Thursday, October 4, 2012

இரு நூல்கள்


ஸ்பெக்ட்ரம் என்பது அக்கடையின் பெயர். அப்பழுக்கில்லாமல் துடைத்து வைத்திருந்தார்கள். எனது நண்பருக்காக உள்ளே காலை வைத்தேன். திறக்கும் பளீர்க் கண்ணாடிக் கதவுக்கு நேர் பின்னால் “வா..வா” என்று அழைத்தது அந்த புத்தக அலமாரி. சொற்ப புத்தகங்களே கண்ணுக்கு தென்பட்டது. அவருக்காக வந்த வேலையை விட்டுவிட்டு கை பரபரவென்று அந்த புத்தக அலமாரியை நோண்ட ஆரம்பித்தது.

அந்த நான்கடி அலமாரியை நான் தாரளமாக அலசுவதற்கு இடைஞ்சலாக இரண்டு மாதுக்கள் என் பின்புறம் நின்றுகொண்டு பீங்கான் கோப்பைகளை அலசி ஆராய்ந்துகொண்டிருந்தார்கள். போட்டியாய் இருவரும் பாய்ந்து பாய்ந்து தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்ததில் எந்நேரமும் நங்கென்று கீழே விழுந்து உடையும் அபாயத்திலிருந்தன அந்தக் கோப்பைகள். ”ச்சீச்சீ. இது வேண்டாம்டி.. அவனுக்கு இந்தக் கலர் பிடிக்காது.” என்று அவர்கள் கிசுகிசுத்தது என் பாம்புச் செவியில் விழுந்தது. யாரோ ஒரு துரதிர்ஷ்டசாலிக்குக் கிஃப்ட் கொடுக்கப் போகிறார்கள் என்று தெரிந்தது.

புத்தகத் தேடலுக்கு தடையாக நின்றுகொண்டிருந்ததால் அடிக்கடி அவர்கள் முதுகுக்கு ”எக்ஸ்க்யூஸ் மீ”யினேன். அரையடி கை கோர்த்துக்கொண்டே பாலே நடனம் போல ஒதுங்குவார்கள். மீண்டும் நம் மேலே விழுவது போல இந்தப் பக்கம் சாய்வார்கள். அந்தத் திசைக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு இரண்டடி தள்ளி நின்று எக்கி எக்கி சில புத்தகங்களை புரட்டிப் பார்த்தேன். இருந்த ஐம்பது அறுபது புத்தகங்களும் பொக்கிஷம். ஆங்கில இலக்கியகர்த்தாக்களின் அற்புத படைப்புகள். ஷேக்ஸ்பியர், ட்வைன், சார்லஸ் டிக்கன்ஸ் என்று வரிசை நீண்டது. மேப்பிள் பிரஸ் என்கிற கம்பெனியார் அச்சடித்திருந்தனர். மிகவும் நேர்த்தியாக இருந்தது.

முதலில் எடுத்த தலையணை புஸ்தகத்தை அதன் தலைப்பிற்காக எடுத்துப் புரட்டியதில் சிட்டி ரோபோ போல வாசித்தவை.

"Human labor is becoming the cheapest of commodities"

"The rest of the mankind is the carving knife... while we are the fish and the meat"

"I have nothing to offer but blood, toil, tears and sweat"

"For the light that shone in this country was no ordinary light."

அந்தப் புத்தகத்தின் தலைப்பு: World's Greatest Speeches. ஒவ்வொரு வரியும் உலகில் ஏதோ ஒரு நாட்டில் ஏதோ ஒரு துறையில் கோலோச்சிய ஒரு பிரபலம் பேசியது. அந்தக் கடைசி வாசகத்தை பேசியவர் ஜவஹர்லால் நேரு. பேசியது காந்திஜியை சுட்டுக்கொன்ற சில மணி நேரத்தில்.

இரண்டாவதாக கையில் சிக்கியது ஒரு மாமனிதரின் தேர்ந்தெடுத்த புனைவுகளின் தொகுப்பு. அறிவியல் புனைக் கதைகளின் பிதாமகராகிய ஹெச்.ஜி.வெல்ஸின் the time machine, the invisible man, the war of the worlds and the first man in the moon ஆகிய புனைவுகள் அடங்கிய புத்தகம்.

இதில் ஆச்சர்யம் என்னவென்றால் இரண்டுமே சல்லிசாக கிடைத்தன. முதல் புத்தகம் 800 பக்கங்கள் இரண்டாவது 600 பக்கங்கள். ஒவ்வொன்றும் 195 ரூபாய் மட்டுமே.

புத்தகங்களை வாங்கிக்கொண்டு நண்பருக்கு தேவையானவைகளையும் அள்ளிக்கொண்டு பில் போடும் போது கவுண்ட்டர் மேஜையில் முன்னாலிருந்தது பீங்கான் கோப்பையும் இரண்டு ஃபைவ் ஸ்டாரும். அந்த இரு பெண்டிரும் குசுகுசுவென்று சிரித்துப் பேசிக்கொண்டே பக்கத்தில் நின்றிருந்தார்கள். World's Greatest Speeches பில்லிங் கவுண்ட்டரிலிருந்து சிரித்தது.

பட உதவி: http://www.eatock.com/

12 comments:

ஸ்ரீராம். said...

புத்தகங்கள் வாங்கியதைப் பற்றிய பதிவு இப்போது, புத்தகங்களைப் பற்றி மேற்கோள்களுடன் பதிவு அப்புறமா?!!

அப்பாதுரை said...

photoவில் ஒரே மட்டத்தோடு சீராக அடுக்கப்பட்டிருக்கும் புத்தகங்களின் உயரம் மாறுபட்டிருக்கும்.. எப்படித் தேர்ந்தெடுத்து அடுக்கினார்களோ என்று ஆச்சரியமாக இல்லை?

ம்ம்.. நீங்க என்ன சொன்னீங்க?

திண்டுக்கல் தனபாலன் said...

முக்கிய தகவலை சுட்டிக் காட்டியதற்கு நன்றி...

'அவர்கள்' பேசுவதை, நினைப்பதை அறிய புத்தகங்கள் ஏதும் இதுவரை 'கண்டு' பிடிக்கவில்லை...

ADHI VENKAT said...

புத்தக விமர்சனம் விரைவில் தாருங்கள்...

புத்தகங்கள் வாங்குவதை விட்டு விட்டு செவியில் ஏன் இதெல்லாம் விழுது...:))

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

இரு பெண்மணிகளின் விடாத பேச்சுக்குப் பின்னணியில் பொருத்தமான தலைப்புள்ள புஸ்தகம்தான் ஆர்.வி.எஸ்.

அப்பாதுரை!கீழேதான் மட்டத்தைக் கூரை போல வளைத்துவிட்டார்களே!பொருத்தமான உயரத்தை தேர்வுசெய்யவேண்டியதுதானே பாக்கி? ஒரு க்ரூப் ஃபோட்டோவுக்கு ஃபோட்டோக்ராஃபர் ஆட்களைக் கலைத்து அடுக்குவது மாதிரி!

RVS said...

@ஸ்ரீராம்.
ஆமாம். நிச்சயமாக. :-)

RVS said...

@அப்பாதுரை
ஒண்ணும் அர்த்தபுஷ்டியா எதுவும் சொல்லலீங்க! :-)

RVS said...

@திண்டுக்கல் தனபாலன்
ஆமாம் தனபாலன். :-)

RVS said...

@கோவை2தில்லி
எழுதறேன்.

இன்னும் அந்தப் பக்குவம் வரலை. :-)

RVS said...

@சுந்தர்ஜி
நன்றி ஜி! உடம்புக்கு சுகமில்லைனீங்களே இப்ப சௌக்கியமா? :-)

வெங்கட் நாகராஜ் said...

புத்தகம் வாங்கப்போன இடத்தில் எல்லாத்தையும் கவனிக்கத் தான் வேண்டியிருக்கு! :)))

நம்ம நிலைமை எல்லாருக்கும் புரியாது! :)))

RVS said...

@வெங்கட் நாகராஜ்

புரியுது..புரியுது... தலைநகரமே :-)

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails