Saturday, March 10, 2012

ராகுல் திராவிட்: ஓய்வு பெறும் இந்தியப் பெருஞ் சுவர்


டெண்டுல்கர் கங்குலி போன்று புகழின் உச்சாணிக் கொம்பிற்கு சரசரவென்று ஏறியவர் இல்லை திராவிட். அவர்கள் ஆக்‌ஷன் கிங்ஸ். பந்து வீசுபவர்களை ”ஒத்தைக்கு ஒத்தை வாடா” என்று முண்டு தட்டுவார்கள். தங்களது ஆக்ரோஷமான அடிதடி ஆட்டத்தால் அவர்களை அடக்கியாள நினைப்பவர்கள். இந்த வரிசையில் சமீபமாக முன்னந்தலையில் கேசமிழந்த வீருவும் அடக்கம். திராவிட்டின் பாணி இவர்களுக்கு எதிர்த்திசை. பந்து வீசுபவரின் திராணியை சோதிப்பது. ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என்றழைக்கப்பட்ட ஷோயப் அக்தர் பௌண்டரி லைனில் இருந்து ஓடிவந்து தெம்பத்தனையும் ஒன்று திரட்டி உசுரைக் கொடுத்து பந்து வீசினால் முன்னங்காலை தூக்கி வைத்து தலையை கவிழ்த்து சர்வமரியாதையாக ஒரு “லொட்” வைப்பார். ஸ்பின்னர் வீசிய பந்து என்றால் பந்து மட்டையுடன் ஒட்டிக்கொண்டுவிடும். ஒரு இன்ச் அகலாது. அடுத்த பந்திற்கு ரா.பி.எக்ஸ் இன்னும் ஒரு 200 மீட்டர் ஓடவேண்டும். ஒரு ஓவரில் ஒரு கி.மீ நாயாய் பேயாய் அவர் ஓடிக் களைத்த பின் ஆறாவது பந்தில் ஒரு ஃபுல்டாஸோ அல்லது ஓவர் பிட்ச்சோ போட்டால் தலைவர் கவர் ட்ரைவ் அடித்து பௌண்டரிக்கு விரட்டுவார்.

பந்து வீசுபவர்களை பொறுமை இழக்கச் செய்து வெகு விமரிசையாக வெறுப்பேற்றி, சுவரின் மேல் பட்ட பந்தானது எப்படி சுவருக்கு எந்த சேதமும் விளைவிக்க முடியாமல் சிதறி ஓடுகிறதோ அதைப் போல இந்தியப் பெருஞ்சுவராய் நின்றார் திராவிட். ஆரம்ப காலங்களில் சுவராய் மட்டும் இருந்தவர் காலங்கள் உருண்டோட அனுபவமும் பயிற்சியும் கைக் கோர்க்க கான்கிரீட் சுவரானார். 

ஆசிய நாடுகளை தவிர்த்து பவுன்சி ட்ராக்ஸ் தயார் செய்யப்படும் வெளிநாடுகளில் நம்மவர்கள் மண்ணை கவ்வுவார்கள். பரதநாட்டியம் குச்சிப்புடி போல மட்டைப்புடி டான்ஸ் ஆடுவார்கள். முட்டிக்கு கீழ் வரும் பந்துகளை அனாயாசமாக அடித்துவிளையாடும் வீரர்கள் “விர்ர்ர்ர்ரூம்” என்று முகத்துக்கு நேரே சீறி வரும் பந்துகளுக்கு பயந்து ஒதுங்கிவிடுவார்கள். முகத்தில் அடிபட்டால் அப்புறம் அவலட்சணமாக விளம்பரத்தில் வரமுடியாது. டப்பு வராது. பாக்கெட் நிரம்பாது. திராவிட் மற்றும் வி.வி.எஸ். லெக்ஷ்மன் போன்றோர் இந்தக் கலையில் விற்பன்னர்கள். ஒரு முனையில் நிற்க வைத்து ஏத்து ஏத்து என்று ஏத்தினாலும் ஃபார்வேர்ட் ஷார்ட் லெக் வைத்து பவுன்ஸர் போட்டாலும் காலடியில் பந்து விழும்படி டொக்கு வைத்து விளையாடுவார்கள். முன்னால் கக்கூஸில் உட்கார்ந்திருக்கும் போஸில் திராவிட்டின் கால் புறத்தில் ஃபீல்டிங் செய்பவர் மண்ணைக் கவ்வுவார்.

திராவிட்டின் கிரிக்கெட் பயணம் நிதானமானது. கடந்து வந்த பாதை ஸ்திரமானது. அவரது முதல் ஆட்டத்திலேயே ஜெயத்தோடு தனது கிரிக்கெட்டிற்கு பிள்ளையார் சுழி போட்டார். ஸ்ரீலங்காவிற்கு எதிராக இந்தியாவிற்காக அவர் களமிறங்கிய முதல் ஒரு நாள் பந்தயத்தில் நமது அணி வெற்றிபெற்றது. அதில் அவர் அடித்த ஸ்கோர் ஒற்றை இலக்கம்தான். 3 ரன்கள். கிரிக்கெட்டர்களின் புண்ணிய பூமியான லார்ட்ஸ் மைதானத்தில் டெஸ்ட் வாழ்க்கையை தொடங்கினார். அதில் அவருக்கு 95 ரன்கள் கிடைத்து. ஐந்தில் நூறை விட்டார். 

96-ல் தனது கிரிக்கெட் பயணத்தை தொடங்கியவருக்கு 97-ல் தென்னாப்பிரிக்க பயணம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அந்நிய தேச பிட்ச்களின் அதிகப்படியான பௌன்ஸர்களை திறமையாக எதிர்நோக்குவதற்கு ஒரு உபாயம் செய்தார். சின்னசாமி ஸ்டேடிய பெவிலியன் படிகளை தற்காலிக ஆடுகளமாக்கினார். டென்னிஸ் பந்தை நனைத்து வெயிட் ஏற்றி பக்கத்திலிருந்து அரைக்குத்து குத்தி பௌன்ஸர் எறியச் சொல்லி கால் கடுக்க கழுத்து சுளுக்க பயிற்சி செய்தார். விளைவு? மட்டை மேல் பலன். அந்த சீரிஸில் தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார். அலன் டொனால்ட், லான்ஸ் குளூஸ்னர் போன்றோர் முக்கிப் பார்த்தும் முடியாது தோற்றார்கள். நன்கு பூசிய சுவராக நின்று இந்தியாவை அணைகாத்தார்.

கர்நாடக கிரிக்கெட் அசொஸியேஷனின் சம்மர் கேப்பில் பதினெட்டு வயதுக்குள் இடம்பெற்றிருந்த இளம் வீரர்களிடம் கோச் கேகி தாராபூர் கேட்ட கேள்வி “இங்க எவ்ளோ கீப்பர் இருக்கீங்க?”. ஒரு பயல் கையைத் தூக்கவில்லை. யாரும் இல்லை. ஒருவர் மட்டும் தைரியமாக கையைத் தூக்கினார். அவர் திராவிட். அவரும் கீப்பர் இல்லைதான். அப்போது வயது 13. கிரிக்கெட் ஆர்வத்தில் எதையும் செய்வதற்கு தயாராக இருந்திருக்கிறார் திராவிட். கடைசிக் காலம் வரை சப்ஸ்ட்டிட்யூட் கீப்பராக அவரை இந்திய அணி பிரமாதமாக உபயோகப்படுத்தியது.

பியூசி படிக்கும்பொழுது பெற்றோருக்குத் தெரியாமல் நண்பர் ஒருவரின் வீட்டில் ஒரு நாள் காலை பார்ட்டி ஒன்று ஏற்பாடாகியிருந்தது. இரவில் என்றால் வீட்டில் மாட்டிக்கொள்வோம் என்று பகலில் வைத்திருந்தார்கள். திராவிட்டுக்கு பார்ட்டி என்றால் உசுர். அன்றைக்கே KSCAவின் சீனியர் டிவிஷன் லீக் மேட்சும் இருந்தது. மறுநாள் காலை பார்ட்டிக்கு திராவிட்டை எதிர்பார்த்திருந்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. காலையில் ஃபோன் செய்து “டேய்! நா மேட்சுக்கு போறேன்” என்று வருத்தமே படாமல் பார்ட்டிக்கு டாட்டா காட்டிவிட்டாராம். அதே வருடம் அக்கௌண்டன்ஸி பாடப்பிரிவில் கல்லூரியிலேயே இரண்டாவதாக வந்தார். ஒட்டுமொத்த கல்லூரிகளுக்கு மூன்றாவதாய் வந்தார். படிப்பிலும் கான்கிரீட் போல கெட்டி என்று நிரூபித்திருக்கிறார். ஹிந்தி டீச்சருக்கு மருத்துவ செலவுகள் அதிகரித்தபோது தன்னிடம் இருந்ததை தாராளமாக அவருக்கு கொடுத்து உதவியதில் அவரது தயாள குணம் தெரிகிறது.

ஃபீல்டில் டொக் வைத்து பெருமளவில் ஒன்றும் இரண்டுமாக பொறுக்கும் ராகுல் திராவிட் ரசிகர்களின் நெஞ்சங்களில் விண்ணைத் தொடும் mighty சிக்ஸராக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை.

பட உதவி: www.skysports.com

21 comments:

எல் கே said...

One of the few players who played without selfishness and put the team ahead of him .

Only regret i have about him is greg chappel era when he was a silent partner to chappel .

வெங்கட் நாகராஜ் said...

நல்ல மனிதர்.... நல்ல விளையாட்டு வீரர்....

சரியான சமயத்தில் ஓய்வு எடுக்க முடிவும் எடுத்ததில் சாமர்த்தியம் தெரிகிறது...

முரளிகண்ணன் said...

நல்ல கட்டுரை. சுவராசியமாக இருந்தது.

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

ட்ராவிட் கடந்த பாதையை சிறப்பாய் அலசியிருக்கிறீர்கள் ஆர்விஎஸ்.

ஒரு சின்ன சஜெஷன்.ஏற்புடையதாய் இல்லையெனில் கடந்துசென்று விடுங்கள்.

உடல் ஊனங்களை வைத்து சுவாரஸ்யத்தை உண்டாக்க முயல்வது சிலருக்கு வருத்தம் ஏற்படுத்தலாம்.

அதனால் முடிந்த வரை வழுக்கை-சொட்டை-டமாரம் போன்ற
ப்ரயோகங்களைத் தவிர்த்து விடுங்கள்.

யாரொருவருமே எப்போதுமே முடிசூடா மன்னனாய் இருப்பது சாத்தியமும் இல்லைதானே?

மதுரை சரவணன் said...

//பந்து வீசுபவர்களை பொறுமை இழக்கச் செய்து வெகு விமரிசையாக வெறுப்பேற்றி, சுவரின் மேல் பட்ட பந்தானது எப்படி சுவருக்கு எந்த சேதமும் விளைவிக்க முடியாமல் சிதறி ஓடுகிறதோ அதைப் போல இந்தியப் பெருஞ்சுவராய் நின்றார் திராவிட். ஆரம்ப காலங்களில் சுவராய் மட்டும் இருந்தவர் காலங்கள் உருண்டோட அனுபவமும் பயிற்சியும் கைக் கோர்க்க கான்கிரீட் சுவரானார். //

arumaiyaai pukalnthu thalli ulleerkal.. nalla veeranukku nalla pathivu..vaalththukkal

R.Ravichandran said...

Good post. Very interesting. My point of view Dravid is many times better than sachin.

Anonymous said...

Rahul dravid is the most under-rated
cricketer in this era of tendulkars
and shewags but he is more technically sound player than sachin
and sehwag

ஸ்ரீராம். said...

ஸ்டைலிஷ் பேட்ஸ்மேன். அவர் நிலைத்து ஆடும் அடங்களில் அவர் ஆட்டம் ரசிக்கும்படி இருக்கும். 'சின்னசாமி ஸ்டேடியம் படிக்கட்டில் பந்து வீசச் சொல்லி...' போன்ற விவரங்கள் புதிது. என்றாவது ஒரு நாள் வெளியேறித்தான் ஆக வேண்டும். தானாக வெளியேறியது உத்தமம். இந்திய அணிக்கு நிச்சயம் இழப்புதான்.

Madhavan Srinivasagopalan said...

அவர் ஒரு திராவிடர் என்பதாலேயே அவருக்கு சில சமயம் வாய்ப்புக்கள் மறுக்கப் பட்டதோ ?
---- சும்ம்மா.. பெயர் பொருத்தத்தால இப்படி சொல்லுறேன்..

பத்மநாபன் said...

அவசரபட்டிருக்க வேண்டாம்..டெஸ்ட்டில் தொடர்ந்திருக்கலாம்..ஆஸி மேட்சில் எல்லோரும் தான் தாறுமாறாக விளையாடினார்கள்..சச்சினுக்கு துணையாக கொஞ்ச நாள் விளையாடிருக்கலாம்...

இன்னொரு பெருஞ்சுவர் கிடைப்பது அரிது...

RVS said...

@எல் கே
:-)

RVS said...

@வெங்கட் நாகராஜ்
கரெக்ட்டுதான் தல! :-)

RVS said...

@முரளிகண்ணன்
பாராட்டுக்கு நன்றி! :-)

RVS said...

@சுந்தர்ஜி
மாற்றிவிட்டேன் ஜி! நன்றி. :-)

RVS said...

@மதுரை சரவணன்
மிக்க நன்றி! :-)

RVS said...

@R.Ravichandran
Thank you! Sachin is a different class of player altogether! He is genius BOSS! :-)

RVS said...

@Anonymous
He is a good player with different temperament. :-)

RVS said...

@ஸ்ரீராம்.
விக்கெட்டெல்லாம் ஒரு பக்கத்தில் சடசடவென்று சரிந்து நிர்கதியாக நிற்கும் நேரத்தில் சுவரின் ஆட்டம் சுவாரஸ்யமாக இருக்கும்ங்க.. சரிதானே... :-)

RVS said...

@Madhavan Srinivasagopalan
ஏம்பா சும்மா எதுனா கொளுத்திப் போடறே!! :-)

RVS said...

@பத்மநாபன்
எனக்கென்னமோ விரட்டுவதற்கு முன்னால் பொட்டியைக் கட்டிவிட்டார் என்று நினைக்கிறேன் சார்! நல்ல முடிவு!! :-)

Narasimman said...

good

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails