Tuesday, April 24, 2012

மன்னார்குடி டேஸ் - முதல் கல்யாணம்!


அது ஊரடங்காத பொதுப்பரிட்சை மேகங்கள் சூழ்ந்த பின்னிரவு நேரம். எங்கள் வீட்டு மொட்டை மாடியில் ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் போட்ட மாடிப்படி ஓரம். எதிரே தெப்பக்குளம் அமைதியாக மறுநாள் காலைக்கு காத்திருந்தது. வீடுதோறும் மாணவக் கண்மணிகள் எப்படியாவது உருப்போட்டாவது தேறிவிட வேண்டும் என்று தீர்மானமாக இருந்தது ஆங்காங்கே எரிந்த ஓரிரு விளக்குகள் காட்டியது. ஆனால் கால்குலஸும் சைன் தீட்டாவும் காஸ் தீட்டாவும் அவர்களைப் பாடாய்ப்படுத்திக்கொண்டிருந்தது. ஷீட்டிற்கு அடியில் ஓரத்தில் வாய்க் கட்டப்பட்ட கரி சாக்குமூட்டை. அதை ஈஷிக்கொண்டு அதன் மேல் உப்புமூட்டை போல சாய்ந்து சரிந்திருந்தான் அப்பு. கொஞ்சம் வெயிட்டான பாடி.

”இது என்ன சொல்லு?” அழி ரப்பர் மேல் பென்சிலால் ஏதோ பூச்சி போலக் கிறுக்கியதைக் காண்பித்தான் அப்பு. கேட்கும்போது அவனது கண்கள் ஒளிர்ந்தது. அருங்காட்சியகத்திலிருந்து எடுத்து வந்த அபூர்வப் பொருளாக அரை மணி நேரமாய் ஒன்றும் சொல்லாமல் ரப்பரைக் காட்டிக் காட்டி சிரித்துக்கொண்டே அழிச்சாட்டியம் செய்தான். நான், அப்பு, ஸ்ரீராம் மற்றும் ஸ்ரீதர் என்ற நால்வர் கூட்டணியாய் மாடியில் சஞ்சரித்துக்கொண்டிருந்தோம். அடியேன் சயின்ஸ், அப்பு வொகேஷனல் ஸ்ட்ரீம், ஸ்ரீதர் காமர்ஸ் ஸ்ரீராம் எங்களுக்கு ஒரு வருஷம் சின்னவன். பொழுதுபோக்குக்கு கம்பெனி கொடுப்பதற்காக எங்கள் கூடாரத்திற்கு வந்தவன். 60 வாட்ஸ் குண்டு பல்ப் வெளிச்சத்தில் ஒன்றும் புரியவில்லை. மைக்கேலில் காமேஸ்வரன் ”ச்சே பழவரிசி!” என்று கடிக்கும் ஆர்வத்தில் “என்னடா?” என்றேன்.

அப்பு அன்று நிலைகொள்ளாமல் இருந்தான். “என்னன்னு சொல்லேன்!” என்று கேட்டவன் முகத்தில் டன்டன்னாய் வெட்கம் வழிந்தது. ரூஜ் பூசாமல் கண்ணங்கள் சிவப்பானது போன்ற ஒரு தோற்றம். சப்பளாங்கால் போட்டு உட்கார்ந்திருந்ததாலும் சிமெண்ட் பால் ஊற்றி வழிக்காத தரை காலைப் பதம் பார்த்துவிடும் என்பதாலும் காலால் கோலம் போடாமல் கட்டுண்டு இருந்தான். என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஸ்ரீதருக்கும் ஒன்றும் விளங்கவில்லை. வாடிக்கையாக இரவு பத்து மணிக்கு மேல் தலைக்குக் கொடுக்கும் (பொதுவாக படிப்பதற்காக எடுத்துவரப்படும்) ஒரு குயர் தலைகாணி சைஸ் அக்கவுண்டன்சி நோட்டால்  அவன் தலையில் ஓங்கிப் போடும் வெறியில் இருந்தான். அப்புவின் சுண்டி விரல் நீள ரப்பரில் ஏதோ கிறுக்கியிருந்தது. அதைக்காட்டி சொல்லேன். நீ சொல்லேன் என்று ”புள்ளி ராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா?” டீஸர் ஆட் போல கேட்டதாலும் காலையிலிருந்து தகித்த வெய்யில் வேறு கட்டியிருந்த வேஷ்டியின் உள்ளே தாராளமாகப் பரவி ப்ருஷ்ட பாகத்தைச் சூடாக்க ஸ்ரீதர் ஏகக் கடுப்பானான். அந்த நேரத்தில் மொட்டை மாடியில் ஏன் இருந்தோம் என்பதை அடுத்த பாராவிலேயே சொல்லிவிடுவது உத்தமம். 

ஊரில் எங்கள் பத்தாம் நம்பர் வீட்டு மாடியும் மாடிப்படியையும் என்னைப் போன்ற திராபை பூட்டகேஸுகளையே பரீட்சையில் தேற்றி வாழ்க்கைப் படியில் ஏற்றிவிடும் என்பது கற்பாந்த காலத்திலிருந்து எங்கள் வீட்டில் உட்கார்ந்து படித்தவர்கள் நம்பிக்கையின் பேரில் கொடுத்த ராசி சர்ட்டிஃபிகேட். மேலும் எனக்கே நான் படிப்பது புரியாத காலத்திலும் என்னை நம்பி நான் சொல்லிக்கொடுப்பதை செவிமடுக்க நாலைந்து பாதை மாறிய ஆடுகள் என்னிடம் தானாய் வந்து சிக்கின. கற்றுக்கொடுக்கும் சாக்கில் பாடங்களை புரிந்து கொள்ள பிரம்மப்ரயர்த்தனப்பட்டேன். பொதுநலத்தில் சுயநலமாய் என்னுடைய அறிவையும் விருத்தி செய்துகொள்ள ஏதுவாய் அமைந்தது. இப்படியாக நாங்கள் படிக்கலாம் என்று புஸ்தகமும் கையுமாக உட்கார்ந்திருக்கும் அந்த வேளையில் தான் அந்த ருசிகரச் சம்பவம் நடந்தது. ஸ்ரீதருக்கு ப்ளஸ் டூவிலேயே ப்ரஷ் மீசை. அப்புவிற்கு அப்போது அரும்பு மீசை. எனக்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக கொஞ்சம் பூனை ரோமங்களாக வெட்கத்தோடு எட்டிப்பார்த்த மீசை. ஆசைப்படுவதற்கு மீசை போதும் என்று நினைக்கிறேன்.

விஷயம் இதுதான். பக்கத்துவீட்டில் புதிதாக குடிவந்த பாரதிக்கு அப்புவைக் கண்டதும் பிடித்துவிட்டது. அவனும் மராத்தி. அந்தப் பெண்ணும் மராத்தி. இருவரும் மிடில் க்ளாஸ். இருவர் வீட்டிலும் விசேஷத்திற்கு ஐங்கிரிமண்டி செய்வார்கள். வந்த ஓரிரு நாட்களிலேயே கண்ணும் கண்ணும் தீப்பொறி பறக்க உரச “143” என்பதை ரப்பர் விடு தூதாக காதலாய் எழுதி அவனிடம் அவளே கைப்படச் சேர்ப்பித்துவிட்டாள். அப்போதிலிருந்து அந்தச் சின்ன ரப்பர் அவனுடைய லப்டப்பை அதிகப்படுத்திவிட்டது. “என்னடா இது ரப்பர்ல எழுதினா லேசா கையால தேச்சாலே அழிஞ்சுடுமே! அதுமாதிரி உன்னோட காதலும்...” என்று வாயாலேயே காத தூரம் ”காதலும்”மை இழுத்து செண்டிமெண்ட் அஸ்திரம் ஒன்றை ஏவி விட்டான் ஸ்ரீதர்.

ஸ்ரீதரின் கூர்மையான அம்பு வரிகள் அப்புவைப் பாடாய்ப்படுத்தியது. தனது காவியக் காதல் அரும்பும்போதே அதைக் கசக்கிவிட்டானே என்று ரொம்பவும் குறைப்பட்டான். சோகத்தில் அன்றிரவே அவனுக்கு ஒரு முழம் தாடி முளைத்துவிடும் அபாயம் இருந்தது. ”ரப்பரைப் பேப்பர்ல போட்டு அழிக்காம பத்திரமா வச்சிருந்தா ஐ லவ் யூ என்னிக்குமே அழியாதுடா!” என்று தோளைத் தட்டி நான் சொன்ன தேற்றுதல் மொழிக்கும் பக்கத்திலிருந்த ஸ்ரீராம் கேலியாய் மறுமொழியளித்தான். “ஆமாம்டா. அவன் சொல்றதும் நியாயம்தான். எதாவது நாலு வார்த்தை உருப்படியாப் படிச்சா பிரயோஜனமா எழுதினா தப்பும் தவறுமா வந்தா பேப்பர்ல அழிப்போம். சும்மா புஸ்தகத்தோட பாரதி பஜனை பண்ணிண்டுருந்தா ரப்பருக்கு என்ன வேலை இருக்கப்போகுது? பத்திரமா பாக்ஸுக்குள்ள இருக்கப்போற வஸ்துல இருக்கிறது அழிய சான்ஸே இல்ல” என்று மேலும் வெறுப்பேற்றி இதயம் ரத்தம் வர பிராண்டினான்.

முதல்நாள் ராத்திரி ஏகத்திற்கு வெறுப்பேற்றினாலும் மறுநாள் மாலை அப்புவின் காவியக் காதலை எங்கள் குழுவிற்கு அதிகாரப்பூர்வமாகப் பிரகடனம் செய்தான் ஸ்ரீராம். அப்படி ஒன்றும் மன்மத சொரூபனாக இல்லாத அப்புவிற்குதான் முதலில் ஆள் செட் ஆனது பற்றி தெருவிற்குள் ஒரே குசுகுசுப் பேச்சு. நிறைய வயது வந்த பசங்களின் நெஞ்சம் அப்பளமாய் நொறுங்கியது. தெருவில் பேண்ட் போட்ட நிறைய ரோமியோக்களுக்கு டாவடிக்க தங்களுக்கு ஒரு ஃபிகர் இல்லையே என்று கழுத்துவரைக்கும் குறை. அப்புவை அடித்துவிடும் விரோதமாகப் பார்த்தவர்களுக்கு தங்களுக்கும் காதல் கைகூடாத வருத்தமே தவிர அவன் மேல் பழி ஒன்றும் இல்லை. பனிரெண்டாம் வகுப்பிலேயே இறுதித் தேர்வுக்கு முன் வாழ்வின் அடுத்தக் கட்டத்திற்கு பாஸ் ஆனான் அப்பு.

ஒரு வருடம் காதல் கடலில் சந்தோஷமாக நீந்தினான். அவ்வப்போது பெரிய அலையாக வந்த சிலர் இடர்களை துணிகரமாச் சந்தித்தான். மாமலையும் ஓர் கடுகாம் போல மாஅலையும் ஓர் துளியாம் என்று ஜாம்ஜாமென்று காதலித்தான். சைக்கிளில் எம்பி மிதிக்கும்போது, கிரிக்கெட் விளையாட பேட்டைத் தூக்கி ஸ்டம்பை கார்ட்வீலிங்காக கழலவிட்டு அவுட் ஆகும்போது, ராமர் கோயிலில் பிரசாதம் வாங்கித் திங்கும்போது, படிக்கும்போது, தூங்கும்போது, குளிக்கும்போது என்று சதா சர்வநேரமும் அந்த மீசையில்லா பாரதியின் நினைவாகவே அவளின் பக்தனாகியிருந்தான். ஒருநாள் அவன் அந்தக் காதல் சாகரத்தில் மூழ்கி முத்தெடுக்கவேண்டும் என்று ஆசைப்பட்டபோது நாங்கள் கல்லூரியின் முதலாண்டு இறுதியில் இருந்தோம். வேப்பமர அடியில் மதில்கட்டையில் உட்கார்ந்து தென்றல் காற்று வாங்கிக்கொண்டிருந்த ஒரு சந்தோஷமான இரவு நேரத்தில் ஸ்ரீராம் ஆரம்பித்த இந்த சம்பாஷனைக்கு பதில் அளித்தவன் அடியேன்.

“டேய்! அப்பு கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கான்”

“ஓஹோ! சரி...சரி...”

“அவங்க வீட்ல ஒத்துக்க மாட்டேங்கிறாங்க”

“ம்.. தெரியும்”

“நாமெல்லாம்தான் அவனுக்கு திக் ஃப்ரெண்ட்ஸ்”

“ஆமாம். யாரில்லைங்கறா?”

“அவனுக்கு கல்யாணம் பண்ணி வச்சுடலாமா?”

சடாரென்று தூக்கிவாரிப்போட்டது எனக்கு. அதுவரை அமைதியாய் இருந்த தெப்பக்குள அலைகள் ராட்சத உயரத்திற்கு எழும்பி என்னை அதனுடன் அழைத்துக்கொண்டது போல ஒரு உணர்வு.

“அவங்க அப்பா அப்படியே கொத்தா உன் சட்டையைப் பிடிச்சு தூக்கி குளத்துக்குள்ள போட்டுடுவாரு. தெரியும்ல”

“வெங்குட்டு. அதெல்லாம் விடு. எனக்கு நீச்சல் தெரியும். அப்பு தாலி கட்டிட்டான்னா அப்புறம் எல்லாரும் ராசியாயிடுவாங்கடா. நோ ப்ராப்ளம்”

“உஹும். இது ஒத்து வராது. இன்னும் அவனுக்கே அந்த வயசு வரலை. விட்டுடலாம். அவங்க அம்மா திட்டுவாங்கடா. எனக்கு பயமா இருக்கு”

“அப்புக்கு நாம பண்ணாம யார் பண்ணுவாங்க ஆர்.வி.எஸ்” என்று அந்த க்ஷணமே 1000 காதல் ஜோடிகளை கரம் சேர்த்துவிட்டுதான் மறுவேலை பார்ப்பேன் என்ற ரட்சகர் ஒருவரின் தீர்மானக் குரல் ஸ்ரீராம் பின்னாலிருந்து கேட்டது. ஸ்ரீராமை மீறி அவன் தலைக்கு மேலே எட்டிப்பார்த்தேன். குரல் வந்த திக்கிலிருந்து தலையை நீட்டினான் அந்தத் திட்டத்தில் ஸ்ரீராமின் கூட்டாளி ராஜா. எம்டிஜே. ராஜா என்று இனிஷியலோடு அழைக்கப்பட்ட அப்பையன் ”ஆந்தை” என்றும் செல்லமாக அழைக்கப்பட்டான். நாங்கள் உட்கார்ந்து பல சத்விஷயங்கள் பேசி பொழுதுபோக்கிய குளத்தோர மதில்கட்டையில் ஈ காக்கா இல்லையென்றாலும் பான்பராக் வாயோடு பராக்கு பார்த்துக்கொண்டு மதிலே சரணாகதி என்று காலம் தள்ளிக்கொண்டிருந்தபடியால் அப்பெயர் வாய்க்கப்பெற்ற புண்ணியவான்.

பேசிக்கொண்டிருக்கையில் சீட்டிலிருந்து எட்டாத சைக்கிளிலிருந்து பொத்தென்று கீழே குதித்து ஸ்பாட்டுக்கு அப்பு வந்து இறங்கியதும் விஷயம் தீவிரமடைந்தது. அவனுடைய எதிர்காலம் ஒளிமயமாவது எங்களின் கையில்தான் இருக்கிறது என்று கையைப் பிடித்துக்கொண்டு தேம்பித் தேம்பி அழுதான். இன்றைக்கு ஒருவரின் காதலுக்கு உதவி செய்தால் ஏழேழ் பிறப்பிற்கும் நம்முடைய காதலுக்கு கை தூக்கிவிட யாராவது உதவுவார்கள் என்கிற எதிர்கால எதிர்பார்ப்பிலும் நட்புக்கு இலக்கணம் தேடித்தரவும் மூவரும் சித்தமானோம். என்னதான் உள்ளுக்குள்ளே உதறல் எடுத்தாலும் எடுத்த காரியத்தை செவ்வனே முடிக்கவேண்டும் என்று மதிலுக்கு கீழே எங்களுடைய எந்தக் காரியத்திற்கும் சாட்சியாய் உறையும் கோதண்டராமரை உளமாற சேவித்தேன். ”ப்ராஜெக்ட் அப்பு” என்கிற கல்யாண சங்கதிக்கு தயாரானோம்.

”இதான் ப்ளான்” என்று ஸ்ரீராம் கல்யாணத் திட்டத்தை விவரிக்க ஆரம்பிக்கும்போதே குகையினுள் பச்சை, சேப்பு, மஞ்சள் என்று குண்டு விளக்குகள் மாறி மாறி எரிய அதனடியில் பார்பர் ஷாப் ரோலிங் சேரில் உட்கார்ந்திருக்கும் பழங்காலப் படங்களில் வரும் வில்லன் போலத் தெரிந்தான். ஸ்ரீராம் தாவாங்கட்டைக்கு அடியில் சிகப்பு விளக்கு எரிந்தது. “டீச்சர்! உங்க வீட்டுப் பையனா இப்படிப் பண்ணினான்” என்று வீட்டுப் படியேறி நாலுபேர் கேட்டுவிட்டால் என்ன செய்வது என்ற தீவிர யோசனையில் இருந்த என்னை தட்டி “என்னடா புரிஞ்சுதா?” என்று கேட்டான் ஸ்ரீராம். அப்பு கல்யாண அவசரத்தில் இருந்தான். ராஜா பான்பராக் அதக்கியதால் ஏற்பட்ட முயக்கத்தில் சாய்மானமாக நின்றான். விபரீதக் கனவு கலைந்து எழுந்து “ஹம்.... என்ன சொன்னே?” என்றேன்.

“காலையில நீதான் அப்புவை வீட்லேர்ந்து வெளிய அழைச்சுக்கிட்டு வர்றே. என்ன?” என்று என் சட்டை மேல் கை வைத்து அதட்டினான்.

“அழைச்சுக்கிட்டு வந்து........”

“முக்குல மணி டீக்கடை தாண்டி வந்துடு..”

“அப்புறம்?”

“லொடலொடா கவர்ன்மெண்ட் பஸ் இல்லாம வேற எந்த ப்ரைவே கும்பகோணம் பஸ் வந்தாலும் ஏத்திவிட்டுடு. அப்புறமா நாங்க பார்த்துக்கிறோம்”

“ம்.. சரி”

ராஜாவும் ஸ்ரீராமும் மும்முரமாக திருக்கல்யாண ஏற்பாட்டில் குதிக்கும் முன் “கல்யாணம் எங்கேடா?” என்று இக்காதலை சேர்த்துவைப்போர் சங்கத்தில் நானும் ஒருவன் என்கிற தார்மீக உரிமையில் தைரியமாகக் கேட்டேன்.

“சுவாமிமலையில...”

“அங்க யார்டா மத்ததெல்லாம் அரேஞ்ச் பண்ணுவாங்க?”

“நானும் ஸ்ரீராமும் விடிகாலையில கணேசால கிளம்பறோம். நீ ஒரு ஒன்பது மணிக்கா அப்புவை பஸ் ஏத்திவிடு” என்று பலகாலம் ப்ளான் செய்தது போல இருவரும் சாதாரணமாகப் பேசினார்கள். அப்பு திருமண ஆர்வத்தில் கை கால்களில் புதுரத்தம் பாய துருதுருவென்று இருந்தான். எனக்கு வெலவெல.

“பாரதி எப்படி வருவா?” அப்பாவித்தனமாகக் கேட்டேன். என்னுடைய கேள்விக் கணைகளால் துணுக்குற்ற ராஜா திருவிளையாடலில் நக்கீரனை எரித்த சிவாஜி போல என்னைப் பார்த்தான்.

“அதெல்லாம் பேசியாச்சு. அவங்க வீட்ல இதுக்கு சப்போர்ட்டு. அவங்க அங்க அழைச்சுக்கிட்டு வந்துடுவாங்க.” இதுவரைக்கும் ஒரு ஐம்பது பேருக்கு கல்யாணம் பண்ணிப்  பார்த்தவன் போல சகஜமாகப் பேசினான் ஸ்ரீராம். விவரமாக கல்யாண காரியங்களைப் பற்றி பேசப்பேச அப்புவின் கண்களுக்கு விடுவிடுவென்று வளர்ந்து பூமிக்கும் ஆகாசத்துக்குமாக விஸ்வரூபமெடுத்து நின்றான் ஸ்ரீராம். அவன் வாயிலிருந்து “ஜெய் ஸ்ரீராம்!” என்று வராததுதான் பாக்கி.

இங்கே என் மனசுக்குள் மத்தளம் அடித்தது. பலஹீனமான எனது இருதயம் மாட்டிகொள்வோமோ என்று திக்திக்கென்று அடித்துக்கொண்டது.

“நா அவனைக் கூப்பிடும்போது அவங்கம்மா எங்கடா போறீங்கன்னு கேட்டா என்னன்னுடா சொல்றது?” என்று அப்பாவியாய்க் கேட்டேன். எம்டிஜே ராஜா “கெக்கேக்கே” என்று எக்காளமாக வில்லன் சிரிப்பு சிரித்தான். இரண்டு வீரதீரப் புலிகளின் நடுவில் மாட்டிக்கொண்ட ஆடுபோல பயந்தேன்.

“ம்.. உங்க புள்ளைக்கு கல்யாணம் பண்ணிவைக்க அழைச்சுக்கிட்டுப் போறேன்னு சொல்லு. உஹும். இது சரிப்படாது. இவன் கெடுத்துடுவான் போலருக்கே அப்பு” என்று மாப்பிள்ளை பையன் வயிற்றில் புளியைக் கரைத்தான் ஸ்ரீராம்.

“வெங்குட்டு. உன்னைத் தான் நம்பியிருக்கோம். நீ ரொம்ப நல்லவன்னு எங்கம்மா உன்னைத்தான் நம்புவாங்க. வாடா வெளியில போவோம்னு கூப்பிடு. அப்படியே வந்துடறேன். ப்ளீஸ்டா” கெஞ்சும் குரலில் கேட்டான் அப்பு. பாரதியைக் கரம் கோர்க்கும் வைபவத்தை எதிர்நோக்கியிருந்தான். கல்யாணம் அவன் கண்ணை மறைத்தது.

மத்திமமாகக் தலையாட்டினேன். “நீ வருவியா இல்லையா. கரெக்டா சொல்லு. அதுக்குத் தகுந்தாப்ல நாங்க ஏற்பாடு பண்ணனும்” என்று சுதியை ஏற்றி கறாராகக் கேட்டான் ஸ்ரீராம்.

“சரி” என்று ஒத்துக்கொண்டதற்கப்புறம் அன்றைக்கு இராத்திரி தூக்கம் வரவில்லை. பிரச்சனை என்று வந்தால் மன்னையின் எந்த மூலையில் ஓடிப்போய் ஒளிந்துகொள்வது என்று திட்டம் தீட்ட ஆரம்பித்தேன். மூளையைக் கசக்கி யோசித்துக்கொண்டே படுத்திருந்ததில் பொழுது விடிந்துவிட்டது. வாசற்படியில் உட்கார்ந்து காஃபி குடிக்கும்போது தூரத்தில் வடகரையில் அப்பு வீடு கல்யாண சலனமில்லாமல் அமைதியாக இருப்பது தெரிந்தது. ஸ்ரீதர் அப்பா இன்ஸ்டிட்டியூட்க்கு சைக்கிளில் போய்க்கொண்டிருந்தார். “குட்மார்னிங் சார்”ன்னேன். காஃபி ட்ராப் ட்ராப்பாக் ட்ரிப்ஸ் போல உள்ளுக்குள் இறங்கியது. பயமாக இருந்தது. குளித்து ஸ்வாமி கும்பிட்டேன். தைரியத்தை வரவழைத்துக்கொண்டு சாப்பிட்டு சட்டையை மாட்டிக்கொண்டு என்னுடைய ஹெர்குலஸில் ஏறி காதல் சேவகனாய் அப்பு வீட்டிற்கு அதிரடியாய் விஜயம் செய்தேன்.

வாசலில் அப்பு அப்பா தமிழ்ப் பேப்பரில் மூழ்கியிருந்தார். இருட்டாக உள்ளே தெரிந்த ரேழியில் அவன் அம்மா போல ஒரு உருவம் சேரில் வீற்றிருந்தது. அவர்களது ஒரு கூட்டுக் குடும்பம். அண்ணா, மாமா என்று ஒரு வீட்டிற்குள் ஒரு மராத்திய காலனியே கதம்பமாகக் குடியிருந்தது. கொல்லைவரை நீண்டிருக்கும் வீட்டில் இடம் வலதாய் பல ரூம்கள். பல சொந்தங்கள்.

“கிளிங்..கிளிங்...” மணியடித்தேன்.

மணியோசை கேட்டு “மே ஜான்ந்தா” என்று உள்பக்கம் பார்த்துக் குரல் கொடுத்துக்கொண்டே துள்ளி வந்தான் அப்பு.  அரையில் ஒரு கைலியும் மேலுக்கு ஒரு கட்டம் போட்ட சட்டையும் போட்டுக்கொண்டு தன்னுடைய பிரியமானவளின் இதயத்தை கொள்ளையடித்த திருடன் அதற்கொப்ப காஸ்ட்யூமில் வெளியே வந்தான்.

தாலிகட்டப் போகிறவனின் கட்டம் போட்ட சட்டையும் லுங்கியும் என்னை லேசாக உலுக்கியது. “உனக்கு ட்ரெஸ்ஸு?” வார்த்தைகள் காற்றோடு காற்றாக கரைந்து அவன் காதுகளுக்கு மட்டும் எட்டும் ஃப்ரீக்குவன்ஸியில் ரகஸியமாகக் கேட்டேன்.

“இந்த ஜவ்வுத்தாள் பைக்குள்ள இருக்கு” என்று பாலிதீன் கவரை ஆட்டிக் காண்பித்தான். பயத்துடன் கலந்து அவன் முகத்தில் கல்யாணக் களை தாண்டவமாடியது.

“என்னடா?” உள்ளிருந்து நாகுண்ணா குரலால் எங்களை எட்டினார். மறுபடியும் எனக்கு உதறல் எடுத்தது.

“ஒன்னுமில்லைண்ணா” என்று கொல்லைக்குக் கேட்கும் வரை பெருங்குரலெடுத்து பிளிறினான் அப்பு.

“ம் போலாம்” என்று தயக்கத்துடன் நான் மிதித்த சைக்கிளை தள்ளிவிட்டு பின்னால் ஏறிக்கொண்டான். எனது தர்மம் தவறாத சைக்கிள் இச்செயலுக்கு நடுங்கியது. பேலன்ஸ் செய்து தெருமுனையில் இருக்கும் மணி டீக்கடை தாண்டி மறைவாக அவனை இறக்கினேன். அப்பு கண்களாலேயே நன்றி நவிழ்ந்தான். அவனுடைய குடும்ப உறுப்பினரை ஒத்த உடல்வாகு கொண்ட ஒருவர் ரேஷன்கடை பக்கமிருந்து வர “வெங்...” என்று மென்று முழுங்கி என் பின்புறம் ஒதுங்கினான். சைக்கிள் திரும்பவும் ஒருமுறை நடுங்கியது. இதற்கப்புறம் நான் எங்கு தொலைவது என்று நினைத்துக்கொண்ட என் மனக்கண்ணில் மன்னை ஒரு முறை வீதிவீதியாய் வலம் வந்தது. பதுங்குகுழி அமைத்துக்கொண்டு படுத்தால் ஒழிய மன்னையில் ஒளிய ஓரிடமில்லை.

“வரேண்டா வெங்குட்டு. தேங்க்ஸ்!” கைலியை மடித்துக்கட்டிக் கொண்டு பஸ் ஏறினான் அப்பு. பஸ் மேலப்பாலம் திரும்பும் வரை பார்த்துக்கொண்டிருந்தேன். எதிரே கீழப்பாலம் இருக்கும் திக்கில் சைக்கிளைச் செலுத்தினேன். யாராவது தென்படும் ஆண் பெண் ஜோடியைப் பார்த்தாலே அப்பு பாரதி நினைவுக்கு வந்தார்கள். பஸ்ஸ்டாண்ட் சந்திப்பில் மூவாநல்லூர் நண்பர் ஒருவரை பார்த்தேன். வெள்ளை வேஷ்டி வெள்ளை சட்டையில் கார்மேகம் போன்ற திருமேனி. கரகர என்று கிழிக்கும் குரல். “ஊர்ல ஒரு கட்டுப்பாடு வேணாம். இளுத்துக்கிட்டு ஓடிட்டான். விரட்டி கும்மோணத்துக்கிட்ட புடிச்சிட்டோம்ல. அந்தப் பயல விட அந்த ஓடுகாலிய விட ஒதவி செஞ்சப் பயல கரண்ட் கம்பத்துல கட்டி பின்னிப்புட்டோம்ல. இனிமே ஒளுக்கமா இருப்பானுவ” என்று ஆவேசமாக பேசினான். உள்ளுக்குள் உடுக்கை ஒலி கேட்டது.  நாகுண்ணா விரட்டி வந்து என்னைப் பிடித்து அவர்கள் வீட்டு தூணில் கட்டுவது போன்ற ஒரு பிரமை எனக்கு.

மதியம் வரை வீட்டிற்கு திரும்பாமல் எப்போதோ ரோட்டில் சிரிக்க மட்டும் செய்த பல ஸ்ட்ரீட் நண்பர்களை தரிசனம் செய்தேன். கையைப் பிடித்துக்கொண்டு நாலு வார்த்தை உளறினேன். பசி வயிற்றைக் கிள்ளியது. ஒரு எட்டுப் போய் நாலு கவளம் உருட்டிப் போட்டுக் கொண்டு திரும்பிவிடலாம் என்று மனதில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு எங்கள் ஏரியாப் பக்கம் சென்றேன். வீட்டினுள் நுழையும் முன் பாட்டி சத்தமாகக் கேட்டாள்.

“அப்பு எங்கேடா?”

“ஏன்? தெரியலையே” எனக்கு நடிக்க வராது என்பது அப்போது தெரிந்தது.

“காலேலேர்ந்து காணுமாமேடா. அவன் அண்ணா வந்தார். உன்னைக் கேட்டார்.”

என் காலுக்கு கீழே சக்கரம் முளைத்தது. குடுகுடுவென்று கொல்லைப்பக்கம் கிணற்றடிக்கு ஓடினேன். கை கால் கழுவிவிட்டு “பசிக்கிறது. சீக்கிரம் சாதம் போடு” என்று தள்ளாத வயதிலிருக்கும் பாட்டியை விரட்டினேன்.

சாதத்தை வாரி வாயில் அடைத்துக்கொண்டேன். பருக்கைகள் வெளியே சிதற “மொள்ளடா” என்றாள் பாட்டி. நாகுண்ணா சைக்கிள் மிதிக்க மிதிக்க அது ஒரு அலாதியான ம்யூசிக் போடும். காதுகளில் பின்னணி இசையாக அவர் சைக்கிளின் மெல்லிசை ஒலித்துக்கொண்டே இருந்தது. “ஒரு டம்ப்ளர் மோர் குடு” கல்லோரலில் தண்ணீரில் மூழ்கிக்கொண்டிருந்த சொம்பில் இருந்து ஒரு டம்ப்ளர் என் வயிற்றுக்கு மோர் வார்த்தாள் பாட்டி.

“வெங்குட்டு... யே... வெங்குட்டு” வாசலில் நாகுண்ணாவின் காத்திரமானக் குரல் கேட்டது. சற்றுமுன் அடித்த மோர் நிமிஷத்தில் வியர்வையாய் பொங்கி வெளியே வழிந்தோடியது. வாசலில் எட்டிப் பார்த்தேன். வியர்க்க விருவிருக்க நாகுண்ணா சீட்டிலிருந்து பாலே நர்த்தனம் ஆடி காலை எங்கள் வீட்டு வெளி வாசற்படியில் ஊன்றி நின்றுகொண்டிருந்தார்.  சீட்டிலிருந்து அவர் கால் தரை தொடாது. குதித்துதான் தரையிறங்கலாம் என்ற உயரம் வரை வளர்ந்திருந்தார்.

“என்னண்ணா?”

“அப்பு எங்கடா?”

“தெரியாதே!”

”உங்கூடத்தானே காலேல வந்தான்”

“தெரியாதுண்ணா”

சந்தேகமாக என்னை ஊடுருவிப் பார்த்தார். கண்ணுக்கு கண் மோதவிட்டார். தலையை தழைத்துக்கொண்டு “அண்ணா கொஞ்சம் அவசரமாப் போகணும்” என்று சொல்லிவிட்டு சைக்கிளில் ஏறிப் பறந்துவிட்டேன்.

சாயந்திரம் வரை ஊர் சுற்றினேன். சுவாமிமலை நிலவரம் தெரியவில்லை. பாரதியும் வீட்டிலில்லை என்கிற விபரம் நிச்சயம் இன்னேரம் தெரிந்திருக்கும். என்ன நடக்குமோ ஏது நடக்குமோ என்று மனசு அலைபாய்ந்தது. ஆறு மணிக்கு தெருவிளக்கு போட்டதும் கட்டின பசு போல வீதியில் நுழைந்தேன். வடகரையில் அப்பு வீட்டைப் பார்த்துக்கொண்டே பெடலுக்கு வலிக்காமல் மிதித்துக் கொண்டிருந்தேன். கலவரமாக எதுவும் கண்ணில் படவில்லை. வீட்டு வாசலில் சைக்கிளை ஸ்டாண்ட் போடும் போது பாட்டி கேட்டாள்.

“ஏண்டா அப்புக்குட்டியாத்துக்குப் பக்கத்தாத்து பாரதியையும் காணுமாமே”

“அப்படியா! ஐயய்யோ என்னாச்சு” என்று போலியாகப் பதறினேன்.

“திருட்டுப்பயலே! உங்கூடத்தான் அப்பு வந்தானாம். நீதான் சைக்கிள்ள அழச்சிண்டு போனியாம். அவாண்ணா வந்தார். ரொம்ப வருத்தப்பட்டார். என்னடா ஆச்சு” உண்மையை வரவழைக்காமல் விடமாட்டேன் என்கிற ரீதியில் குறுக்கு விசாரணையில் இறங்கினாள் என் பாட்டி. எஃப்பிஐ தோத்துது.

நான் என்ன சொல்வது என்று திணறிக்கொண்டிருக்கும் போது ஆபத்தில் மாட்டிவிட்ட ஸ்ரீராம் ஆபத்பாந்தவனாக வருவது தெரிந்தது.

“என்ன பாட்டி சௌக்கியமா?” குசலம் விசாரித்தான்.

“எல்லாரும் சௌக்கியந்தான். என்னடா நீயும் இவனும் சேர்ந்துண்டு திருட்டுக் காரியம் பண்றேள்” என்று குரலை உசர்த்தினாள்.

“ஒன்னுமில்லை பாட்டி” என்று அசிரத்தையாக பதில் சொல்லிவிட்டு என்னிடம் குனிந்து “அப்பு வந்துட்டாண்டா. வடக்குத் தெருக்கு வா” என்று என் காதைக் கடித்தான்.

“என்னடா குசுகுசுன்னு”  என்ற பாட்டியிடம் ஒன்றும் சொல்லாமல் என்னுடைய சைக்கிளில் அவனும் நானும் விரைந்தோம். தெருமுனை செல்லும்போது என்னுடைய பயம் விஸ்வரூபமெடுத்து என்னை ப்ரேக் போட வைத்தது.

“நீ போடா. நா வரலை” நான் ஜகா வாங்கினேன்.

“வாடா” தரதரவென்று சைக்கிளோடு இழுத்தான்.

“நா எதுக்கு வரணும். விடுடா. ஏற்கனவே நாகுண்ணா ரெண்டு தடவை தேடிட்டுப் போயிருக்கார்” வெடுக்கென்று அவனிடமிருந்து விடுபட்டேன்.

“நீ எதுக்கு வரணுமா? ஆரத்தி எடுக்கத்தான்” என்று அந்தப் பய வேளையிலும் அந்தப் பயல் ஜோக்கடித்தான்.

சைக்கிளை திருப்பி குடுகுடுவென்று ஓடி தள்ளிக்கொண்டு ஏறி தேரடிப்பக்கம் விரைந்தேன். இரண்டு நாட்கள் அப்பு வீட்டிற்கு நேரே ஒரு மானசீக லக்ஷ்மன் ரேகா வரைந்து தாண்டாமல் எனது திருவீதியுலாக்களை சற்றுக் குறைத்துக்கொண்டேன். ஒரு வாரம் கழிந்து எல்லாம் சகஜ நிலைமைக்கு வந்தவுடன் அப்பு அம்மாவே வழியில் பார்த்துக் கூப்பிட்டுக் கேட்டார்கள். “என்னடா! கல்யாணம் பண்ணிவக்கிற அளவுக்கு நீங்கல்லாம் வளர்ந்துட்டேளா?”. பதில் சொல்லத்தெரியாமல் பேந்தப் பேந்தப் முழிந்து  ”ஹி..ஹி..” என்று வழிந்தேன்.

சென்ற மாதம் ஒருநாள் ஸ்ரீதர் ஃபோன் பண்ணினான். பரஸ்பரம் இருவரும் ஒரு சில சௌக்கியமாக்களுக்குப் பிறகு “அப்புட்ட பேசினியா”ன்னு சாதரணமாகக் கேட்டேன். ”ஹே ஆமாம் சொல்லனும்னு இருந்தேன். போன வாரம் பேசினேன். எப்படி இருக்கே!”ன்னு விஜாரிச்சேன். நல்லா இருக்கேன்னான். அப்புறம் குழந்தைகள்ளாம் எப்படியிருக்குன்னேன்.  “ம் நல்லாயிருக்கான்” ன்னான். “ஓ! பையன் இல்ல.. எப்படியிருக்கான். எந்த ஸ்கூல்”ன்னேன்.  “பி.ஈ செகண்ட் இயர் படிக்கறான்”ன்னான். அப்புறம் தான் ஞாபகம் வந்தது. நம்ம செட்லயே மொதல்ல கல்யாணம் பண்ணின்டவன் அவன் தான்ல!!

ஸ்ரீதர் பேசிமுடித்து ’டொக்’கியபின் புகைய ஆரம்பித்த இந்த கொசுவர்த்தி அணைவதற்குள் எழுதிவிட்டேன்.

பின் குறிப்பு: இது வெள்ளிவிழா அத்தியாயம். மன்னார்குடி டேஸ் எழுத ஆரம்பித்து 25 வது எபிசோடோக கல்யாணத்தில் முடித்துவிட்டேன். மேற்கண்ட படத்தில் அந்தப் பெரிய வேப்பமர நிழலில் இருப்பதுதான் அந்தப் பிரசித்திப் பெற்ற மதில் கட்டை. அதன் கீழ் இருப்பது அ/மி. கோதண்டராமர் திருக்கோயில்.

-

37 comments:

துளசி கோபால் said...

பாரதி தீர்க்க சுமங்கலி பவ:

வெள்ளிவிழாவுக்கு பாராட்டுகளும் இனிய வாழ்த்துகளும்!

Anand said...

பரவாயில்லை RVS sir.எங்க ஊர் அக்ரஹாரத்தில் எங்க அண்ணா செய்த விஷயங்கள் தான் நினைவுக்கு வந்தது.

Simly Superb.
Anand

Anonymous said...

Antha pakkam neraya thadava vanthuruken, patha idama irunthalum unga eluthula mannargudi thani azhaga theriyuthu sir

Ponchandar said...

சில்வர் ஜூப்ளி-க்கு வாழ்த்துகள் ! ! இன்னும் பல கொசுவர்த்தி சுருள்களை பத்த வைக்க வேண்டுகிறேன் ! !

தக்குடு said...

பல சத்காரியங்கள் பண்ணி இருக்கேள் மைனர்வாள்!! :)) வரிக்கு வரி சுவாரசியம்!

Note - மைனர்வாளோட கல்யாண கதை எப்ப வரும்?? :)))

Madhavan Srinivasagopalan said...

நல்லாத்தான் எழுதுற.. Superb coherent wordings.. :-)

I met Appukkutti, 1st week of May, last year...

// எனது தர்மம் தவறாத சைக்கிள் இச்செயலுக்கு நடுங்கியது. //

இது உனக்கே அதிகமா தெரியல.. மனசில என்ன ரஜினின்னு நெனப்பா.. இல்ல உன்னோட சைக்கிளோட பேரு 'லக்ஷிமி'யா ?

அப்பாதுரை said...

beautiful. எப்படிப் பாராட்டுவதென்று உடனே தோன்ற மறுக்கிறது.

மாதேவி said...

சுவாரஸ்யமான கல்யாணம்.

ADHI VENKAT said...

வெற்றிகரமா ஒரு காதல் கல்யாணத்தை நடத்தி வச்சிருக்கீங்க.... சுவாரசியமா இருந்தது. ஆனா அப்போ ரொம்பவே பயமா இருந்திருக்கும் இல்லையா.......நிஜம் தானே!

மன்னார்குடி டேஸ் மேலும் நிறைய நினைவுகளைத் தர வாழ்த்துகள்.

Ravichandran Somu said...

RVS, மன்னார்குடி டேஸ் வெள்ளிவிழாவிற்கு வாழ்த்துகள். மால்குடி டேஸ் போல் மன்னார்குடி டேஸ் ஒரு மறக்கமுடியாத தொடர். ஒவ்வொரு அத்தியாயும் என் மன்னார்குடி பள்ளி நாட்கள் நினைவலைகளை அசை போட வைத்தது.

Keep going... you'll achieve great heights with your writing skill.

Yaathoramani.blogspot.com said...

வெள்ளிவிழாப் பதிவு அருமை
முடிவு தெரியும் வரையில் திக் திக் கெனத்தான் இருந்தது
காரணம் நானும் இப்படி ஒரு கல்யாணம் பண்ணி வைத்திருக்கிறேன்

Yaathoramani.blogspot.com said...

Tha.ma 2

Unknown said...

SUUUUUUUUUUUUUUUUPPPPPPPPPPPPPPEEEEEEEEEEEERRRRRRRRRRRRRRRRR...........

ஸ்ரீராம். said...

எண்ணும்பொழுது ஏதோ சுகம் எங்கோ தினம் மனதில் இருக்கத்தான் செய்கிறது. சுவாரஸ்யமான பதிவு.

பத்மநாபன் said...

வாத்தியாருக்கு ஸ்ரீரங்கத்துகதைகள்...மைனருக்கு மன்னார்குடி நாட்கள்... கலங்குங்க...
நினைச்சு நினைச்சு சிரிக்கிற மாதிரி வரிகள் நிறைய இந்த ம.கு.டேஸ் இருபத்திஐந்தாவது பதிவில்...

நிச்சயமாக தொடரவும்.....

சாந்தி மாரியப்பன் said...

மன்னை டேஸ் கொண்டாடும் வெள்ளி விழாவுக்கு இனிய பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

சாகச நேரத்துப் படபடப்பை உங்கள் எழுத்துகளில் உணர முடிகிறது..

சுசி said...

காதலர்கள் சேர்ந்தால் நல்லதா, சேராவிட்டால் நல்லதா என்று தெரியாமல், கடைசிவரை சேர்ந்தார்களா பிரிந்தார்களா என்று தெரியாமல், கடைசியில் சேர்ந்தார்கள் என்று தெரிந்ததும் சேர்ந்தது தான் நல்லது என்ற முடிவிற்கு வந்தேன். கடைசிவரை ஒரே திரில். நல்லபடியாய் வாழ்கிறார்களே ரொம்ப சந்தோஷம்.

R.SOLAIYAPPAN said...

Valthukkal !

வெள்ளி விழாவுக்கு இனிய பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

R.SOLAIYAPPAN

சிவகுமாரன் said...

என்ன ஒரு நடை . கடைசி வரை .. திகில் கதை படிப்பது போல் செம விறு . விறு.
அருமை.

RVS said...

@துளசி கோபால்
பாராட்டுக்கும் பாரதிக்கு ஆசீர்வாதத்துக்கும் நன்றி. வளமாக வாழ்கிறார்கள். கைராசி அப்படி! :-)

RVS said...

@Anand

ஊருக்கு ஒரு RVS இருந்தா இதெல்லாம் சகஜமா நடக்கும்ங்க... கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி. :-)

RVS said...

@Heart Rider
நாங்கள் வாழ்ந்து ரசித்த மன்னை அப்படிங்க.. :-)

RVS said...

@Ponchandar
இனிமேல் இளமைக் கொண்டாட்ட கொசுவர்த்திகள்தான் நிறைய இருக்கு. கொளுத்துவோம். பாராட்டுக்கு நன்றி பொன்ஸ்! :-)

RVS said...

@தக்குடு
பாராட்டியதற்கும் ரசித்ததற்கும் நன்றி தக்குடுவாள்! மைனர் கதை ரொம்ப சுவாரஸ்யமான ஒன்று. மைனரின் மனையாளிடம் கேட்டுக்கொண்டு பகிர்கிறேன். :-)

RVS said...

@Madhavan Srinivasagopalan

மாதவா! அப்புவை இந்த முறை பார்த்தாலும் கேட்டதாச் சொல்லு. :-)

RVS said...

@அப்பாதுரை said...

பாராட்டுதலுக்கு மிக்க நன்றி அப்பாதுரை சார்! :-)

RVS said...

@மாதேவி

நன்றிங்க.. :-)

RVS said...

@கோவை2தில்லி

மணமக்கள் ஊர் வந்து இறங்கும் வரை ஒரே திக்திக்தான் போங்க..:-)
இப்போது நினைத்தால் ஒரு கல்யாணம் எவ்வளவு பெரிய காரியம் அதை எப்படி அவ்வளவு சுலபமாக செய்து வைக்க முடிந்தது என்று பேராச்சரியம் கொள்கிறேன். கருத்துக்கு நன்றி. :-)

RVS said...

@ரவிச்சந்திரன்
அண்ணே! கருத்துக்கு நன்றி! :-)

RVS said...

@Ramani
ஓ! அப்படியா! சூப்பர்ப். :-)

RVS said...

@Unknown

Thank you அனானி அன்பரே! :-)

RVS said...

@ஸ்ரீராம்.

நன்றி ஸ்ரீராமரே! :-)

RVS said...

@பத்மநாபன்
ரசிகமணி தொடர்ந்து ப்ளாக் பக்கம் வருவது ஊக்கத்தை அளிக்கிறது. நான் தொடர்ந்து வர முடியவில்லை. ரசித்ததற்கு நன்றி பத்துஜி! :-)

RVS said...

@அமைதிச்சாரல்

என்ன ஒரு பரபரப்பான நேரம். இப்போது நினைத்துப்பார்த்தால் செய்த காரியத்தை எண்ணி நானா செய்தேன் என்று வியக்கிறேன்.:-)

RVS said...

@Thanai thalaivi said...

// காதலர்கள் சேர்ந்தால் நல்லதா, சேராவிட்டால் நல்லதா என்று தெரியாமல், கடைசிவரை சேர்ந்தார்களா பிரிந்தார்களா என்று தெரியாமல், கடைசியில் சேர்ந்தார்கள் என்று தெரிந்ததும் சேர்ந்தது தான் நல்லது என்ற முடிவிற்கு வந்தேன்.//

யப்பாடி... என்ன ஒரு கமெண்ட். நன்றிங்க.. :-)

RVS said...

@R.SOLAIYAPPAN
வாழ்த்துகளுக்கும் பாராட்டுக்கும் நன்றி :-)

RVS said...

@சிவகுமாரன்

ரொம்ப நாளாக ப்ளாக் வட்டாரத்தில் உங்களை பார்க்கமுடியவில்லையே பாஸ்! எப்படி இருக்கீங்க..

பாராட்டுக்கு நன்றி. :-)

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails