Thursday, October 15, 2015

ஞானரசம்

ஞானரசம்
=========
”லஸ் சிக்னல்லேர்ந்து பிள்ளையார் கோயில் தாண்டினப்புறம் ஒரு பெட்ரோல் பங்க் வருமே... ஆமா... அது பக்கத்துல ஒரு குட்டி சந்து வரும்.... அப்டியா... நா பார்த்ததில்லையே வீகேயெஸ்... சின்னோன்டு சந்து..... நா ஸ்டேஜ் அரேஞ்ச் பண்ணிண்டிருக்கேன்.. உள்ள வந்துடுங்கோ.. .” தொல்லைத்( 
smile emoticon
 ) தொடர்பைத் துண்டித்து ’கண்ணன் என் தோழன்’ போல வீகேயெஸ் ஞானரத வேலைக்குள் நுழைந்துவிட்டார்.



எங்கே அது? ஆங்! அது சின்னோண்டு சந்து இல்லை. ஸ்லேட் எழுத குச்சி கேட்டால் ”ந்தாடா...” என்று புழுக்கோண்டு உடைத்து மடியில் விட்டெறிவான்களே... அந்தக்காலத்து ஒண்ணாவது ரெண்டாவது பசங்கள்.. அத்துனூண்டு முட்டு சந்து. கலாரசிகர்கள் மொய்க்கும் வாசலிலேயே வித்யா சுப்ரமண்யம் மேடத்தை ஏற்றிக்கொண்டு சேப்பாயி கனகம்பீரமாக உள்ளே நுழைந்தது. சேப்பாயி மூக்கை உள்ளே நுழைக்க நிறைய தலைகள் தெரிந்தன. அவையெல்லாம் தெரிந்த தலைகள். பரிச்சயமான முகங்கள். ஒருவர் கால் மேல் மற்றவர் கால் வைத்து முண்டியடித்துக்கொண்டு நடக்குமளவுக்கு பரபரப்பாக இருக்கும் லஸ் கார்னருக்கருகே லஸ்ஸி குடிக்கக் தோதாக ஒதுங்கும்படியாக இப்படியொரு ஜில்ஜில் இடமா? Ambiance அமர்க்களம்.
ஜம்மென்று நான்கு தூண்களோடு இருக்கும் லஸ் ஹௌஸ் தலைவாசலை கலைக்கென்றே ஒழித்துக்கொடுத்திருக்கிறார்கள். மெட்ராஸ் டேயில் அங்கே பாரதியை ரசிக்கக் கூடிய ரசிகமகா ஜனங்கள். ஒவ்வொருத்தர் முகத்திலும் முகமூடியாய் ஒட்ட வைத்த மீசை பாரதி. அது என்ன ஓரங்க நாடகமாங்க? பிரவசனமோ? சோஷியல் பட்டிமன்றமா? இல்லை.. இல்லவே இல்லை.. "டான்ஸோ-பாட்-நடிப்-பேச்சோ-பேச்" என்கிற பார்த்தால் மனசுக்குள் பச்சென்று நெருக்கமாக ஒட்டிக்கொள்ளும் ஒரு புது தினுசு ப்ரோக்ராம். பாரதியின் பாடல்களை திஸ்ர ஜதியில் பாடுவார்கள். அதற்கு ஆடுவார்கள். அப்புறம் ஆடுபவர்களுக்குக் கொஞ்சம் ரெஸ்ட். திருவல்லிக்கேணி என்று பேட்டை பெயரில் ஹரீஸ் நடிப்பார். வல்லபா, அனன்யா, ஆர்வி மூவரும் நடித்துக்கொண்டே பேசுவார்கள். பேசிக்கொண்டே நடிப்பார்கள். நடித்துக்கொண்டே... சரி இத்தோடு நிறுத்திப்போம். இதுவே டா.பா.ந.பே.பே.
உள்ளே நுழைந்தால் ஜேஜேயென்று தேர்க்கூட்டம் திருவிழாக்கூட்டம். எங்கெங்கு காணினும் தெரிந்த முகங்களடா! முகப்புத்தகம் அளித்த நட்புகளடா!! என்றும் நமக்கு உறுதுணையடா.. (ச்சும்மா மூடுடா) என்று புரட்சி வாசகங்கள் மனோகுரல்களாகக் கத்தித் தீட்ட கவித...கவித... முளைத்துவிடும் அபாயம் இருந்ததால் மேடையின் பின்பக்கமாக சென்று சமர்த்தாக திவாகரர் அருகில் கைகட்டி அமர்ந்துகொண்டேன். அணுக்கமான நண்பர்கள் ’மெட்ராஸ் டே’வில் நிகழ்ச்சி நடத்தப்போகிறார்கள் என்று கேள்விப்பட்டதிலிருந்து ஒரு இனம்புரியாத மகிழ்ச்சி என்னைத் தொற்றிக்கொண்டது. முதலில் பார்த்த லக்ஷ்மி ஸ்ரீராம் அவர்களுக்கு ஒரு வணக்கம் சொன்னேன். மாலா மாதவன் பக்கத்தில் அவரைவிட நான்கடி பெரியதாக இருந்த அவர் பையனைப் பார்த்துக்கொண்டே மா.மாவுக்கும் ஒரு மா. வணக்கம்.
கீதா சுதர்ஸன் நிகழ்ச்சி துவங்காதா என்று கலையார்வத்துடன் உட்கார்ந்திருந்தபோது க்ரீன் ரூமிலிருந்து தேவராட்டமாட தேவராட்டம் வந்து கொண்டிருந்த விசியைப் பார்த்து அசந்துபோனேன். சாக்ஷாத் சிவபெருமானே காலில் சலங்கை கட்டிக்கொண்டு மேலேயிருந்து கீழே ஆட வந்தது போல ஒரு தோற்றம். அவரைப் பார்க்க ஓடிப்போனவனைக் கட்டிப் பிடித்து “வாங்கோ...” சொன்னார். அவர் கட்டிப்பிடித்தபோது என்னை வெளியே சிலர் தேடியிருக்கக்கூடும். அவரது அணைப்பில் இந்த ச்சோட்டூ காணாமல் போயிருந்தேன். திரும்பி வந்த போது என்னைப் பார்த்து “சௌக்கியமா?” என்று கேட்டு நடந்து வந்துகொண்டிருந்தவரை “தேவி ராஜன்?” என்று கேள்வியாகவும் பதிலாகவும் கேட்டு “ஆமாம்” பதில் வாங்கி கைகுலுக்கினேன்.
”முந்தி முந்தி விநாயகரே.... ” கரகாட்டக்காரன் பாடல்... “சந்தைக்கு வந்த கிளி...” தர்மதுரை பாடல் போன்றவற்றின் லயத்தை மேளம் முழங்க, விசி கைகால்களை விசிறி விசிறி ஆடியது கண்ணுக்கு விருந்து. அவருடன் ஆடிய அவரது மனைவியும் மற்றொருவரும் தங்களது பங்கை சிறப்பாகச் செய்தனர். நடுவில் விசியின் சுழற்றிவிட்ட பம்பரமான ஆட்டத்துக்கு அவரது மனைவியின் சிரித்த முகபாவம் தேவராட்டத்தை தெய்வீக ஆட்டமாக்கியது. “ஓம் சக்தி..ஓம். சக்தி.. ஓம்.. பராசக்தி.. ஓம்... சக்தி.. ஓம்”மில் மொத்த கூடாரமும் மெய்மறந்து ரசித்தது. ஸ்வர்ணமால்யா கணேஷ் அவர்கள் தனது ஆட்டத்தை முடித்துக்கொண்டு முதல் வரிசையில் உட்கார்ந்து தேவராட்டத்தையும் ரசித்தார்.
இரண்டாம்-மூன்றாம் வரிசையில் உட்கார்ந்திருந்த ராதிகா பார்த்தசாரதி மேடம் முதல் வரிசையில் உட்கார்ந்திருந்த திருவாளர். பார்த்தசாரதியின் தலைக்கு மேலே படமெடுத்த நாகமாய் தனது மொபைலைப் பிடித்து படமெடுத்துத் தள்ளிக்கொண்டிருந்தார்.
விசியின் ஆட்டத்திற்கு நடுவில் மேடையை முதலில் அலங்கரித்தனர் வல்லபாவும் அனன்யாவும். நெட்ரு பண்ணி டயத்தை வேஸ்ட் பண்ணாமல் ஸ்க்ரிப்ட்டுக்கு உயிரூட்டி அதைக் கையிலெடுத்து மைக்கை முழுங்கி பேசிக்கொண்டிருந்தார்கள். திருவல்லிக்கேணி என்று ஒரு வார்த்தை வந்ததும் மேடை அதிர சிறு குழந்தைகள் ட்ராயரை ஈரம் பண்ணும் அளவுக்கு ஹரீஷ் குரல் விட்டார். நான் தூக்கிவாரிப்போட்டு திவாகரரைத் தஞ்சமடைந்தேன். கைலியும் கழுத்தில் கர்ச்சீப்புமாய் புள்ளையாண்டன் ஒரே அசத்தல். இப்பவே நான்கு ப்ரொட்யூஸர்கள் வாசலில் கால்ஷீட்டுக்கு நிற்பதாகக் கேள்வி. கழுத்துக் கட்டுடன் வந்த பையனுக்கு கூடிய சீக்கிரம் கால்கட்டாம். எல்லோரும் கிசுகிசுவென பேசிக்கொண்டார்கள்.
ஆர்வியை நாங்கள் மௌன குரு என்று அழைப்போம். மனுஷ்யர் பரம சாது. புத்திமான் பலவான். திருவல்லிக்கேணியில் பாரதி குடியிருந்த கதையை அவரே நகைச்சுவைக் கட்டுரையாக்கி எழுதியதை பாந்தமாகப் படித்துக்காட்டி ரசிகப்பெருமக்களை மகிழ்ச்சிக் கடலில் மூழ்க வைத்து பின்னர் இன்பப் படகேற்றினார். மூழ்கியவர்கள் எடுத்ததெல்லாம் மகிழ்ச்சி முத்துகள், ஆனந்த பவிழங்கள்.
வல்லபா ஸக்ரிப்ட். இது போன்று இன்னும் மூன்று நான்கு வெர்ஷன் தயார் செய்யும் சரக்கு அப்பட்டமாக தெரிகிறது. அபார உழைப்புக்குச் சொந்தக்காரர். மேடையின் ஒரு பக்கம் வல்லபாவினால் பிரகாசித்தது. அவரது தந்தையின் சிரத்தை என்னை பிரமிக்க வைத்தது.
அனன்யா ஏற்கனவே குரல் ரூபமாக குந்தவியாகவும், குந்தவையாகவும் ஹீரோயின் அந்தஸ்தில் நடித்திருந்ததால் குழந்தைகளுக்குக் கதை சொல்வது போல குரலின் ஏற்ற இறங்களால் கிறங்கடித்தார். கதை சொல்லும் பாங்கு அவருக்கு இயல்பாகவே வாய்த்திருக்கிறது. பாம்பே கண்ணன் சார் ட்ரெயினிங். ஒவ்வொரு முறையும் அனன்யாவின் கிரீஸ் தடவிய குரல் வசனங்களை வளப்படுத்தியது.
ஆஹா.. வசனமாய் பாரதியின் சரித்திரத்தைப் பேசிக்கொண்டேயிருக்கிறார்களே.. அற்புதம் என்று நினைத்து கசிந்துருகிப் பார்த்துக்கொண்டேயிருந்தால்.. “செந்தமிழ் நாடெனும் போதினிலே....” என்று விசி குழுவினர் மறுபடியும் ஆட வந்துவிட்டார்கள். அந்த மேளக்காரரையும் அனைத்துப் பாடல்களையும் பாடிய அந்த மாஸ்டரையும் எத்தனை பாராட்டினாலும் தகும். அவர்களது குரலில் வீரியமும் கிராமத்து வாசனையும் பலமாக இருக்கிறது. அந்த கிராமத்து வாசனையே தேவராட்டத்தின் வேர். “நிறைய மாணவர்களுக்கு ஆட்டம் சொல்லிக்கொடுத்திருக்கிறேன். விசி போன்று குடும்பத்திற்கே தேவராட்டம் சொல்லிக்கொடுப்பது இதுவே முதன் முறை..அவர்களுடைய ஆர்வம் மிகவும் பாராட்டத்தக்கது” என்று பேசினார்.
சுந்தரராமன் சிந்தாமணி எட்டிப் பார்த்தார் என்று நினைக்கிறேன். கையைக்கட்டிக்கொண்டு ஆட்ட நுணுக்கங்களை அவரது இசை நுட்பத்தோடு கலந்து பார்த்துக்கொண்டிருந்தார். பாரதமாதா சிலை பற்றிய ஒரு செய்தியை அனன்யாவும் வல்லபாவும் பகிர்ந்துகொண்டிருந்த போது எங்கள் குருஜி பாரதி பாலு சார் சில அரிய தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். அவரது எனர்ஜி எங்களுக்கெல்லாம் பூஸ்ட். பாரதி பற்றிய பல சுவையான புதிய செய்திகளை பகிர்வதற்கு அடுத்த மெட்ராஸ் டே அவருக்கு ஒரு தனி மேடையளிக்கும் என்று நம்புவோம்.
”அச்சச்சோ.. முடிஞ்சுட்டுதே...” என்று ப்ரோக்ராம் பற்றி நினைத்துக்கொண்டிருக்கும் போது “சார்.. என் பேர் அனந்தராமன்.. உங்களோட எல்லா பதிவும் படிப்பேன்... என்னைச் சொன்னா உங்களுக்குத் தெரியாது.. கோமதி அனந்தராமன்னு சொன்ன புரியுமா?..” என்று கைகுலுக்கியவர்க்குப் பின்னால் கோமதி மேடமும் வந்தார்கள். மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.
நடுவில் கால் முடியாமல் கஷ்டப்பட்ட சேதுராமன் சாரை தி.நகர் சென்று பார்க்கவேண்டும் என்று நினைத்தும் காலசக்கரம் விடாமல் என்னைத் துரத்தியதால் அந்த பாக்கியம் இல்லாமல் இருந்தேன். கடைசியில் இங்கே சந்தித்தேன். “இப்போதான் மொதல்மொதலா வெளிலே வரேன்...” என்றார். “உங்க ஊருதான்...” என்று தனது மனைவியையும் அறிமுகப்படுத்தினார்.
ஏழுகடல் ஏழுமலை தாண்டி ரேவதி வெங்கட் வந்திருந்தார். சமீப காலமாக விருத்தங்களை எழுதிக் குவிக்கிறார். திவாகரர் கொடுக்கும் தைரியமும் தன்னுடைய சுயபுலமையும் கைகோர்க்க பிரித்து மேய்கிறார். செல்வி ஷங்கர், திரு.ஷங்கரை அறிமுகப்படுத்தினார். ப்ரொஃபைல் படத்தில் தெரியும் அதே கள்ளமில்லாச் சிரிப்புடன் பேசிக்கொண்டிருந்தார்.
முகத்தில் மருவில்லாமல், ’விஷ்ணு சகஸ்ரநாமம்” கோட் வேர்ட் சொல்லாமல் ரங்கநாதன் கணேஷ் சார். மனுஷ்யர் காமெடியில் பின்னிப் பெடலெடுக்கிறார். ஐந்து வார்த்தை பேசினால் ஐந்து நிமிஷம் சிரிப்போம். பத்து வார்த்தை பேசினால் பத்து மணி நேரம் சிரிக்கலாம் என்று எக்ஸ்பொனென்ஷியல் நகைச்சுவையாகப் பேசி தோரணம் கட்டுகிறார். பல் டாக்டரிடம் பல் காட்டாதவர்கள் கூட இவரிடம் காட்டியே ஆகவேண்டும். அவ்ளோ சிரிப்பு மூட்டுகிறார்.
வீகேயெஸ் பரோபகாரி. எங்களது எந்த நிகழ்ச்சிக்கும் ஆஸ்தான ஃபோட்டோகிராஃபர். கேமிராவை மெஷின் கன்னாகப் பாவித்துச் சுற்றிச் சுற்றி சுட்டுத்தள்ளினார். “மொத்தம் எண்ணூறு ஃபோட்டோ...” என்று சொன்னார். மெமரி கார்ட் வெடித்திருக்கவேண்டும். ஹரிகிச்சு பவர்பாயிண்ட் இன்ச்சார்ஜ். கோணலும் மாணலுமாக வந்ததையெல்லாம் தட்டி நிமிர்த்தி நேராக்கித் தெரியவைத்த டெக்கி.
ஜிப்பாவில் கடைசியாக வந்த ரங்கரத்னம் கோபுவிற்கு நமஸ்காரம் சொல்லி விடைபெற்ற போது ஆர்ஜி சார், ரேவதி வெங்கட்டோடு ராமகிருஷ்ணன் கிருஷ்ணமூர்த்தியையும் வண்டியில் ஏற்றிக்கொண்டு வீட்டிற்கு வந்தேன். ரொம்ப நேரம் ரீவைண்டில் நிகழ்ச்சி சுற்றி சுற்றி ரிப்பீட் மோடில் விளையாடியது. எப்போது தூங்கினேன்?
காலையில் எழுந்து கண் விழித்த போது படுக்கையறைச் சுவரில் விசி அனாயாசமாகத் தேவராட்டம் ஆடிக்கொண்டிருந்தார். எழுந்து நடந்த போது கதவில் அனன்யா, வல்லபா, ஆர்வி, ஹரீஷ் நடித்துக்கொண்டிருந்தார்கள். “செந்தமிழ் நாடெனும் போதினிலே...” காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்க பல் துலக்கினேன். ”ஓம்.. சக்தி..ஓம்... சக்தி ..ஓம்..” அசரீரியாய்க் கேட்க யோகா செய்தேன். பின்னர்.... பின்னர்.. இதோ இப்போது இந்த கடைசிவரியை தட்டச்சிக்கொண்டிருக்கும் வரை அந்த நிகழ்ச்சி பார்க்கும் இடமெல்லாம் வந்து வந்து போகிறது. மொத்தத்தில் இந்த ஞானரதம் ஒரு ஞானரசம்! (அப்பாடா! டைட்டிலைக் கொண்டு வந்தாச்சு)
வாழ்க! வாழ்க!!
படங்கள் உதவி: அண்ணல் வீகேயெஸ்!
பின் குறிப்பு: தேவராட்டம் பற்றிய டெக்கினிகல் சங்கதிகளையும் பாரதி பற்றி அவர்கள் பகிர்ந்துகொண்டதையும் பலரும் சல்லடையால் சலிக்க சலிக்க எழுதிவிட்டதால் என்னாலான இந்த குறுங் கமெண்ட்டரியோடு நிறுத்திக்கொண்டேன். நன்றி.

கணபதி முனி - பாகம் 26: திருவொற்றியூரில் ரமணாமிர்தம்

திருவண்ணாமலையிலிருந்து சென்னை வந்திறங்கியவுடன் நாயனாவும் வாசுதேவ சாஸ்திரியும் ஆதிபுரம் என்றழைக்கப்படும் புண்ணிய க்ஷேத்திரமான திருவொற்றியூருக்குச் சென்றார்கள். தென்னக கோயில்களுக்கு க்ஷேத்திராடனம் செல்பவர்கள் முதலில் ஆதிபுரத்தோடுதான் ஆரம்பிக்கவேண்டும் என்பது பலகாலமாகத் தொன்றுதொட்டு வரும் ஐதீகம். இச்சா க்ரியா ஞான சக்திச் ஸ்வரூபமாகத் திரிபுரசுந்தரி ஆட்சி செலுத்தும் ஸ்தலம். கோயிலுக்கு செல்லும் வழியில் தெற்குத் தெருவில் ஒரு பாழடைந்த கணபதி கோயில் இருந்தது. திரிபுரசுந்தரி கோயிலுக்குள் நுழையும் முன்னர் இந்த கணபதி கோயிலில் நாம் தவமியற்றலாம் என்று கணபதி மனதில் கணக்கு போட்டுக்கொண்டார்.

திரிபுரசுந்தரி சன்னிதி. தீபங்கள் இருபுறமும் ஆட அம்மன் கர்ப்பக்ரஹத்திற்குள் ஜொலித்துக்கொண்டிருந்தாள். ஓரிருவர் உதிரியாய் அங்குமிங்கும் இருந்தனர். கணபதி அம்பாளுக்கு நேராக பிரதானமாக ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து அமர்ந்துகொண்டார். இதமான குரலில் தானியற்றிய உமாசகஸ்ரத்தை மெதுவாகப் பாட ஆரம்பித்தார். பக்கத்துத் தூணருகே அம்பாளைப் பார்த்து அமர்ந்திருந்தவர் இந்த ஸ்லோகங்களைக் கேட்டு நெக்குருகிப் போனார். உருக்கத்தில் கண்ணீர் மல்கி கணபதிக்கு நெருக்கமாக நின்றிருந்த வாசுதேவ சாஸ்திரிகளிடம் “சம்ஸ்க்ருத மழை பொழியும் இவர் யார்? ” என்று காதோடு காதாகக் கேட்டார்.
“காவ்ய கண்ட கணபதி”
வாசுதேவ சாஸ்திரிகள் கணீரென்று இந்தப் பெயரை உச்சரித்து முடிக்கும் முன்னர் அந்த நபர் கணபதியின் காலில் சாஷ்டாங்கமாக விழுந்திருந்தார். ”இனி நான் என்னால் ஆன மட்டும் உங்களுக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்வேன்.. அதுவே என் பாக்கியம்.. வாழ்நாள் பலன்.. என் கடன் உம் பணி செய்து கிடப்பதே....”
“நீங்கள்....” என்று புருவம் நெறித்து இழுத்தார் வாசுதேவ சாஸ்திரிகள்.
“கபாலி சாஸ்திரி”.
சில உமாசகஸ்ர ஸ்லோகங்கள் பாடி வழிபட்ட பின்னர் மூவரும் ஒவ்வொரு சன்னிதியிலிருக்கும் தெய்வங்களை வழிபட்டார்கள். வடக்கு பிரகாரத்தில் பாதாளக் காளி சன்னிதி இருந்தது. காளி உக்கிரமாக இருப்பதாக அவருக்குச் சொல்லப்பட்டது. அவளுடைய ரௌத்ராகாரத்தைத் தணிக்க முடியாமல் பாதாளத்தில் அவருக்கு சன்னிதி எழுப்பப்பட்டிருப்பதாகவும் சொல்லப்பட்டது.
நாயனா அந்தச் சன்னிதி வாசலில் நின்று காளியைப் பார்த்து ஒரு ஸ்லோகம் பாடினார்.
குபே விபாஸி கில கோப்வதி த்ரியாமா
சாரின்யஸேஷ ஜகதீஸ்வரி காளி பத்ரே
விப்ராஜதாதிபுரவாஸினி தாஸமாபத்
குபாதுதன்சய பதாம்புஜபக்தமேதம்

அர்த்தம்: அம்மா! துர்சக்திகளை துவம்சம் செய்ய உக்கிரமாக இருப்பவளே, இவ்வுலகின் ஈஸ்வரியே, காளிகே, ஜ்வலிக்கும் ஆதிபுரவாசியே, பாதாளத்தில் உறைபவளே, உன் காலடியில் சரணாகதியடையும் அறியாமை நிரம்பிய என்னைக் காத்தருள்வாய்!!
காளியின் உக்கிரத்தை சாந்தப்படுத்துவதுபோல கணபதி பாடியதைக் கேட்ட கபாலி சாஸ்திரியும் வாசுவேத சாஸ்திரியும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு புளகாங்கிதமடைந்தார்கள்.
அன்றிரவு அவரது சிஷ்யர்களான நாராயண கணபதியும் களம்பூர் வெங்கட்ராமனும் திருவொற்றியூருக்கு விஜயம் செய்தார்கள். நாயனாவிடம் ஆசீர்வாதம் பெற்றார்கள்.
“நாராயணா! இந்த உமாசகஸ்ர பிரதியை வேலூருக்கு எடுத்துச் சென்று விசாலாக்ஷியிடம் கொடுத்துப் பத்திரமாக வைக்கச்சொல்” என்றார்.
நாயனாவின் வருகை சென்னைக்குள் காட்டுத்தீயாய்ப் பரவ ஆரம்பித்தது. மேதாவிலாசங்கள் திருவொற்றியூரை சம்ஸ்க்ருத தேன் குடிக்க ஈயாய் மொய்க்கத் தொடங்கின. ஆன்மிக மற்றும் இலக்கிய விசாரங்கள் அனுதினமும் காரசாரமாக நடந்தன. நாயனா இப்போது வானப்ரஸ்தாஸ்ரமத்திலிருந்தார். ஆகையால் இம்முறை இலக்கியத்தை விட ஆன்மிகமே அவரால் அதிகம் பிரவசனம் செய்யப்பட்டது. அஷ்டாவதானியான நாயனாவிடமிருந்து ஒரு அவதானமாவது காணக் கிடைக்காதா என்று ஏங்கியிருந்தார் கபாலி சாஸ்திரி. ”கபாலி! சமயம் வரும்போது செய்து காட்டுகிறேன்....” என்று பொறுமையாய் இருக்கச் சொன்னார்.
ஒரு நாள் கணபதிக்குப் பரிச்சயமானவர் ஒருவர் அவரைக் காண வந்தார்.
"கணபதி ஸ்வாமி... வசந்ததிலகம் என்னும் வகையறாவில் அமைந்த ஒரு ஸ்லோகம் இயற்றித் தர இயலுமா?”
வசந்ததிலகம் என்பது நான்கடிகள் கொண்ட ஸ்லோகம். ஒவ்வொரு அடியிலும் பதினான்கு அக்ஷரங்கள் இருக்கும்.
”அந்தப் பலகையில் 54 கட்டங்கள் வரையுங்கள்” என்றார் கணபதி. கபாலிக்கு அவதானம் பார்க்கப்போகிறோம் என்று மகிழ்ச்சி. வந்தவர் 54 கட்டங்களை கரும்பலகையில் வரைந்துவிட்டு கையில் சாக்கட்டியுடன் கணபதியின் பக்கம் திரும்பி தயாராய் நின்றார்.
வான்மேகம் சிந்தும் மாரியாய், மின்னல் வேகத்தில், ஐம்பத்து நான்கு கட்டங்களையும் இடதும் வலதும் அடியும் மேலுமாக மாறி மாறி அக்ஷர அம்புகளைத் தொடுத்தார். ஒன்று இரண்டு மூன்று என்று கட்டங்களை வரிசையாய் நிரப்பவில்லை. முதல் அடி மூன்றாம் அடி இரண்டாம் அடி நான்காம் அடி.... இடது மூலை.. வலது மூலை... நடுவில்.. கடைசியில் என்று ஒவ்வொரு கட்டத்திற்கும் ஒரு எழுத்து.
கடைசியில் ஒன்றாய்ச் சேர்த்து அதைப் படித்தபோது....
ப்ரீதிம் ததாதி விபுலாம் ஸ்ரியுமாதனோதி
நிர்மாதி நூத்னா ஸமயம் துரிதம் துநோதி
ஆர்த்ரீர்கரோதி ஹ்ருதயான்யபி தேவதானம்
கஸ்மை ஸுபாய ந பவேத் கவிதா விதோஷ

என்றிருந்தது.
அர்த்தம்: அர்த்தப்பிழையில்லாது புனையப்பட்ட கவிதையினைக் கேட்பவர்கள் அளவில்லா இன்பம் துய்க்கிறார்கள். அது குதூகலத்தை வரவழைக்கும். கண்முன்னே புதுயுகத்தை சிருஷ்டிக்கும். மன மாச்சரியங்களை அடியோடு களையும். அதைக் கேட்கும் கடவுளர்களின் உள்ளம் குளிரும். வேறு என்னவெல்லாம்தான் ஒரு கவிதை தராது?
புலவருக்குப் புகழையும் கேட்பவருக்கு கவியின்பத்தையும் தரவல்லது கவிதைகள் என்பது புழக்கத்தில் இருக்கும் கூற்று. ஆனால் நாயனா கவிதைகள் அந்த எல்லைகளைத் தாண்டியது என்று பேசினார். பொதுவாக ”ராஜா காலஸ்ய காரணம்” என்பார்கள். அதாவது ராஜாவினால் ஒரு புது யுகம் பிறக்கிறது என்று அர்த்தம். நாயனா “கவி காலஸ்ய காரணம்” என்றார். ஒப்பற்ற ஒரு கவி அரசனை விட போற்றத்தக்கவன்.
ஒரு தலைசிறந்த உணர்ச்சிமிகு கவியினால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதை கணபதி சற்று நேரத்தில் அங்கே நிகழ்த்திக் காட்டினார். அது ஒரு அதிசயம்.
பண்டிதர்கள் நிரம்பிய அவை அது. இங்கொன்றும் அங்கொன்றுமாக கேள்விகள் முளைத்து அது நாயனாவின் செவிகளை அடையும் முன்னர் அவரது வாயிலிருந்து பதில்கள் பறந்தன. அதைக் கேட்டவர்கள் வாயடைத்துப் போயினர். கடைசியில் பாலா திரிபுரசுந்தரி உபாசனைப் பற்றி பிரவசனம் செய்ய பிரார்த்தித்தார்கள்.
நாயனா பாலா திரிபுரசுந்தரி அம்பிகையைப் பற்றி ஸ்லோகங்களை அக்கணமே புனைந்து பிரவாகமாக பாடினார். ஒன்றிரண்டு பாடியபின் திடீரென்று கண்களை மூடி யோகத்தில் ஆழ்ந்தார். ஆன்றோர்களும் சான்றோர்களும் நிரம்பிய அந்த சபையில் ஆழ்ந்த அமைதி நிலவியது. மொத்தமாக ஒரு இனம்புரியாத மௌனம் கவ்விக்கொண்டது. அப்போது.... அவர்களின் மனக்கண்ணில் நாயனா கடவுள் போல பிரசன்னமானார். அவர் பாலா திரிபுரசுந்தரி பற்றி சற்றுநேரத்திற்கு முன்னர் பாடியதை மீண்டும் கேட்டனர். ஆனால், நாயனா அங்கே இமை திறக்காமல் யோகநித்திரையில் இருந்தார்.
அனைவரும் கண்களை மூடியிருந்தனர். சில நிமிடங்களுக்கு முன்னர் நாயனா பாடியதை மீண்டும் இசையுடன் இரசித்தனர். ஒவ்வொரு ஸ்லோகத்தின் அர்த்தங்களும் நாயனா விளக்க அவர்களுக்குத் தெளிவாகக் கேட்டது. முகபாவங்களில் ஏற்பட்ட பரவசத்தில் அவர்களுக்கு பாலா திரிபுரசுந்தரியும் காட்சியளித்திருப்பாள் என்பது திண்ணமானது. இந்த தெய்வீக அனுபவம் நாயனாவினால் அந்தக் குழுவிற்கு ஊட்டப்பட்டது. இது பகவத் பிரசாதம்.
அவையோருக்கு நாயனா ஒரு தெய்வீக அவதாரமாக தோன்றினாலும், அவர் எப்போதுமே தன் தவத்துக்கு உகந்த ஒரு இடத்தை தேடிக்கொண்டேயிருந்தார். இம்முறை பதினெட்டு நாட்கள் தொடர் தவமியற்ற சித்தம் கொண்டார். தவமியற்றும் ஜீவனைக் காக்கும் பொருட்டு வெறும் பசும்பால் மட்டுமே அருந்தவும், இரவில் சில மணித்துளிகள் ஓய்வெடுக்கவும் முடிவானது. பகவான் ஸ்ரீரமணர் அருளியது போல ஆத்ம விசாரத்தில் ஈடுபட்டு தெளிவடைய விரும்பினார்.
சில பண்டிதர்கள் ஆத்மவிசாரம் செய்பவனுக்கு உபாசனைகளும் மந்திரங்களும் வீண் என்பார்கள். தேவையில்லை என்பது அவர்களது கட்சி. ஆன்மிகத்தில் திளைக்காத ஒரு மனசுக்கு ஆத்ம விசாரம் எப்படி பழகும். இதுபோன்ற பண்டிதர்கள் அரைகுறையாக ஏதோ ஒரு நிலையை அடைந்துவிட்டு இதுபோன்ற தவறான பிரசாரங்களில் ஈடுபட்டார்கள். கணபதியும் கூட ஸ்ரீரமணர் சொன்ன ஆத்மவிசாரத்தில் மூழ்கிப்போவதில் லேசாக ஆட்டம் கண்டார். ஆன்மிகத்தில் ஊறாத மனசும் ஆத்மாவும் ஆத்மவிசாரத்தில் கரைகாண முடியாது என்று திட்டவட்டமாக நம்பினார் நாயனா. கணபதிக்கு இப்போது தன் குருவின் அருளும் வழிகாட்டுதலும் தேவைப்பட்டது. இதில் தோற்றுவிடுவோம் என்று கணபதிக்கு பயமில்லை. ஐயப்படவில்லை. அவருடைய ஆன்மிக பலம் அவருக்கு நான் யார் என்பதைத் தேடும் ஆத்மவிசாரத்திற்கு ஊற்றாக பயன்பட்டது. கற்றுக்கொடுத்தவர் ஸ்ரீரமணர். இருந்தாலும் இந்த ஆன்மபலன் ஆத்மவிசாரம் அடைய போதுமானதாக இல்லை என்று விசனப்பட்டார் கணபதி.
தீவிர தவத்தின் பதினெட்டாம் நாள். அந்த பாழடைந்த கணபதி கோயில் நாயனாவின் தபோபயனால் சுடர்விட்டிருந்தது. ஆனால் அவர் மொத்த தேகபலமும் இழந்து சுருண்டு போக இருந்தார். உட்காரமுடியவில்லை. முதுகு இழுத்தது. கைகால்கள் வெலவெலத்தன. படுத்தே ஆகவேண்டும் என்கிற கட்டாயம். ஆனாலும் முகத்தில் அப்படியொரு தேஜஸ்!! இருந்தாலும் யோகநிலையிலிருந்து தடுமாறாமல் தவத்தில் உறுதியாக இருந்தார்.
இதோ சாய்ந்துவிடுவார் என்ற தருணத்தில் ரமணர் அங்கே பிரச்சன்னமானார். பலவீனமாக இருந்த கணபதி எழுந்திருக்க முயன்றதும் அவரது சிரசில் தனது வலது கரத்தால் அழுத்தினார். அப்போது அங்கே ஒரு தெய்வீக மின்சாரம் தன் மேனியில் பாய்ந்தது போல உணர்ந்தார் கணபதி. உடம்பு ஒரு முறை விலுக்கென்று உதறியது. கண்களை திறக்க முடியவில்லை. நரம்புகளுக்குள் ரத்தம் பீறிட்டுப் பாய்ந்தது. எங்கிருந்தோ நூறு யானை பலம் அவருக்கு வந்தது. இப்போது கண்களை மெதுவாகத் திறந்தார் கணபதி. ரமணர் அங்கில்லை.
நாயனாவின் உற்சாகத்திற்கு எல்லையேயில்லை. ஸ்ரீரமணர் அருள் பூரணமாக தனக்கிருப்பதை எண்ணி சந்தோஷமடைந்தார். ஆத்மவிசாரம் செய்து முக்திநிலையை எட்டும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்று அமைதி கொண்டார்.
பிறிதொரு சமயத்தில் விரூபாக்ஷி குகையில் இந்த நிகழ்ச்சியைப் பற்றி ஸ்ரீரமணரிடம் அவரது சிஷ்யர்கள் விசாரித்தபோது...
“அன்று எனது ஸ்தூல சரீரமானது பிரகாசமான ஒளி வெள்ளத்தில் ஆகாயத்தில் மிதந்தது. வெகுதூரம் சென்று திருவொற்றியூர் என்னுமிடத்தில் இறங்கியது. அங்கிருந்த ஒரு பாழடைந்த கணபதி கோயிலினுள் சென்றேன்.”
மேலும் பேசாமல் நிறுத்தினார். அவருடைய அருட் பார்வை மீதியைப் பேசியது. பக்தர்கள் புரிந்துகொண்டார்கள். நாயனாவிற்கு அருளியதைக் கேட்டு பரவசமடைந்தார்கள். அடுத்த சில நிமிடங்களில் தான் விரூபாக்ஷி குகையை வந்தடைந்ததாக கூறினார் ஸ்ரீரமணர்.
அடுத்த நாள் திருவொற்றியூரில் ஓய்வெடுத்தார் கணபதி. அப்போது அவருக்கு ஒரு தந்தி வந்தது.........

ஆகஸ்டு 16: பொறந்த நாள்.....


”அன்னிக்கு சுதந்திர தினம்..... ஆஃபீஸ்ல கொடியேத்திட்டு வந்தேன்.... சாயந்திரமெல்லாம் சாதாரணமாத்தான் இருந்தேன்... பாதி ராத்திரிக்கு மேலே ஆஸ்பத்திரிக்கு போனேன்..... மறுநாள் விடிகார்த்தாலே அஞ்சேகாலுக்கு நீ பொறந்தே...”
பல வருஷங்கள் கடந்தாலும்.... ஒவ்வொரு வருஷம்... இந்தப் பிள்ளையின் அம்மா சொல்லும் ராமாயணம். மன்னார்குடியில் அண்ட்ராயர் காலத்தில் வீடுவீடாக ”பர்த்டே....” என்று வெட்கம் பிடிங்கித் திங்க சிரித்து, எவர்சில்வர் ள் தெரியும் முகம் போல எட்டிப் பார்க்கிறது.
பேசினில் நாலணா எட்டணா சாக்லேட் பரப்பி நீட்டிய ஞாபகம் பேசினிற்கு
“தம்பீ... இன்னிக்கு பொறந்த நாளா... இந்த வருஷமானும் விஷமம் பண்ணாம சமத்தா இருப்பியோ?....” (உங்களுக்கெல்லாம் சாக்லேட் கொடுக்கணுமா?)
“மாமாவுக்கு ஒண்ணு நேக்கு ஸ்பெஷலா ரெண்டு....” என்று Budgeted Quantityக்கு அதிகமாக எடுத்துக்கொண்டு பாக்கெட்டுக்குள் விரல்விட்டு ”இன்னும் எவ்ளோ வீட்டுக்கு சாக்லேட் வரும்...” மிச்சத்தை எண்ண வைத்தவர்களும்...விளையாட்டுக்கு ஒட்டு மொத்த பேசினையும் கையிலிருந்து பிடிங்கிக்கொண்டு.... “பர்த்டேக்கு ட்ரீட்டாடா தம்பி...தாங்க்ஸ்” என்று வம்பிழுத்தவர்களும் இன்று தாத்தா பாட்டி ஆகிவிட்டார்கள்.
அப்புறம் புது ஃபுல் பேண்டு போட்டுக்கொண்டு அரும்பு மீசையில் சைக்கிளில் தெருத்தெருவாக வளைய வரும் ( இதற்கு ‘ஊர் சுற்றும் போதுன்னு சொல்லுங்க’ என்கிற கமெண்ட்டுகள் செல்லுபடியாகா!) போது “என்ன மாப்ள.. இன்னிக்கி ட்ரீட் எதுவும் கிடையாதா?” என்று சக அரும்பு மீசைக்காரர்கள் ஹாண்டில் பாரைப் பிடித்து நிறுத்தி அழிச்சாட்டியமாக இழுத்துக்கொண்டு போனார்கள்.
கல்லூரிக் காலத்தில் “மாப்ள! சாந்தில அண்ணாமல... இன்னிக்கி போறோம்.. ஓகேவா...” என்று தஞ்சாவூருக்கு தள்ளிக்கொண்டு போனார்கள். படத்தை மட்டும் பார்த்துவிட்டு பத்திரமாக வீட்டிற்கு வந்தேன் என்று சொன்னால் நம்ப மாட்டீர்கள்.. இருந்தாலும் என் கடமை சொல்லிவிடுகிறேன்.. ஜாக்கிரதையாக சேதாரமில்லாமல் வீட்டிற்கு வந்துவிட்டேன்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸில் ஒரு கிலோ ஸ்வீட்ஸ் பேக்கோடு நம்முடைய க்ஷேமத்திற்காக வாழ்த்தி ஒரு க்ரீட்டிங்ஸ் அட்டையும் தருகிறார்கள். பிரியமானவர்களில் சிலர் கேக் வெட்டினார்கள் (க்ரீமை மூஞ்சில பூசிடாதீங்க ப்ளீஸ்...)
முகப்புஸ்தகம் எனக்கு இரண்டாவது வீடு. வெர்ச்சுவலாக இங்கேதான் முப்பொழுதும் குடியிருக்கிறேன். அதற்காக யாரும் பெரும் விழா எடுத்து போஸ்டர் ஒட்டி, பேனருக்கு பாலாபிஷேகம் போன்ற பெரும் செலவுகளில் ஈடுபடவேண்டாம் என்று பணிவன்போடு கேட்டுக்கொண்டு... இரத்ததான முகாம்... அன்னதானம்....ஏழைகளுக்கு இலவச ஐஃபோன் ஐபேட் வழங்குவது... போன்ற பொதுஜனம் போற்றும் சத்கார்யங்கள் செய்து நற்பெயர் சம்பாதித்துக்கொள்ளுங்கள் என்று விண்ணப்பிக்கிறேன். நன்றி!!
பப்பி ஷேம் ஃபோட்டோ!!

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails