Wednesday, April 6, 2011

கிராமத்து தேவதை - II

கதையோட என்ட்ரி பாகம் இங்கே.
*********************** இரண்டாம் பாகம் *********************

"எளிலு..." என்ற காத்திரமான பாரதிராஜாக் குரல் புல்லெட் டப்டப்பை கீழே அமுக்கி மேலெழுந்து எழில் காதில் துளைத்து அவளது லப்டப்பை துரிதப்படுத்தியது.
"என்ன மாமா?" என்ற எழிலின் கேள்வியின் கடைசி "மா" அவர் காதை அடையும் முன் காற்றில் கரைந்தது.
"இங்க என்ன பண்றே?"
காற்றில் பறந்த தாவணியை கையால் இழுத்து பிடித்து அடக்கிக்கொண்டு "கோயிலுக்கு வந்தேன்." என்றாள்.
"தனியாவா?" போன பதிலின் "ன்" முடிக்கும் முன் அவர் வாயிலிருந்து வெடித்து வெளி வந்த கேள்வி இது.
"இல்ல.. ஃபிரண்ட்ஸ் கூட.."
"சரி.சரி.. நல்லா இருட்டுடிச்சு. சாயந்தரமே கிளக்கால ஒரே மூட்டமா இருந்துச்சு. மல வாரதுக்குள்ள சீக்கிரம் வீட்டுக்கு வர வளியப் பாரு. குறுக்கால வாறதா இருந்தா சோமுத்தேவர் பங்கு வளியா வா. அங்கின வெளக்கு இருக்கும்" என்று அதட்டலுடன் சொல்லிவிட்டு புல்லட்டின் காதைத் திருகி டப்டப்டபை அதிகப்படுத்தி விரைந்தார் தங்கராஜ் மாமா. இப்போது எழிலின் லப்டப் வேகம் குறைந்து சமநிலை பிடித்தது. வண்டி பின்னால் தொங்கிய ஏதோ ஒரு திராவிட கட்சி சின்னம் வரைந்த மட் ஃப்ளாப் ஓசியில் தரை பெருக்கியது. அதன் வேகத்தில் நடுரோட்டில் கிடந்த சில வைக்கோலும் யாரோ பொட்டலம் தின்று போட்ட எண்ணெய் திட்டுதிட்டாய் ஊறிய பேப்பரும் பறந்து ரோடோரத்தை அடைந்தன. செம் புழுதி பறந்து அடங்கியது.

rainy day
எழில் திரும்பிப் பார்க்க "யப்பாடி!" என்று பெருமூச்சோடு நெஞ்சைப் பிடித்துக்கொண்டு வெளியே வந்தான் சிவா.
"ஏய்.. எதுக்கு இருட்டுல என் பின்னால வரே! யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க?"
"ஆக்காங். யார் என்ன நினச்சா என்ன? நான் உன்ன நினச்சேன். நீ என்ன நினச்சே..." என்று ராகமாக பாடினான்.
"ஐயோ! நிறுத்து. நிறுத்து. அதான் டவுன்ல பாக்கிற இல்ல. இப்ப என்ன வந்திச்சு."
எங்கிருந்தோ கிளம்பிய காற்று இங்கே வந்து காதலுக்கு கொஞ்சம் ஒத்தாசை செய்தது. போகிற போக்கில் வெட்கம் இல்லாமல் அவள் மேலாடையை சிறிது கலைத்தது. ஓரஞ்சாரம் தெரிந்த அந்த இருட்டில் ஆந்தை ஆனான் சிவா.
"இல்ல. இந்தப் பச்சயில உன்ன பார்க்கும்போது என் பச்ச மனசு பருத்திக் காடா பத்திக்கிச்சுடா. அதான்."
"சரி..சரி.. பக்கத்துல வராதே. யாராவது பார்த்தாங்க எங்க வீட்ல வத்தி வச்சுடுவாங்க. அப்புறம் உன்னையும் என்னையும் சேர்த்து ஈ.பி கம்புல கட்டி நிஜமாவே பத்த வச்சிடுவாறு எங்க மாமா. நாளைக்கி டவுன்ல பார்க்கலாம். இப்ப கிளம்பு"  என்று பரபரத்தாள் எழில்.
"ஐ! உன்னையும் என்னையும் சேர்த்து ஒண்ணா கரண்டு கம்பத்துல கட்டுவாங்களா... இது நல்லா இருக்கே. அப்ப யாராவது பார்க்கட்டும்..." என்று சிரித்துக் கொண்டே அவளை நெருங்கினான்.

தங்கராஜ் மாமா புல்லட்டில் போன திக்கிலிருந்து ஒரு சின்ன வெளிச்சப் பொட்டு இவர்களை பார்க்க வருவது தெரிந்தது. கொஞ்சம் கொஞ்சமாக விட்டம் அதிகமான வெளிச்சப் பொட்டு பெரிதாகி கண்களை கூசி மறைத்தது. எட்டு மணி மினி பஸ் "சீனிவாசா" எண்ணி மொத்தமாக பத்து பேரை இறக்கி விட்டது. அந்த பத்து பேரில் டவுனிலிருந்து கடைக்கு மளிகை சாமான் வாங்கி வரும் பாய், வெண்ணை விற்று வீடு திரும்பி வரும் இரண்டு பெண் வியாபாரிகள், இரண்டு கல் தொலைவில் ஒரு ஸ்டேஜ் டிக்கெட் வாங்கி மாரியம்மனை பார்க்க வந்த ரெண்டு விவசாயக் குடும்பம் ஆகியோர் அடக்கம். இன்றைக்கு முதல் நாள் திருவிழாதான். கடைசி மூன்று நாட்கள் தான் கூட்டம் அம்மும். கோயிலுக்கு பின்புறம் இருக்கும் விசாலமான இடத்தில் வண்டியை போட்டுவிட்டு டிரைவர் பெத்தபெருமாள் அண்ணாச்சி சாமி கும்பிட்டு தான் திரும்பவும் கிளப்புவார். இதுதான் சீனிவாசா ஊருக்குள் வரும் கடைசி ட்ரிப். 

இந்தக் கோடையிலும் அந்த இடம் ஜிலீர் என்று குளுகுளுத்தது. திடீரென்று காற்றின் வேகம் அதிகரித்து வேட்டி புடவைகளை உடம்போடு ஒட்ட வைத்து அங்கங்களின் அவுட்லைன் காண்பித்தது. மழை வரும் அறிகுறி தென்பட்டது. சிவா பார்த்த விழி பார்த்தபடி சொக்கி நின்றான். பார்வையால் அவளை அள்ளி சாப்பிட்டான். அவனது பார்வையில் கிறங்கிய எழில் மௌன மொழி பேசினாள். மனசுக்குள் காதல் ஊற்று பொங்கியது. தூரத்தில் குலை தள்ளிய  வாழைமரம் இந்த காற்றை எதிர்க்க தெம்பில்லாமல் இலைத் தலையை விசிறி அல்லாடியது. பக்கத்தில் ரெண்டு கன்னும் தாய் வாழையை தாங்கி ஆதரவுடன் நின்றது. ஒன்றிரண்டு தூறல்கள் மண்டையில் விழ ஆரம்பித்தன. உயிர்த்து எழுந்து இருவரும் ஓடிப் போய் ஆத்தா சந்நிதிக்கு எதிர்த்தாற்போல் எதிரும் புதிருமாய் நின்றார்கள். இன்னமும் ஓரப் பார்வையால் அவனை மேய்ந்து கொண்டிருந்தாள் எழில். பளீரென்று அடித்த மின்னல் விளக்கின் உதவியால் அவள் பார்வைப் பின்னல்களை பார்த்தவனுக்கு விறுவிறுவென்று உடலில் மின்சாரம் ஏறியது. சடசடவென்று பெருந்தூறல்கள் விழ ஆரம்பித்தது. "படார்...." என்று வானத்தை பிளந்துகொண்டு பெரும் இடி ஒன்று இறங்கியது. எழில் அச்சத்தில் ஒரு முறை குலுங்கினாள். பயமுறுத்திய இடியை சபித்தான் சிவா. மரக்குடைக்குள் பாதி பேரும் கோயிலுக்குள் மீதி பேரும் தஞ்சம் அடைந்தனர். "சோ...." என்ற பெருமழை பொழிய ஆரம்பித்தது. தூரத்து வயற்காடுகளில் ஆங்காங்கே ஒன்றிரண்டு போர்செட்டு விளக்குகள் தண்ணீர்த் திரையின் பின்னால் மங்கலாக தெரிந்தன.

கதிருக்கு அவன் அப்பாவிடம் இருந்து அழைப்பு வந்தது. ஒரு ஜவ்வுத் தாளை எடுத்து தலைக்கு சுற்றிக்கொண்டு "டேய்.. வரேண்டா... நாளைக்கு பார்ப்போம்" என்று சொல்லிக்கொண்டே சைக்கிளில் பறந்தான். எழில் கூட வந்த பரிவாரங்கள் தெரிந்தவர்கள், அண்ணி, அத்தை, ஆத்தா என்று வருவோர் போவோரிடம் குடையில் ஒண்டிக்கொண்டு "வரேண்டி.." என்று கைகாட்டிவிட்டு போனார்கள். சிறிது நேரத்தில் கோயில் காலி. பூசாரி, சிவா, எழில் மற்றும் ஓரிரண்டு சொற்ப பேர்களுடன் அந்த கோவில் கோர மழையின் பிடியில் சிக்கியிருந்தது. கோடை மழை சகட்டுமேனிக்கு வெளுத்து வாங்கியது. ரோட்டின் ஒரு புறத்தில் இருந்து மறுபுறத்திற்கு தண்ணீர் வழிந்தோடி பக்கத்தில் இருக்கும் ஆற்றுக்கு கிளை போல சிற்றாராக ஓடியது.

தூரத்து கிராமத்தில் இருக்கும் சர்க்கரை ஆலை சங்கு ஒன்பது மணிக்காக ஊதியபோது சடார் என்று மின்சாரம் தடைபட்டு கண்ணுக்கு எட்டிய தூரம் வரை காரிருள் படர்ந்தது. மழையின் தாக்குதல் குறையவில்லை. கோயிலை சுற்றி சுவர்க்கோழிகள் கிரிக்கிரிக் என்று பேசிக்கொள்ள ஆரம்பித்துவிட்டது. உள்ளே அம்மனுடைய கருவறை தொங்கு விளக்கில் மங்கிய வெளிச்சம் கிடைத்தது. வாவ்! சற்றுமுன் அடித்த மின்னலில் எழில் கொஞ்சும் எழிலை பார்த்தான் சிவா. ஒரு அடை மழை. ஆற்றங்கரையோர அம்மன் கோவில். அவ்வப்போது அடிக்கும் மின்னலின் இயற்கை வெளிச்சத்தில் காதலி. காணக் கிடைக்காத அபூர்வமான நேரம்! எவ்வளவு நேரம் அப்படி நின்றார்கள் என்று அவர்களுக்கு தெரியாது.

"நா வரட்டுமா.." என்று உதவிக்கு கேட்டான் சிவா.
"உஹும்.. வேண்டாம்.. நா அப்படியே குறுக்கால நடந்து போய்டுவேன்."
"மழையில வரப்பு வழுக்கும். காலை நண்டு கிண்டு ஏதாவது கடிச்சிடப் போகுது"
"அதெல்லாம் ஒன்னும் ஆகாது... நா கிளம்பறேன்..."
"ஏய் மழை கொஞ்சம் நிக்கட்டும்.."
"இப்போதைக்கு விடற மாதிரி இல்லை.. அப்பா தேடும். அம்மா வையும்."
"நா வேணா வண்டியில கொண்டு வந்து விடட்டா?"
"அச்சோ.. போதும் போ. தோலை உரிச்சுடுவாங்க."
"இல்ல. அக்ரஹாரம் முனையில எறக்கி விட்டுடறேன்... அப்டியே போய்டு.."
"வேணாம். யார்னா பார்த்தா வம்பாயிடும். நா போறேன்.."

மழையில் தன்னிடம் இருந்து பிய்த்துக்கொண்டு நடந்தவளை துரத்தி தனது ஹீரோ ஹோண்டாவில் ஏறச் சொன்னான். அவன் தோளைத் தொடும் ஆசையில் "வேண்டாம்.. யாராவது பார்த்துட்டா..." என்று உதடுகள் சொல்ல உடம்பு தானாக பில்லியனை நிரப்பியது. கொட்டும் மழையில் காதல் சொட்ட சொட்ட நனைந்தார்கள். முதல் கியர் மாற்றி க்ளட்சை விடும் போது முதுகில் ஏற்பட்ட சிறு மோதலில் ஜிவ்வென்று விண்ணில் பறந்தான். அத்தனை குளிரிலும் சிவாவிற்கு உடம்பு சுட்டது. தோள் பற்றிய கரங்களை ஒரு முறை தொட்டுப் பார்த்துக் கொண்டான். அவன் தொடும்போது இம்முறை அவள் ஆகாயத்தில் பறந்தாள். இருவரும் மனத்தேரில் வானத்தில் பறக்க வண்டி ரோடில் நடைவண்டியாய் ஊர்ந்தது. தோள் தொடுதலும், சிறுசிறு உரசலும், குட்டிகுட்டி மோதலுமாக இந்த நிமிடம் இன்னும் கொஞ்சம் இப்படியே நீளாதா என்றிருந்தது சிவாவிற்கு. மழை, சிவா, எழில் இம்மூவரைத் தவிர ரோடில் ஈ காக்கா காணவில்லை.

கொஞ்சம் கொஞ்சமாக மழை விட ஆரம்பித்தது. ஊருக்குள் நுழைந்து ஆர்ச் தாண்டினான். மழையில் நனைந்த கிடா ஆடு ஒன்று தலையாரி வீட்டு திண்ணையில் இருந்து கனைத்தது. அவர் வீடு தாண்டி தெருவோரம் இருந்த மாட்டுக்கொட்டாய் அருகில் லைட்டை அணைத்து வண்டியை நிறுத்தினான். கொட்டாய்க்குள் இருந்த லக்ஷ்மி பார்த்தது. தலையாரி வீட்டு சுவர்க்கடிகாரம் பத்து அடித்து ஓய்ந்தது. மின்சாரத் தடை நீங்கி தெருவிளக்கு எரிந்தது. வலதுகைப் பக்கம் திரும்பி சிவா வண்டியில் பறந்தான்.

சொட்டச் சொட்ட உள்ளாடை வரை நனைந்த எழில் இறங்கி அவள் வீடு நோக்கி நடந்ததை ஒரு ஜோடிக் கண்கள் பார்த்துக் கொண்டிருந்தது.

தொடரும்.
பட உதவி: carolinaparrothead.blogspot.com

-

32 comments:

பொன் மாலை பொழுது said...

மைனரே........ரொம்பதான் நீட்டிகிட்டு போறது மாரி இருக்கு . ஏன் அய்யா இப்படிஉயிரை வாங்கணும்? சட்டு புட்டுன்னு முடிக்க வேண்டாமோ?
சுப சீக்ர- இத நான் சொல்லித்தான் இந்த கலியுக காளிதானுக்கு புரியனுமோ?

அப்பாதுரை said...

ஆ! பக்குன்னுதே?

ஸ்ரீராம். said...

ஜெ....யை படம் வரையக் கூப்பிட்டிருக்கலாமே...!

சிவகுமாரன் said...

திக்கு திக்குன்னுது மனசு

சக்தி கல்வி மையம் said...

ஏன்? நல்லாதானே போயிட்டிருக்கு? தொடருங்கள்..

Anonymous said...

இப்போ தான் கியர் அப் ஆயிருக்கு, உடனே வண்டிய நிறுத்திடாதீங்க அண்ணே! :)

பத்மநாபன் said...

நாங்க மொத்தமா படிச்சுட்டு தான் கமெண்டுவோம்....

வெங்கட் நாகராஜ் said...

காதல் கதைல ஆரம்பிச்சு திகில் கதை மாதிரி போகுதே தொடர்.... ரொம்பவே அதிக த்ரில்... சீக்கிரம் சொல்லுங்க, அந்த கண்கள் யாருடையது? பார்வையின் விளைவு என்ன.... அடுத்த பகுதிக்கு காத்திருக்கிறேன் மைனரே...

தக்குடு said...

அதானே! யாரும் பாக்காம இருக்கும் போது காதலர்கள் வந்து இறங்கினதா சரித்திரமே கிடையாதே!!..:)

Anonymous said...

யார் என்ன நினச்சா என்ன? நான் உன்ன நினச்சேன். நீ என்ன நினச்சே.

Classic.

//உன்னையும் என்னையும் சேர்த்து ஈ.பி கம்புல கட்டி நிஜமாவே பத்த வச்சிடுவாறு எங்க மாமா//

அந்த ஊர்ல கரண்ட் இருக்கா. கொடுத்து வச்சவங்க.

Chitra said...

Thrilling and Interesting.

raji said...

ஒரு ஜோடிக் கண்கள்? போச்சு! எழிலோட எழிலான வாழ்க்கை ஓவர் போலருக்கே??!!!!!!!!!!!

எல் கே said...

ஹ்ம்ம் நடத்துங்க நடத்துங்க. யாரு பார்த்தது

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

புதுசா என்ன சொல்லிடப் போறேன் ஆர்விஎஸ்?

ரெண்டு பார்ட்லயும் புள்ளி பிசகாத வர்ணனையோட ஒரு பாரதிராஜா ஸ்டைல் கிராமத்தை நிறுத்திட்டீங்க.

எங்க கொண்டு போறீங்கன்னு யூகிக்க முடிஞ்சாலும் பின்னாடியே கூட்டீட்டுப் போயிடுறீங்க நடையால மயக்கியே.

மோகன்ஜி said...

நல்லாத்தான் போய்க்கிட்டிருக்கு. ஏதும் எடக்குபண்ணாம சுமுகமா முடிக்க வேண்டி அகில உலக ஆர்வீஎஸ் மன்றத்தின் சார்பாய்க் கேட்கிறேன்.

RVS said...

@கக்கு - மாணிக்கம்
அண்ணே.. கொஞ்சம் பொறுமையா இருங்க.... அதுக்காக காளிதாசுன்னு என்னை திட்டாதீங்க.. ;-)))

RVS said...

@அப்பாதுரை
சார்! நெசம்மாவா? ;-))

RVS said...

@ஸ்ரீராம்.
நீங்க ஒன்னும் என்னை உசுப்பேத்தலையே! பாராட்டுக்கு நன்றி ஸ்ரீராம். ;-)

RVS said...

@சிவகுமாரன்
இவங்களை என்ன பண்ணலாம்ன்னு சொல்லுங்க சிவகுமாரன். ;-))

RVS said...

@!* வேடந்தாங்கல் - கருன் *!
சரி.. தொடர்ந்துடுவோம்.. நன்றி கருன். ;-)

RVS said...

@Balaji saravana
உடனே நிறுத்த மாட்டேன்.. ஆனா இந்த குறுந்தொடர் எழுதினா கடைசி அத்தியாத்திற்கு ஒன்னும் பெருசா வரவேற்பு இல்லை போலருக்கே.. ;-))

RVS said...

@பத்மநாபன்
சரி பத்துஜி.. உங்க விருப்பம். ;-))

RVS said...

@வெங்கட் நாகராஜ்
அடுத்த பகுதி போட்டாச்சு.. த. தல. படித்து இன்புறவும்.. ;-)))

RVS said...

@தக்குடு
ஆமாம் தக்ஸ். வழக்கத்தை மாத்தக்கூடாது. என்ன... சரியா? ;-))

RVS said...

@! சிவகுமார் !
பாராட்டுக்கு நன்றி..
கரண்ட்டு கம்பம் இருக்கு கரண்ட்டு இருக்கான்னு கேட்டுதான் சொல்லணும். குறும்பைப் பாரு... ;-)))

RVS said...

@Chitra

Thanks ;-)

RVS said...

@raji
நன்றிங்க.. எழிலோட வாழ்க்கை எப்படின்னு பொறுத்திருந்து பாருங்கள்.. ;-))

RVS said...

@எல் கே
அடுத்த பார்ட்ல எழுதியிருக்கேன் எல்.கே. ;-)

RVS said...

@சுந்தர்ஜி
வேலையெல்லாம் முடிஞ்சுதா..
பாராட்டுக்கு நன்றி ஜி! ;-))

RVS said...

@மோகன்ஜி
முடிஞ்ச வரைக்கும் கொனஷ்டை இல்லாம முடிக்க ட்ரை பண்றேன் அண்ணா! ;-))

Unknown said...

hm romba nalla erukku..
orey romantic.:)

பத்மநாபன் said...

வர்ணனைக்கு வாய்ப்பாக வரப்பும் மழையும் .. வாகாக இளம் ஜோடியும் ....பொழிந்து விட்டீர்கள் ....

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails