Saturday, January 14, 2012

கன்னிப் பொங்கல்

வயசுப் பசங்களுக்குப் போகியும் பொங்கலும் சுத்த போர். குப்பை எரிப்பதையும் மூக்கில் ஒரு பருக்கை எட்டிப் பார்க்கும் வரை சாப்பிடுவதையும் தவிர்த்து இளசுகளுக்கு அவ்வளவு சுவாரஸ்யமான விஷயங்கள் எதுவும் இந்த இரண்டிலும் இருக்காது. நட்புகளுக்கும் சொந்தபந்தங்களுக்கும் வாழ்த்து அட்டை அனுப்பும் பழக்கம் ஒன்று அக்காலத்தில் வழக்கில் இருந்தது. என்னைப் போன்ற சின்னத்தம்பிகளுக்கு கரும்பு, பொங்கல் பானை போட்ட வாழ்த்து அட்டையும், லெக்ஷ்மி சரஸ்வதி என்று கடவுளர்களின் அருட்படம் போட்ட அட்டைகளையும் தினமும் கையோடு கை கோர்க்கும் பக்கத்துத் தெரு மற்றும் பக்கத்து வீட்டு நண்பர்கள் அனுப்பி மகிழ்வார்கள்.

போஸ்ட்மேன் டெலிவர் செய்யும் போது நம் பக்கத்திலிருந்து அதை நாம் வாங்கிப் பார்த்துப் படித்து இன்புறுவதை கண்ணுற்று ரசிப்பார்கள். பெரிய அண்ணாக்களுக்கு சில சமயம் பாஸ்போர்ட் சைஸ் ராதா, அம்பிகா போட்ட டீசண்ட் அட்டையும் வரும். ரஜினி கமல் பெயர்களை தன் முன்னால் சேர்த்துக்கொண்டு கட் அவுட் வைத்து பைத்தியமாகத் திரியும் அன்பர்களுக்கு அந்த ஹீரோக்களின் படம். சிலருக்கு இமேஜ் டேமேஜ் செய்யும் சிலுக்கு அனுராதா கவர்ச்சி அட்டைகளை அனுப்பி ஏகத்துக்கும் ரேக்கி விட்ட போக்கிரி படவாக்களும் உண்டு. ”யார்டா அது.. இப்படியெல்லாம் அனுப்பறது.. நீ உருப்படியான சங்காத்தம் எதுவும் வச்சிருந்தானே....” என்று பாட்டு விடுவார்கள். அதெல்லாம் விடுநர் பெயர் இல்லா அனானி அட்டைகள். இப்போதெல்லாம் பைசா செலவில்லாமல் ஈகிரீட்டிங்ஸ் ஈமெயிலில் டெலிவர் செய்யப்படுகிறது.


போகியில் கண்டதையும் போட்டு எரித்து கண்ணெரிய ஊர் சுற்ற வேண்டும். பட்ட காலிலே படும்  போல ஏற்கனவே ஓஸோன் லேயரில் ஓட்டை விழுந்து பஞ்சராகிப்போன வானத்திற்கு போகியன்று இன்னும் கொஞ்சம் சேதாரம் ஆகும். தீயிட்டுக் கொளுத்துவது என்பது ஹோமோசேபியன்களாக நாம் இருந்ததிலிருந்து தொன்றுதொட்டு வரும் ஒரு பழக்கம். கஷ்டப்பட்டு கல்லை உரசி கை வலிக்கும் சிரமத்துடன் நெருப்பு உண்டாக்கிய நமக்கு இப்போது குச்சி உரசினால் பத்திக்கும் என்கிற இலகுவான சூழ்நிலையில் கையில் கிடைக்கும் எதையும் போகியில் கொளுத்துவதுதானே தமிழரின் மரபு. ப்ளாஸ்டிக் கொளுத்தாமல் பச்சை போகி கொண்டாடுவது அகிலத்திற்கு உகந்தது. “படுபாவிங்க.. நம்ம பூமியைக் கெடுத்துக் குட்டிசுவராக்கிட்டுப் போய்ட்டானுங்க” என்று எள்ளுப் பேரன் பேத்திகளிடம் பித்ருலோகம் போயும் திட்டு வாங்காமல் இருக்க மாசற்ற பூமியைத் தருவோம். தலைப்பில் கன்னிப் பொங்கல் தாவணி கட்டி ஆடுவதால் அந்தப் பக்கம் திரும்புவோம்.

இந்த இடியட் பாக்ஸ் ராஜ்ஜிய பரிபாலனம் செய்யாத காலங்களில் பண்டிகைகளின் கை ஓங்கியிருந்தது. மாட்டுப் பொங்கலும் கன்னிப் பொங்கலும் கட்டிளம் காளையர்களுக்கு கரும்பு போல தித்திப்பான நாட்கள். மாட்டுப்பொங்கல் அன்று தான் கறக்கும் மாடுகளைக் குளிப்பாட்டி குறவன் குறத்தி ஆட்டத்தோடு முண்டாசுக் கட்டிய கோனார்கள் திரும்பவும் வீடு கொண்டு விடும் வைபவம் நடைபெறும். இதைப் பற்றி சற்று விரிவாக போன வருஷம் இங்கே பிரஸ்தாபித்திருந்தேன். சில அமெரிக்கத் திரைப்படங்கள் ஹிட்டான படங்களுக்கு இரண்டாம் பாகம் போடுவதைப் போல போன வருஷமே காணும் பொங்கல் பற்றி ”பொறவு சொல்றேன்”னு கடைசியில் ஒரு கொக்கிக் கார்டு போட்டிருந்தேன்.

மாட்டுப் பொங்கல் முடிந்த மறுநாள் விடியற்காலை காகத்தை வம்புக்கிழுக்கும் கணுப்பொங்கல் ரசமானது. காக்காவிற்கு அன்றைக்கு டைஜின் சாப்பிடும் அளவிற்கு அஜீரணக் கோளாறு ஆகும். ஓவர் ட்யூட்டி. மஞ்சள்கொத்து இலையில் கொஞ்ச கொஞ்சமாக எல்லா சாதத்திலும் கிள்ளி வைத்து காகத்தை அழைக்காமல் அழைப்பார்கள். மாமிக்களின் கை வண்ணம் அன்று தெரிந்துவிடும். ஒரு காகமும் சீண்டாத மஞ்சள் இலை வீட்டுக்காரியின் ஆத்துக்காரர் ’ஹஸ்பெண்ட் தி கிரேட்’. எப்படிப் போட்டாலும் என்னைப் போல நொட்டை சொல்லாமல் சாப்பிடும் கட்டிச் சமர்த்து என்றர்த்தம். எந்த இலையை காக்கா கொத்திக்கொண்டு போகிறதோ அவர்கள் வீட்டு அடுப்பங்கரை அற்புதமாகும். ஆம்படையான் காலடியில் கிடப்பார். இலையைக் கூட மிச்சம் வைக்காமல் சாப்பிட்டுவிடுவார்கள்.

கணுப்பொடி வைத்துவிட்டுதான் காபி சாப்பிடவேண்டும் என்பது அன்றைய தினத்தின் சம்பிரதாயம். அதனால் திருமதிகள் அதிகாலையிலிருந்தே ட்யூட்டியில் இறங்கிவிடுவதால் நன்பகலுக்கு முன்பகலில் சாப்பிட்ட பின்னர் சற்று தூங்கி சிரமபரிகாரம் செய்துகொள்வார்கள். மத்தியானம் இரண்டு மணிக்கு மேல் கண்ணுக்கு விருந்தாக கன்னிப் பெண்கள் கோலாட்டமடிக்க குச்சியுடன் வருவார்கள். இரண்டிரண்டாக ஜோடி போட்டுக்கொண்டு பின் கொசுவ புடவையை தூக்கிச் சொருகிக் கொண்டு வரும் கன்னியரின் கனி நடையே அழகு.

திண்ணை வைத்த வீடுகளின் அருமை அன்று தெரியும். வெளித்திண்ணை தட்டியடிக்கப்படாமல் இருந்தால் ரோடிலிருந்து பார்த்தேலே இந்த ஃபோல்க் டான்ஸ் ஷோ தெளிவாகத் தெரியும். எங்கிருந்தோ கோலாட்டச் சத்தம் சன்னமாக கேட்டாலே அவ்வீட்டுத் திண்ணையோரத்தில் கும்பலாக ஆட்டம் காணக் கூடிவிடுவார்கள். கையில் கொண்டு வந்த கூடையை நடுவில் வைத்துவிட்டு குனிந்து நிமிர்ந்து கோலாட்டம் ஆடுவார்கள். பழைய படங்களில் க்ரூப் டான்ஸ் ஆடுபவர்கள் இருகையையும் சேர்த்து ஒரு தட்டு பக்கத்திலாடும் பெண்ணின் கையில் ஒரு தட்டு என்று தாளமாகத் தட்டுவார்கள். அவர்கள் ஓயாமல் கைக்கு வேலை கொடுப்பது போல “கும்மியடிப் பெண்ணே கும்மியடி” என்று பாடிக்கொண்டே ஆடுவார்கள். சாரீரம் நன்கு வாய்த்த பெண்களை ”இன்னொரு தடவ பாடேண்டி” என்று பாட்டி ஒன்ஸ் மோர் கேட்கும் போது அந்த மடி ஆசாரப் பாட்டியை அப்படியே கட்டியணைத்து செல்லமாக முத்தமிடத் தோன்றும்.

தாண்டியா ஆடியவர்களது கூடைகளில் ஒரு படி அரிசியும், அச்சு வெல்லமும் போடுவார்கள். பின்பு பழம், பாக்கு வெற்றிலை தட்டில் வைத்துக் கொடுப்பார்கள். “வரேன் டீச்சர்” என்று சொல்லிவிட்டு கிளம்பும் தருவாயில் “தம்பி அந்த கரும்பை ஒடிச்சி அவாளுக்குக் குடுடா” என்று எனக்கு விசேஷ கட்டளைப் பிறப்பிக்கப்படும். பரிசில் வாங்குவோரின் ஆட்டத்திற்கு ஏற்றவாறு அவர்களுக்கு தக்கக் கரும்புச் சன்மானம் என்னால் வழங்கப்படும். குறிப்பு: அழகுக்கேற்றவாறு என்று நான் இங்கே சொல்லவில்லை.

கலைஞர்களுக்கு தரவேண்டிய மரியாதை நிமித்தமாக வாசலுக்கு வந்தால் ஆண் சிங்கங்களை சைக்கிளில் துணைக்கு அழைத்து வந்திருப்பார்கள். அரிசி, வெல்ல கலெக்ஷன் கூடையை விட்டு வழிய ஆரம்பித்தால் சைக்கிள் கேரியரில் கட்டியிருக்கும் சாக்கு மூட்டையில் கொட்டி முடிந்துகொள்வார்கள். இப்போது சென்னையில் சங்கமமாக விழாவெடுக்கும் அளவிற்கு அப்போது தேவைப்படவில்லை. கிராமிய மணம் கமழும் விளையாட்டுகளும் இதர மரபுகளும் செம்மையாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்தன.

உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் எஸ்.எம்.எஸ்ஸில் பொங்கல் வாழ்த்து அனுப்பிவிட்டு, “முற்றிலும் சந்தோஷத்தை தருவது உறவுகளே என்றும் நண்பர்களே என்று கட்சி பிரித்துப் பேசும் பட்டி மண்டபங்களையும் நடிக நடிகைகளின் “என்க்கு டமில் பிட்கும். பொங்கள் ரொம்ப பிட்க்கும்” என்று முகம் மகிழ்ந்து தரும் பேட்டியையும், உலகத் தொலைக்காட்சி வரலாற்றில் முதன் முறையாக போடும் திரைப்படங்களையும் பார்த்துவிட்டுவது இக்கால பண்டிகை கொண்டாடும் முறை. அதிலிருந்து வழுவாமல் இக்கால விதிகளை கடைபிடிப்போமாக.

யாராவது ஆஸ்கி டெக்ஸ்டில் படம் போட்ட பொங்கல் பானையும், கரும்பும் எஸ்.எம்.எஸ்ஸாக அனுப்பினால் எல்லோருக்கும் ஃபார்வேர்ட் பண்ண சௌகரியமாக இருக்கும். அனுப்புவீங்களா?

பின் குறிப்பு:  இது தினமணி இணைய பொங்கல் மலரில் வெளிவந்துள்ளது. நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள். தீ.வி.பிக்கு இரண்டு லட்சம் ஹிட்கள் கிடைத்திருக்கிறது என்பது கூடுதல் செய்தி.

பட உதவி: http://www.hottrendsindia.com/
-

20 comments:

Madhavan Srinivasagopalan said...

பொங்கல் ஷெட்யூல ரொம்ப பிசியோ ?
உங்களவுக்கு வரலியே இதுல...

நா ஏதோ கவிதை சொல்லி இருக்கிறேன் என்னோட பிலாகுல.. வந்து புரியுதான்னு பாடிச்சிட்டு சொல்லுங்க மைனரே..

Angel said...

தினமணி இதழில் வெளி வந்ததற்கு வாழ்த்துக்கள் .பட்டி மன்றம் கூட அட்ஜஸ்ட் செய்யலாம் ,சென்ற வருடம் ஒரு தொலைகாட்சில தல விரி கோலமா எல்லாரும் பொங்கல் பொங்கினது தான் எனக்கு தாங்க முடியல .
மறந்துபோன ,மறைந்துபோன நிறைய விஷயங்களை நினைவு படுத்திருக்கீங்க .செராமிக் அவனில் பிரஷர் குக்கர் வைத்துபொங்கல்பொங்கிசாப்பிடும் போதுபழைய நினைவுகளை அசை போட்டுக்கொள்கிறேன் .பகிர்வுக்கு நன்றி .
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

A.R.ராஜகோபாலன் said...

இந்த இடியட் பாக்ஸ் ராஜ்ஜிய பரிபாலனம் செய்யாத காலங்களில் பண்டிகைகளின் கை ஓங்கியிருந்தது. மாட்டுப் பொங்கலும் கன்னிப் பொங்கலும் கட்டிளம் காளையர்களுக்கு கரும்பு போல தித்திப்பான நாட்கள்.

பழைய நினவுகளுக்கு வடிவம் வார்த்த வரிகள், அருமை நண்பா

தக்குடு said...

மன்னார்குடில ஒரு தெளிவான நீரோட்டம் இருந்துருக்கு போல..... :) மைனருக்கு யாரோட படம் போட்ட வாழ்த்துஅட்டை வந்ததுன்னு சொல்லவேல்லியே!! :) உம்ம எழுத்துக்கு 2 கோடி ஹிட்ஸ் கூட வரும் ஒய்ய்ய்ய்!!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

பதிவு அருமை! காணும் பொங்கலன்று காக்கை குருவிகளுக்கு அதிக தொந்தரவு கொடுக்காமல்,கரும்பு, ஸால்யான்னம் என்று வைத்து விட்டோம்.
காரணங்கள் மூன்று!
1. தங்கமணிக்கு ஆஃபீஸ் உண்டு;
2. பறவைகளாவது தப்பிகக்ட்டுமே;
3. இந்த கஷ்டம் என்னோடு போகட்டும்
என்கிற நல்லெண்ணம்.

பொங்கல் வாழ்த்துக்களுடன்,

ஆர்.ஆர்.ஆர்.

RAMA RAVI (RAMVI) said...

அருமையான பதிவு.

கோனார் மாட்டுக்கு அலங்காரம் செய்து அழைத்து போவது,கணு அன்றைக்கு கும்மி,கோலாட்டம்,இதெல்லாம் மறந்தே போய்விட்டது. அழகாக ஞாபக படுத்தியதற்கு நன்றி.

தினமணியில் வெளிவந்ததற்கு வாழ்த்துக்கள்.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பகிர்வு மன்னை மைனரே...

பொங்கல் ஆச்சா...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்...

சாந்தி மாரியப்பன் said...

பொங்கல் ஆச்சா..

மஞ்சள் இலை, கும்மின்னு அமர்க்களமா இருக்கறதைப் பார்த்தா ஜெகஜோதியா பொங்கியிருக்குன்னுதான் தோணுது :-)))

சமுத்ரா said...

பொங்கல் நல்வாழ்த்துகள்

ADHI VENKAT said...

தினமணியில் வெளியானதற்கு வாழ்த்துகள்.

நாம் அனுப்பும் வாழ்த்து அட்டைகளும், நமக்கு வரும் வாழ்த்து அட்டைகளை பத்திரமாக சேகரித்து வைத்திருந்ததும் ஒரு காலம்....

பொங்கல் வாழ்த்துகள்.

RVS said...

@Madhavan Srinivasagopalan
சட்டியில இருந்தாதானே அகப்பையில வரும். :-)

RVS said...

@angelin
நன்றிங்க. உங்களுக்கும் ரொ.....ம்ப லேட்டா வாழ்த்து சொல்லிக்கிறேன். :-)

RVS said...

@A.R.ராஜகோபாலன்
மனமார்ந்த வாழ்த்துக்கு நன்றி கோப்லி! :-)

RVS said...

@தக்குடு
உஷ்..... யார் போட்ட படங்கிற இரகசியத்தை பப்ளிக்கா கேட்கக்கூடாது. இருந்தாலும் சொல்றேன். ஸ்ரீனிவாசப் பெருமாள் படம். :-)

RVS said...

@”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி
மூன்று காரணங்களும் அருமை. ரிடைரைக்டட் டூ MRS. ஆர்.ஆர்.ஆர். :-)

RVS said...

@RAMVI
வாழ்த்துக்கு நன்றி மேடம். தாமதமான பொங்கல் வாழ்த்துகள். :-)

RVS said...

@வெங்கட் நாகராஜ்
ஆச்சு! சாப்டாச்சு! உங்களுக்கும் பிலேட்டட் பொங்கல் வாழ்த்துகள். :-)

RVS said...

@அமைதிச்சாரல்
பொங்கலோ பொங்கல்னு பொங்கியாச்சு. அமர்க்களமான பொங்கல்தாங்கோ!... நன்றி. :-)

RVS said...

@சமுத்ரா
நன்றி! தங்களுக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துகள். லேட்டா!! :-)

RVS said...

@கோவை2தில்லி
ஆமாங்க... வாழ்த்துக்கு நன்றி. :-)

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails