரமேசு பதினெட்டு வயதுக்கப்புறம் ரிலீஸ் ஆனான். வெட்டியாக சில பல நாட்கள் திரிந்தான். வயிற்று பிழைப்புக்கு வழி தெரியாமல் திண்டாடிய ஒரு மாலை நேரத்தில் ஒருவனை கத்தியால் கடைத்தெருவில் குத்தி மற்றவனிடம் ஆயிரம் ருபாய் பணம் பெற்றான். அந்தப்பணம் ஒரே நாளில் செலவானதால் நிறைய சம்பாதிக்க ஒரு உபாயம் தேடினான்.  நல்ல 'குரு'  ஒருவரின்  ஆசியால் விபூதி வரவழைப்பது, வாயிலிருந்து லிங்கம் எடுப்பது, ஓடிப்போன புருஷன் திரும்ப எப்போ வருவான் என்று குறி சொல்வது, பகவத் கீதை, இராமாயணம், மகாபாரதம் போன்றவற்றை கரைத்து குடித்து எப்படி பணம் சம்பாதிப்பது என்று கற்றுக்கொண்டான்.  அமாவாசை அன்று லிங்கம் எடுக்கும் போது ரத்தம் கக்கி அந்த குரு சாவதற்கு அவர் முழுங்கிய லிங்கத்தில் விஷம் வைத்தான். பரமேசு பரமசுகர் ஆனான். 
===========3===========
மூன்று அடுக்கு மாடி, பத்து கார் நிறுத்துவதற்கு இடம், ஸ்விம்மிங் பூல் என்று சகல வசதிகளும் கொண்ட வீடு அது. முதலாளியம்மா வீட்டில் இல்லாத நேரம் அந்த வீட்டின் எஜமானனுக்கு ஒரு அரவணைப்பு தேவைப்பட்டது. அரவணைக்க சென்றவளுக்கு எஜமானி ஆகவேண்டும் என்ற ஆசை எழுந்தது. ஒரு ஆனந்த விகடன் முடிந்து மறு ஆ.வி் வீட்டு வாசலில் விழும் போது இவள் புதிய எஜமானி ஆனாள். பழையதை எஜமானன் செக்யூரிட்டிகளிடம் சொல்லி வாசற்படி மிதிக்க விடாமல் விரட்டினான். முப்பது நாளைக்குள்  முன்னூறு கோடி சொத்தையும் அபகரித்துக் கொண்டு எஜமானனை வீட்டை   விட்டு  துரத்தினாள். அப்படி ஒரு பதிபக்தி. மிக சௌகரியமாக வாழ்ந்தாலும் இன்னும் தேவை என்று நினைத்தாள். புகழ், பொருள் ஈட்ட ஆகச்சிறந்த மிக சுலபமான வழியை எதிர்பாத்து காத்திருந்தாள். தனிமையும் இளமையும் தன்னை வாட்ட, வெளி வட்டாரங்களில் வளைய வந்தாள். ஒரு ஹாப்பி ஹவரில் பரமசுகரை சந்தித்தாள். அந்தரங்க சிஷ்யை ஆனாள். அவருக்கு ஆதியும் அந்தமும் ஆனாள்.
=========4===========
நிஜமான  சாமிக்கு கூட பயப்படாத அந்த சாமியார் அதுக்கு பயப்பட்டார். ஆறு மாதம் முன்பே அந்தரங்க சிஷ்யையின் ஆசைக்கு இணங்க அவளின் மாஜி எஜமானனை ஆள் வைத்து தூக்கியிருந்தார். எல்லோருக்கும் உபன்யாசம் மூலம் காண்பிக்கும் சொர்கத்திற்கு அவனை நேரேயே அனுப்பியிருந்தார். ஆனால் அது வந்து இப்போது இவர்கள் முன் அமர்ந்திருக்கிறது. எப்படி என்று புரியாமல் பயந்துகொண்டே உபன்யாசத்தை ஆரம்பித்த வேகத்தில் முடித்து மக்களின் வாழ்வியல் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய தொடங்கினார்.  முடிக்கும் அவசரம் பதிலில் தெரிந்தது. மேடையை விட்டு இறங்கும் போது பொதுச்சேவையில் இருக்கும் தன் அடியார் கூட்டத்திடம் அவரை தன்னிடம் அழைத்து வருமாறு கட்டளை இட்டது. சிவிக்கில்  நடைபெற்ற சம்பாஷனை
"என்ன வேணும் உனக்கு..."
"நீ என்னை மேலே அனுப்பலாம்ன்னு பார்த்தே... நா உன்னை உள்ளே தள்ளலாம்ன்னு...."
"என்ன பண்ணுவே?" 
"......."
"என்ன பண்ணுவே?" 
"............"
"வாய திறக்க மாட்டியா.. "
"நான் திறக்க வேண்டாம்... ஊரே இன்னும் கொஞ்ச நேரத்தில...."
"என்ன மிரட்டிரியா... வெளியிலதான் நான் பரமசுகர் ஆனா நான் என்ன பண்ணுவேன்னு உனக்கே தெரியும்... விளையாடாத... சொல்லு"
"நான் ஏன் விளையாடனும்... நீனும் என் ரெண்டாவதும் விளையாடினதை.... "
"விளையாடினதை?"
"ஹி....ஹி"
"படம் பிடிசிருக்கையா... யாரும் நம்ப மாட்டங்க... எந்த T.V. காரனும் போடா மாட்டன், ஒவ்வொருத்தனுக்கும் 'கவர்' போவுது."
"நான் எதுக்கு இன்னொருத்தனை எதிர்பார்க்கனும்... "
"ஏன் நீயே சொந்தமா பிச்சை T.V ன்னு ஏதாவது வச்சிருக்கியா...திருவோடு லோகோவோட ஹா... ஹா... ஹா.... ஹா  ....."  
இந்த வெடிச்சிரிப்பில் பரம பக்தையும்  கலந்து கொண்டாள்.
1.............2....................3....................4.......................5................ நிமிட மௌனத்திற்கு பிறகு அது பேசியது 
"உன்னோட www.paramasugar.com வெப்சைட்ட  கொஞ்சம் உன்னோட லேப்டாப்ல திறந்து பாரு. புரியும்"
பரமுவும் பக்தையும் பதபதைத்து பார்த்தால்...... அருகருகே இப்போது காரில் உட்கார்ந்திருந்த இருவரும் ஒருவராய்  ஆசிரம படுக்கையில் இருந்தார்கள். ஒருவர் மீது ஒருவர் ஏறி காதல் சண்டையில் ஈடுபட்டார்கள். விளக்கை அணைத்து போட்டு , போட்டு அணைத்து டே அண்ட் நைட் கேம் ஆக நடந்ததை உலகமே பார்த்து  ரசித்தும் அதிர்ச்சியும் கொண்டு இருந்தது. அன்றைக்கு மட்டும் www.paramasugar.com பில்லியன் ஹிட்ஸ் கண்டது என்று கூகிள் அனலிடிக்ஸ்ம் அலேக்சாவும் சான்றிதழ் வழங்கியது. கார் ஆசிரமத்தை நெருங்கும் போது ஒரு கும்பல் தீ வைத்துக்கொண்டிருந்தது. அதில் ஆக்ரோஷமாக ஒரு இளைஞன் "....த்தா. இவன்லாம் ஒரு சாமியாரு.. போலிச் சாமியாரு... செக்ஸ் சாமியாரு... மூஞ்சிய பாரு... முகரையை பாரு... கையில மட்டும் கிடைச்சான்னா... " என்று சொல்லி கீழே கிடந்த போஸ்டர் பரமசுகரின் முகத்தில் ஏறி மிதித்து கிழித்துக் கொண்டிருந்தான். காருக் குள்ளிரிந்து இதை பார்த்துக்கொண்டிருந்த பரமசுகரும் பரம பக்தையும் முகம் பார்த்து சிரித்துக் கொண்டார்கள்.

பின் குறிப்பு: இது நான் எழுதியிருக்கும் முதல் சிறுகதை. இலக்கிய தரத்தில் இல்லாவிட்டாலும் ரசிக்கும்படியாக இருக்கும் என்பது என் நம்பிக்கை. இதை சமீபத்திய சம்பவங்களுடன் தொடர்புபடுத்தி பார்த்தால் அதற்க்கு நான் பொறுப்பல்ல.

5 comments:

Senthil Kumar said...

பின் குறிப்பு, சிறுகதை அருமை.

//இதை சமீபத்திய சம்பவங்களுடன் தொடர்புபடுத்தி பார்த்தால் அதற்க்கு நான் பொறுப்பல்ல.//

இதற்காக தான் "கோவில் கூடாது என்பதற்காக அல்ல. கோவில் கொடியவர்களின் கூடாரமாய் இருக்கக்கூடாது" என்று அன்றே(1952) பராசக்தியில் தமிழக முதல்வர் கூறினார்,

chinathambi said...

சிறுகதை அருமை.
http://chinathambi.blogspot.com

cheena (சீனா) said...

அன்பின் ஆர்வி எஸ் - சிறு கதை அருமை - நடை இயல்பு - சொற்கல் எளிமை. ஆனால் முடிவென்ன ? ஆசிரமம் பற்றி எரியும் போது - இவர்கள் இருவரும் சிரித்துக் கொண்ட்த்ன் மர்மம் என்ன ? நட்புடன் சீனா

RVS said...

@cheena (சீனா)
மர்மமமெல்லாம் ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது.. ஜனங்களோட முட்டாள்த்தனத்தை பார்த்து எள்ளலாக சிரித்தார்கள் என்ற நோக்கில் முடித்தது இது. கருத்துக்கு நன்றி சார்! ;-))

RVS said...

@chinathambi

Thank you! ;-))

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails