Friday, March 18, 2011

தேடித் தேடி...

kanamal ponavalஅவளைத் தொலைத்துவிட்டேன். ஐ லாஸ்ட் ஹர். தமிழிலும் ஆங்கிலத்திலும் மாறி மாறி மேஜர் சுந்தர்ராஜன் மாதிரி பேசி பேஜார் பண்ணுகிறது என் மனஸ். "பவீ... பவிம்மா.. ஏய் பவீ..." என்று ஷூ காலோடே ஹால், கிச்சன், பெட்ரூம், பாத்ரூம், கொல்லைப்புறம் என்று எல்லா இடத்திலும் கடந்த பதினைந்து நிமிடங்களாக பம்பரமாய் சுற்றி சுழன்று தேடிவிட்டேன். எங்கடீ போன. ஹால் பேஃன் விசிறி அடித்த காற்றில் 'தி ஹிந்து'வும் ஆங்கில வார மாத இதழ்களும் டீப்பாயில் படபடத்தன. தாலியாய் மாட்டியிருந்த ஐ.டி கார்டை கழற்றி ஷோகேசினுள் எறிந்தேன். சுவரில் மாட்டிருந்த நாற்பது இன்ச் சோனி எல்.இ.டியில் பிரகாசமாக தெரிந்த சன் ம்யூசிக்கில் கமலும் சினேகாவும் "பத்துக்குள்ளே நம்பர் ஒன்னு சொல்லு... உன் நெஞ்சுக்குள்ளே யார் என்று சொல்வேன்..." என்று கேள்விகேட்டு என் சோகம் புரியாமல் ஜாலியாக பாடிக் காதலித்துக் கொண்டிருந்தார்கள். மணி பத்தரை என்று போன மாதம் லண்டன் விஜயத்தில் வாங்கிய சுவர்க் கடிகாரம் டிக்..டிக்..டிக்கி காண்பித்துக் கொண்டிருந்தது. 

எங்கே போயிருப்பாள்? திடீரென்று ஏதோ நினைவுக்கு வந்தவனாய் திரும்பவும் சமையலறை போய் அடுப்புக்கு கீழே உப்பு புளி மிளகாய் வைத்திருக்கும் மர அலமாரியை திறந்து பார்த்தேன். ச்சே. மூளை மழுங்கிவிட்டது. பதின்ம வயதில் அளவில்லாமல் பார்த்த தமிழ்ப் படங்களின் பக்க விளைவு இது. "படார்....டப்.." ஒன்றுமில்லை. அலமாரிக் கதவை ஆத்திரத்தில் அறைந்து சார்த்தினேன். ப்ளாக்பெர்ரியில் அவள் நம்பரை தட்டினேன். அருகாமையில் எங்கிருந்தோ "வசீகரா....என் நெஞ்சினிக்க உன் பொன் மடியில் தூங்கினால் போதும்...." பாடியது. சோபாவிற்கு நடுவில் இருந்த கண்ணாடி டீப்பாயில் சோனியா காந்தி கையசைத்துக் கொண்டிருந்த அவுட்லூக் கீழேயிருந்து அவள் மொபைல் சிணுங்கிக் கொண்டிருந்தது. அவுட்லுக்கை நகர்த்தி லுக் விட்டதில் அவளது சாம்சங்கில் சென்ற மாதம் கொண்டாடிய என்னுடைய பிறந்தநாளுக்கு சிகப்பு கலர் டி ஷர்ட்டில் அவள் கைப்பட கிளிக்கிய நான் பேக்கு மாதிரி சிரித்துக் கொண்டிருந்தேன்.

எங்கே போயிருப்பாள்? காலையில் தேங்காய் சட்னிக்கு உப்பு போடவில்லை. "நான் ரொம்ப ரோசக்காரன்னு நீ அடிக்கடி நிரூபிக்கற..." என்று வம்பிக்கிழுத்தேன். பக்கத்து சேரில் உட்கார்ந்திருந்தவளை சும்மா விளையாட்டாதான் கேட்டேன்.  சுவற்றுக்கு சிரித்துவிட்டு அவள் பாட்டுக்கு தேமேன்னு பில் ப்ரைசனின் பழைய புக் தண்டர்போல்ட் கிட் சுவாரஸ்யமாய் படித்துக்கொண்டிருந்தாள். கான்வென்ட் எஜுகேஷன். எப்பவுமே தஸ்ஸு புஸ்ஸு. நானே டைனிங் டேபிளில் மறு மூலையில் இருந்த டாடா சால்ட்டை எக்கி இடது கையால் எடுத்து தட்டில் போட்டுக்கொண்டேன். டேபிளில் சிந்தியிருந்த சாம்பார் சட்டை பாக்கெட்டில் தொற்றிக்கொண்டது. இந்தக் கறை கெட்டது. போகாது. அவள் வீட்டில் இருந்தால் கூட அவளிடம் தோய்க்க சொல்வதில்லை. தட் தட் மேன் தட் தட் வொர்க். காந்தீயம். 

எங்கே போயிருப்பாள்? நேற்றைக்கு ராத்திரி ஊர் அடங்கினப்புறம் பீச்சுக்கு போயிருந்தபோது கூட இன்றைக்கு எங்கும் வெளியில் போவதாக என்னிடம் சொல்லவில்லை. அவள் கேட்ட பீச்சாங்கரை அவிச்ச வேர்க்கடலையை  "வேண்டாம்  பவி. ஹாம்ஃபுல். அத எந்தத் தண்ணியில் வேக வச்சாங்களோ" என்றேன். அதுவும் அவள் கரம் பற்றிய நாளில் இருந்து செய்வது போல "ஈ...." என்று முப்பத்தியிரன்டையும் காட்டி சிரித்துகொண்டு தான். பதிலுக்கு அவளும் வழக்கம் போல பல்லைக் காட்டாமல் புன்னகை மாதிரி ஒன்று புரிந்தாளே. வேறென்ன நடந்தது. பீச்சுல எங்களுக்கு முன்னாடி ஒரு ஜோடி காத்து நுழையக்கூட இடம் கொடுக்காமல் தோளோடு கால் ஈஷிக்கொண்டு பசையொட்டி நடந்து போனார்கள். எதிர்பாராத தருணத்தில் பக்கத்தில் வந்தவளின் அண்டா இடுப்பை அந்தப்பயல் கையை போட்டு தன் பக்கம் வெடுக்கென்று வளைத்து இழுத்தான். இதைப் பார்த்து வெகுண்டு போன எனது இளமை ஷன நேரத்தில் எழுந்து பக்கத்திலிருந்த அவள் கையை கோர்த்து இறுக அழுத்தியது. எவ்ளோ நாள் தான் பொறுக்கும். ஏதோ பாம்பு தீண்டியது போல பதறி விடுவித்து கையை உதறிக்கொண்டாள். அழுத்தியது அவளுக்கு ரொம்பவும் வலித்துவிட்டது என்றெண்ணி வீடு வந்து சேரும் வரை அடிக்கொருதரம் ரோடையும் அவளையும் பார்த்தபடி "ஸாரி... ஸாரிம்மா..ஸாரி பவி... ஏதோ ஒரு வேகத்துல.." என்று காரில் ஆயிரம் தடவையாவது ஜெபித்திருப்பேனே. சரி. அதுக்காக கடல வாங்கித் தரலைன்னா, கையை பிடிச்சு இழுத்தா கோச்சுக்கிட்டு ஓடிப்போய்டுவாங்களா? நா தொட்டு தாலி கட்டிய புருஷந்தானே?

"தலைக்கு ரெண்டு கையையும் முட்டுக்கொடுத்து சோஃபாவில் உட்கார்ந்திருந்தா பவி கிடைப்பாளா? முண்டம் எழுந்திரிச்சி எங்கயாவது போய் தேடிப்பாருடா" என்று உள்ளுக்குள்ளே இருந்து இன்னொரு பிரசாத் காட்டுக் கத்தலாக கத்தினான். "பொண்டாட்டியை காணோம் அங்க வந்தாளா"ன்னு கோயம்புத்தூருக்கு ஃபோன் போட்டு இந்த அகாலத்துல கேட்டா அவங்க அப்பாம்மா பதறிப் போய்டுவாங்க. என்ன பண்றதுன்னு புரியலை. சின்ன வயசுல சிலேட்டு தொலைச்சுர்க்கேன். பல்பம் தொலைச்சுர்க்கேன். ஏன் ஒரு தடவை ரேஷனுக்கு போய் அரிசி வாங்க சொன்னப்ப எலி கடிச்ச டவுசர் பாக்கெட்டில் போட்டு அடிக்கடி தொட்டுப் பார்த்துக்கொண்டே போயும் கூட சுளையாக அம்மா பக்கத்து வீட்டு அல்பத்திடம் கடன் வாங்கிய நூறு ரூபாய் நோட்டைக் கூடத் தொலைத்திருக்கிறேன். இன்றைய பொழுதில் ஒரு நாளைக்கு அக்குவாஃபினா தண்ணீருக்கே ரெண்டு நூறு ரூபாய்த் தாள் தண்ணியாய் செலவு செய்கிறேன். சரி அதை விடுங்க.  யாராவது பொண்டாட்டியை தொலைப்பார்களா?

தொலைச்சுட்டேனே. சரி போலீசில் போய் புகார் கொடுக்கலாம். கார் சாவியை எடுத்துக்கொண்டு வாசல் கதவை பூட்டும் போது "போலிஸ் ஸ்டேஷனா?" என்று எனக்கு கிலி வந்தது. இத்தனை மணிக்கு மேல் ஸ்டேஷனுக்கு போய்,  அவன் தாறுமாறா ஏதாவது கேள்வி கேட்க எக்குத்தப்பா பதிலுக்கு உளறி வச்சுட்டோம்.. போச்சு.. தீர்ந்தது எல்லாம். பேண்டை கழற்றிவிட்டு ஜட்டியோட களவாணிப் பயல்கள் கூட பெஞ்சுக்கு பக்கத்துல குத்த வச்சு உக்காராவச்சுட்டான்னா? நினைக்கும் போதே கைகால்கள் உதறல் எடுத்தது. மணிக்கட்டு வாட்ச் பதினொன்னரை காட்டியது. தெருவில் ஒரு ஈ காக்கா இல்லை. வேஷ்டியால் தெருவைப் பெருக்கிக் கொண்டு இந்திய திருநாட்டின் அடையாள குடிமகன் ஒருத்தன் வாயில் கோழை கோழையாய் எச்சில் ஒழுக யாரையோ "..த்தா... ஒங்க...$@!$@!*#@!" என்று ஆரம்பித்து கெட்ட வார்த்தைக்கு டிக்ஷனரி போடும் அளவிற்கு திட்டிக்கொண்டே போனான். அவன் பின்னாலையே தெருநாய் அவனோடு குலைத்துக் கொண்டே பேசிக்கொண்டு போனது. என் வீட்டு வாசல் கடந்தவுடன் "வு....வாவ்...வ்வே.." என்ற பெருத்த சப்தத்துடன் அடித்த சரக்கு அத்தனையையும் வாந்தி எடுத்துவிட்டு குப்பைத்தொட்டி அருகில் அப்படியே சரிந்துவிட்டான். அதற்கப்புறம் பேச்சுத்துணை இல்லாததால் நாய் வேறு வேலை பார்க்க வந்த திசையே திரும்பி ஓடியது. இப்ப வேடிக்கை தேவையா?

நாளைக்கு பக்கத்து வீட்டு லோச்சனா மாமி "பவி இருக்காளோ.." என்று கையில் கிண்ணத்துடன் காப்பி பொடிக்கோ சர்க்கரைக்கோ வந்து நின்னால் என்ன பதில் சொல்றது என்று ஒரு ஐந்து நிமிடம் யோசித்தேன். திடீரென்று ஏதோ ஞாபகம் வந்தவனாய் கதவை திறந்து கொண்டு மாடிக்கு ஓடினேன். வாசல் கதவை திறக்கவும் கரண்ட் போகவும் மிகச் சரியாக இருந்தது. "ஸ்.ஸ்.. அப்பா..." ச்சே மாடிப்படி ஓரத்தில் கிடந்த அந்தக்கால இரும்பு ஸ்டூலில் செமத்தியாக இடித்துக்கொண்டேன். கால் முட்டியில் வலி உயிர் போனது. தேய்த்துவிட்டுக்கொண்டே அந்த கும்மிருட்டில் தட்டுத் தடுமாறி மாடிக்கதவை திறந்தேன். ச்சிலீ....ர் என்று காற்று வந்து முகத்தில் மோதியது. மேலே பத்து நாள் வளர்ந்த இளம் நிலா தனியாக காய்ந்து கொண்டிருந்தது. நிலாவுக்கு சுற்றிலும் துணையே இல்லை. மேகமே இல்லாத நிர்மலமான வானம். அந்த இயற்கை டார்ச்சின் உதவியில் நான் ஏறிய இடத்தில் இருந்து இடது புறமாக பவனி புறப்பட்ட என் கண்கள் மணிரத்னம் பட கண்ணாளனே பாடல் காமெரா போல ஒரு சுற்று சுற்றி வலது புறம் வந்து நின்றது. கொடியில் காய்ந்து கொண்டிருந்த என் ஜட்டி பக்கத்தில் உரிமையாக தொங்கிய அவளது உள்ளாடைகள் அப்புறம் ஒரு துண்டு அப்புறம் மாடி ஓரத்தில் கிடந்த காய்ந்த தேக்கு மர இலைகள் அப்புறம் அந்தத் தண்ணீர் தொட்டி பக்கத்தில் மூட்டை போல ஏதோ இருந்ததே. மூளையில் இடறியதை பார்க்க மீண்டும் இரண்டாவது ஸ்கேனுக்கு புறப்பட்டது கண்.

மூட்டை பார்த்த இடத்தை மூளை சரியாக காட்டிக் கொடுக்க கண் திரும்பவும் தண்ணீர் தொட்டி அருகில் சென்றது. நிலா வெளிச்சத்தில் பார்க்கையில் யாரோ குப்புறக்க படுத்திருப்பது போல இருந்தது எனக்கு. நெஞ்சு படபடக்க பக்கத்தில் ஓடினேன். "ஆ..ஆ..." பார்த்ததும் பிளந்த வாய் மீண்டும் மூடவேயில்லை. ஐயோ! பவியே தான்.. காலில் ஏதோ பிச்சுபிச்சென்று ஒட்டியது. கையால் தடவிப் பார்த்தேன். மோந்து பார்க்கும் போது குப்பென்று ரத்த வாடை அடித்தது. ஒரு காலைத் தூக்கி ஆடும் போஸில் வைத்துக்கொண்டு நிலா வெளிச்சத்தில் பார்க்கையில் பிரவுன் நிறத்தில் ஒரு கொழகொழ திரவம் போன்று தெரிந்தது. ப்ளாக்பெர்ரி கீ பேடில் எதையோ அழுத்தி அதிலிருந்து எழுந்த வெளிச்சத்தில் உத்துப் பார்த்தேன். ஐயோ! பச்சை ரத்தம். கொலை!

தீர்மானமாக முடிவு செய்துவிட்டேன். இவளுக்கு கல்லூரியில் படிக்கிற காலத்தில் இருந்து ஒரு காதலன் இருந்திருக்கிறான். கோவையில் இருந்து சென்னை வந்தவுடன் அவனும் இவள் பின்னாடியே கூடவே வந்து பார்த்திருக்கிறான். தினமும் நான் ஆபிஸ் சென்றவுடன் தன்னுடன் சேர்ந்து வாழ இவளை வற்புறுத்தியிருக்கிறான். மஹா பதிவிரதையான இவள் அதற்கு முடியாது என்று மறுத்திருக்கிறாள். இன்றைக்கு கோபம் கொண்டு இவளை பலாத்காரம் செய்ய முயன்றிருக்கிறான். அந்தக் கொடியவனிடம் இருந்து தப்பித்து மானத்தை காத்துக் கொள்ள மாடிக்கு ஓடி வந்திருக்கிறாள். துரத்தி வந்த அவன் பக்கத்தில் அந்த சிமென்ட் தொட்டியில் இவள் தலையை பிடித்து சொத்தென்று மோதி இவளை கொலை செய்திருக்கிறான். இப்போதே போலிசுக்கு போவோம் என்று எண்ணி நூறை டயல் செய்யலாமா என்று கையை கொண்டு போகையில் பிணமாகக் கிடந்தவள் லேசாக அசைவது போல தெரிந்தது. ஆடிப் போய்விட்டேன். பக்கத்தில் சென்று மூக்கருகில் கை வைத்து பார்த்தேன். அட! மூச்சு இருந்தது. "ம்.ம்.ம்..." என்று மெலிதாக முனகினாள்.

கொத்தாக அவளை இருகைகளில் ஏந்திக்கொண்டு கீழே ஹாலுக்கு ஓடி வந்தேன். நல்லவேளை கரண்ட் வந்திருந்தது. சோக் கெட்டுப்போன டியூப் லைட் ஹாலில் மினிக்கிக் கொண்டிருந்தது. சோஃபாவின் கைப்பிடியில் தலைவைத்து படுக்கவைத்தேன். தலையில் பொட்டுக்கு பக்கத்தில் இருந்து லேசாக டொமேடோ சாஸ் வழிந்தோடியது போன்று ரத்தச் சுவடு இருந்தது. அப்படியே திரும்பவும் தூக்கிக் கொண்டு காரில் ஏற்றி பின் சீட்டில் படுக்க வைத்தேன். இவளை பிழைக்க வைத்து யார் அந்தக் கொடூரன் என்று கண்டு பிடித்து போலீசிடம் ஒப்படைத்து முட்டிக்கு முட்டி தட்டி உள்ளே தள்ளவேண்டும் என்று சபதம் எடுத்தேன். இருபத்து நான்கு மணிநேரமும் கல்லாக் கவுண்டர் திறந்து வைத்து பஜாரில் ஒரு ஆஸ்பத்திரி இயங்கிக் கொண்டிருந்தது. வண்டியை வாசலில் நிறுத்தி விட்டு "சிஸ்டர்..." என்று கத்திக்கொண்டே வரவேற்பில் ஓடினேன். ஸ்ட்ரக்சர் உருட்டிக்கொண்டு இரண்டு பேர் அழுக்கான வெள்ளை யூனிஃபார்மில் ஓடி வந்தார்கள். அவர்கள் இருவரும் ஒரு பந்து போல தூக்கி பவியை ஸ்ட்ரக்சரில் படுக்க வைத்து வேகமாக தள்ளிக்கொண்டு போனார்கள்.

நவீன தொழில்நுட்பங்கள் நிறைந்த அந்த ஆஸ்பத்திரி ரிஷப்ஷனில் இருந்த அரதப் பழசு கடிகாரம் மணி இரண்டு காட்டியது. டூட்டி டாக்டர் ஒரு சின்னப் பையன். அவனிடம் என்ன ஏது என்று விளக்கிவிட்டு போட்டிருந்த ஐம்பது சேரில் துணைக்கு ஆள் இல்லாமல் நான் மட்டும் ஒரு ஓரத்தில் உட்கார்ந்திருந்தேன். இவ்வளவு டென்ஷனிலும் எப்படி தூங்கினேன் எப்போது கண் அசந்தேன் என்று தெரியவில்லை. ஒரு நர்ஸ் வந்து எழுப்பி "ஷி இஸ் ஆல்ரைட் நவ்" என்று சொல்லிவிட்டு போனாள். "எங்க இருக்காங்க.." என்ற என் கேள்விக்கு "ரூம் நம்பர் ஃபோர் நாட் டூ" என்று சொல்லிக்கொண்டே கொட்டாவி விட்டுக்கொண்டே இரவு டூட்டியில் தூங்கச் சென்றாள். ஓடிப் போய் பார்த்தால் பவி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். அசதியில் பக்கத்தில் போட்டிருந்த பெஞ்ச் போல இருக்கும் கட்டிலில் நானும் படுத்துவிட்டேன்.

காலையில் எழுப்பும் ப்ளாக்பெர்ரி அலாரம் துல்லியமாக ஆறு மணிக்கு அடித்து தனது கடமையை செவ்வனே செய்தது. டாய்லெட்டில் ஃப்ளஷ் சத்தம் கேட்டது. வந்து பெட்டில் உட்கார்ந்தவளை மெதுவாக விசாரித்தேன். விசும்பி விசும்பி அழ ஆரம்பித்தாள்.
"ஸாரிங்க..."
நினைத்து சரியாகப் போய்விட்டது. யார் அந்தச் சண்டாளன் என்று நினைத்துக்கொண்டு "என்னாச்சும்மா?" என்றேன்.
"கல்யாணம் ஆன இந்த ரெண்டு மாசத்துல உங்களை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்." என்று கண்ணில் பெருகிய நீரை துடைத்துக்கொண்டு மூக்கை உறிஞ்சினாள். க்ளைமாக்ஸ் நெருங்குவது தெரிந்து இன்னும் படபடப்பாக
"நேத்து என்னாச்சும்மா.."
"இல்ல. எனக்கு சின்ன வயசுலேர்ந்தே அப்பப்ப ஃபிட்ஸ் வரும். நேத்திக்கு டி.வி பார்த்துகிட்டே இருந்தப்ப மாடியில போட்டுருந்த துணியை எடுக்கலைன்னு ஞாபகம் வந்துச்சு. சரின்னு ஓடிப் போய் எடுக்கப் போன டயத்ல பாழாய்ப் போற ஃபிட்ஸ் வந்துருச்சு. கை கால் இழுத்துக்க அப்படியே தொட்டியில மோதி கீழே விழுந்துட்டேன். எங்கே எனக்கு ஃபிட்ஸ் வரும்ன்னு சொன்னா நீங்க கல்யாணம் பண்ணிக்க மாட்டீங்களோன்னு எங்க வீட்ல இந்த விஷயத்தை மறைச்சு கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டாங்க. முதல் நாள்லேர்ந்தே எனக்கு இந்த பயம் இருந்துச்சு. உங்க கிட்ட எப்படி சொல்றதுன்னு தெரியாமத் தான் இவ்ளோ நாள் உம்முன்னு இருந்துட்டேன். ரொம்ப ஸாரிங்க.. " என்று கண் கலங்கியவளை ஆதூரத்துடன் அணைத்துக் கொண்டேன். 
"க்கும்.." என்று பின்னால் இருந்து தொண்டையை செருமிய நர்ஸிடம், ஒன்றுமே நடக்காதது போல  "இங்க ஃபிட்ஸ்க்கு யார் டாக்டர்..." என்று விசாரிக்க என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டே பி.பி அளக்கும் கருவியை எடுத்துக் கொண்டு ஓடினாள். என்னுடைய பி.பி இப்போது நார்மலுக்கு வந்திருந்தது.

பட உதவி: https://www.google.com/profiles/dragonninja1982

-

41 comments:

பொன் மாலை பொழுது said...

எல்லாம் குருநாதரின் அருள். :))
பிட்ஸ் வந்த முட்டாள் பெண் அவள். பிட்ஸ் வந்தால் என்ன ? அதற்கு வைத்தியம் செய்தால் சரியாகிவிடுமே!
எல்லாம் அல்ட்ரா மாடர்ன் ஆக இருக்க வேண்டும் தினசரி வாழ்கை. ஆனால் இந்த "பொம்மனாட்டிகள் " இன்னமும் "பேக்குகள் " என்ன படித்து கிழித்தாலும்.சரிதானே மைனரே!?

மதுரை சரவணன் said...

எதார்த்தம் பலர் இப்படி தான் வியாதியை மறைத்து திருமணம் செய்கின்றனர்... மன போரட்டம் கதையில் அருமையாக வந்துள்ளது.வாழ்த்துக்கள்

raji said...

சூப்பர்.டென்ஷனா கொண்டு போயி ரிலாக்ஸ்டா முடிச்சிருக்கீங்க.
நடை ரொம்ப நல்லாருக்கு.ராஜேஷ்குமார் கதை படிச்ச ஃபீலிங்க் வருது.

எல் கே said...

ஆர்வீஎஸ்


பின்னி பெடல் எடுக்கறேல். அட்டகாசம்

RVS said...

@மதுரை சரவணன்
வாழ்த்துக்கு மிக்க நன்றி சரவணன்..

RVS said...

@raji
ராஜேஷ்குமாரா! பாராட்டுக்கு நன்றி.. ;-)

RVS said...

@எல் கே
நன்றி... பின்னிப் பெடல்... ஹி..ஹி.. ;-))

அப்பாதுரை said...

நன்றாக இருக்கிறது

சக்தி கல்வி மையம் said...

எளிமையான எழுத்து நடை ... தெளிவான முடிவு.... அருமை தோழரே...

raji said...

கக்கு - மாணிக்கம் said...

//இந்த "பொம்மனாட்டிகள் " இன்னமும் "பேக்குகள் " என்ன படித்து கிழித்தாலும்.சரிதானே மைனரே!? //

//RVS said...

ரொம்ப சரி.. நன்றி மாணிக்கம். ;-))//
இதை நான் மிகக் கடுமையாக ஆட்சேபிக்கிறேன்
மிஸ்டர் ஆர் வி எஸ் & மிஸ்டர் கக்கு-மாணிக்கம் சார்.

நல்ல பதிவுகளை தந்து கொண்டிருக்கும் தங்களைப் போன்ற
இரு பதிவர்கள் இம்மாதிரி எண்ணுவது மிக வருத்தத்திற்குரிய விஷயமல்லவா?
கதையில் வரும் நாயகி பேக்கு என கூறி இருந்தால் தனிப்பட்ட பாத்திரத்தைப்
பற்றிய கருத்து என எடுத்துக் கொள்ளலாம்.அல்லது உண்மையிலேயே
பொம்மனாட்டிகள் பேக்கு என்ற கருத்து இருந்தாலும் அது தங்கள் இருவரின் தனிப்பட்ட கருத்தென கொள்ளலாம்
ஆனால் அந்த கருத்துக்கு பதிவிற்கு வந்து விட்ட பின் அப்படி எடுத்துக் கொள்ள முடியாது.ஒட்டு மொத்த பெண்களையும் காயப்படுத்தும் சொற்கள் அல்லவா இது? இந்த பதிவில் இதனை நான் எதிர்பார்க்கவில்லை மிஸ்டர் ஆர் வி எஸ் சார்.
இது அன்பால் உலகை உய்வித்த அன்னை தெரேசா முதல்,அறிவால் பலருக்கு குழந்தை பாக்கியத்தை
ஏற்படுத்தித் தந்து கொண்டிருக்கும் பெண் மகப்பேறு மருத்துவர்கள் வரை அனைவரையும் உள்ளடக்கிய வார்த்தை.

RVS said...

@அப்பாதுரை
நன்றி அப்பாஜி! ;-)

RVS said...

@!* வேடந்தாங்கல் - கருன் *!
பாராட்டுக்கு நன்றி கருன் ;-)

RVS said...

@raji
மன்னிக்கவும்...மன்னிக்கவும்..மன்னிக்கவும்... தவறாக புரிந்து கொண்டீர்கள்...
மேலும் இந்தக் கதையில் அந்தப் பெண் பயந்தாள் என்றுதான் கூறியிருக்கிறேன்.. வேறு தவறாக எதுவும் குறிப்பிடவில்லை...
இது யாரையாவது புண் படுத்தியிருக்குமேயானால் சாரி!
நான் கூறியது கதையின் நாயகியைத் தான்... என்னுடைய பழைய கதைகளை படித்திருந்தால் தெரியும்.. ஒரு போதும் நான் அதுபோல் நினைப்பதில்லை.. நீங்கள் என்னுடைய பாட்டி பற்றிய பதிவு மற்றும் அதுபோன்ற பதிவுகளைப் படித்திருப்பீர்கள்..
மாணிக்கமும் அந்த நோக்கில் கூறியிருக்க மாட்டார் என்பது எனது வலுவான கருத்து... ;-)
நான் போட்ட அந்தக் பின்னூட்டத்தை நீக்கி விட்டேன்.. ;-))

இராஜராஜேஸ்வரி said...

திக்..திக்.என்று ஆரம்பித்து நல்ல முடிவு.

புவனேஸ்வரி ராமநாதன் said...

நீங்கள் பதிவுலக ''ஆல் ரௌண்டர்'' என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறீர்கள். வாழ்த்துக்கள் RVS

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

வழக்கம்போல விரிந்து பரந்த நெடுஞ்சாலையில் ஹார்ன் அடிக்கத் தேவையில்லாத ஒரு ட்ரைவ் போல சுகமான ஓட்டம் ஆர்விஎஸ்.

அங்கங்கே உங்கள் ப்ராண்டுகளை அள்ளித் தெளித்தபடி கதையை நகர்த்துகிறீர்கள்.(வாத்யார் உபயம்?)

ஆச்சர்யப்படுத்தும் உவமைகள். அராபியக் குதிரை போலத் தறிகெட்டுப் பறக்கிறது மனைவிக்கு என்ன ஆயிருக்கலாம் என்ற கற்பனை.

அடுத்து மாணிக்கமோ நீங்களோ சொன்ன கருத்துக்களில் ஆட்சேபத்துக் குரியதாக எதுவும் இருப்பதாகத் தோன்றவில்லை.ராஜி கொஞ்சம் அவசரப்பட்டுவிட்டார். அவ்வளவுதான்.

எழுதுபவர்களுக்கென்று ஒரு பாடி லாங்வேஜ் இருக்கிறது. இவர்கள் எப்படி யோசிப்பார்கள் என்று அந்த ஒரு சோற்றிலிருந்து யூகித்துவிடலாம்.

உங்களுடையதும் மாணிக்கத்துடையதும் அப்படிப் பட்ட கண்ணியமான எழுத்துக்கள் தான்.

எல்லாவற்றையும் லைட்டாக எடுத்துக்கொள்ளுங்கள் ராஜி.

ADHI VENKAT said...

தேடித் தேடி ஒருவழியாக (காரணத்தையும்) கண்டுபிடித்து விட்டார். த்ரில்லாங்கா இருந்தது.

RVS said...

@இராஜராஜேஸ்வரி
ரசித்ததற்கு நன்றிங்க...;-)

RVS said...

@புவனேஸ்வரி ராமநாதன்
நன்றி... மீண்டும் மீண்டும் எனக்கு தெம்பூட்டுவதற்கு.. ;-))

RVS said...

@சுந்தர்ஜி
எனக்கே திடீர்னு ஒரு ப்ளோல வந்தது... ஒரு மணி நேரத்திற்குள் எழுதிய கதை இது..

பாராட்டுக்கு நன்றி ஜி!
வாத்யார் சரணம். ;-)

ராஜி ஏன் தவறாக எடுத்துக் கொண்டார்கள் என்று தெரியவில்லை ஜி! எவ்விதத்திலும் அசிங்கப்படுத்தியதாக தெரியவில்லை. கக்கு - மாணிக்கமும் அப்படித்தான். அவர் ரொம்ப ஜோவியலாக சொன்னார்.
புண்படுத்தியதாக அவர்கள் நினைத்ததால் என்னுடைய கமெண்ட்டை நீக்கி விட்டேன். மாணிக்கம் மன்னிப்பார் என்ற நம்பிக்கையில்....
ஓ.கே. லீவ் இட். சில நேரங்களில் சில மனிதர்கள்.. ;-))))

RVS said...

@கோவை2தில்லி
ரசித்ததற்கு நன்றிங்க சகோ. ;-))

இளங்கோ said...

நல்லா இருக்குங்க..

raji said...

@ஆர் வி எஸ், கக்கு-மாணிக்கம் & சுந்தர் ஜி

பொம்மாட்டிகள் இன்னமும் பேக்குகள் என்ற பொதுப்படையான வார்த்தையைக் குறித்தே
நான் பின்னூட்டம் அளித்தேன்.மற்றபடி தங்கள் பதிவில் குறை இருப்பதாகவோ அல்லது கக்கு-மாணிக்கம் சாரைக் குறை கூறவோ எண்ணவில்லை.அவரும் ஜோவியலாகத்தன் இதை கூறியிருப்பார் என்றே நானும் எண்ணுகிறேன்.இருப்பினும் பலர் படிக்கும் தங்கள் பதிவில் பெண்களைக் குறித்து இம்மாதிரியான வார்த்தகள் தகுந்ததல்ல
என்ற எனது கருத்தையே கூறினேன்.
நான் கூறியதில் தவறிருப்பின் ஆர் வி எஸ் சார், கக்கு மாணிக்கம் சார் மற்றும் சுந்தர் ஜி மூவரும் என்னை
மன்னிக்க வேண்டுகிறேன்.

இது சுந்தர் ஜி அவர்களுக்கு:

ஒரு தோழமை அடிப்படையில்தான் அதுவும் மிஸ்டர் ஆர் வி எஸ் புரிந்து கொள்வார் என்ற நம்பிக்கையில்தான்
நான் அந்த பின்னூட்டம் அளித்தேன்,மற்றபடி லைட்டாக எடுத்துக் கொள்ளக் கூடாது
என்பது எனது நோக்கமல்ல(இது ஆர் வி எஸ் சாரின் போன பதிவில் நான் தங்களுக்கு அளித்த பதிலைப் பார்த்தால் உங்களுக்கு புரியுமென நினைக்கிறேன்

raji said...

இருப்பினும் ஒரு பெண் தோழியிடம் சகஜமாகக் கூறக் கூடிய பின்னூட்டத்தை
ஒரு ஆண் தோழரது பதிவில் கூறுவதில் பிரச்சனை இருப்பதை நான் இன்று உணர்கிறேன்

வெங்கட் நாகராஜ் said...

உங்களது இப்புனைவு நன்றாக இருந்தது ஆர்.வி.எஸ். உவமைகளும், கதையின் ஓட்டமும் நன்றாக அமைந்திருந்தது.

RVS said...

@இளங்கோ
என்னப்பா டெம்ப்ளேட் கமெண்ட்டு... நன்றி... ;-))

RVS said...

@raji
ப்ளீஸ் விட்டுடலாமே! ;-)

RVS said...

@raji
தோழமைக்கு நன்றி! பேதம் பார்க்காமல் சகஜமாக இங்கேயும் நீங்கள் உங்கள் கருத்துக்களை பகிரலாம். நன்றி. ;-)))

RVS said...

@வெங்கட் நாகராஜ்
பாராட்டுக்கு நன்றி தலைநகரத் தல. ;-))

Anonymous said...

ஒவ்வொரு இடத்தை பற்றிய விவரிப்பும் மிக அழகு அண்ணா! ம் ம்.. ஜமாய்ங்க! :)

RVS said...

@Balaji saravana
பாராட்டுக்கு நன்றி தம்பி!! ஏன் ரொம்ப நாளா எழுதலை? ;-))

ரிஷபன் said...

விறுவிறுப்பாய் போனது.. கடைசியில் செண்டிமெண்டல் டச்!
உண்மையில் லவ் என்று ஒன்று வந்து விட்டால் உடல் நலக் குறைகள் எல்லாம் பின்னுக்குத் தள்ளி அவன்/அவளுக்காக தவிப்பது மனித இயல்பு. உங்கள் எழுத்து அதை கட்டியம் கூறியது

ஸ்ரீராம். said...

ஃபிட்சை வச்சி கதை ஃபிக்ஸ் பண்ணிட்டீங்க..நல்ல ஃப்ளோ...

RVS said...

@ரிஷபன்
பாராட்டுக்கு மிக்க நன்றி சார்! பல விதங்களில் எழுதுவதற்கு முயலுகிறேன். ;-)))

RVS said...

@ஸ்ரீராம்.
தெம்பூட்டும் பாராட்டுக்கு நன்றி ஸ்ரீராம்!

சாந்தி மாரியப்பன் said...

அசத்தலான கதை.. அற்புதமான முடிவு..

தக்குடு said...

யதார்த்தமான சம்பவங்களின் அழகான கோர்வை!! அருமை மைனர் அண்ணா!!..:)

சில சமயம் விளையாட்டான வார்த்தைகள் விபரீதமாகிறது!!..:( (But i am also with raji akka only)

Madhavan Srinivasagopalan said...

கதையின் நாயகன் நினைத்ததுபோல எந்த குற்றமும் நடக்க வில்லை (ஆர்.வீ. எஸ் சாந்தமான ஆளு) என்று ஊகித்தாலும்.. பிட்ஸ்.. என்று யோசிப்பதற்கு.. ம்ம்ம்.. சான்சே இல்லை..
நடைகளும், உவமைகளும் செம..

//கொடியில் காய்ந்து கொண்டிருந்த என் ஜட்டி பக்கத்தில் உரிமையாக தொங்கிய அவளது உள்ளாடைகள் //

Cudn't stop myself from ROFL

RVS said...

@அமைதிச்சாரல்
பாராட்டுக்கு நன்றிங்க சகோ. ;-))

RVS said...

@தக்குடு
நன்றி தக்ஸ். ;-)
விஷமம் ஏதும் இல்லாமல் எழுதிய கமென்ட் அது. நான் கூட அவர்கள் கட்சிதான். ;-))

RVS said...

@Madhavan Srinivasagopalan
ரசித்ததற்கு நன்றி மாதவா! ;-)))

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails