Friday, September 2, 2011

உயிர் இணைப்பு

ஆட்கள் தெரிந்தும் தெரியாமலும் மை பூசினாற்போல அரை நிழலாய்த் தெரியும் மங்கலான வெளிச்சம். காக்கி வாடை பலமாக வீசும் விசாரணை அறை. அரைவட்டமாக பெஞ்ச் செய்து கம்ப்யூட்டர்களை ஆர்க்காக அடுக்கியிருந்தார்கள்.  ஒரு மலையாள தேசத்து “எந்து பறைஞு” ”ஞ.. ஞீ.. ஞு” என்று மூக்கால் பேசும் தாடி வைத்த மஃப்டி ஆள், பின் மண்டையில் பத்து கரப்பு ஸ்கௌட் முகாமிட்டு கரண்டினாற் போல ஒட்ட கிராப் அடித்த ஒருவர், ஸீசன் நேரத்துக் குற்றாலமாய் முகத்தில் கடமையுணர்ச்சி பொத்துக்கொண்டு வழியும் நாற்பது ஒன்று, ஸர்வீஸஸ் எக்ஸாம் முதல் ரேங்கில் பாஸ் செய்த டெக்னிகல் ஆபீசர் என்று குற்றங்களை கண்டுபிடித்து அலசி ஆராயும் உயர்மட்ட அதிகாரிகள் க்ரூப் அந்த எல்.இ.டி மானிட்டரை குத்திட்டுப் பார்த்து வட்டமிட்டு உட்கார்ந்திருந்தது.

அவர்களோடு சேர்ந்து அந்த வரிசையின் கடைசிச் சேரின் விளிம்பில் தொட்டுக்கோ துடைச்சுக்கோ என்று அந்த ப்ரகிருதியும் தேமேன்னு உட்கார்ந்திருந்தான். அவனை முழுசாப் பார்த்தால் உங்களுக்கு அப்படித் தெரியாது. ”இவனா இப்படி செய்தான்?” என்று கேட்டுவிட்டு “ச்சே..ச்சே... இது அபாண்டம் சார்!” என்று வாயைப் பிளந்து துலுக்காணத்தம்மன் கோயிலில் பொங்கலிடும் மஞ்சள் பெண்டிர் குலவை இடுவது போல அடித்துக்கொள்வீர்கள்.

”ஈயாளோ இங்ஙன ச்செய்து?!” என்ற ம.தேச சாயா ஒட்டிய தாடி மூடிய வாயிலிருந்து  அம்பு போல புறப்பட்ட வினாவிற்கு கரப்பு கிராப் ஆள் பூம்பூம் மாடு போல ஆமோதித்தான்.

“இது போல நடக்குமா?” நாற்பதின் விழியகல அடுத்த கேள்விக்கு விடையளிக்க பொம்மலாட்டத்தில் ஆட்டி விட்டது போல கடைசிச் சேரில் காத்திருந்தவன் தலையை ஆட்டினான்.

“இஸ் இட் போஸிபிள்?” வெள்ளைச் சட்டைப் போட்ட டெக்னிகல் ஆளை நோக்கி ’ஓ’வை அழுத்தி ஆங்கிலத்தைச் சிரமப்படுத்திக் கேட்டது மலையாளம். காம்பௌண்டை ஒட்டி டீக்கடை நடத்தும் நாயரும் அவரும் ரெட்டைப் பிள்ளைகள் போல இருந்தார்கள். பேசினார்கள். சிரித்தார்கள். தாடி வைத்திருந்தார்கள்.

“இவரு ஏதோ பெரிய எட்டுக்கு மூனு டப்பா கேட்டாரே அதை அங்கிருந்து கொண்டாந்துட்டீங்களா?” தூரத்தில் நிழலாய் நின்ற ஒருவரைப் பார்த்து ஏவினார் சீட் கொள்ளும்படி உட்கார்ந்திருந்த தொந்தியில்லா தலைமைக் காக்கி ஒருவர். வயிற்றில் வித்வான் போல கடம் தூக்கினால் வேலைக்கு கல்தா கொடுத்துவிடுவார்கள். இன்ச் அப்ரைஸர் என்ற விசேட ஊழியர் ஒருவர் மூலம் காவல் நிலையம் தோறும் அனுதினமும் பானை வயிறு அளக்கப்பட்டது. காவல் தொந்திக்கு கடும் சட்டம் இயற்றிவிட்டார்கள். குறைந்தது ஒரு மணி நேரமாவது நெற்றி வியர்வை கிரௌண்டில் சிந்த நித்யபடி எக்ஸர்ஸைஸ் கட்டாயமாக்கப்பட்டது. தலையைக் குனிந்து தரையைப் பார்த்தால் கால் மணிக்கட்டு தெள்ளத் தெளிவாகத் தெரியவேண்டும் என்பது எழுதாத விதி.

“எஸ் ஸார்! ஆள் போயிருக்கு ஸார்! எடுத்துருப்பாங்க ஸார்! வந்து கிட்டே இருக்கு ஸார்!” என்று வார்த்தைக்கு ஒரு விரைப்புடன் நாவால் “ஸார்” என்கிற பதத்தை இஸ்திரி போட்டு உருவிவிட்டான் ஏவலுக்கு கட்டுப்பட்ட கழி தாங்கிய நிலைவாசல் காக்கி.

வாசலில் மழை சொட்டச் சொட்ட அந்த உயரதிகாரிகள் காவல் பரிபாலனம் செய்யும் அலுவலகம் நனைந்துகொண்டே அன்றைக்கு ஒரு ஆச்சரியமான நிகழ்வுக்கு காத்திருந்தது. மின்னல் ஆடிய டிஸ்கொதே நடனத்திற்கு இடி ஆதி தாளம் திஸ்ர நடையில் வாசித்தது. இக்கட்டுப்பாடு அறையின் கண்காணிப்பு கம்ப்யூட்டர்களில் தொடர்ந்து வீதிகளின் விசேஷங்கள் வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருந்தது. இருளில் ஓரமாக ஜோடியாக ஒதுங்கியவர்கள் நடுரோட்டுக்கு கொண்டுவரப்பட்டார்கள். ஆளில்லாத தெருமுனையில் பேய் பிசாசுக்கு ஐஸ்க்ரீம் விற்றவன் பொட்டியோடு வேனில் ஏற்றப்பட்டான்.

ஒவ்வொரு கம்ப்யூட்டருக்கும் மின்சாரம் கூட ரிமோட்டாக ஊட்டப்படுகிறது. பவர் ஹப் சாதனம் ஓரிடத்தில் வைக்கப்பட்டு காற்றலைகளில் மின்சாரம் பறக்கவிடப்பட்டு கம்ப்யூட்டர்கள் அதை எலக்ட்ரிக் சென்ஸார் என்ற ஸ்ட்ரா போட்டு உறிஞ்சி உயிர் வாழ்ந்து கொண்டிருந்தன. அவைகள் ஒயர்களில் கட்டுண்டு கிடக்காத ஆத்ம சுதந்திரம் பெற்றன. ஆனால் பூமிப்பந்தில் மழை, காற்று, புயல், பூகம்பம், சுனாமி, குளிர் போன்று எதுவுமே துளிக்கூட மாறவில்லை.

உயரதிகாரி கேட்ட ”அந்த பெரிய டப்பா” வரும் வரை ”குற்றம் நடந்தது என்ன?” என்று இக்கதையை கொஞ்சம் ரீவைண்ட் செய்து பார்ப்போம்.

**

கச்சலாக ஒடிந்து விழுவது போன்ற தோற்றம். மொத்தமாக ஜீன்ஸ் பனியன் மற்றும் தொடை சதைக் கறியுடன் சேர்த்து ஒரு நாற்பது கிலோ தேறுவான். தெரு நாய் கண்டால் நிச்சயம் துரத்தாமல் விடாது. கார்ட்டூனில் வரும் பொப்பாய் பொண்டாட்டியின் கரங்கள் போன்று ஈர்க்குச்சிக் கைகள். இடையோ சாமுத்ரிகா லக்‌ஷணம் அட்சரம் பிசகாமல் பொருந்திய பெண்களைப் போல தேடினாலும் கிடைக்காது. முப்பது இன்ச் சைஸ் பேண்ட் வாங்கி புது பெல்ட்டில் புதியதாக ஆணியால் ஓட்டைப் போட்டு இறுக்கி ப்ளீட் வைத்த அரக்குக் கலர் பட்டுப் பாவாடைப் போல கட்டிக் கொள்வான். பாங்க் அடித்த அகோரி போன்று கண்கள் எப்போதும் சொருகிய மோன நிலையில் மூடி இருக்கும். பழுப்பேறிய வெள்ளை ஸ்போர்ட்ஸ் ஷு. அங்கொன்றும் இங்கொன்றுமாய் தலை நரைத்தும் கலைந்தும் இன்னமும் தனக்கு ஒரு கல்யாணம் காட்சி காணாதவன். விஞ்ஞானி லுக்.

அவன் புதுசு புதுசாக கண்டுபிடித்து அற்புதங்கள் நிகழ்த்தும் கம்ப்யூட்டர் என்ஜினியர். கணினியின் கருப்பையில் இருக்கும் ஒவ்வொறு பிட்டும் பைட்டும் அவனிடம் மனம் திறந்து பேசும். கைநிறையக் கணினித் தந்திரங்கள் கற்று வைத்திருந்தான். கீபோர்டில் விரல்கள் ஒரு தேர்ந்த பியானோ கலைஞனைப் போல விளையாடும். அஸாத்ய சாதகம். மௌஸ் மௌனமாக இதைப் பக்கத்தில் உட்கார்ந்து வேடிக்கைப் பார்க்கும். முக்கால்வாசி நேரம் கிளிக் செய்யாமல் கன்சோலில் அம்புட்டு ஜோலியையும் கச்சிதமாக முடித்துவிடுவான். 

ஒரு நாள் காலை தெருக்கோடியிலிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் ஐந்தாம் மாடி போர்ஷனில் ஜாகையிருக்கும் ரிடையர் மிலிட்டரி ஆபீஸர் பாச்சு மாமா  “டேய்! அவனைப் பத்தி என்ன தெரியும் உங்களுக்கெல்லாம்? அவன் ஐ.ஐ.டியில ஐ.டியில கோல்ட் மெடலிஸ்ட். ஒன்னாவதுலேர்ந்து அவுட்ஸ்டேண்டிங் ஸ்டூடண்ட். நீங்கல்லாம் கிளாஸை விட்டு எப்போதும் அவுட்ல ஸ்டேண்டிங் ஸ்டூடண்ட். சிங்கப்பூர், ஜப்பான், அமெரிக்கா, இங்க்லேண்ட்லேர்ந்தெல்லாம் அவனைக் கொத்திண்டு போறதுக்காக அவாத்து வாசல்ல கழுகாக் காத்துண்டிருந்தா. பழியாக் கிடந்தா. இந்த அபிஷ்டு அத்தையெல்லாம் அப்ப கோட்டை விட்டுடுத்து. இப்ப கிடந்து இங்க நூறு இருநூறுக்கு அல்லாடறது” என்று வண்டிவண்டியாய் சொல்லிக்கொண்டே போனார். அங்கில்லாத அவன் கழுத்து ஒடியும் வரை பாரமாக புகழாரம் சூட்டினார். 

மென்பொருள் துறையில் கனகதாரா ஸ்தோத்திரம் வாசிக்காமல் லக்‌ஷ்மீ குபேர யந்திரம் வைக்காமல் காசு கூரையை பிய்த்துக் கொண்டு கொட்டுகிறது என்று அரசாங்கம் அத்துறையை கைப்பற்றிக் கொண்டு தனியார் நிறுவனங்களை அஞ்சு பைசா பத்து பைசா பிசாத்துக் காசு கொடுத்து வீட்டுக்கு விரட்டிவிட்டார்கள். அவர்களும் வம்பெதற்கு என்று பொட்டி கட்டிக்கொண்டு அயல்தேசம் தஞ்சம் புகுந்துவிட்டார்கள்.

இல்லையென்றால் அவனுக்கு கண்ணைக் கவரும், நெஞ்சையள்ளும் அழகுப் பெண்கள் ”யேய்... வாட் யா..” என்று பேண்ட்ரியில் டீக் குவளையுடன் சினுங்கி தஸ்புஸ்ஸென்று பீட்டர் விடும் ஏதாவது வழுவழு கண்ணாடித் தரையும் திரைச்சீலை தொங்கும் கேபினும் கொண்ட சீமைத் துரைமார்கள் கம்பெனியில் நித்யப்படி டரைவரோடு காரும், வாரயிறுதில் குடம் குடமாக பீரும் கொடுத்து ஷேமமாக வைத்துக் கொண்டிருப்பார்கள். கார்ப்படி, வீட்டுப்படி, சலவைப்படி, சாப்பாட்டுப்படி என்று சகலத்திற்கும் குஷன் சேரில் உட்காரவைத்து ராஜா போலப் படியளந்திருப்பார்கள்.

அப்பா, அம்மா, தங்கை என்ற 800 சதுர அடி சிங்கிள் பெட்ரூமில் ஒருவரோடொருவர் தலை கால் இடிக்க படுத்துறங்கும் பொட்டிப்பாம்பாக அடங்கும் ஒரு மைக்ரொ குடும்பம். காலையில் ஸி.டி ப்ளேயரில் விஷ்ணு சஹஸ்ர நாமம், இட்லி, தோசை தொட்டுக்க சட்னி, மத்தியானம் கரமது, சாத்தமது, தெத்தியோன்னம், இரவில் சப்பாத்தியோ, கோதுமை தோசையோ அப்புறம் சித்த நாழி டி.வியில் சீரியல், ஆறு மணி நேர தூக்கம், மறுபடியும் அதிகாலை ஐந்து மணி அலாரம், விஷ்ணு சகஸ்ர நாமம், இட்லி என்று அவன் மத்தியதர வாழ்க்கை வட்டத்தைப் பூர்த்தி செய்து கொள்ளுங்கள். கேசவனின் இப்படியான அதிஷேமமான சராசரி அன்றாட வாழ்க்கையில் புயல் வந்து வீசியது போல அந்த நிகழ்ச்சி ஒரு நாள் நடந்துவிட்டது.

வழக்கம்போல அன்றைக்கும் சக்கரத்தாழ்வாரைக் கும்பிட்டுவிட்டு நெற்றி நிறைய ஸ்ரீசூர்ணமும் நெஞ்சு நிறைய பயபக்தியோடுதான் அலுவலகம் செல்ல படியிறங்கினான். சர்க்கார் நடத்தும் அதி நவீன சரக்குக் கடையை கடந்தவுடன் வரும் வலது கை திருப்பத்தில் மூச்சுக்கு முன்னூறு தரம் “..த்தா” என்று கெட்டவார்த்தை பேசும் திடகாத்திரமான இரண்டு பேர் இவனை உருட்டுக்கட்டையோடு வழிமறித்தார்கள். பூப்பறிக்க கதாயுதம் ஏந்தி வந்தார்கள். அதில் ஆஜானுபாகுவாக ஹிப்பி வைத்திருந்தவன் தெனாவட்டாகக் குரல் விட்டான் “யேய்.. நீ என்னமோ கம்ப்பூட்டர்ல பெரீய்ய பிஸ்த்தாமே! எங்கூட வா ஒரு நல்ல காரியம் செய்ய வேண்டி இருக்கு”. கண்ணை உருட்டி பார்த்துவிட்டு அங்கிருந்து நழுவ எத்தனித்தான் கேசவன். உடனே பக்கத்தில் கட்டக்குட்டக்க கர்லாக்கட்டை மாதிரி இருந்தவன் “...த்தா... சொன்னது காதுல வுலலை.. நீ என்ன டமாரமா.. கய்தே வாடான்னா.. எஸ்கேப் ஆவ பார்க்கிறியா? ” என்று கரகரத்தான். கையைப் பிடித்து மிரட்டியபடியே தரதரவென்று இழுத்தான். அவனது ”கய்தே”யின் ஸ்பஷ்டமான் உச்சரிப்பு  அவன் தொழில்முறை அடியாள் என்பதை நூற்றுக்கு நூறு ஊர்ஜிதப்படுத்தியது.

“என்னை விடுங்கோ! நேக்கு ஒன்னும் தெரியாது.. நாராயணா” என்று கையை உதறி அம்மாஞ்சியாய் மன்றாடினான் கேசவன்.

“யார்ரா...அது நாராயணா.. உன்னோட அடியாளா? தோ.. பார்ரா.....” என்று கையால் அழகு காண்பித்து எகத்தாளமாக ஹிரன்யகசிபு போல சிரித்தார்கள்.

“நாராயணா.. நாராயணா” என்று படபடவென்று பட்டாம்பூச்சியாய் அடித்துக் கொண்ட மனதிற்குள் கைகூப்பி சேவித்தான். அட்ரிலின் அளவுக்கு அதிகமாக ஆறாய் சுரந்தது. வியர்வையில் போட்டிருந்த காட்டன் சட்டை தொப்பலாக நனைந்தது. உஹும் பலனில்லை. ஆண்டவனும் காப்பாற்றவில்லை அடியாளும் விடவில்லை.

ஒரு ஆளரவம் இல்லாத அத்துவான காட்டிற்கு கடத்திச் சென்றார்கள். வெளிப்புற சுவர்கள் பாசியேறி, திறந்தால் “க்ரீச்”சைக் கூட சன்னமாக அழத்தெரியாத துருப்பிடித்த கிரில் கம்பி கேட்டும் அது ஒரு நூறு வயசான பேய் பங்களா என்பதற்கு கட்டியம் கூறியது. அந்த வீட்டின் மதிலை ஒட்டியிருந்த யூக்கிலிப்டஸ் மரங்கள் உதிர்த்திருந்த இலைச்சருகுகளில் சரசரக்க நடந்தார்கள். தலைவலித் தைலம் வாசம் குப்பென்று ஆளைத் தூக்கியது.

விசாலமான நிலைவாசல் தாண்டியதும் ஐந்தாறு பிக்கினி லேடீஸ் அவனைப் பார்த்து அசிங்கமாக சிரித்துக் கொண்டே காட்டக் கூடாததையெல்லாம் காட்டிக்கொண்டே ஹால் சோஃபாவில் இருந்து எழுந்து விழுந்தடித்துக் கொண்டு மிச்சம் மீதமிருந்த ஆடை நழுவ உள்ளே ஓடினார்கள். அவர்களுக்குப் பின்னால் அரைகுறையாய் ஆடையணிந்த ஒருவன் மாடு போல “ஹை..ஹை..” என்று கையை உயர்த்தி அவர்களைப் பிருஷ்டத்தில் செல்லமாகத் தட்டி ஓட்டிக்கொண்டே துரத்தினான். அந்தப் பெண்டிர் துளிக்கூட லஜ்ஜையே இல்லாமல் நாக்கை வெளியே நீட்டியும், துருத்தியும் அசிங்க அசிங்கமாக பல சேஷ்டை சைகைகள் செய்தார்கள். இவனுக்கு வெட்கம் பிடிங்கித் தின்றது.

ஜீரோ வாட் எரியும் பக்கத்து அறையில் இருந்து மாரில் பொசுபொசுவென்று சுருட்டை மயிர் தெரிய சட்டை போடாமல் பெர்முடாஸ் மட்டும் போட்டுக்கொண்டு வலது காதில் வளையம் போட்டவன் ஒருவன் சூயிங்கம் வாயோடு வெளிப்பட்டான். அவன் முகத்தில் பணக்காரத்தனம் தெரிந்தது. நடையில் சர்வாதிகாரத்தனம் தெரிந்தது. செய்கையில் கயவாளித்தனம் இருந்தது. ஏதோ கெட்டகாரியம் செய்து நாலு காசு பார்ப்பவன் என்று முகத்தில் வர்ச்சுவலாக அடித்து ஒட்டியிருந்தது. அந்த பேட் பாய்ஸ் குழுவினர் அரசாங்கத்திற்கு தெரியாமல் ஏய்த்துப் பிழைக்கிறார்கள் என்பது சர்வ நிச்சயம்.

“வாட் மேன்.. ஒழுங்கா கூப்டா வரமாட்டியா.. நீ வரலை உன் தங்கச்சியை இப்ப சிலுப்பிக்கிட்டு போனாளுங்களே அவளுக மாதிரி பின்னாடித் தட்டி ஓட்டச் சொல்லட்டா” என்று சொல்லிவிட்டு நடுவிரலை அசிங்கமாக  ஆட்டிக் காண்பித்தான். அப்போது அவன் விரலை ஆட்டியதை விட இடுப்பை ஆட்டியது இன்னும் படு அசிங்கமாக இருந்தது. கேசவன் பகவானை நினைத்துக் கண்களை மூடிக்கொண்டான்.

” உன்னோட ப்ராஜெக்ட் சக்ஸஸ் ஆயிடிச்சா?”

“எ-ந்-த  ப்-ரா-ஜெ-க்-ட்?”

”ஏதோ இண்டெர்நெட்ல அனுப்புறதுக்கு புதுசா கண்டுபிடிச்சிருக்கியாமே”

“என்னது?”

”ஒழுங்கா கேட்டா சொல்லமாட்டே. குடுக்கறதைக் குடுத்தா தன்னால சொல்லுவ”

”நீங்க எதை சொல்றேள்னு புரியலை” என்று மருளப் பார்த்தான் அந்தக் கால் சட்டைக்காரனை.

”நீ ப்ராக்டீஸ் செய்யும் அந்த கூண்டை எடுத்துக்கிட்டு வந்தாச்சு... அங்கே பார்” என்று அறை மூலையில் காட்டினான்.

எவர் சில்வர் பிரேமில் ஏழடி உயரத்திற்கு நின்று குளிக்க தோதாக ஒரு கண்ணாடி கேபின் போல நிறுத்தியிருந்தார்கள்.  ஒரு தடியாள் சீட்டியடித்து இஷ்ட பாடலை பாடிக்கொண்டு உள்ளே தாரளமாக குளிக்கக்கூடிய அகலம் கொண்ட அறை அது.

உயிருள்ள ஆட்களை ஸ்கான் செய்யும் லைவ் ஆப்ஜெக்ட் ஸ்கானர் என்பது, அப்படியே ஒரு முழு ஆளை உள்ளே அனுப்பினால் செல் செல்லாக படி எடுத்து Human Cell Zipping (HCZ) compression algorithm ல் சுருக்கி பூஜ்யம் ஒன்றாக்கி டிஜிடெல் பைலாக கம்ப்யூட்டருக்குள் கொண்டு வந்து விடலாம். அப்படி சுருக்கிய ஃபைலை ஈமெயிலில் அட்டாச் செய்தால் அண்டபகிரெண்டம் எங்கும் பாஸ்போர்ட், விஸா இல்லாமல் ஒயர்கள் வழியாக பயணிக்கலாம். சோதனை முயற்சியாக முந்தா நாள் லேபிள் துணைக்கு உட்கார்ந்திருந்த புஸ்ஸி கேட் அட்டாச்மெண்ட் இன்னமும் ட்ராஃப்டில் டெலீட் ஆகாமல் பத்திரமாக தூங்குகிறது.

பகீரென்று ஆகிவிட்டது அவனுக்கு. இவர்களுக்கு எப்படி இந்த ஸ்கானர் கிடைத்தது. அலுவலக அற்பர்கள் எவரோ இதற்கு உடந்தையாய் இருந்திருக்கிறார்கள். இதை கொஞ்சம் புத்தியை செலவழித்துதான் சமாளிக்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டான்.

“இப்ப என்ன பண்ணனும்?” பாதி வார்த்தைகளை மென்று விழுங்கி பேசினான்.

”இப்ப உள்ள ஓடினாளுவளே அவளுங்களை உடனே அமெரிக்கா அனுப்பனும். அனுப்பிடு”

“உஹும்... முடியாது... நா மாட்டேன்...”

“டேய்.. சொன்னா கேட்கமாட்டே!”

”இல்ல இதே மாதிரியான இன்னொரு ஆப்ஜெக்ட் ஸ்கானர் ரிசீவிங் எண்ட்ல இருந்தாதானே அவங்களை வெளியில எடுக்க முடியும்?”

“உன் கேள்வி நல்லாத் தான் இருக்கு. உனக்கு இத செஞ்சு குடுத்தானே உன்னோட ஹார்ட்வேர் தோழன் அவனை ரெண்டு மாசத்துக்கு முன்னாலையே வளைச்சாச்சு. இப்போ அவன் அமெரிக்காவுல வெள்ளக்காரி தோள் மேல கைபோட்டு உட்கார்ந்து பீர் குடிச்சுகிட்டு இருக்கான். இதே ஸ்கானரை அங்க ரெடியா செஞ்சு வச்சுக்கிட்டு அதோட டிவைஸ் ட்ரைவர் சகிதம் இன்ஸ்டால் பண்ணிட்டு எப்படா மெயில்ல மயிலுங்க வரும்னு காத்துக்கிட்டு இருக்கான்”

ரத்த நாளங்களில் விருவிருவென்று மின்சாரம் ஏறியது. இனியும் இந்த தேசத்தில் மற்றுமொறு அநியாயப் புரட்சி நடக்க இடம் கொடுக்கக் கூடாது என்று மனதிற்குள் தீர்மானம் செய்தான்.

“சரி. ஒவ்வொருத்தரா வரச்சொல்லுங்க. டிவைஸ் ட்ரைவர் வேணுமே? ஆபீஸ்ல தானே இருக்கு”

“மச்சி.. அல்லாத்தையும் கொண்டாந்துட்டோம். அங்க பாரு” என்று கால்சட்டைக்காரன் கைகாட்டிய இடத்தில் புலம் பெயர்ந்திருந்தது Intel Inside போட்டிருந்த கேசவனின் கம்ப்யூட்டர் தனது கீபோர்டு,மௌஸ் மற்றும் தனது பரிவாரங்களுடன்.

ஒவ்வொருவராக அழைத்து வந்து கூண்டில் நிறுத்தினார்கள். பாதத்தில் இருந்து உச்சி வரை அரை நொடியில் செல்செல்லாக உருவி அவர்கள் நின்ற இடத்தை வெற்றிடமாக்கியது. ஒவ்வொரு ஜிப் பைலுக்கும் க்ளாரா, சாந்தா, கீவா என்று அர்த்தப்பூர்வமாகப் பெயரிடச்சொன்னான். இப்போது மெயிலில் ஒரு சொடுக்கலில் அட்டாச் செய்துவிட்டால் அழகிகளை அங்கே அனுப்பிவிடுவார்கள். ஒரு கணம் என்ன செய்வதென்று யோசித்தான். ஆளை உயிரோடு ஜிப்பாக்கும் அந்த அதிசய சாஃப்ட்வேரின் பக்கதுணையான ஒரு டி.எல்.எல் ஃபைலை கம்ப்யூட்டரின் வேறிடத்திற்கு ஒதுக்கினான்.

கடைசியாக ஒரு பேரிளம் பெண் ஒருத்தியை கொண்டு வந்து லைவ் ஆப்ஜெக்ட் ஸ்கானரில் நிறுத்தி

“உம்... இழுத்துப் போடு” என்று விரட்டினான்.

“இல்ல... வொர்க் ஆக மாட்டேங்குது.. ஏதோ கரப்ட் ஆயிடுச்சு”

“எதாவது சதி பண்றியா? மவனே உயிரோட வெளிய போமாட்டே! ஜாக்கிரதை” கண்களில் வெறி தெறிக்க கத்தினான்.

“இல்லங்க.. ஏதோ ஆயிடிச்சு... ஒரு நிமிஷம் அந்த ஸ்கானர் கேபினுக்குள்ள சென்ஸார் எதாவது அடச்சிருக்கான்னு பார்க்க முடியுமா?” கெஞ்சினார்போல கேட்டான்.

அரைடிராயருடன் அவசரவசரமாக உள்ளே சென்றான். கால் நிஜார் போட்ட வாழைத்தண்டு கால் நீண்ட அந்த அழகியை உரசியபடி ஸ்கானர் கேபினுக்குள் உட்கார்ந்து எழுந்து சுற்றும் முற்றும் தனக்கு கொஞ்சம் கூட பரிச்சியமில்லாத சென்ஸார்களை தடவித் தடவிப் பார்த்தான். எழுந்து நின்று கண்ணாடி வழியாக கேசவனைப் பார்த்து ஒன்றும் இல்லை என்ற தோரணையில் கையை ஆட்டினான். ஆட்டிக் கொண்டே இருக்கும் போதே ஸ்கானர் இயங்க ஆரம்பித்தது. கால் கரைவது போல உணர்ந்தான். அங்கே என்ன நடக்கிறது என்று அவனது புலன்கள் விழித்துக்கொள்வதற்குள் அந்த கொக்குக் கால் அழகியோடு அவனும் சேர்த்து ஒரு காக்டெயில் டிஜிட்டல் ஃபைலாக கம்ப்யூட்டருக்குள் சுருண்டிருந்தான்.

அனைத்து ஃபைல்களையும் மெயிலில் இணைத்தான். பக்கத்தில் கிடந்த சாட்டிலைட் போனால் காவல்துறை தலைமையகத்திற்கு ஃபோன் போட்டு விவரம் சொல்லிவிட்டு காந்திருந்தான். சற்று முன்னர் வந்த தொலைபேசி அழைப்பின் நகரம், வீதி, வீட்டு எண் என்ற விவரங்களை ஆன்லைனில் பெற்றுக்கொண்டு ”பாம்..பாம்..பாம்..” என்று சைரனொலிக்க இரண்டு அதிவேக ஏர்-ஜீப்களில் அடுத்த பத்து நிமிடங்களில் வந்திறங்கினர். அப்புறம் இப்போது நீங்கள் பார்க்கும் இந்த காவல் நிலையத்தில் பாதி சேரில் சங்கோஜமாக உட்கார்ந்திருக்கிறான்.

**


“இத நீங்க டெஸ்ட் பண்ணிப் பார்த்துட்டீங்களா?” டெக்னிகல் ஆள் மூலாதாரக் கேள்வியைக் கேட்டான்.

“ம்.”

“எத வச்சு”

“ஒரு புஸ்ஸி கேட் என்னோட மொபைல் போனை அப்புறம் ஒரு  கில்லட் ரேசர்  ”

“ஜிப் ஆச்சா?”

“ஜிப் ஆயி மறுபடியும் அன் ஜிப் பண்ணி வெளியில எடுத்தேன்”

“யார் ஐ.டிக்கு மெயில் அனுப்பினீங்க?”

“என்னோட ஐடியில ட்ராஃப்ட்ல இருக்கு.”

அந்த கண்ணாடிப் பொட்டி கொண்டு வந்து பக்கத்தில் நிறுத்தப்பட்டது. தேவையான சாஃப்ட்வேர் அதை இணைத்த கம்ப்யூட்டரில் நிறுவப்பட்டது. செப்பிடு வித்தை காண்பிக்கும் மோடி மஸ்தானை சுற்றி தாயத்து கட்டிக்கொள்ள நிற்கும் கும்பல் போல பக்கத்தில் ஒரு குழுவினர் நின்று வேடிக்கைப் பார்த்தனர்.

ட்ராஃப்ட்டில் இருந்து ஒவ்வொரு ஃபைலாக தரவிறக்கினான்.
"Process" என்ற ஃபோல்டருக்குள் காப்பி செய்தான்.
லைவ் ஆப்ஜெக்ட் ஸ்கானரை ஆன் செய்து ரீசிவர் மோடுக்கு மாற்றினான்.
”1%...............30%....................64%................81% Completed” என்று ப்ராஸஸ் தத்தி தடுமாறி நடந்து கொண்டிருந்தது.

"100% Completed" என்ற செய்தி திரையில் வந்து விழுந்தவுடன் லைவ் ஆப்ஜெக்ட் ஸ்கானரில் “மியாவ்” சத்தம் கேட்டது. ஒரு பூனை கோலிக் குண்டு கண்களை உருட்டி பார்த்து மிரட்சியுடன் ஸ்கானர் கூண்டுக்குள் அலைந்தது.

வெற்றிப் புன்னகை பூத்தான் கேசவன். அடுத்தடுத்த ப்ராஸசிங்கில் கில்லட் ரேஸரும் மொபைல் போனும் தொப் தொப்பென்று வெளியே வந்து விழுந்தது.

க்ளாரா ஃபைலை ப்ராஸஸ் செய்ய எடுக்கும் போது வயோதிகர்கள் அடிக்கொருதரம் நின்று நின்று நடப்பது போல சிரமமாக முனகியது.

1%...................................................................................
......
......
......
13%..................................................................................
......
......
......
.....
72%......................................................................................
.....
.....
.....
......
100%  Completed.

என்கிற செய்தி வந்து ஸ்கிரீனில் அலைமோதியது.

அந்தக் கண்ணாடி பொட்டியில் வினோதமான ஒரு உருவத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

க்ளாராவின் கை இருந்தது. கால் இருந்தது. தலை இருந்தது. முகத்தில் கண் இருக்கவேண்டிய இடத்தில் இமை இருந்தது. இமையிடத்தில் கண் இருந்தது. வாய் மூக்கின் இடத்தை பிடித்துக்கொண்டது. மூக்கு நடு நெற்றியில் திலகமாக ஜொலித்தது. முதுக்கு பின்னால் நடு சென்ட்டரில் ப்ருஷ்டம் மாட்டியிருந்தது. இடுப்பில் ஸ்தனங்கள் குடியேறியிருந்தன. அங்க அவயங்களை ஆங்காங்கே பிய்த்து பிய்த்து ஒட்டவைத்தது போன்ற ஒரு அவலட்சணமான தோற்றம்.

வேடிக்கை பார்த்த கும்பலுக்கு சப்த நாடியும் அடங்கியது. கேசவனுக்கு தலைகால் ஒன்றும் புரியவில்லை. மீண்டும் ஒரு முறை ஆப்ஜெக்ட் ஸ்கானரை “ஸ்கான்” மோடுக்கு மாற்றி க்ளாராவை கம்ப்யூட்டர் உள்ளே ஸ்ட்ரா போட்ட இளநீராய் உறிஞ்சிவிட்டான்.

”என்னாச்சு?” பதறினார் தோள்பட்டையில் ஸ்டார் மின்னிய அதிகாரி.

“இல்லை.. கம்ப்ரஷன் அல்காரிதம் கொஞ்சம் சொதப்பிடுச்சு... பைட்ஸ் அர்ரே டிஸாடர்... ஸி.ஆர்.ஸி செக் இல்லாம சுருக்கியதினால் விரிப்பதில் ப்ராப்ளம்...” என்று வரிசையாக டெக்னிக்கலாக புலம்பித்தீர்த்தான்.

கேசவனையே பார்த்துக்கொண்டு அனைத்து ஆபீசர்களும் அலர்ட்டாக நின்றுகொண்டிருந்தனர்.

க்ளாரா மற்றும் மீதமிருந்த டூ பீஸ் ஹுக்கர் பெண்கள் இறந்தார்களா இல்லை உயிரோடு மெயிலில் அடக்கம் செய்யப்பட்டுவிட்டார்களா? இது கொலையா இல்லை.........

அப்படியே உறைந்து போய் நின்றார்கள்!!!

பின் குறிப்பு:  இந்தக் கதை வல்லமையில் வெளிவந்துள்ளது.
-

22 comments:

Yaathoramani.blogspot.com said...

வெகு நாட்களுக்குப்பின் அருமையான ஒரு
சயன்டிஃபிக் கதை படித்த நிறைவு
எங்கே விஞ்ஞானம் ஜெயித்துவிடுமோ என
கதைபடிக்க படிக்க பயம் வளர்ந்து கொண்டே போனது
நல்லவேளை அந்த நாராயணன்தான் காப்பாற்றினான்
என நினைத்துக்கொண்டேன்
தரமான படைப்பு தொடர வாழ்த்துக்கள்

RAMA RAVI (RAMVI) said...

அப்படியே ஒரு hollywood sci-fi சினிமா பார்த்த உணர்வு.இது சாத்தியமானால் எப்படி இருக்கும் என நினைத்துக்கொண்டேன்..

அருமை...

Ponchandar said...

நம்மூரு ஆட்கள் நடித்த ஸ்டார் ட்ரக் படம் பார்த்த மாதிரி இருந்தது.

சாந்தி மாரியப்பன் said...

கதை ஜூப்பரு..

இதே போல் கற்பனை வல்லமை மிக்க கதைகள், இன்னும் நிறைய எழுதுங்கண்ணா :-)

Unknown said...

oh my god...
:)
vera ulagathila erukkenaa...??

Unknown said...

கம்ப்யூட்டர் (RVS MYNAR..)
ஜாலம் புரிந்து இருக்கிறது ..

Madhavan Srinivasagopalan said...

பெரிசு பெரிசா எழுதினா..
படிச்சு கமெண்டு போட முடியாது..
ஆமா சொல்லிப் புட்டேன்..

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

இனி இப்படியும் நடக்குமோ? சூப்பராக எழுதி இருக்கிறீர்கள். மென் பொருள் ஞானம இருந்தாலொழிய இது போன்ற படைப்புகள் சாத்தியமில்லை.

raji said...

wow!wat a great imagination skill!!

imagination to the tallest order

gr8 gr8 gr8 !!!!!!!!!!!!

RVS said...

ஊக்கமளித்த அனைவருக்கும் நன்றி.. சிறிது நேரத்தில் ஒவ்வொருவருக்கும் ப்ரத்யேக பதில் அளிக்கிறேன்.

நன்றி! :-)

ரிஷபன் said...

கண்ணைக் கட்டி கம்ப்யூட்டரில் விட்டு விட்டீர்கள்.. கொஞ்ச நேரத்திற்கு..

RVS said...

@Ramani
மிக்க நன்றி சார்! இன்னும் கொஞ்சம் இழுத்திருக்கலாம். இதுவே பெரிசாப் போயிடுச்சு!! :-))

RVS said...

@RAMVI
உங்கள் ரசனைக்கு ஒரு நன்றி மேடம்! :-)

RVS said...

@Ponchandar
உங்க கமெண்ட் கற்பனைக் கூட நல்லாயிருக்கே!

பாராட்டுக்கு நன்றிங்க.. :-)

RVS said...

@அமைதிச்சாரல்
வல்லமைக்கு வல்லமையாக வேண்டும் என்று எழுதிய ஸ்பெஷல் இது.

நன்றி அமைதிச்சாரல்! :-)

RVS said...

@siva
மன்னையின் மைந்தனே!! மிக்க நன்றி. :-)

RVS said...

@Madhavan Srinivasagopalan

சரிப்பா! நீ ஃபாண்ட் சைஸை சின்னதாக்கு படிச்சுட்டு கமெண்ட்டு! நன்றி. :-))

RVS said...

@வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam)
வாழ்த்துக்கு மிக்க நன்றி மேடம்! ஒரு அதீத கற்பனை! :-))

RVS said...

@raji
வாழ்த்துக்கு நன்றிங்க மேடம்!

இதை இன்னும் கொஞ்சம் இழுத்துச் சொல்லலாம்! அடக்கமா நிறுத்திட்டேன் :-))

RVS said...

@ரிஷபன்
கண்ணைக் கட்டி கம்ப்யூட்டரில் விட்டா மாதிரி.... அசத்தலான கமெண்ட் சார்! நன்றி! :-)

மோகன்ஜி said...

ஆர்.வீ.எஸ் ! தரமான பதிவு! கொஞ்சம் அவசரமாய் முடித்தாற்போல இருக்கிறதே மச்சினரே!

RVS said...

@மோகன்ஜி

ரொம்ப வளவளான்னு எழுதறேன்னு எல்லோரும் புகார் கொடுக்கிறார்கள்! அதனாலத்தான் தலைவரே!!
:-))

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails