Saturday, August 13, 2011

காதல் கணினி

முன் கதை சுருக்: மணா ஒரு மத்யமர் குடும்ப பையன். சென்னையில் ஒரு புகழ்பெற்ற மென்பொருள் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை செய்கிறான். அவனுடன் நட்பு பாராட்டிய மிருதுளா என்கிற கும்பகோணத்துப் பெண் கொலை செய்யப் படுகிறாள். அதுவும் கொடூரமான முறையில். போலீஸ் மணாவை லாக்கப்பில் அடைக்கும் முன் அவனது கம்பெனியின் சிபாரிசின் பேரில் ஜெயந்த்-விஜய் ஜோடி மீட்கிறது. அவனை போலீசிடமிருந்து காப்பாற்றி கொண்டு வரும் வழியில்.......

முதல் மூன்று பாகங்களுக்கும் சுட்டிகள்.
முதல் மாட்யூல்
இரண்டாம் மாட்யூல்
மூன்றாம் மாட்யூல்

************ நான்காவது மாட்யூல் ************

”விஜய்.. வண்டியைத் திருப்பு” என்று கைநகம் கடிபடும் கிளைமாக்ஸ் போல சீட்டின் நுனிக்கு வந்தான் ஜெயந்த். க்ரீ...ச்சிட்டு இன்னோவாவை ஒடித்தான் விஜய்.

மணா பின் சீட்டிலிருந்து சமுத்திரக்கரையில் காற்று வாங்கவும், கடலை போடவும் நிறைந்திருந்த ஜனத்திரளில் அரூபமாகக் கரைந்தான். கண்ணகி சிலை பக்கத்தில் சோடியம் வாப்பர் விளக்குகள் கள்ளத்தனமாக காதலிக்கும் ஜோடிகளை வெளிச்சம் போட்டு ஊருக்குக் காட்டிக்கொண்டிருந்தது. தண்டையைத் தூக்கியக் கையை இறக்காமல் நிறைய மாதவிகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள் அந்த மதுரையை எரித்தப் பத்தினி.

ஒரு வாரத்தின் அலுப்பையும் களைப்பையும் போக்கிக் கொள்வதற்கும் இன்னும் ஒரு வாரம் பாரம் இழுப்பதற்கும் அந்த ஞாயிறு மாலையில் பீச்சில் ஏகத்துக்கும் நெரிசல். நாளை அவரவர்கள் குப்பைக்கொட்டும் காரியாலயம் செல்ல வேண்டும். அடிமாடாய் இன்னும் ஒரு வாரம் ஈமெயில் அனுப்பி, சமோசா வித் டீ மீட்டிங் அட்டெண்ட் செய்து, மேனேஜருக்கு பல் இளித்து உழைக்கவேண்டும். இல்லாத வாலை நேசமுடன் ஆட்ட வேண்டும். ஊரில் நான்குக்கு மூன்று பேருக்கு இதுதான் பொழப்பு.

ஒரு ஸ்கார்ப்பியோ எடுத்த இடத்தில் இன்னோவாவை முன்னால் விட்டு பின் ஆரமடித்து ஸ்டைலாகச் சொருகினான் விஜய். ஜெயந்த்தும் மணாவும் முதலில் இறங்கி வழியில் வந்த ஒரு வாக்கிங் ஸ்டிக் பிடித்த தாத்தாவை இடித்துவிட்டுத் தாறுமாறாக ஓடினார்கள். இருவரில் இலக்குத் தெரிந்தவன் மணா மட்டுமே! விஜய் பின்னால் கைகாட்டி இன்னோவாவை ரிமோட்டில் பூட்டிக்கொண்டே ”கிக்..கிக்”க அவர்கள் பின்னால் தொடர்ந்து ஓடினான்.

முயல்போல புல்தரையைத் தாண்டிக் குதித்து, ஃபிகரின் கழுத்தொடிய கைகளைச் சங்கிலியாய் இணைத்து ஜீவனுருகி அவள் மடியில் படுத்துகிடந்தவனின் காலில் இடறி விழுந்து பீச் மணலில் விழுந்தெழுந்து “இங்க தான் சார் பார்த்தேன்!!” என்று பேண்ட் பின்னால் தட்டிக்கொண்டே கடற்கரை மணல்வெளியெங்கும் காதலியின் காலடியை சுற்றும்முற்றும் தேடினான் மணா. மணாவின் காலால் இடறப்பட்டவன் தியானத்தில் உசுப்பிவிட்டது போல எழுந்து காதல் தவத்தை காமதகனம் செய்த மணாவை கோபாக்கினி கொப்பளிக்க பார்வையால் எரித்தான்.

“ஸாரி ப்ரதர்.. நீங்க உங்க கடலையை கண்ட்டினியூ பண்ணுங்க” என்று கலாய்த்துவிட்டு விஜய் பாஸைத் தொடர்ந்தான்.

”பாஸ்! இவ்ளோ நாளா ஒருத்தி அதே ப்ளூ ஜீன்ஸ் வெள்ளைச் சட்டையை கழட்டாம போட்டிருந்தா.. நாம இந்த பீச்சாங்கரையில மெனக்கெட்டு ஒவ்வொருத்தரா தேடிக் கண்டுபிடிக்கவேண்டாம்.”

“விஜய்.. விளையாடாதே.. பின்ன எப்டிக் கண்டுபிடிக்கறதாம். பீ சீரியஸ்”
 
ஜெயந்த் முகத்தை சுருக்கினான்.

“பாஸ். ஒன்னு சொன்னாக் கோச்சுக்காதீங்க... ஒரு வாரத்துக்கு மேல அதே பாண்ட் சட்டையில அந்தப் பொண்ணு உலாத்தினா.. காத்து வாங்க வந்த அவ்ளோ பேரும் கப்பு தாங்க முடியாம மூக்கைப் பிடிச்சுக்கிட்டு பீச்சை காலி பண்ணிக்கிட்டு ஓடிப்போயிடுவாங்க.” என்று கேலியாய் சிரித்தான் விஜய்.


“சார்! நீங்க ரொம்ப டயர்டா இருப்பீங்க. நாளைக்கு உங்களுக்கு இம்ப்பார்ட்டண்ட் கிளையண்ட் மீட்டிங் இருக்குன்னு சொன்னாங்க. அதனாலத்தான் அதிரடியா நாங்க உள்ள இறங்கி உங்களை மீட்டோம். இப்ப நாம உங்க ரூமுக்கு போவோமே! ப்ளீஸ்..”

தோள் மேல் கைபோட்டு மணாவை அழைத்து வந்தான் விஜய். இரண்டு பஞ்சாப் பெண் சிங்கங்கள் ஒருவர் தோள் மேல் மற்றவர் இடித்துப் புஜம் சிவக்க ஒட்டி உறவாடினார்கள். ஹிந்தியில் பாத் செய்து கொண்டு சிரித்துப் பேசி கடற்கரையில் வெட்டியாய் உலவிய பல வாலிப உள்ளங்களைக் கொள்ளை கொண்டார்கள்.

“பா....ப்.....பா......” என்று “ஸ்” தொண்டைக்குள் மாட்டிக்கொண்டு வெளியே வர முடியாமல் தவிக்கக் கஷ்டப்பட்டவனைப் பார்த்து ஜெயந்த் “வேடிக்கைப் பார்க்காம வாப்பா... வேல தலைக்கு மேல கிடக்குது.... “ என்றான்.

“பாஸ்.. எனக்கென்னமோ இந்த பீச்சில தான் நமக்கு துப்பு கிடைக்கும்னு தோணுது."

"நீ வடக்கத்தி துப்பட்டாவைப் பார்த்துட்டு துப்பு..துப்புன்ரே!. வா...வா.. போலாம்”

“பாஸ்.. துப்பட்டாவை கழுத்துக்கு மாலையா போட்ட பொண்ணுக்கும் தூளியாய்ப் போட்ட பொண்ணுக்கும் என்ன வித்தியாசம்னு தெரியுமா?”

“யேய்...”

“உங்களுக்கு ஒரு துப்பட்டா சாஸ்திரம் சொல்லித் தரலாம்னா வேண்டாங்கிறீங்க...”

ஜெயந்த் முறைத்ததில் மளமளவென்று மணாவையும் தூக்கி காரில் போட்டுக்கொண்டு சீறினான் விஜய்.

காலையில் போலீஸ் ஜீப்பில் காக்கி பாதுகாப்புடன் பின்னால் ஏறிச் சென்றவன் இரவு இன்னோவாவில் சர்வ மரியாதையாக வந்திறங்கியது கண்ட மேன்ஷன் வாட்ச்மேனும், மானேஜரும் ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டார்கள்.

ரூமுக்கு ரூம் விதவிதமான சப்தங்கள். வினோத சிரிப்புகள். டி.வி. அலறல். சிகரெட் புகை. பீர் வாசனை. வெளிச்சம் இல்லா படிக்கட்டில் உருண்டு விழாமல் ஓசையின்றி மாடியேறிச் சென்று கைலியை மாற்றிக்கொண்டு ரூமில் ஒரு ஓரத்தில் சுருட்டிக்கொண்டு ஒருக்களித்துப்படுத்தான் மணா. அறை நண்பர்கள் அரை போதையில் இருந்தார்கள்.

*****


திங்கள்கிழமை ஸ்டேஷனில் காலடி எடுத்து வைத்தவுடன் முதல் அப்டேட்டே மிகவும் பயங்கரமாக இருந்தது மோகனுக்கு. ராயப்பேட்டை பொது மருத்துவமனை அட்டாப்ஸி ரிசல்ட் ரொம்பவும் பயமுறுத்தியது. ரிசல்ட் பக்கத்தில் ஒளி வட்டமாக செத்துப்போன மிருதுளா சிரித்தாள். முகத்தில் இராசாயனம் ஊற்றிச் சிதைத்து சின்னாபின்னமாக்கியிருக்கிறார்கள். ரேப் எதுவும் இல்லை என்று உறுதியாக தெரிந்தது. காதில், கழுத்தில் போட்டிருந்ததில் ஒரு பொட்டுத் தங்கம் தொலையவில்லை.

“ஹலோ”

“என்ன சார் 507 எச்ச துப்பாம டீ வாங்கித் தராரா?

“விளையாடாதீங்க விஜய் நானே மண்ட காஞ்சு போயிருக்கேன்”

“என்ன ஸார் ஆச்சு! அட்டாப்ஸி ரிசல்ட் வந்துருச்சா”

“ஆமாம் விஜய். கேஸ் வேற கோணத்துல போகுது. ஜெயந்த்தோட நீங்க கொஞ்சம் ஸ்டேஷனுக்கு வரீங்களா விவரமா பார்ப்போம்” என்று கவலையில் கூப்பிட்டார்.

வெளியே கண்ணாடி போட்ட ஏட்டு சைக்கிள் காணாமல் போய் புகார் கொடுக்க வந்த அப்ராணியை ஒரு குயர்  ஃபூல்ஸ்கேப் டம்மி வாங்கித் தரச்சொல்லி அடம் பண்ணிக்கொண்டிருந்தார்.

******


அனுஷ்கா அழகின் உச்சாணிக்கொம்பில் அமர்ந்திருந்தாள். இரு சக்கரத்தை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு ஒய்யாரமாக நடந்து வருகையில் அசால்ட்டாக ஒரு இளமை அறுவடை செய்வாள். இந்தப் பக்கம் ஒரு பார்வைக்கும் அந்தப் பக்கம் ஒரு பார்வைக்கும் ஒரு ஆயிரம் இளைஞர்களை வீழ்த்திவிடும் கூர்வேல் விழியாள். மொத்த அழகையும் குத்தகைக்கு எடுத்து ஒட்டுமொத்த ஜொள்ளர்களையும் இமையிறக்கவிடாமல் கிறங்கடிக்கும் இளமைப் பிசாசு. சிகப்பு விளக்கெரியும் சிக்னலுக்கு சாலையை குறுக்கே கடந்தால் பருவ வயது முதல் பல்லு போனது வரை பச்சை போட்டாலும் நின்று வழிவிட்டு ஒரு லிட்டர் ஆறாக பிளந்த வாய் வழியே வழிந்துவிட்டுத் தான் பயணத்தைத் தொடர்வார்கள். வார்ட்ரோபிலிருந்து கண்ணை மூடிக்கொண்டு பீச்சாங்கையால் பீத்தலாக ஒரு கந்தையைச் சுடிதார் என்று எடுத்துப் போட்டுக்கொண்டாலும் தெருவில் பார்ப்பவரின் பல்ஸ் ஏகத்துக்கும் எகிறும், பல் தெரிய வாய் பிளக்கும்.

பஞ்சாப்பில் பிறந்து அங்கே உள்ள ஏதோ பஞ்சாபி பேசும் குறுக்குச் சந்து கிருஷ்ணன் கோவிலில் நாலு டர்பன் கட்டிய சிங் சிங்கங்கள் வேடிக்கைப் பார்க்க அன்னப் ப்ராசனம் ஆனபோது சாப்பிட்ட அதே கோதுமையின் அசத்தல் நிறம். முப்பது டிகிரிக்கு மேல் ஒரு டிகிரி சூடு ஏறினாலும் மேனி குங்குமப்பூவாய் சிவந்துவிடுவாள். சுருள் சுருளாய் மருதாணிச் சாயம் பூசிய லாக்மேயில் லேயரிங் செய்த கேசம். உதட்டோரக் குறுஞ்சிரிப்பில் தெரியும் தெத்துப் பல்லில் லட்சம் பேரை மண்டியிட்டு காலில் விழவைத்து வேடிக்கை பார்க்கும் திறன் படைத்தவள்.

“அனு. நாளைக்கு ஃபிப்ரவரி முப்பதா?”

“அனு.விஷுவல் ஸ்டுடியோவில ப்ரோகிராம் கம்பைல் பண்றதுக்கு எந்த பட்டனை அழுத்தனும்”

“அனு.. அனு... ஏய் அணுகுண்டு”

“அனு. கேண்ட்டீன்ல இன்னிக்கி காலி ஃப்ளவர் பக்கோடாவாம்... நாமதான் பர்ஸ்ட்டு சாப்பிடறோம்... சரியா...”

“அனு ஜிந்தகி ந மிலேகி படத்துல சினோரீட்டா யார் பாடினா? அந்த விசிறியை வச்சிகிட்டு ஆடுற பொம்பளை யாரு?”

இப்படி அனுதினமும் வார்த்தையால் வரிக்க முடியாத டிஜிட்டலில் செதுக்கிய கிளி அனுவைத் துளைத்தெடுத்து பிச்சுப் பிடிங்கிப் அவள் பவள் வாய் திறக்க வைத்துப் பேசுவதில் பி.எம்மிலிருந்து ப்ரோகிராமர் வரை பாரபட்சமே இருக்காது. ஜொள்ளுக்கு டெஸிக்னேஷன் பேதம் கிடையாது. ஹாப்பி டெண்ட் சுவிங் வாயோடு அவளெதிரே திரிவார்கள். அப்படிப்பட்ட ’அடேங்கப்பா’ அழகி அனு மணாவுக்கு ரெண்டே நாளில் ஸ்நேகிதமானதுதான் அந்த ஆபீசில் கேண்டீனிலும், ரெஸ்ட் ரூமிலும், காரிடாரிலும் குசுகுசுப் பேச்சுக்கு மெயின் தீனி.

மணாவிற்கு ஆபீசிற்கும் மேன்ஷனுக்குமாய் ஒரு வாரம் ஜெட் வேகத்தில் பறந்து போயிற்று. விஜயும், ஜெயந்த்தும் ஓரிரு முறை மணாவை அவனது ஆபீஸ் கேண்டீனில் டீ ஆற ஆற உட்கார்ந்து க்ரைம் கதை பேசினார்கள். நான்காவது நாளில் வாசல் செக்யூரிட்டி சல்யூட்டுடன் பான்பராக் கறைபடிந்த பல்லையும் சேர்த்து காண்பிக்கும் அளவிற்கு அந்த சாஃப்ட்வேர் கம்பெனிக்கு விஜயம் செய்தார்கள்.

மணாவின் ப்ராஜெக்ட் கோஷ்டி மற்றும் டாஸ்மாக்கிலிருந்து பார்சல் வாங்கி வந்து ரூமில் இராக்கூத்தடிக்கும் சோமபான நண்பர்கள் என்று அனைவரிடமும் தேங்காயில்லாமல் துருவித்துருவி செஷன் வைத்துக் கேள்வி கேட்டார்கள். கால் பதில், அரை பதில், முக்கால் பதில் பெற்றார்கள்.

ஒரு நாள் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு அந்த சாஃப்ட்வேர் கம்பெனியில் ரெண்டு சப்பாத்தி சாப்பிட்டுவிட்டு வெளியே வரும் போது மணாவுடன் அந்த அனு ரெண்டு கால் போட்டு சிரமப்பட்டு பில்லியனில் ஏறிக்கொண்டிருந்தாள். மேட்டுப்பாங்கான பாகங்கள் பட்டும் படாமலும் உட்கார்ந்ததில் விஜய்க்கு அஸ்தியில் ஜூரம் கண்டது.

”பாஸ்! இந்த மணாப் பய பலே கைகாரன். கெட்டிக்காரன்”

“ஏன் சொல்ற விஜய்?”

“இல்ல.. மொதல்ல ஜூட் விட்ட ஃபிகர் செத்துப் பத்து நாள் காரியம் கூட ஆகல.. அடுத்ததா ஒரு அம்சமான ஆளை செட் பண்ணிட்டான் பார்த்தீங்களா? இவனுங்க ரேஞ்சே தனி..”

“ச்சே..ச்சே... நிறைய கேஸ் பார்த்ததுல.. உனக்கு ஒரு பேண்ட் சட்டை சுடிதார் கூட போனாலே லவ்ஜோடின்னு முடிவு பண்ணிடரே!! தப்புப்பா இது ரொம்ப தப்பு. ஒரு ஆணும் பெண்ணும் சகஜமா பழகக்கூடாதா?”

“ நல்ல வேளை பாஸ்.. நா நினச்ச ஒன்னை நீங்க சொல்லலை...”

“என்ன?”

“இல்ல.. பனைமரம்.. பாலு.. கள்ளுன்னு ஒரு பழமொழி சொல்லுங்க... அதைச் சொல்லலை நீங்க...”

சிரித்துக் கொண்டே வண்டியேறினார்கள்.
*********

இங்கிலாந்திடம் இந்தியா வழிந்ததைப் பார்த்துக் கொண்டிருந்த விஜய்க்கு போன் அடித்தது கூட கேட்கவில்லை. கையைல் அவுட்லுக்குடன் உள்ளே நுழைந்த ஜெயந்த் “ஏய்.. போன் அடிக்குது.. காதில விழலை..” என்று அதட்டினான்.

“சாரி பாஸ்... தோனி டீம் ஆக்ரோஷமான கடல்ல ஆடற தோணி மாதிரி இருக்கறதைப் பார்த்துட்டு நா சுய தேசப்ப்ரஷ்டம் பண்ணிக்கலாமான்னு திங்க் பண்ணிக்கிட்டு இருந்தேன்”

“ஹலோ... ஜெயந்த்...”

“...”

“அப்டியா? சரியா பார்த்தாங்களா?”

“....”

“யார் சொன்னா? கன்ஃபர்ம்டா?”

“.....”

”சரி சார்! ஒரு பத்து நிமிஷத்ல அங்கே இருக்கோம். பை.”

தீர்க்கமான சிந்தனையில் போனைத் துண்டித்தான் ஜெயந்த். இந்தியாவின் பத்தாவது விக்கட்டும் பொதக்கடீர் என்று விழ "அடிமை வீழ்ந்தான்” என்று ஆங்கிலேயர்கள் கட்டிப்பிடித்து ஆரவாரித்தனர்.

“என்னாச்சு பாஸ்”

“வேற என்ன? அனுஷ்கா அப்பீட்...”

அதிர்ச்சியில் உறைந்தான் விஜய்!

தொடரும்...

பின் குறிப்பு: காலதாமதத்திற்கு மன்னிக்கவும்.  அடுத்தடுத்த பாகங்கள் அதிவிரைவில் எழுத முயல்கிறேன். நன்றி.

படக் குறிப்பு: அனுஷ்கா என்ற கேரக்டருக்கு நடிகை அனுஷ்கா நடித்துக் கொடுத்ததற்கு நன்றி.

-

19 comments:

பத்மநாபன் said...

லேட்டானலும் ஏக வர்ணனைகளோட வந்திருக்கிங்க....அதுலையும் அனு ஸ்தோத்திரம் சற்று தூக்கலாகவே இருந்தது...

வசந்துக்கு விஜய் ..கணேஷ்க்கு ஜெயந்த் ன்னு முடிவு பண்ணிட்டீங்க அசத்துங்க...

அப்பாதுரை said...

சீரியல் மேட்டரா? பலே. சுவாரசியமாத்தான் இருக்கு. (மாதவி கமென்ட் கொஞ்சம் இடிக்குதுங்க)

சத்ரியன் said...

// சிகப்பு விளக்கெரியும் சிக்னலுக்கு சாலையை குறுக்கே கடந்தால் பருவ வயது முதல் பல்லு போனது வரை பச்சை போட்டாலும் நின்று வழிவிட்டு ஒரு லிட்டர் ஆறாக பிளந்த வாய் வழியே வழிந்துவிட்டுத் தான் பயணத்தைத் தொடர்வார்கள். //

அக்மார்க “RVS" லொள்ளு.

சத்ரியன் said...

//கண்ணாடி போட்ட ஏட்டு சைக்கிள் காணாமல் போய் புகார் கொடுக்க வந்த அப்ராணியை ஒரு குயர் ஃபூல்ஸ்கேப் டம்மி வாங்கித் தரச்சொல்லி அடம் பண்ணிக்கொண்டிருந்தார்.//

நாட்டு நடப்பு.சந்தடி சாக்குல, சைக்கிள் கேப்புல.... ஏட்டுக்கு ஆப்பு.

சத்ரியன் said...

// அனுஷ்கா என்ற கேரக்டருக்கு நடிகை அனுஷ்கா நடித்துக் கொடுத்ததற்கு நன்றி//

நான் நல்லவனாவே இருக்கிறது RVS-க்கு புடிக்கல போல. (கொலக்காரனா மாத்தி புடாதீங்கன்னு சிம்பாலிக்கா சொல்றோம்)

Aathira mullai said...

பலநாட்கள் கழித்து வந்தால் அதே.....

ஒன்னும் இல்ல ஆர்.வி.எஸ்.. அதே வேகம் அதே விறுவிறுப்புன்னு சொல்ல வ்ந்தேன். நல்லா போகுது...

நலமா?
சிறப்புச் செய்திகள் கேட்க ஆவலாய்...

Ponchandar said...

தொடர் கொலை காலமா? அடுத்த பாகத்துக்கு...அவலுடன்....சீய்ய்ய்... ஆவலுடன் காத்திருக்கிறேன்

ஸ்ரீராம். said...

அனுஷ்காவை உடனே கொலை செய்ததற்கும், அனுஷ்கா படத்தை பாஸ்போர்ட் சைசில் வெளியிட்டதற்கும் என் கடும் கண்டனங்களைப் பதிவு செய்ய ஆசைப்படுகிறேன் என்பதைச் சொல்லிக் கொள்ள ஆசைப் படுகிறேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அப்பாதுரை said...

பின்னூட்ட மன்னர் ஸ்ரீராம்... வாழ்க!
பின்னூட்ட மன்னர் ஸ்ரீராம்... வாழ்க!
நாளைய முதல்வர்...

Unknown said...

மையினர் வாள் உங்களை அடிச்சுக்க ஆளே இல்லை போங்கோ
ஒரு பகுதி படிப்பதற்குள்
அடுத்து என்ன என்ற ஆவல் ஏற்ப்பட்டு விடுகிறது
நன்றி

ரிஷபன் said...

அனுஷ்கா.. கிரிக்கட்னு எல்லாம் கலந்து கட்டி சுவாரசியமா போகுது..

RVS said...

@பத்மநாபன்
நன்றி பத்துஜி!! வாத்தியார் காட்டிய வழியில் இந்த கடைசி பென்ச் மாணவன். :-))

RVS said...

@அப்பாதுரை
ஆமாம் தலைவரே! ஒரு ப்ளோல எழுதிட்டேன். இப்ப படிச்சுப் பார்த்தா தான் தெரியுது. திருத்திப்போம். :-)

RVS said...

@சத்ரியன்
கருத்துக்கு மிக்க நன்றி சத்ரியன். பாருங்க... அனுஷ்கானு பெயர் வைக்கும் போது இப்படி ஆகும்னு நான் நினைக்கலை... :-))

RVS said...

@ஆதிரா
என்னங்க தமிழ் டாக்டர்! ரொம்ப நாளா ப்ளாகுக்கு லீவு விட்டுட்டீங்க..
உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியிருந்தேன்! :-))

கருத்துக்கு நன்றி.

RVS said...

@Ponchandar
தொடர் வாசிப்பிற்கு நன்றி நண்பரே! அவல் தருகிறேன் அவள் மூலமாக... :-))

RVS said...

@ஸ்ரீராம்.
அனுஷ்காவுக்காக கொடி பிடிக்காதீங்க... இன்னும் ரெண்டு மூனு கொலை வரலாம்... அதில் நமீதா, தமன்னா போன்றோரும் அடங்கலாம்...

சாரிங்க... :-)))

RVS said...

@siva
நன்றி மன்னையின் மைந்தனே!! :-))

RVS said...

@ரிஷபன்
சார்! கருத்துக்கு நன்றி. நான் கிரிக்கெட் பத்தி எதுவும் எழுதலையே!! :-))

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails