Friday, October 19, 2012

ஆண்டாள் கோபால்

டைட்டில் கார்ட்: கொஞ்சம் புனைவு; கொஞ்சம் நினைவு சேர்த்துப் பிசைந்து செய்த கலவை இது. நிஜத்திற்கும் டூப்பிற்கும் ஆங்காங்கே விகிதாசார வித்தியாசங்கள் இருக்கும். இதில் உண்மை இல்லையா? என்று கேட்டால். இல்லை. அதாவது 100 சதம் உண்மை இல்லை. ஆனால் 100 சதம் பொய்யும் இல்லை. இதில் வரும் பெயர்கள் சம்பவங்கள் டூப் கலந்து டுபாக்கூராக வெளியிடப்படுகிறது. இதில் நீ யார் அவன் யார் எந்த காலம் என்ன நேரம் என்ற கேள்வியெல்லாம் கேட்கப்படாது. மூச்.

(அப்பாடி அசரீரியாய் பேசி ஒரு சுத்து சுத்தி விட்டாச்சு.. இனி மேலே படிங்க... மேலே படிங்கன்னா கீழே படிங்கன்னு அர்த்தம். ஸ்... அப்பா... தாங்கலையே டார்ச்சர்.......)

 
எம்ட்டன் ராயர் வீட்டு மூன்று படி, நாராயணன் வீட்டு ஐந்து படி, ரோஹினி வீட்டு ஏழு படி, டீச்சர் வீட்டு ஒன்பது படி(எங்களது) என்று பல்வேறு தினுசு கொலுக்களை ஒவ்வொரு நாளும் கண்டு களிப்போம். ஒரே கொலுவை ஒன்பது நாளும் வித விதமான சுண்டல்களுக்காக ரசிப்போம். கிழக்கு தெருவிற்கு நிகராக வடக்கு தெருவிலும் கொலு இருக்கும். மாலை வேளைகளில் கையில் ஒரு பையை எடுத்துக்கொண்டு பிரதக்ஷிணமாக தென், மேல், வட கரைகளை சுற்றி வந்தால் இரவு சாப்பாடு நிச்சயம் தேவை இருக்காது. ஆனால் பாட்டி "என்னாடா, பிச்சைக்காரன் திருவோடு மாதிரி..." என்று நக்கலடிப்பாள்.

கொலு வைப்பது மிகவும் க்ரியட்டிவ் ஆக இருக்கவேண்டும். முழுப் பரீட்சைக்கு படிப்பதை விட அதிக சிரத்தை தேவைப்படும். ஊரில் நிறைய தோட்டா தரணிகளும், சாபு சிரில்களும் அதிகம். நாராயணன் வீட்டு கொலு தோட்டா தரணி அமைத்த செட் போல என்றால் வடகரை ராமன் அண்ணா ஆத்துது தேவதச்சன் மயன் எழுப்பியது போல இருக்கும். கொலு வைப்பதற்கு பல வீடுகளுக்கும் எங்களுடைய சமுதாய சேவை தேவைப்படும். "நானா உங்கம்மா படி எறக்கிட்டாளா?" "கோந்து உங்காத்து ஸ்வாமி எல்லாம் பொட்டிய விட்டு எறங்கிட்டாளா ?" என்று பந்து அடித்தோ அல்லது கிட்டி புல்லால் வலி கொடுத்த வீடெல்லாம் எங்களுடைய நவராத்திரி ஸ்பெஷல் கவனிப்பால் அல்லோல்படும்.

அட்டை டப்பாக்களை வீடாக்கி பார்க்கில் வைப்பது, தெர்மாகோல் துணை கொண்டு பார்க் காம்பவுண்ட் சுவர் கட்டுவது, கலர் ஜிகினா பேப்பர்கள் ஓட்டுவது உள்ளிட்ட சர்வ வேலைகளையும் செய்வோம். நாராயணன் வீட்டு கொலுவில் அரை வண்டி அளவிற்கு கொலு பக்கத்தில் மண் அடித்து அண்ணாமலையையே செய்து உச்சியில் ஜீரோ வாட் பல்பில் கார்த்திகை தீபம் ஏற்றிவிடுவார்கள். ராமன் அண்ணா வீட்டில் ஹோமகுண்டத்தை குளமாக்கி மோட்டார் போட் விடுவார்கள். சென்னை மாதிரி ஷோ கேஸ்ஸில் கணேசர், லக்ஷ்மி, சரஸ்வதி மூவரையும் நிறுத்தி சிக்கன கொலு வைப்போரும் உண்டு.

சுண்டல் அவ்வளவு எளிதாக நிறையக் கிடைக்காது. என்னதான் நாம்பளும் பரோபகாரியாக இருந்து கொலு வைத்திருந்தாலும், "ராமன் அண்ணா ஆத்து கொலு தான் நாலு கரையிலும் சூப்பர்" என்றால் இரண்டு கரண்டி புட்டு கூட கொடுப்பாள் மன்னி. இந்த மதி ஆலோசனைகலுக்கெல்லாம் ஸ்ரீராம் தான் தலைவன். சூரன். அதி பயங்கர எக்ஸ்பெர்ட். அவனிடம் டிப்ஸ் வாங்கிக் கொண்டு தான் கொலு ரௌண்ட்ஸ் புறப்பட வேண்டும். யார் யாரை எப்படித் தன்ன கட்ட வேண்டும் என்று கோனார் நோட்ஸ் போடும் அளவிற்கு விஷயஞானம் உள்ளவன்.

வீட்டில் உள்ள வாண்டுகளை வித விதமாக மேக்கப் செய்து எல்லோர் வீட்டுக்கும் கொலு அழைப்பு அனுப்புவார்கள். எவ்வளவு அலங்காரம் செய்தாலும் கண்ணனை ஒத்து இராத பசங்களைக் கூட,
"மன்னி, உங்காத்து உப்பிலியை இந்த டிரஸ்ல பார்த்தால், கோகுலத்தில் இருந்து சாட்சாத் கிருஷ்ண பரமாத்மாவே நேரே இறங்கி வந்தாப்ல இருந்தது"என்றால் கையில் புட்டு வைத்திருந்த பாத்திரத்தோடு கிடைக்கும்.

இது பத்தாதென்று, நாலு கரைக்கப்பாலிருந்து திருமஞ்சன வீதி, விளக்காரத்தெரு பசங்களும் கொலு பார்க்க வருவார்கள். கொஞ்சம் புஜபலம் மிக்கவர்கள். அவர்கள் நோக்கம் சுண்டல் வாங்கித் தின்பது தான். ஆனால் ஒவ்வொருவர் வீட்டு வாசலிலும் நின்று
"கொலு இருக்கா?" என்று இரைவார்கள். எல்லோரையும் வரிசையில் நிறுத்தி ஆளுக்கு ஒரு கரண்டி சுண்டல் கொடுத்து அனுப்புவார்கள்.
"கொலு இருக்கு ஆனால் சுண்டல் இல்லை" என்று தெனாவட்டாக பதில் சொன்ன பஸ் கண்டக்டர் லக்ஷ்மணன் வீட்டின் ஓட்டின் மேல் ஒரு நாள் கல் எறி போராட்டம் நடந்தது. மிதவாதியான லக்ஷ்மணன் தீவிரவாதத்திற்கு அடிபணிந்து மறுநாள் வாசலில் சுண்டலோடு நின்றார். இந்த கோஷ்டியை என் பாட்டி "படை வர்றது" என்பாள். படைகளுக்கு சுண்டல் இல்லையென்றால் பாட்டி பதறிவிடுவாள்.

ரோஹினி வீட்டிற்கு கொலு பார்க்க போவதென்றால் நாம் பாகவதராக வேண்டும். வடக்குத்தெரு ஸ்ரீராம் அண்ணன் கோபால் ரோஹினி வீட்டின் ஆதர்ஷ நவராத்திரி பாட்டு ஹீரோ. எப்போதும் "ரக்ஷ ரக்ஷ ஜகன் மாதா", "கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்”, “மாணிக்க வீணை ஏந்தும் கலைவாணி” போன்ற பல பக்தி ஐட்டங்கள் கைவசம் வைத்திருப்பான். நவராத்திரி காலங்களில் ஐஸ்கிரீம் விரதமிருப்பான். மூடுக்கு ஏற்றார்போல சிலசமயங்களில் பெண் குரலில் வேறு பாடி அசத்துவான். ஒரே இக்கட்டான விஷயம் என்னவென்றால் பாடும் பொழுது பெண்கள் யாரேனும் வந்துவிட்டால், முகம் தகதவென்று சிவந்து, உள்ளங்கை உள்ளங்கால் குடம் குடமாக வேர்த்து, தலையை இரண்டு முழங்கால்களுக்கு இடையில் நுழைத்து வெளியே எடுக்கவே அடம் பிடிப்பான். பெண்கள் முன்னால் அவ்வளவு வெட்கம் பிடுங்கி திங்கும். சரியான லஜ்ஜாவதன்.

கோபாலின் கொலு மோகம் தலைக்கேறி ஒன்பது நாளில் ஒரு நாள் ஆண்டாளாக வீட்டை விட்டு வெளியே வந்தான். நிச்சயமாக பார்ப்பவர்கள் கண்ணுக்கு பெண்ணுக்கு ஆண்டாள் வேஷம் போட்டது போல் இருந்தது. அரக்கு நிறச்சேலையை ஐயங்கார் மடிசாராக கட்டி, மேலாக்கை பின்னாலிருந்து முன்னால் இழுத்து சொருகியிருந்தான். நெற்றிக்கு ஸ்ரீசூர்ணம் அணிந்து, அதற்கு கீழ் சின்னதாக வெள்ளை கலரில் கீழ் நோக்கி அம்பு போட்டிருந்தான். அழகிற்கு அழகு சேர்ப்பது போல் இருந்தது அவன் போட்டிருந்த கொண்டையும், இதழ்களில் பூசியிருந்த உதட்டுச்சாயமும், கண்ணுக்கு எழுதிய மையும். கோபால் கோதையாகவே உருமாறியிருந்தான். எங்கிருந்தோ 'வாரணமாயிரம் சூழ வலம் செய்து' காற்றில் ஒலித்துக்கொண்டிருந்தது. தெருவில் சைக்கிளில் சென்ற இரு முறுக்கு வாலிபர்கள் இரண்டு மூன்று முறை திரும்பிப் பார்த்தார்கள். வாயைக் குவித்துச் சீட்டியடித்தார்கள். இன்ஸ்டிட்யூட் வீட்டு ஸ்ரீதர் வைத்த கண் வாங்காமல் ஆண்டாளையே பார்த்தான். அவளாகிய அவனைச் சீண்டினான்.
 
"ஏண்டி எங்கடி போரே?"
கண்கள் பளபளக்க கோபால் "வேணா விளையாடாதே " என்றான்.
 
ஸ்ரீதர், "நான் கண்ணன் வேஷம் போட்டா உன் கூட வரலாமா"
எங்களை துணைக்கு அழைத்து கோபால் "பாருங்கடா இவனை" என்று அன்றைக்கு முகாரி பாடினான்.
 
"ஸ்ரீதர். அவன் ஆசைக்கு வேஷம் போட்டுண்டு இருக்கான். விடுடா" என்றான் வாசு.
 
யார் எது சொன்னாலும் விடுவதாய் இல்லை ஸ்ரீதர். வடக்குத்தெரு முனை வருவதற்குள் இன்னும் பல முறை அவனைச் சீண்டி வெறுப்பேற்றி, கைகலப்பில் கொண்டு வந்து விட்டான்.
இருவரும் ஆக்ரோஷமாக சண்டையிடுவதை தூரத்தில் இருந்து பார்த்து விலக்குவதற்கு நாங்கள் ஒடுவதற்குள், ஆண்டாளின் புடவையை, துச்சாதனன் உருவுவது போல் உருவினான் ஸ்ரீதர். பார்த்துக்கொண்டிருக்கும் போதே ஆண்டாள் பழனி முருகன் ஆவதை கண்டு திடுக்குற்றோம். அவனுக்கு உதவுவதற்கு நாங்கள் விரைவதற்குள், ஆண்டாளாக வீட்டை விட்டு வெளியேறி விஐபி ஜட்டியுடன் பழனி முருகனாக வீட்டிற்குள் ஓடிக்கொண்டிருந்தான் கோபால்.

##படம்: இரண்டு வருடங்களுக்கு முன் மயிலை சர்வோதயாவில் எடுத்தது.

## இது மீள் பிரசுரம்

19 comments:

துளசி கோபால் said...

அட ராமா......

எங்காத்துக்கு கோபாலுக்கு அனுப்பறேன்:-)

திண்டுக்கல் தனபாலன் said...

கொலு சூப்பர்ப்...

/// முழுப் பரீட்சைக்கு படிப்பதை விட அதிக சிரத்தை தேவைப்படும். ///

ரசித்தேன்...

மீள் பதிவு படித்ததில்லை... நன்றி...

வெங்கட் நாகராஜ் said...

//"என்னாடா, பிச்சைக்காரன் திருவோடு மாதிரி..."//

:)))

மீள் பதிவாக இருந்தாலும் மீண்டும் ரசித்த பதிவு!

இராஜராஜேஸ்வரி said...

நாராயணன் வீட்டு கொலு தோட்டா தரணி அமைத்த செட் போல என்றால் வடகரை ராமன் அண்ணா ஆத்துது தேவதச்சன் மயன் எழுப்பியது போல இருக்கும்.

கிரியேட்டிவிட்டி பகிர்வுக்கு பாராட்டுக்கள்..

ஸ்ரீராம். said...

இந்த அளவு நவராத்திரியைக் கொண்டாடியதில்லை. தானாகக் கிடைக்கும் சுண்டலோடு சரி!

வல்லிசிம்ஹன் said...

ஹா ஹா. என்ன ரசனை . வாசமிகு கொசுவர்த்தி.
இப்போது குறைந்து விட்டார்கள் சுண்டல் கேட்பவர்கள்.:(
நான் யாரையும் விடுவதில்லை. பழக்காரி,பூக்காரி,சின்னக் குழந்தைகள் கண்களில் பட்டவர்களுக்கெல்லாம் கொடுத்துவிடுவேன்.
நல்லதொரு பகிர்வு. மனம் நிறைந்த நன்றிகள்.

RAMA RAVI (RAMVI) said...

ஹா..ஹா.. நல்ல வேடிக்கை.

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

லஜ்ஜாவதன் !?

நல்ல பிரயோகம். :))

ADHI VENKAT said...

இப்படியெல்லாமா....:))

சுண்டலுக்காக கல் எறி போராட்டம்....சூப்பர்!

ரசிக்க வைத்த பதிவு.

RVS said...

@துளசி கோபால்
ம்.. அனுப்பிவைங்க மேடம். நன்றி. :-)

RVS said...


@திண்டுக்கல் தனபாலன்

நன்றிங்க தனபாலன். :-)

RVS said...


@வெங்கட் நாகராஜ்
நன்றி தலைநகரமே!

RVS said...


@இராஜராஜேஸ்வரி
நன்றிங்க மேடம்.

RVS said...


@ஸ்ரீராம்.
தானாக சுண்டல் கிடைக்கிறதா. யாரும் உங்களைப் பாடச் சொல்வதில்லையா? :-)

RVS said...


@வல்லிசிம்ஹன்
நன்றிங்க. :-)

RVS said...


@RAMVI நன்றிங்க

RVS said...


@அறிவன்#11802717200764379909 | * |
நன்றிங்க அறிவன்.

RVS said...


@கோவை2தில்லி

நன்றி சகோ! :-)

RVS said...


@கோவை2தில்லி

நன்றி சகோ! :-)

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails