Thursday, October 15, 2015

சூரியனார்கோயில்

”ஒரு முனிவருக்கு லெப்பரஸி வந்துடுமே.... யாரது?” சங்கீதாவின் சீரியஸ் கேள்வி.
“ஏதோ பசி, கோபம், ஆசை வந்துடுமே..ங்கிறா மாதிரி தொழு நோய் வந்துடுமேன்னா.. புரியலையே... ஏன் கேட்கிறே?”
“இல்ல... காவலர்..ம்பேளே.....”
“ஏய்... அது காவலர் இல்லே... காலவர்.... சூரியனார் கோயில்... அவரைத்தானே கேட்டே...”
“ம்.... அது என்ன கத?”
பத்து நிமிஷம் சொன்னதை இருபது நிமிஷம் எழுதினேன்.
**
விந்தியமலைச்சாரல். அடர் மரங்கள். சலசலக்கும் காட்டாற்று அருவிகள். முனிவர்களின் பெரிய வரிசை வாசுகி போல நீண்டிருந்தது. ஜடாமுடியுடன் நின்றிருந்த முனிபுங்கவர்களின் வரிசையின் தலையில் காலவர் அமர்ந்திருந்தார். தவ சிரேஷ்டர். முக்காலமும் உணர்ந்தவர்.
“உம்.. உமக்கு கைலாய வாஸம் இன்னும் ஓரிரு வருடங்களில் சித்திக்கும்....”
“நீர் இன்னமும் கொஞ்ச காலம் கழித்து தென் திசை பயணிப்பீர்....”
“உமக்கு ஈஸ்வர தரிசனம் உண்டு....”
இப்படியாக தன்னைச் சந்தித்த முனிவர்களுக்கு அவர்களுடைய எதிர்காலத்தை காட்டிக்கொண்டிருந்தார். ஒரு நாள் நதிக்கரையில் நீராடி ஆசிரமத்திற்கு வரும் வழியில் ஒரு இளந்துறவி அவரைச் சந்தித்தார்.
“இவ்வையகத்திலுள்ளோர்க்கு வருங்கால பலன் சொல்லும் காலவரே.. எனக்கு சொல்லமுடியுமா?” என்று சிரித்தார்.
கண்ணை மூடினார். அத்துறவியின் எதிர்காலத்தை ஞானதிருஷ்டியால் துழாவினார். ஊஹும். ஒன்றும் புலப்படவில்லை. இரண்டு மூன்று முறை தவ வலிமையைச் செலவழித்துத் தேடினார். இல்லை. ஊஹும். அறியமுடியவில்லை.
“ஐயா! நீர் யார்? என்னால் எதையும் கணிக்க முடியவில்லையே!” என்று மண்டியிட்டார்.
எதிரில் புகைதோன்றி மறைந்த இடத்தில் துறவி போய் தேவன் உருவில் ஒருவர் தகதகவென்று நின்றார்.
“நான் காலதேவன். காலவரே.. நீரும் உன் எதிர்காலத்தைக் கணித்துக் கொள்ளும்... உபயோகமாக இருக்கும்....” என்று ஒரு துப்பு தந்து மாயமானார்.
ஆசிரமத்தை அடைந்ததும் காலவர் தீவிரமாகச் சிந்தித்தார். கண்களை மூடி காலத்தின் கண்ணாடியில் நோக்கினார். அதில் முற்பிறவியில் ஒரு நண்டின் கால்களை முறித்துத் தின்று கொண்டிருந்தார். அந்த பாபத்தினால் இந்த ஜென்மத்தில் தனக்கு தொழுநோய் வரும் என்றறிந்தார். வருமுன் அதிலிருந்து காத்துக்கொள்ள வேண்டுமே என்று பரபரத்தார்.
பஞ்சாக்னி வளர்த்தார். அதன் நடுவில் நின்று கொண்டு நவக்கிரஹங்களைத் துதித்து தவமியற்ற ஆரம்பித்தார். நாட்கள் செல்லச் செல்ல தபோவலிமையால் நவக்கிரஹ மண்டலங்கள் கொதித்துப்போயின. நவநாயகர்கள் ஒருவருக்கொருவர் சந்தித்துக்கொண்டு ஆலோசித்தனர். பூவுலகில் காலவர் இயற்றும் யாகமும் தவமுமே தங்களைத் பொசுக்குகின்றன என்று அறிந்துகொண்டு ஒரு அணியாகப் புறப்பட்டு காலவரின் முன்னே தோன்றினார்கள்.
“காலவரே! ஏனிந்த உக்கிர தவம்? என்னாயிற்று?” சூரியபகவான் சூடாக விசாரித்தார்.
“நமஸ்காரம் சூரியபகவானே! எனக்கு இந்த ஜென்மத்தில் தொழுநோய் பீடிக்கும் என்கிற சாபம் இருக்கிறது. என்னை அதிலிருந்து காத்து ரட்சிக்கவேண்டும் எம்பொருமானே!” என்று தொழுதார்.
சூரியன், சந்திரன் அக்னி வாயு என்று நவநாயகர்களும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். கண்களால் சம்மதம் பரிமாறிக்கொண்டனர். இறுதியாக சூரியன் “உம்மை தொழுநோய் பீடிக்காமல் இருக்கும்... கவலை வேண்டாம்..” என்று வரம் தந்து மறைந்தனர்.
***
சத்தியலோகம். பிரம்மன் சபை. நவநாயகர்களும் கை கட்டி நின்றிருந்தார்கள். அக்னியே கருகும்படி பிரம்மன் கோபாக்கினியில் திளைத்தார். இந்திராதி தேவர்கள் குழுமியிருந்தனர்.
“நீங்கள் என் ஆளுகையில் இருக்கிறீர்கள். என்னைக் கேட்காமல் எப்படி காலவருக்கு வரம் தந்தீர்கள். வினைப்பயனை அனைவரும் அனுபவத்தே தீர வேண்டும். அதைக் கருத்தில் கொள்ளாமல் காலவருக்கு தொழுநோயிலிருந்து விடுதலை தந்தீர்கள். ஆகையால்.. உங்கள் ஒன்பது பேரையும் தொழுநோய் தொற்றக் கடவது...” என்று கடும் சாபமிட்டார்.
நவநாயகர்கள் நடுங்கினார்கள். பிரம்மன் சாபத்திலிருந்து தப்பிப்பது எங்கனம் என்று சபையின் ஒரு தூணருகே சவட்டமாக நின்று பேசினார்கள். கடைசியில் “ப்ரபோ.. தாங்களே சரணம்...” என்று ஒன்பது பேரும் அவரது காலடியில் சரணாகதி அடைந்தார்கள். பிரம்மன் மனம் குளிர்ந்தார்.
“கொடுத்த சாபத்தை திரும்பப் பெறுவது இயலாத காரியம். இதற்கு பரிகாரம் சொல்கிறேன்." என்றார் பிரம்மதேவர்.
ஒன்பது கிரக நாயகர்களும் பவ்யமாக நின்றார்கள். பிரம்மன் தொடர்ந்தார்..
”பரதக்கண்டத்தில் தெக்ஷிண பாரதத்திலிருக்கும் தமிழ்நாட்டின் காவிரி வடகரையில் அமைந்த அர்க்கவனத்தை அடையுங்கள். அந்த வெள்ளெருக்கங்காட்டில் எழுபத்தெட்டு நாட்கள் தவம்புரியுங்கள். திங்கட்கிழமைதோறும் உஷத் காலத்தில் காவிரியில் நீராடி பிராணவரதரையும் மங்களநாயகியையும் வழிபட்டுவாருங்கள். நிதமும் அர்க்க இலையில் ஒரு பிடி அளவு தயிர் சாதம் வைத்து அதை புசித்துவாருங்கள். எஞ்சிய வார நாட்களில் உபவாசம் இருங்கள். இதை தவறாமல் செய்து வந்தால் சாபவிமோசனம் பெருவீர்கள்” என்றார்.
பூலோகம் வந்தடைந்தனர். காவிரியாற்றின் வடகரை நோக்கி நடந்தார்கள். வழியில் வாமன உயரத்திலிருந்த அகத்திய மாமுனியைச் சந்தித்தார்கள்.
“முனிவரே! எங்களுக்கு அர்க்கவனத்திற்கு வழிகாட்டுவீரா?” என்று கேட்டனர்.
“நானும் அங்கேதான் செல்கிறேன். என்னைப் பின் தொடருங்கள்...” என்று கமண்டலமும் கையுமாக நடந்தார்.
காவிரியின் வடகரையை அடைந்தார்கள். அனைவரும் அங்கே நீராடினார்கள். பின்பு அங்கிருக்கும் பிராணவரதைத் தொழுதார்கள். அப்போது ஒரு அதிசயம் நிகழ்ந்தது. அகத்தியர் தனது கையை காவிரி வரை நீட்டி அதிலிருந்து தண்ணீர் முகந்து அபிஷேகம் செய்தார். நவக்கிரங்கள் ஆச்சர்யப்பட்டார்கள்.
காலவ முனிவரை தொழுநோய் தொற்றக்கூடிய நேரம் வந்தது. நவக்கிரகங்களும் அந்த தொழுநோய் பீடித்தது. அங்கங்கள் அழுகி தொங்கலாயிற்று.
அகத்தியர் அவர்கள் நிலையைக் கண்டு வருந்தினார்.
“இந்த அர்க்கவனத்தின் வடகிழக்கு பகுதி அதாவது ஈசான்ய பகுதியில் ஒரு விநாயகரை பிரதிஷ்டை செய்து தவத்தை ஆரம்பியுங்கள். சாபவிமோசனமாக பிரம்மன் கூறியபடி திங்கட்கிழமைதோறும் காவிரியில் நீராடி பிரணவரதரைத் தொழுது எருக்கு இலையில் தயிர் அன்னம் புசியுங்கள். தொழுநோய் நீங்கும்.” என்று ஆசீர்வதித்துக் கிளம்பினார்.
சூரியதேவன் ஓடிப் போய்....”முனிவரே.. இதில் எருக்க இலையில் தயிரன்னம் ஏன் புசிக்கவேண்டும் என்கிறார்?” என்று வினவினர்.
”எருக்க இலையின் சாரத்தில் ஒரு அணுப்பிரமாணம் அதில் தயிர் அன்னம் வைத்துச் சாப்பிடுவதில் கலக்கும். அதுவே தொழுநோய்க்கு சிறந்த மருந்தாகும்.” என்கிற தேவரகசியத்தைச் சொன்னார். நவநாயகர்களும் இதை சிரத்தையாக செய்தனர்.
எழுபத்தெட்டாம் நாள். தொழுநோய் முக்கால்வாசி குணமடைந்திருந்தது. பிராணவரதர் அவர்களுக்கு பிரத்யட்சமாகி உங்களது தவத்தை மெச்சினோம். இந்த அர்க்கவனத்தின் வடகிழக்கில் நீங்கள் கோயில்கொண்டு உங்களை வந்து வணங்குவோர்க்கு அனுக்கிரஹம் செய்ய ஆசி வழங்குகிறேன் என்று சொல்லி மறைந்தார்.
இப்போது அவர்களது தொழுநோய் நீங்கிவிட்டது. மகிழ்ச்சியில் திளைத்தார்கள். அப்போது காலவ முனிவர் அங்கே வந்து கதறினார்.
”ஐயோ.. என்னால் உங்களுக்கு இப்படியொரு கஷ்டமா? இது என்ன சோதனை?” என்று புலம்பினார். நவநாயகர்கள் காலவரைத் தேற்றினார்கள்.
“நீங்கள் எப்படி இங்கே வந்தீர்கள்?” என்று நவநாயகர்கள் காலவரைக் கேட்டார்கள்.
“அகத்திய மாமுனியை விந்திய மலைச்சாரலில் சந்தித்தேன். அவர் உங்களுக்கு அர்க்கவனத்திற்கு வழிகாட்டியதைப் பற்றி பிரஸ்தாபித்தார். ஓடோடி வந்துவிட்டேன்” என்றார்.
நவநாயகர்களும் காலவரும் விநாயகர் சன்னிதியை அடைந்தனர். நவநாயகர்கள் தங்களது சாபப்பிணியான கோளை நிவர்த்தி செய்ததினால் அந்த விநாயகருக்கு “கோள் தீர்த்த விநாயகர்” என்று பெயர் சூட்டினர்.
“காலவரே.. எங்களுக்கென நீங்கள் இங்கே தனிக்கோயில் அமைத்து வழிபடுங்கள்...” என்று கூறி மறைந்தனர்.
காலவ முனிவர் கோயில் கட்டினார். நவக்கிரக பிரதிஷ்டை செய்து வழிபடலாயினார்.
சில குறிப்புகள்:
ரத வடிவில் அமைந்தது சூரியனார் கோயில். முதலாம் குலோத்துங்க சோழன் 1079-1120 சிவசூரியப்பெருமானுக்கு கோயில் எழுப்பி வழிபாட்டுக்கு நிவந்தங்கள் எழுதிவைத்தான். விஜயநகர் மன்னர்கள் பின்னர் நவக்கிரங்களுக்கும் கோயில் கட்டினார்கள். ரிக் வேதத்தில் சூரிய வழிபாடு இருக்கிறது. சௌரம் என்று ஷண்மதங்களில் ஒன்றாக சங்கரர் போற்றிவைத்தார். 
திருமங்கலக்குடிக்கு வடகிழக்கே அமைந்துள்ளது. திருவாவடுதுறை ஆதீனக் கோயில். சூரியபகவான் ஆலயம் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. ஒன்பது தீர்த்தங்கள். அதில் சூரியன் நீராடிய தீர்த்தம் சூரிய புஷ்கரணி.

மும்பைக்குப் போன ஆர்வியெஸ்


சென்னையிலிருந்து மும்பாய்க்கு புஷ்பகவிமானத்தில் "விஷ்ஷ்ஷ்.”கிக் கடக்கும் நேரம் மும்பைக்குள்ளேயே இரண்டு கீக்கிடமான சிக்னல் தாண்டும் தரைவழிப் போக்குவரத்தில் ஸ்வாகா ஆகிவிடுகிறது. பம்பர் டு பம்பர் பம்பாய் ட்ராஃபிக் நிரம்பி வழிகிறது. இருநூறடி விட்டமுள்ள வட்டத்தில் எண்பது ஜீன்ஸ் பெண்டுகள் மற்றும் கோட்டு ஆடவர்கள் ஐம்பது பேர்.
சென்ற வாரத்தில் மும்பையில் அச்சுக்காரர்களுக்கான ஒரு அகில உலக மாநாடு. டிஜிடலும் கோர்த்துப் பேசினார்கள். வெற்றிக்கொடி நாட்டியவர்கள், புது முயற்சிகளைப் பரீக்ஷை செய்து பார்த்தவர்கள், பிரசுர வித்தைக் கற்றுக்கொடுப்பவர்கள், கோலோச்சுபவர்கள், இத்தொழில் துலங்க பல தினுசு இயந்திரம் விற்பவர்கள், மூலப்பொருட்கள் வியாபாரிகள், முக்காலமும் தேவைப்படும் பொருட்களின் வியாபாரிகள் என்று மூன்று நாட்கள் மைக் கட்டித் திணறத் திணற தொழில் நுட்பம் பேசினார்கள். வெளியே வரும் போது உள்வாங்கிய செய்திகள் போக மிச்சமிருப்பவை காதுரெண்டிலும் பாகாய்க் கசிந்துருகி தரையில் வெள்ளமாய் ஓடியது. பிடரியில் லேசாகத் தட்டினால் நாலு சங்கதிகளைக் கக்குமளவுக்கு உரு ஏறியிருக்கிறது.
சென்னை விமானநிலையத்தில் ஐம்பது ரூபாய்க்கு ஒரு காஃபி வாங்கி குடிக்குமளவிற்கு எனக்கு கொழுப்பு ஏறிப்போய்விட்டது. பொடியிட்லி என்கிற ஒரு பண்டத்தின் பாக்கெட்டைப் பார்த்தாலே இட்லி சாப்பிட்டு ஏப்பம் விட்ட திருப்தி. நூற்றைம்பது ரூபாயாம். ஐந்து நிமிஷம் முன்னாடியே வண்டியை எடுத்து பத்து நிமிஷத்திற்கு முன்னரே சேருமிடம் வந்தவரை வானத்தில் ஒரு சுருக்கு போடும் தண்டனை கொடுத்து மும்பையில் தரை இறக்கினார்கள். மும்பை உள்நாட்டு விமானமுனையத்திலிருந்து தடுக்கி விழுந்தால் முகரைப் பேந்துவிடும் தூரத்தில் சஹாரா ஸ்டார். பாலைவனமாக இல்லாமல் பசுமையாய் இருந்தது. இந்த விடுதியில் மூன்று நாட்களுக்கு ஜாகை.
தீவிரவாதிகள் வந்து சரமாரியாகச் சுட்டால் கூட தீபாவளிக்கு கேப் துப்பாக்கி வெடிக்கிறார்கள் என்று லாபி சொகுசு நாற்காலிகளில் முதுகைச் சரித்து புதைந்து கொண்டு பால் வேறுபாடின்றி எப்போதும் பத்து பேர் மொபைலையும் ஐபேடையும் சதா நோண்டிக்கொண்டேயிருந்தார்கள். அனைவருக்கும் ரத்தக்கண்ணீர் எம்.ஆர்.ராதா விரல்கள். கண்ணாடிக் கதவு திறந்துவிட்ட சர்தார்ஜி பீமாதிகள் போல இரண்டு பேரை கொசு போல தூக்கி வெளியில் போடும் ஆகிருதி. நம்மூர் வயிறு ஒட்டிய கழைக்கூத்தாடிப் பெண் நுழைந்து வெளிவரும் வளையத்தைக் அசால்ட்டாகக் கையில் ப்ரேஸ்லெட்டாகப் போட்டிருந்தார்.
பாத்ரூம் தரையில் முகம் பார்த்து தலைவாரிப் பொட்டிட்டுக் கொள்ளலாம். சுத்தம் ஸ்கொயர். பால்கனியில் வந்து நின்றால் வெளியே பல கனிகள் தெரிகிறது. பக்கத்துப் பால்கனியில் கோடுபோட்ட ட்ரௌஸரும் பனியனும் காயப்போட்ட மகானுபாவர் எங்க ஊர் ஆசாமியாக இருப்பார் என்று நண்பர் நமட்டுச் சிரிப்போடு சொன்னார். கந்தையானாலும் கசக்கிக்கட்டுபவர்கள் நாங்கள் என்ற பெருமிதத்தோடு ஒத்துக்கொண்டேன். லகூனில் நீர்நிலைகளுக்கு மத்தியில் சாப்பாடு. “வாட் இஸ் திஸ்?” என்று தென்னிந்திய உணவு வகையறாக்களை கண்ணால் சாப்பிடும் வெள்ளைக்காரி, எல்லாவற்றிலும் ஒன்று என்று பரப்பியிருக்கும் சைவ, அசைவ ஐட்டங்களில் ஒன்றாகத் தட்டை நிரப்பிப் போகும் மோட்டா பிரகிருதி, வெள்ளரியும் கேரட்டும் மட்டும் தின்று முயல் போல வாழும் கொடி போன்ற அம்மணி ஒருத்தி என்று சாப்பாட்டுக்கூடம் அவியலாக இருந்தது.
அனுராதா கிருஷ்ணஸ்வாமி மேடம், ஏவி ராமன் சார், அச்சுதானந்தன் சார், சாந்தி மாரியப்பன், எழுத்தாளர் சுதாகர் கஸ்தூரி என்று மும்பைக்கார்கள் அநேக ஸ்நேகிதர்கள். ஆனால் போக்குவரத்து நெரிசல் அக்கம்பக்கம் காலெடுத்து வைக்கவிடாமல் கட்டிப்போட்டது. அனைவரிடமும் அலைபேசி ஆஜர் தெரிவித்துக்கொண்டேன். மாநாடு நடக்குமிடத்திலிருந்து ஸ்டூல் போட்டு எட்டிப் பார்த்தால் வீட்டின் ஜன்னல் தெரியும் தூரத்தில் இருப்பவர் நம் சுதாஜிதான். கிடைத்த இரண்டரை மணி நேர கேப்பில் அவரை ரம்பம் போட தீர்மானித்தேன்.
மனுஷ்யர் வண்டி போட்டுக்கொண்டு எனது மாநாட்டுத் திடலுக்கு வந்தார். வழியில் “எங்கின பார்த்தாலும் துப்பியிருப்பாய்ங்க...” என்று சுதாகர்ஜி நெல்லைத் தமிழில் சொன்னதும் எனக்கு ஹன்ஸல் அண்ட் க்ரீட்டல் கதையில் காட்டு வழியில் தொலைந்து விடாமலிருக்க Pebble and Bread தூவிக்கொண்டு போன குழந்தைகளின் உத்தி போல என்று நினைத்துக்கொண்டேன். ஃபிலிம்சிட்டி திரும்பும் பாலத்துக்கடியில் முளைத்திருந்த பச்சைத் தாவரங்கள் சிவப்பில் குளித்திருந்தன.
”பக்கத்துலதான் சிவபெருமான் பார்வதியெல்லாம் குடியிருக்காங்க....” என்று அவரது வீட்டுப்பக்கம் வண்டியைத் திரும்பினார். தூரத்தில் மரங்களடர்ந்த கயிலாயம் போல மலை முகடு தெரிந்தது. வறண்டு போன ஐஃபோனை அவரது வீட்டு திண்ணையோரம் எனர்ஜிக்கு சொருகினேன். அவருடன் பேசினால் எனக்கு தெம்பு ஸ்திரப்படும். ஜன்னலின் அடிவாரங்களை கடப்பா கல் போட்டு ஜில்ஜில் திண்ணையாக்கியிருந்தது என்னைப் பிடித்து மன்னைக்கு இழுத்துச்சென்றது. ஒரு காலை மடக்கி இன்னொரு காலை ஆட்டியபடி பேசுவது ஸ்வர்க்கத்தில் அப்ஸரஸ்கள் சுற்றி நின்று சாமரம் வீசுவது போல சுகானுபவம்.
ஸ்ரீவரமங்கை மேடம் இரவு டிஃபன் முஸ்தீபுகளில் இறங்கினார். “சப்பாத்தியே சத்து” என்று என் கொள்கையை ஷுகர் யூனியன் லீடராய் முழங்கினேன். கஞ்சா, அபின் ஒளித்து வைப்பது போல மர ஷெல்ஃபெங்கும் புஸ்தகங்கள். கண்ணை மூடி உருவினால் ஒரு புஸ்தகம் கைக்கு வரும். ஆனால், வேண்டிய புஸ்தகம் வேண்டுமென்றால் வரமங்கை மேடத்தின் ஒத்தாசை தேவைப்படுகிறது.
ஜெயமோகன், சுஜாதா, பிஏகே என்று சரளமாகப் பேசத் துவங்கினார் சுதாகர்ஜி. புலிநகக்கொன்றை பக்கம் பேச்சு திரும்பியது. டைகர் க்ளா ட்ரீ பற்றி சிலாகித்த சுதாகர்ஜி அதில் வரும் லைப்ரேரியன் பிள்ளை விங்க்ளருக்குக் கொடுக்காமல் ஸ்டூடண்ட்டுக்குக் கொடுத்த புது புஸ்தகம் பற்றிய பக்கத்தைப் பிரித்து படித்துக்காண்பித்து செவிக்கின்பம் அளித்தார். எழுத்தாளர் எழுத்தெழுத்தாகப் பிரித்து அக்கு வேறு ஆணி வேறாக விளக்கும் போது ஏற்படும் அனுபவமே அலாதிதான்.
அபிஜீத் கட்டிச் சமர்த்து. வீகேயெஸ்-வல்லபாவி ஹரிகிச்சு போல கேமாராவில் படம் பிடிக்கத் துவங்கியது. மேடம் ரொம்ப பிசி. என் ஐஃபோனில் அகப்பட்ட ஃபோட்டோக்களில் எல்லோரோடும் உட்கார்ந்து எடுத்த்துக்கொள்ளுமளவுக்கு எனக்கு தோணாதது என்னுடைய சமர்த்து லெவலைக் காட்டுகிறது. மின்னல் கிளை கிளையாய்ப் பிரிந்து இருண்ட வானத்தை வெட்டி “டமார்...” என்று ஒலியெழுப்ப தேவைப்படும் நேரமாக ஒரு இரண்டரை மணி நேரம் பளிச்சென்று ஓடிவிட்டது.
சப்பாத்தியும் ஒரு கை தயிர் சாதமும் தேவார்மிதமாக இறங்கியது. தவிக்கவிடாமல் நேரே கொண்டு வந்து சஹாராவில் இறக்கிவிட்டார் சுதாகர். மாலை மனம் மயக்கியது. வரும் வழியில் கதை எழுதும் உத்திகளை பகிர்ந்தார் மும்பையில் எனக்கு சிறுகதை ஒர்க்‌ஷாப்பும் கிடைத்தது என் புண்ணியமே.
பத்தரை மணிக்குக் கூட பெண் பிள்ளைகள் தெருவோரங்களில் லவலேசம் கூட பயமில்லாமல் தெகிரியமாக வலம் வருகிறார்கள். பப்புகளில் தோள் மேல் கைபோட்டுக்கொண்டு தாகசாந்தி செய்கிறார்கள். எங்களுக்கு மூன்று நாட்கள் வண்டி ஓட்டிய கோபால்ஜிக்கு சொந்த ஊர் ஆந்திரா பக்கமாம். அப்பாவே ஊரிலிருந்து மும்பைக்கு ஓடி வந்துவிட்டாராம். சும்மா இல்லை. சொத்து சுகத்தையெல்லாம் தனது தமையனார்களுக்கு தாரை வார்த்துவிட்டு வந்தாராம். ஒரு குஜராத்தி பெண்ணை கல்யாணம் செய்துகொண்டு மும்பைக்கராக வாழ்க்கை நகர்த்துகிறார் என்று அவரது காதல் கதை ஒரு டெம்ப்டிங் சிறுகதைக்கான கரு. கோபால்ஜியின் பசங்கள் இஞ்சினியரிங் படிக்கிறார்கள் என்பது உபரித் தகவல்.
இரண்டு வடாபாவ் (வடப்பாவ் என்று அழுத்தினால் திட்டுகிறார்கள். “ப்” கூடாதாம். ஒன்று ரூ. 15/-.) சாப்பிடுமளவிற்கு கையில் துட்டிருந்தால் ஒரு நாளை நகர்த்திவிடலாம் என்பது மும்பையில் ஜீவனம் செய்யும் அடிப்படை ஃபார்முலா. ஒரு உருளை போண்டாவை பட்டர் தடவிய பன்னுக்கு நடுவில் வைத்துக் கடிக்கக் கொடுக்கிறார்கள். மேற்கத்திய பர்கருக்கெல்லாம் இதுதான் பூர்வ பட்சணம். இங்கே எல்லோருக்குள்ளும் தொழில் தொடங்கும் ஆத்ம வீர்யம் நாடி நரம்பெல்லாம் சுரக்கிறது. இரண்டு பேர் சுற்றி நின்றால் பிசினெஸ் பேசிக் களிக்கிறார்கள். கேட்வே ஆஃப் இந்தியா செல்லும் வழியெங்கும் ஆர்.கே.லெக்ஷ்மணின் “காமன் மேன்” சிலையை ரோட்டோர பார்க்குகளில் காணமுடிகிறது. சமீபத்திய தீவிரவாதி கஸாப் அட்டாக்கின் போது உயிர் துறந்த கர்கரேவுக்கு சிலை வைத்திருப்பது போற்றத்தக்கது.
ஒன்பது மணிக்கு கலர் விளக்குகளின் ஒளியில் நனைந்து கொண்டிருந்த இந்தியாவின் நுழைவு வாயிலை வலம் வந்தோம். ஆளுக்கொரு மொபைல் கேமிராவில் திரியும் கோஷ்டிக்கு மத்தியில் ரெண்டு இளைஞர்கள் முப்பது ரூபாய்க்கு படம் எடுத்துத் தருவதாக தூண்டில் போட்டார்கள். தன் மொபைலே தனக்குதவி திட்டத்தில் ஒருவரும் அவர்களை சீண்டியதாகத் தெரியவில்லை. நுழை வாசலில் ஒரு அஸ்வம் பூட்டிய இரதங்களில் சீரியல் பல்பு கட்டி மாப்பிள்ளைகளை அழைப்புக்கு கூப்பிட்டார்கள். “பொண்ணு ரெடியா?” என்று தமிழில் நான் காதோடு காதாக நண்பர்களிடம் கலாய்த்தது அவர்கள் காதில் விழுந்திருக்க வாய்ப்பில்லை.
சித்திவிநாயகர், லக்ஷ்மி போன்றவர்களை தரிசிக்கும் வாய்ப்பில்லாத பாவியாகிவிட்டேன். ஏர்போர்ட் அருகில் இருக்கும் ஜுஹு இஸ்கான் கோவிலுக்கு சென்று திரும்பி ஃப்ளைட் ஏறினோம். போகும் வழியெங்கும் அமிதாப் வீடு, அஜய் தேவ்கன் வீடு என்று வயதான நடிகர்கள் வீட்டு வாசல்படி காண்பித்தார்கள். என்னைப் போன்ற சத்புத்ரர்களுக்கு நடிகையர் வீடு காண்பிப்பது அழகல்ல என்று கற்புத்திறன் போற்றியவர்க்கு மனமார்ந்த நன்றி. கோகுலாஷ்டமிக்கு முதல் தினமாதலால் பஜனை நடந்துகொண்டிருந்தது. பஜனை பாடியவர் அபங்க ஸ்பெஷலிஸ்ட் போலிருக்கிறது. காத்திரமான குரலில் ஒரு கண்ணாடி இளைஞனை கிருஷ்ணர் முன்னால் ஆட விட்டுக்கொண்டிருந்தார். திரௌபதி வஸ்திராபரணத்தின் போது கையிரண்டையும் மேலே தூக்கி ”கிருஷ்ணா! மாதவா! கேசவா” என்று கூச்சமில்லாமல் கூப்பிட்டது போல ஆடியவர் கண்கள் சொருகி அபிநயம் பிடித்துக்கொண்டிருந்தார். பிரகாரமெங்கும் கம்ச வதம், பழக்காரிக்கு பொன் நகைகள் கொடுத்தது, விஸ்வரூப தரிசனம் என்று பற்பல கிருஷ்ணாவதாரப் படங்கள். கிருஷ்ணரைப் பார்த்தாலே ஒரு ஆனந்தம். குதூகலம். மனசு மயங்குகிறது.
மும்பை ஏர்போர்ட் ஒரு குட்டி கோயம்பேடு. ஒருவர் மடியில் இன்னொருத்தர் உட்காருமளவிற்குதான் சீட் போட்டிருக்கிறார்கள். கண்ணை மூடி தியானத்தில் உட்கார்ந்தால் கூட பக்கத்து சீட்டில் ஆள் மாறுவது வாசனை (அ) நாற்றத்தில் தெரிகிற பத்து செ.மீ தூரம். ஃபோன் சார்ஜர்கள் இருந்த இடத்தில் மொபைலர்கள் பழியாய்க் கிடந்தார்கள். ஐந்து நிமிஷத்துக்கொருதரம் ஐட்டம் பிடிப்பவர்கள் போல “சென்னை.. பூனே.... கோயம்புத்தூர்... டெல்லி...” என்று வெப் செக்கின் செய்துவிட்டு ஊர் மேயப் போனவர்களை தேடி அலைந்த ஏர்வேஸ்காரர்களைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. முப்பத்தைந்தாயிரம் அடியில் பறக்கும் வானவூர்தியில் கார் சார்ஜர் வாங்கிய மாமாவை எக்கிப் பார்த்தேன். கன்னம் சிவக்க வெட்கப்பட்டார். அதை விற்ற அந்த ஏர்ஹோஸ்டஸின் விற்பனைத் திறன் வியக்கவைத்தது. ஒரு மணி நாற்பத்தைந்து நிமிடங்கள் பறக்கும் நேரம் முழுக்க உட்காராமல் வேலை செய்த அந்த விமானப் பணிப்பெண்களின் சுறுசுறுப்பு விமானத்தின் வேகத்தை விட அதிவேகம்.
பை பை மும்பை!
‪#‎இத்துடன்‬ இணைத்திருக்கும் படத்தில் (மும்பை: பறவைப் பார்வை) விமான இறக்கையைப் பார்த்து ஏர்லைன்ஸ் கம்பெனி கண்டுபிடிப்பவர்கள்..... “பறக்கும் பிரபு (அ) பாவை” என்கிற பட்டத்தைப் பெறுகிறார்கள்.

கணபதி முனி - பாகம் 27: கணபதியைத் துரத்திய காவலர்கள்

வேலூரிலிருந்து தந்தியடித்தது கல்யாணராமன். அப்பு சாஸ்திரியின் தம்பி. திருவொற்றியூரில் கணபதி தவமியற்றிக்கொண்டிருக்கும் போதெல்லாம் படைவீடு (படவேடு/படைவேடு) ரேணுகாபரமேஸ்வரி அம்மனைப் பற்றியும் அங்கும் கணபதி வரவேண்டும் என்று ஓயாமல் நச்சரித்துக்கொண்டிருந்தவர் கல்யாணராமன். தந்தியோடு வேலூருக்கு வந்த நாயனா கல்யாணராமனையும் கூட அழைத்துக்கொண்டு படைவீட்டிற்கு விரைந்தார். ரேணுகாவின் அருட்கடாக்ஷம் பெற அங்கே தவமியற்றவும் முடிவு செய்தார்.

ரேணுகாவின் ஆழ்ந்த தரிசனத்திலிருந்து கலைந்து சிறிது நேரத்தில் வெளிவந்துவிட்டார் கல்யாணம். அவ்விடத்தின் சக்தியை கணித்த கணபதி இன்னும் கொஞ்ச நாட்கள் அங்கேயே தங்கியிருந்து மேலும் தவமியற்ற சித்தம் கொண்டார். அப்படி தவமியற்றும் காலத்தில் உமாசகஸ்ரத்தைப் பாராயணம் செய்து மனதில் நிலையாகத் தேக்கிக்கொள்ளவும் திட்டமிட்டார்.
”கணபதி ஏதோதோ மந்திரங்களைச் சொல்லிக்கொடுத்து உமாமகேஸ்வரம் என்பரின் மகன் கச்சபேஸ்வரனை புத்தி பேதலிக்க செய்துவிட்டார்” என்று அப்போது ஊருக்குள் ஒரு வதந்தி காட்டுத்தீயாய்ப் பரவியது. இதை உமாமகேஸ்வரமே மறுத்த போதிலும் சில உறவினர்கள் வேண்டுமென்றே இந்தக் கட்டுக்கதையை திட்டமிட்டுப் பிரசாரம் செய்தனர். மேலும் இளைஞர்களைத் தீவிரவாத அரசியல் குழுவாக மாற்ற முடுக்கிவிடுகிறார் என்கிற கூடுதல் குற்றச்சாட்டையும் அவரின் பால் அவிழ்த்துவிட்டனர். இதுதான் சாக்கு என்று சுந்தரபாண்டியன்( ஆரணி காண்ட்ராக்டார். கணபதி முனி பாகம் 21 - சுதந்திரத் தீ) போலீஸாரை கணபதிக்கு எதிராகத் தூண்டிவிட்டார். ஏற்கனவே தன்னுடைய பிள்ளையும் மருமானும் நாயனாவிடம் மந்திர தீட்சை பெற்றதனால் கெட்டுப்போயினர் என்று மூடத்தனமான நம்பியிருந்ததால் இந்த வாய்ப்பை தவறவிடாமல் கணபதியை உள்ளே தள்ளிவிட வேண்டும் என்று முனைப்பாக இருந்தார் சுந்தர பாண்டியன்.
“படைவீட்டில் நாயனா தங்கியிருப்பது வேலூர் சுற்றுவட்டார இளைஞர்களின் மனதில் நஞ்சை விதைப்பதற்குதான்” என்று புரளி கிளப்பிவிட்டார்கள். சின்னசாமி என்கிற போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்த பொய்ப் பிரசாரத்திற்கு உறுதுணையாகப் பாடுபட்டார்.
காவலர்கள் அப்பு சாஸ்திரியிடமிருந்து தங்களது விசாரணையைத் துவங்கினர்.
“கணபதியைப் பற்றி வேறு விதமாக எங்களது காதுகளில் விழுந்தது. அதற்கு உம்முடைய கருத்து என்ன?”
“இளைஞர்கள் தடம் மாறாமல் நேர்வழியில் நடபதற்கு கணபதிதான் துணை நின்றார். இந்த இளைஞர்களின் பெற்றோர், உற்றார் உறவினர் அனைவரும் நாயனாவிடம் அனுபூதி பெற்றவர்கள். இவர்களின் தற்போதைய உன்னத நிலைக்கு கணபதியே காரணகர்த்தா. இதை எல்லோரும் அறிவர்” என்றார்.
கச்சபேஸ்வரரின் உறவினர்களும் இப்போது தெளிவடைந்தார்கள். இருந்த போதிலும் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருப்தியடையவில்லை. தீவிர சந்தேகத்துடன் அவ்விடத்தை விட்டு விலகினார்.
இக்குழப்பங்களுக்கிடையே, வெங்கடாசலய்யா என்கிற மெட்ராஸ் அன்பர் தெய்வீக அவதாரங்கள் பற்றி கணபதியிடம் தான் பேசியதை வைத்து, சரியாகப் புரிந்து கொள்ளாமல், கல்கி அவதாரம் கணபதியின் மூலமாகத்தான் இப்புண்ணிய பூமியில் நிகழவிருக்கிறது என்று துண்டுச் சீட்டுகள் அடித்து விநியோகிக்க ஆரம்பித்தார். கச்சபேஸ்வரர் தன் கையில் அகப்பட்ட அந்தத் துண்டுச் சீட்டை இன்னும் கொஞ்சம் விஸ்தாரமாகப் புனைந்து கல்கி அவதாரம் விசாலாக்ஷிக்கு பிறக்கப் போகிறது என்று காண்போரிடமெல்லாம் கதை சொல்ல ஆரம்பித்தார்.
இந்த பரப்புரை சுந்தரபாண்டியனுக்கு வசதியாகப் போயிற்று. கல்கி அவதாரமெடுத்துத் தர்மபரிபாலனம் செய்ய பூவுலகில் நிகழப்போகிறது என்பதை முன்னிறுத்தியும் இந்தச் செய்தியையும் இணைத்து “தி மெட்ராஸ் மெயில்” பத்திரிகையில் “எச்சரிக்கை: இளைஞர்களை ஆபத்தான வழிகளில் தூண்டிவிடும், புண்ணிய ஸ்தலங்களில் உலவும் காவ்ய கண்ட கணபதி சாஸ்திரி” என்று செய்தி வெளியிட்டார்கள். அதில் சர்க்காருக்கு எதிராக ஒரு மிகப்பெரிய அரசியல் இயக்கம் ஒன்றையும் கணபதியின் தலைமையில் அமையவிருக்கிறது என்றும் எழுதியிருந்தார்கள்.
வூரீஸ் கல்லூரி பேராசிரியர் சி. சுப்ரமண்யன் “தி மெட்ராஸ் மெயில்” பத்திரிகையில் இடம்பெற்றிருந்த அவதூறு செய்திக்கு மறுப்பு வெளியிட்டு “தி ஹிந்து”வில் கட்டுரை எழுதியிருந்தார். ஆனால் கவர்னர் கணபதியின் செயல்பாடுகளைக் கண்காணிக்க உத்தரவிட்டார். சுந்தரபாண்டியனின் தூண்டுதலால் போலீஸார் “உமா மகேஸ்வர”த்தை முடக்க திட்டமிட்டனர். சர்க்காருக்கு எதிரான புரட்சிப் பாடல்கள் அதில் இடம்பெற்றிருக்கிறது என்பது சுந்தரபாண்டியனின் குற்றச்சாட்டு.
ஆம். அதுவும் உண்மைதான்! உமா சகஸ்ரத்தில் சில பாடல்கள் தேசபக்தியையும் ஊட்டும்படியாகயும், தாய்நாட்டின் விடுதலைக்காகவும் அன்னை ஆதிபராசக்தி உமையம்மையின் அருள் வேண்டும் என்று பொருள்பட எழுதியிருந்தார். போலீஸார் உமாசகஸ்ர பிரதியை கவர்வதற்கு வரப்போகிறார்கள் என்று ஆப்தர்கள் சிலர் கணபதியை முன்கூட்டியே எச்சரித்தனர். ரேணுகா அம்பிகையின் மீது முழு நம்பிக்கை வைத்து அவ்விடத்தை விட்டு அசையாமல் அமர்ந்திருந்தார் கணபதி.
படைவீடும் அதன் சுற்றுப்புரங்களும் மனித உடலில் கேசாதிபாதம் அமைந்திருக்கும் ஆன்மிக மையங்களைப் போன்ற அமைப்பில் இருந்தன. படைவீடு மலைகளால் சூழப்பட்டிருந்தது. இருபுருவங்களுக்கு இடையே நுழைவது போன்று வாசல். இந்தப் பீட பூமியின் மேலே போனால் சாம்பல் நிற (விபூதி) பிரதேசத்தில் குண்டலினி (கமண்டலு) நதி பிறக்கிறாள். விபூதி போன்ற இந்த இடத்திலிருந்து தண்ணீர் ஊற்று கிளம்புகிறது. ஜமதக்னி முனிவர் யாகம் செய்த இடமாம். அவரது யாகசாலையிலிருந்த யாக குண்டத்திலிருந்து உதிர்ந்த சாம்பல் கலந்த மண்ணாம் அந்த வெண்ணிற நிலப்பரப்பு. இன்றும் கூட இந்த விபூதியே ரேணுகாதேவியின் கோயிலில் பிரசாதமாகப் பக்தர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.
தண்ணீர் கசியும் இந்த இடம் தான் சகஸ்ரரார கமலம் என்றழைக்கப்படும் ஆயிரம் இதழுள்ள தாமரை மலர்ப் பீடம். மனுஷ்யர்களின் உச்சி சிரஸ். அந்நதியில் ஓடும் நீரானது ரிஷி ஜமதக்னியின் கமண்டலத்திலிருந்து விழுந்த புனிதநீர். அந்த நதி படைவேடின் வாசல் வழியே பாய்கிறது. அந்நதியோடும் பாதை சகஸ்ரராரவிலிருந்து சக்தி ஓடும் பாதையாகிறது. சமதளத்திலிருந்து பிரவாகமெடுத்த குண்டலினி நதி இரு கற்பாறைகளுக்கிடையே சிற்றருவியாக விழுகிறது. அதைப் பார்ப்பதற்கு பாம்பு படமெடுத்தது போலிருப்பதால் “பாம்படிச்சான் பாறை” என்று வழங்கப்படுகிறது.
இரு புருவங்களுக்கிடையில் ஆக்ஞா சக்ரம் இருக்கிறது. ரேணுகாவை வஜ்ரேஸ்வரி, வஜ்ரவதி, சண்டி, பரச்சண்டசண்டி மற்றும் சின்னமஸ்தா என்றும் பலவாறாக துதிக்கப்படுகிறாள். யோகநிலையில் சின்னமஸ்தாவை பிளந்த தலை/வெட்டப்பட்ட தலையாக குறிப்பிடுகின்றனர். யோகத்தின் முதிர்ந்த நிலையில் உச்சி சிரஸ் பச்சிளம் குழந்தையின் தலைபோல மெத்தென்று மிருதுவாக ஆகிவிடும். இந்த யோகானுபவத்தை சின்னமஸ்தா என்கிறார்கள். சின்னமஸ்தாதேவி என்ற காளியின் உக்ரரூப வழிபாடும் ஒன்று உண்டு. தனது ஸ்நேகிதிகள் டாகினீ மற்றும் வர்ணினீயின் பசிப்பிணி போக்க தனது சிரசை வெட்டி அம்ருதமாகிய இரத்தத்தை பருக அளித்தாள் என்னும் வரலாறு சின்னமஸ்தாவைப் பற்றியது. ரேணுகாதேவி நம் ஆக்ஞாசக்ரத்தில் தங்கி ருத்ர க்ரந்தி என்ற யோக முடிச்சை அவிழ்க்கிறாள். ஆக்ஞாசக்ர இடமென்பது நமது இருபுருவங்களுக்கிடையில் இருக்கும் வசியமேற்படும் பிரதேசம். குங்குமம் தரிக்குமிடம்.
ஆன்மிக பக்தர்களுக்கான உறைவிடமாக இருக்கும் படைவீடு புரட்சியாளர்களுக்கு புகலிடமாகவும் இருப்பதாக போலீஸார் சந்தேகித்தனர். ஒரு மங்கள வெள்ளிக்கிழமை காலையில் மஃப்டியில் இரு போலீஸார் ரேணுகா கோயிலை அடைந்தனர். வெள்ளிக்கிழமை அம்மனுக்கு உகந்த நாள். நாயனா பக்தியுடன் பிரதக்ஷிணம் செய்துகொண்டிருந்தார். ஒவ்வொரு பிரதக்ஷிணத்திற்கு ஒரு ஸ்லோகம் வீதம் இருபத்தேழு முறை வலம் வந்து ரேணுகாவை துதித்து இருபத்தேழு ஸ்லோகங்களை அப்போது இயற்றினார். ”சுரஸிரசர சரண ரேணுகா ஜகதீஸ்வரீ ஜயதி ரேணுகா” என்ற வரிகள் அமைந்த அந்தப் பாடல் கணபதியின் கீதாமாலா என்கிற அச்சுப்பிரதியில் பின்னர் இடம்பெற்றது.
பிரகாரத் திண்ணையில் அமர்ந்து தற்போது இயற்றிய ஸ்லோகங்களை மும்முரமாக எழுதிக்கொண்டிருந்தார். அவருக்குப் பக்கத்திலேயே முகமறியாதவர்கள் போல அமர்ந்திருந்த மஃப்டி போலீஸாரால் கவனிக்கப்படாமல் உமாசகஸ்ரமும் அங்கேயே இருந்ததுதான் பெரும் ஆச்சரியம்!
அப்போது ஏ.ஆர்.துரைஸ்வாமி என்கிற கணபதியின் அணுக்கர் அங்கே வந்தார். அவரிடம் கணபதி ஜாடையினாலேயே உமாசகஸ்ரத்தை பத்திரமான இடத்துக்கு எடுத்துக்கொண்டு போகச்சொன்னார். வேவு பார்க்கவந்தவர்களிடமிருந்து அதைப் பாதுகாக்கும் பொருட்டு வேஷ்டியில் மறைத்து எடுத்துக்கொண்டு ஓடியவர் பதைபதைப்புடன் கமண்டலு நதியின் மணலில் அதைப் புதைத்துவிட்டார்.
பக்கத்தில் பக்தர்கள் போல அமர்ந்திருந்த சீருடை அணியாத காவலர்களிடம் “வேலூரிலிருந்து எப்போது புறப்பட்டீர்கள்?” என்று வினவினார். அவர்களுக்குத் தூக்கிவாரிப் போட்டது. மெட்ராஸிலிருந்து வந்திருக்கிறோம் என்று முன்னரே அவர்கள் கணபதியிடம் கூறியிருந்தார்கள். இப்போது என்ன சொல்வது என்று அவர்கள் திணறிக்கொண்டிருக்கும் போதே உமாசகஸ்ரத்தைப் பற்றி தானாகவே சொல்ல ஆரம்பித்தார். உமையம்மைப் போற்றிப் பாடிய அந்த பாடல்களிலிருந்து சில வரிகளைப் பாடினார். அதைப் பற்றி அவர்களுக்கு எழும் சந்தேககங்களை அவர்கள் மனதில் நினைக்கும் போதே நிவர்த்தி செய்தார். இருவரும் செய்வதறியாது தவித்தனர்.
”திருவண்ணாமலையில் கற்றறிந்த பண்டிதர்களின் முன்னிலையில் உமாசகஸ்ரம் அரேங்கற்றமானது. இதில் தடைசெய்ய என்ன இருக்கிறது? லோகமாதாவாகிய, நற்குணங்களை அருளும், ஆன்மிக பலமளிக்கும் உமையம்மையை இப்புண்ணிய பூமியில் பிரார்த்திப்பதில் என்ன தவறு” என்று வினவினார் கணபதி. இனி அவர்களுக்கு கேட்பதற்கு எதுவுமில்லை.
“இன்று பிரதக்ஷிணம் செய்து முடித்த பிறகு என்ன எழுதினீர்கள்?”
“அன்னை ரேணுகாதேவியைப் போற்றி எழுதினேன்.” காண்பித்தார்.
அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளளெல்லாம் அடிப்படையில்லாதவை என்று அவர்கள் புரிந்து கொண்டனர். “தங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி” என்று கைகூப்பி வணங்கினர். வந்திருந்த இரு காவலர்களில் ஒருவர் “ஐயா, நீங்கள் தயவுசெய்து சில காலம் இந்த மாவட்டத்திலிருந்து தள்ளி இருங்கள். அரசியல் புரட்சி செய்கிறீர்கள் என்று சில முக்கியஸ்தர்கள் உங்களைக் கைது செய்ய போலீஸாரைத் தூண்டிவிடும் முனைப்பில் இருக்கிறார்கள்” என்று வேண்டிக்கொண்டார். பின்னர் இருவரும் அங்கிருந்து விடைபெற்றனர்.
போலீஸ் விசாரணையில் நாயனாவுக்கு எதுவும் பங்கம் ஏற்படவில்லை என்று தெரிந்ததும் அங்கிருந்தவர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. அன்றிரவு அனைவரும் நிம்மதியாக உறங்கினார்கள். நள்ளிரவில் மழை கொட்டோ கொட்டென்று வானத்தைப் பிய்த்துக்கொண்டு கொட்டியது. காலையில் எழுந்து பார்த்தால் உமாசகஸ்ரத்தை வெள்ளம் அடித்துக்கொண்டு போய்விட்டிருந்தது.
”உமா சகஸ்ரத்தால் நான் எழுப்பிய சக்தி யாரென்று எனக்குப் புரிந்துவிட்டது. அது ரேணுகாதேவிதான். அவளே அனைத்திலும் குண்டலினியாக உறையும் உயிர் சக்தி. நானெழுதிய உமாசகஸ்ரம் கையெழுத்துப் பிரதி வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டாலும் அவளுடைய அருளால் என்னுடைய நினைவில் அழிக்கமுடியாமல் நிலைத்துவிட்டது.” என்று ரமணருக்கு செய்தி அனுப்பினார் கணபதி.
அங்கே இருக்க வேண்டாம் என்று போலீஸார் எச்சரித்தும் படைவீட்டிலேயே தங்கியிருந்தார் கணபதி.....

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails