Monday, June 27, 2011

அடியேன் 'தீராத விளையாட்டுப் பிள்ளை ' ஆர்.வி.எஸ்.

முன்குறிப்பு: இன்றிலிருந்து வலைச்சரத்தில் எழுதுகிறேன். அங்கே வெளியிட்டதை இங்கேயும் பகிர்கிறேன்.


self portrait

ஆசிரியர் என்றாலே ரொம்ப பயந்தவன் நான். அதுவும் நான் படித்த மீசை வைத்த அத்யாபக்(अथ्यापक) என்றால் 50% அடிஷனல் மரியாதையான பயம். நான் தக்ஷின பாரத ஹிந்தி பிரச்சார சபாவினர் வைத்த மத்திமா தேர்வில் கோட் அடிக்காமல் செகண்ட் கிளாசில் ஒரே முயற்சியில் தேறிய பண்டிட். சிலம்பம் சுற்றும் வாத்தியாரைக் கூட பவ்யமாக காலைத் தொட்டு கண்ணில் ஒற்றிக்கொள்வேன். குருவிற்கு ஒஸ்தி மரியாதை ஜாஸ்தி கொடுப்பவன். அவர்களிடம் மரியாதையை சரி சமமாக ஊற்றிக் கலந்த பயம் என் ரத்தத்தில் ஓடுகிறது. திருடன் கையில் சாவி கொடுப்பது போன்ற சீனா சாரின் அழைப்பை ஏற்று ஆசிரிய நாற்காலியை  அலங்கரிக்க(?!) (அ) அபகரிக்க (அ) அமர ஒத்துக் கொண்டேன். ஒரு வாரம் நான் உட்காரும் சீட்டில் யாரும் 'பின்' சொருகாமல் இருந்தால் மிக்க சந்தோஷப்படுவேன். 

சுயபுராணம், சுயதம்பட்டம், சுயவிளம்பரம், சுயசொரிதல் என்று சுயம் இருக்கும் எல்லாவற்றையும் முதல் நாள் இங்கே பகிர்ந்துகொள்ளலாம் என்று சொன்னார் சீனா. ஒன்றும் பெரிதாக சொல்வதற்கில்லை. ஆனால் கடை விரித்துவிட்டேன். என்னுடன் பள்ளி, கல்லூரி படித்தவர்களுக்கு தெரியும். நான் ஒரு வாயரட்டை. பேச்சுப் பட்டறை. பாட, பேச, கெட்ட வார்த்தையால் திட்ட, சிரிக்க, சாப்பிட, கொறிக்க, குடிக்க, ஊத, உறிஞ்ச, முத்தமிட, கொட்டாவி விட, பிளந்து குறட்டை விட்டு தூங்க, சிலரை கடிக்க என்று வாயைப் படைத்த பரம்பொருள் எனக்கு மட்டும் முக்கால்வாசி நேரம் பேசுவதற்காக மெனக்கெட்டு செய்து அம்சமாக பொருத்திவிட்டான்.

நாளுக்கு நாள் கடியின் வீச்சு அதிகமானதால் தாங்கள் தப்பிப்பதற்காக சுயநலம் மிகுந்த நண்பர்கள் சிலர் என்னை எழுதத் தூண்டினார்கள். பொதுவெளியில் வலைப்பூ ஆரம்பிக்கும் போது இதுவரை நான் கடந்து வந்த தமிழாசிரியர்கள் கையில் பிரம்புடன் கண்ணில் முறைப்புடன் ஒருமுறை என் கண்முன்னே பரேட் நடத்தினார்கள். போதும். இத்தோடு நிறுத்திக்கொள்வோம். இனி எழுதிக் கொல்வோம். இதுவரை எழுதிக் கிழித்தவைகளை கொஞ்சம் பார்ப்போம்.

2007-ம் வருஷம் "ப்ளாக்ன்னா இன்னாபா?" என்பதற்காக அரசியல்வாதிகள் போல ஊர்ப்பெயரை முன்னால் சேர்த்து ஒரு வலைப்பூ பின்னி எனது திருமுகத்தை (பயந்துடுவீங்க! ஜாக்கிரதை!) மட்டும் ஏற்றி முதல் பதிவிட்டேன். பதிவுலகம் அப்போது லேசாக அதிர்ந்தது எனக்கு அப்பட்டமாக தெரிந்தது. அப்புறம் சுமார் மூன்று வருடம் தமிழில் நன்றாக எழுதப் படிக்க கற்றுக்கொண்டு 2010- பிப்பில் கச்சேரியை ஆரம்பித்தேன். "இப்போது நீ என்ன முத்தமிழறிஞரா?" என்று என் நெஞ்சுக்கு நேராக விரல் நீட்டுபவர்கள் சற்றே மன்னிக்க. பதிவுலகில் என்னுடைய வலைப்பூவின் பெயர் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. அதற்காக பெயர்க்காரணம் சொன்னேன். நிறைய குடும்பங்களில் உறவுகள் பிச்சுப்போட்டது போல உலகெங்கும் விரவியிருக்கிறார்கள். அவர்களை ஒருங்கிணைக்க இஷ்டமித்திர பந்துங்கள் எழுதினேன். என் மானசீக ஆசான் சுஜாதாவின் நினைவு தினத்தன்று ராஜனுக்கு ராஜன் இந்த ரெங்கராஜன் தான் என்று அஞ்சலி செலுத்தினேன். 

பரமசுகர் என்ற போலிச்சாமியார் பற்றி நானெழுதிய முதல் கதை இரண்டு பின்னூட்டங்களுடன் அமோக வரவேற்பை பெற்றது. மகளிர் தினம் ஒன்று வந்ததில் ஜிப்பா போடாத கவிப்பேரரசாக அவதாரம் எடுத்தேன். வலைக் கவிஞர்கள் வருத்தம் கொண்டனர். சொல்லனாத் துயர் அடைந்தனர். வாளென வீசிய எனது கவிதைப் பேனாவுக்கு ஒய்வு கொடுத்தேன். எஃப் டிவியின் கலைச்சேவை நிறுத்தியபோது பொது நிகழ்வுகள் பற்றி எழுதிப் பார்த்தேன். மீண்டும் இரண்டு பின்னூக்கங்கள் கிடைத்தது. லோக்கலில் ஆஞ்ஜூ கோயிலுக்கு போய்விட்டு வந்ததும் Fair & Lovely பூசிய ரயிலில் சென்று வந்ததும் சமகால பயண இலக்கியங்கள் ஆயின. சாமியாரைப் பற்றி கதை எழுதிய நான் வீடியோ 'பிட்டில்' வாத்து மேய்த்த நடிகையுடன் பின்னிக்கொண்ட ஆனந்தமயமானவருக்கு பத்து நெத்தியடி யோசனைகள் சொன்னேன். எல்லோரும் நீங்களே ஒரு ஆஸ்ரமம் அமைக்கும் அளவிற்கு திறன் படைத்தவர் என்று உளமார பாராட்டினார்கள். இரண்டு சிஷ்யர்கள் வீட்டு வாசல் கதவை தட்டினார்கள்.

ஜட்டி இல்லாமல் ரயில் பயணம் செய்த மக்களை பற்றி நான் எழுதியதை தேடிப் பிடித்து "நல்லாயிருக்கு" என்று யூத்ஃபுல் விகடனில் பிரசூரித்தார்கள். குஷ்பூவும் நானும் சேர்ந்து பார்த்த விண்ணைத் தாண்டி வருவாயா பற்றி நான் எழுதிய விமர்சனம் கெளதம் வாசுதேவ் மேனனுக்கு அச்சடித்து ஸ்பெஷலாக வழங்கப்பட்டது. கும்பமேளாவைப் பற்றி போர்ஃப்ஸ் பத்திரிகையில் அபிஷேக் ரகுநாத் எழுதியது என்னை வெகுவாகக் கவர அந்தக் கட்டுரையை ஆங்கிலத்தில் இருந்து தமிழ்ப்'படுத்தினேன்'. கோடைக்கால சிறப்பு முகாம்கள் எதிலும் என் பிள்ளைகளை சேர்க்காமல் கொடைக்கானலுக்கும் மதுரைக்கும் சென்று மீனாட்சியின் அருள் பெற்று திரும்பியதை பற்றி பதிவிட்டிருந்தேன். 

உலக வலைப்பூக்களில் முதன் முறையாக கார்த்திக்கின் காதலிகள் என்று காதல் ரசம் சொட்டும் தொடர் எழுதி மக்கள் மீது மன்மத அம்பு போட்டேன். பால் தி ஆக்டோபஸ் ஆருடம் சொல்லிக் கலக்கிய காலத்தில் அதை ஒரு பிரத்யேக பேட்டி எடுத்தேன். மகாபாரதத்தில் வரும் நகுஷனைப் பற்றி சர்ப்ப..சர்ப்ப.. என்று எழுதி காப்பியம் படைத்தேன். ஆகஸ்ட்டில் சென்னையில் அடித்த பெருமழையில் பத்திரமாக நீந்திக் கரையேறி நான் இப்பெரு நகரத்தில் திரவியம் தேடுவதை பற்றி அங்கலாய்த்தேன். சினிமாவிற்குப் பெயர் வைக்க திணறுபவர்கள் இங்கே அணுகவும். போதாத காலமாகிய ஓரிரவில் மணியின் ராவணன் பார்த்துவிட்டு நான் பட்ட பாடு இங்கே.

மோகன்ஜி பதிவில் யானை ஜோக் ஒன்றிற்கு நானும் பத்மநாபனும் பின்னூட்டமிடப் போய் அது யானை மீது சத்தியம் என்ற பதிவாக மலர்ந்தது. வலையுலகில் பின்னூட்டங்களை திரட்டி பதிவிட்ட பெருமை என்னையே சாரும். (எழுத ஒன்னும் இல்லாமல் பதிவாகப் போட்டுவிட்டு பெருமை வேறு.. என்று யாரோ பேசுவது தெளிவாகக் கேட்கிறது) 2010 அக்டோபர் மாதத்தில் ஆரம்பித்தது ஊரைப் பற்றிய பதிவு. மன்னார்குடி டேஸ். இன்னமும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தஞ்சைத் தரணியின் திண்ணைக் காற்றின் பெரும் சுகத்தை அனுபவித்தவனாதலால் திண்ணைக் கச்சேரி என்று ஒன்றை ஆரம்பித்து பல தரப்பட்ட விஷயங்களை வம்பளக்கிறேன்.

ரொம்ப நாட்களாக கவிதையை விட்டுவைத்த நான் திரும்பவும் பித்துப் பிடித்து ஆக்ரோஷமாக எழுதியது ஒரு கம்ப்யூட்டர்காரனின் காதல் கவிதை. மஹாபாரத கேரக்டர்கள் பற்றி கதைகள் எழுதலாம் என்று எண்ணியதில் விளைந்தவை யார் அந்த யோஜனகந்தி? மற்றும் பாகுகன்?.  காலை நேர நடைப்பயிற்சியின் போது பைரவர்களுடன் நட்பு பாராட்டிய பழக்கத்தில் எழுதியது நாய்கள் ஜாக்கிரதை!.

ஜி போட்டு எழுதினால் தனக்கு சம்மதமில்லை என்ற அப்பாஜிக்கு எதிராக மோகன்ஜி என்னை ஏவிவிட்டு முடிந்தவரை ஜகாரம் வைத்து எழுதச்  சொன்ன சிறுகதை ஜாலிலோ ஜிம்கானா. ரஜினியின் பஞ்ச் டயலாக்குகள் பல மேலாண்மைப் பாடங்கள் எடுக்க வல்லது. ரஜினி - தி மானேஜ்மென்ட் குரு பதிவு அதன் விளைவே! கால் கடுக்க ஒரு ரிஷப்ஷனில் நின்றதால் ஒரு பதிவு, புதிய கார் வாங்கப் போகிறேன் என்று ஒன்று, சேப்பாயியாக வாங்கியபின் ஒன்று என்று கிறுக்கியிருக்கிறேன்.

அறிவியல் புனைவுக் கதைகள் எனக்கு மிகவும் விருப்பம். வாத்தியார் பேனாவால் புகட்டியது. சிலிகான் காதலி என்று ஒன்று ஒரு சிறு அறிபுனைவுத் தொடர் எழுதினேன். கிராமத்து தேவதை மற்றும் ஃபைனான்ஸ் கம்பெனி மாப்பிள்ளை என்று இரு காதல் குறுந் தொடர்கள் அப்புறம் ஒரு துணை நடிகையின் கதை என்ற க்ரைம் தொடர் என்று பல கதைகள் எழுதி பாடாய்ப்படுத்தினேன். ஆண்டவன் இப்பதிவுலகைக் காக்கட்டும்.

உப்புமா பற்றி எழுதிய துரித உணவுகளின் தலைவன் லேட்டஸ்ட் ஹிட். யாக்கை திரி  என்ற அறிபுனை கதைக் கூட பரவாயில்லை என்று பேசிக்கொண்டார்கள்.

என்னுடைய ஸ்கோர் போர்டு:

பார்வையாளர்கள்: 110650 + நாளையிலிருந்து வரப் போகிறவர்கள்
மொத்த பதிவுகள் : 364
பின்தொடர்பவர்கள்: 170
மொத்த பின்னூட்டங்கள்:  8000 + இனிமேல் வரப்போகும் அர்ச்சனைகள்

வால்மீகி ராமாயணத்தை விட ஆர்.வி.எஸ்ஸாயணம் பெரிதினும் பெரிது என்பதால் இத்தோடு எண்டு கார்டு போட்டுவிட்டேன். தப்பித்தீர்கள். ஆயுஷ்மான் பவ! நாளை முதல் நீங்கள் அறிமுகத்தில் விழிக்கப் போகிறீர்கள். நன்றி!

பட உதவி: http://www.saturdayeveningpost.com. நார்மன் ராக்வெல்லின் triple self portrait மிகவும் பிரசித்தி பெற்ற ஓவியம். என்னை நானே ஓவர் டோஸாக விளம்பரப்படுத்திக் கொன்றதால் ச்சே.. கொண்டதால் இது இந்தப் பதிவில்.

-

39 comments:

Yaathoramani.blogspot.com said...

சுய அறிமுகம் அருமை
நாங்கள் படிக்காதுவிட்ட தங்கள் படைப்புகளை
படிக்க தங்கள் சுய தம்பட்டம் உதவியாக இருக்கிறது
இவ்வாரத்திற்குள் அனைத்தையும் படித்து முடித்துவிட உத்தேசம்
பதிவுலக சாதனையாளர் என சொல்லிக்கொள்ளும் அளவு
அதிக தரமான பதிவுகள் தந்தும் தந்து கொண்டும் இருக்கிற
உங்கள் பதிவுலகப் பணி தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்

ஸ்ரீராம். said...

சுய அறிமுகம் ஜோர். ஆரம்பிங்க உங்கள் கச்சேரியை...

எங்கள் ப்ளாக் said...

ஆஹா முதல் பந்திலேயே சிக்சர்! பிரமாதம்!! தொடருங்கள் உங்கள் விளையாட்டை, இரசிக்க நாங்கள் இருக்கிறோம்!

அப்பாதுரை said...

வாழ்த்துக்கள்! வலைச்சரம் சென்று பார்க்கிறேன்.

பப்லிக்கா எய்த வுட்டுகுறாங்க.. பாத்து நைனா, சொதப்பிறாத பிர்தா?

Madhavan Srinivasagopalan said...

எனது பள்ளி நண்பன் ஆர்.வி.எஸ் அவர்களுக்கு வாழ்த்தும் பாராட்டும்.

சவால் சிறுகதைப் போட்டியில் பரிசு வாங்கிய பதிவை மறந்து விட்டீர்களா ?
சுட்ட வில்லைய... அந்த சுட்டி சுடப் பட்டு விட்டதோ ?

தமிழ் உதயம் said...

வாழ்த்துகள். சுய அறிமுகம் நன்றாக இருந்தது.

CS. Mohan Kumar said...

பத்திரிக்கையில் பணி புரிபவருக்கு ஆசிரியர் வேலை மிக பொருத்தமே. அடிச்சு தூள் கிளப்புங்க

பத்மநாபன் said...

ஆரம்பமே அசத்தலா இருக்கு ... சுயமே சுதந்திர எழுத்தா இருக்கு .... வலைச்சரத்தில் முத்துக்களை கோருங்கள் ...வாழ்த்துக்கள் ....

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

வாழ்த்துக்கள். லஷ்மி மேடம் என்னிடமும் கேட்டார்கள். எனக்கு சரியாகப் புரியவில்லை. கண்டிஷன்கள் படித்த பிறகு முடியுமா எனத் தோன்றியது.

A.R.ராஜகோபாலன் said...

வணக்கம்
வந்தனம்
வரணும்
வழக்கம்போல்
கலக்கணும்

RVS said...

@Ramani
நன்றி சார்! ;-))

RVS said...

@ஸ்ரீராம்.
Start the Music... ன்னு சொல்றா மாதிரி இருக்கு ஸ்ரீராம்! முடிந்த வரை செய்கிறேன்.. ;-))

RVS said...

@எங்கள் ப்ளாக்
அடுத்த பந்திலும் அடிக்க ட்ரை பண்றேன். நன்றி. ;-))

RVS said...

@அப்பாதுரை
சரி சார்! உங்கள் ஆசீர்வாதம்! ;-)))

RVS said...

@Madhavan Srinivasagopalan
நன்றி மாதவா! ;-))

RVS said...

@தமிழ் உதயம்
நன்றிங்க.. ;-)

RVS said...

@மோகன் குமார்
ஐயய்யோ... என்னதிது.... போதும் மோகன்... நன்றி.. ;-))))

RVS said...

@பத்மநாபன்
நன்றி பத்துஜி! ;-))

RVS said...

@வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam)
கொஞ்சம் கஷ்டமான வேலைதான்.. நிறைய புதுமுகமாகவும்... நல்ல பதிவாகவும் பரிந்துரைக்கப் பாடுபடுகிறேன்.. நிறைய நெட்டில் உலவ வேண்டியிருக்கிறது.. பிரசித்தமடையாத ப்ளாக் தேட முடிவதில்லை.. ஏதோ செய்கிறேன் மேடம்.. நன்றி. ;-))

RVS said...

@A.R.ராஜகோபாலன்
நன்றி கோப்லி! ;-)

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அட..பரவாயில்லையே..முதல் பாலிலேயே சிக்ஸரா?

தக்குடு said...

ஆ(சிரி)யர் பணி சிறக்க வாழ்த்தும் பாசமான தக்குடு!!...:)

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

ஆர்விஎஸ்!

உமக்கு இதுக்கெல்லாம் சொல்லிக் குடுக்கணுமா?

தினம் இஞ்ச எழுதறத இடம் மாத்தி அஞ்ச எழுத வேண்டியதுதான்.

அறிமுகத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.வாழ்த்துக்கள்.

RVS said...

@”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி
ஏதோ தூக்கி அடிச்சேன்.. சிக்ஸ் போயிடிச்சி.. ;-))))

RVS said...

@தக்குடு
//ஆயர் பணி //
ஸ்.... ஸ....ப்பா.. உன்னோட எதிர்காலம் எப்படி இருக்கும்ன்னு நினைச்சு பார்க்கறேன்... ஹா..ஹா..ஹா...இதுக்கெல்லாம் இருக்கு.... ;-)))))

ADHI VENKAT said...

இது வரை படிக்காமல் விட்ட பதிவுகளையும் படிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆசிரியப்பணி சிறக்க வாழ்த்துக்கள் சகோ.

RVS said...

@சுந்தர்ஜி
நன்றி ஜி! முடிந்தவரை நன்றாக அளிக்க முயலுகிறேன்.. ;-)))

ரிஷபன் said...

ஆஞ்ஜுக்கு தன் பலம் தெரியாது என்பார்கள். இப்போது உங்கள் பலம் எங்களுக்குத் தெரிந்து விட்டது..
வலைச்சரத்தில் பின்னிட்டிங்க எங்களை!

என்றென்றும் உங்கள் எல்லென்... said...

உங்க ’சுயதம்பட்டம்’ என்ற தன்னடக்க உரையை படித்ததும் ‘அட்றா சக்கை...அட்றா சக்கை’ என்று உரக்க சொல்லத்தோன்றியது.
வாழ்க வளங்களுடன்!!

மோகன்ஜி said...

ப்ரிய ஆர்.வீ.எஸ்! ஆரம்பமே களைகட்டிவிட்டது.. இதைவிட சுருக்கமாய் உமது லீலாவினோதத்தை பிழிந்து தர முடியாது.. அசத்தல்.. இன்னம் ஒரு வாரம் தீபாவளிதான் எங்களுக்கு மச்சினரே..

RVS said...

@ரிஷபன்
நன்றி சார்! பலமெல்லாம் ஆஞ்சுக்குத்தான்..... நன்றி.. ;-))

RVS said...

@என்றென்றும் உங்கள் எல்லென்...
நன்றி எல்லென். அடிச்சு சொன்னதுக்கு... ;-)))

RVS said...

@மோகன்ஜி
அண்ணா! நன்றி. ;-))

Angel said...

//இதுவரை நான் கடந்து வந்த தமிழாசிரியர்கள் கையில் பிரம்புடன் கண்ணில் முறைப்புடன் ஒருமுறை என் கண்முன்னே பரேட் நடத்தினார்கள்.//
என்னே ஒற்றுமை .அண்ணி கிட்ட சொல்லி நல்லா கைய நறுக்குன்னு கிள்ள சொல்லுங்கோ( same pinch).(என் காது எப்பவும் தமிழ் டீச்சர் கையில் தான் )
ஆரம்பமே அசத்தலா இருக்கு .வாழ்த்துக்கள் .

Sai said...

மாமா
பிச்சுடேல்.. பின்னிடேல் ...
இத்த படிக்க சொல்லோ ஒரு பாட்டு ஞாபகம் வந்தது..
வாடா மச்சி "வலைச்சரத்" க்கு வந்துட..
"அறிமுகம்" சொல்லி ஆட்டத்த ஆரம்பிச்சுட ...

பேஷ் பேஷ்.. ரொம்ப நன்னா இருக்கு ஒய்
வாழ்த்துகள்..

Unknown said...

நல்ல பதிவு , முடிந்தால் உங்கள் பதிவை இங்கேயும் இணையுங்கள்



www.tamil10.com
நன்றி

RVS said...

@angelin
நன்றிங்க ஏஞ்சலின். தமிழ் இப்போது எங்கையில தள்ளாடுது.. ;-))

RVS said...

@Sai
மாமா... பாட்டு அமர்க்களம்.. நன்றி.. ;-))

RVS said...

@தமிழினி

O.K Thanks.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails