Friday, March 25, 2011

ஒரு துணை நடிகையின் கதை - IV

இந்த தொடருக்குள் முதன் முதலாக இப்போதுதான் நுழைந்தீர்கள் என்றால் நீங்கள் செய்ய வேண்டிய அத்தியாவசிய மூன்று காரியங்கள் புல்லெட் பாய்ண்ட்டாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


மேற்கொண்டு விசாரணைக்கு அந்த இரவு நேரத்திலும் பிசியாக இருந்த K-3 காவல் நிலையத்திற்குள் நுழைவோம். குற்றங்கள் குறையவில்லை.


************************** க்ளைமாக்ஸ் ரீல்**********************

"ஏட்டு எட்டு டீ வாங்கியாரச் சொல்லுங்க..." என்ற விருந்து உபசாரத்தோடு பஞ்சாயத்தை ஆரம்பித்தார் பாண்டித்துரை. ஐம்பதை எட்டித் தொடும் வயது. கட்டு மஸ்தான தேகம் அவரின் தினசரி உடற்பயிற்சிக்கு கட்டியம் கூறியது. சராசரி போலிஸ்காரர்களிடம் இருந்து அவருடைய அவயங்களும் நாகரிகமும் மொட்டத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போன்று இருந்தது. மாதம் இருமுறை வளர வளர ஒட்ட வெட்டும் அக்மார்க் போலீஸ் கிராப். ஓரத்தில் எலுமிச்சம்பழம் குத்தச் சொல்லும் நறு நெய் பூசி வளர்த்த மீசை. பளபள ஷூ. கருப்பான வலது கரத்திற்கு சிறுசிறு முடி போட்ட சிகப்பு கயிறு கட்டியிருந்தார். ஆறடிக்கு ஒரு அங்குலம் குறைவாக இருப்பார். எட்டி உதைத்தால் எதிராளி பத்தடி பறந்து போய் விழுவான். அவர் ரத்தத்தில் போலீஸ் உத்தியோகம் ஊறியிருந்தது. எதிர் வரும் சுதந்திர தின விழாவில் தமிழக முதல்வர் கையால் நெஞ்சில் மெடல் குத்திக்கொள்ள பரிந்துரைக்கப்பட்ட சர்வ தகுதியும்  வல்லமையும் படைத்த உத்தமமான போலீஸ் ஆபீசர்.

ரைட்டர் தாண்டி காந்தி படத்திற்கு கீழே சோனாவிற்கு ஆசனம் கொடுத்து அமர வைத்திருந்ததில் அவரின் கண்ணியம் தெரிந்தது. அரசாங்க உதவி பெரும் ஒரு கால் இழந்த முன்னாள் இராணுவ வீரருக்கு சொந்தமான பங்க் கடையில் இருந்து டீ வாங்கி வரும்போது நிலா தெரியாமல் மூடியிருந்த வானம் லேசாக தூற ஆரம்பித்தது. ராம் மதியத்திலிருந்து ஓய்வொழிச்சல் இல்லாமல் அலைந்ததில் கலைந்த தலையும் பசியில் ஓசையிடும் வயிறோடும் கால் ஆடும் மர பெஞ்சின் ஒரு ஓரத்தில் அடுத்து என்ன நிகழுமோ என்ற பயத்தில் உட்கார்ந்திருந்தான்.

"என்ன மளையா" என்றார் அதிசயத்துடன் பாண்டித்துரை.
ஆவி பறக்க சூடான டீ எல்லோர் கையிலும் களைப்பு தீர்ப்பதற்கு கொடுக்கப்பட்டவுடன் பாண்டி ஆட ஆரம்பித்தார்.
"பாடி இப்ப எங்க இருக்கு?"
கேள்வியை வாங்கிய எதிரேயிருந்த தொப்பி அணியாத கான்ஸ்டபிள்
"ராயபேட்டா மார்ச்சுவரில.."
"டாக்டர் ரிப்போர்ட் கொடுத்துட்டாங்களா?"
"கொடுத்துடாங்கையா.."
"என்னவாம்?"
"கயித்தால களுத்த இறுக்கி கொன்னுருக்காங்க.."
"ம்.."
"சம்பவம் எப்ப நடந்துச்சாம்"
"ஏழரைலேர்ந்து எட்டுக்குள்ள..."
"ம்..."
நான்கு மாநில ரெஜிஸ்டிரேஷன் எண்களுடன்  நம்பர் ப்ளேட் தயாரித்து கடத்தலுக்கு பயன்பட்ட சீஸ் பண்ணிய, வேப்பமரவாசியான அண்டங்காக்கா எச்சமிட்ட சேப்பு குவாலிஸ் இப்போது அழுக்கு தீர மழையில் குளித்துக்கொண்டிருந்தது. வெளியே மழை நன்றாக அடித்துப் பெய்து கொண்டிருந்தது. இன்னமும் அச்சம் தீராமல் பேய் முழி முழித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தான் ராம். ஏதோ போதை கொஞ்சம் தெளிந்தார்போல விழிகளை உருட்டி இரண்டு பக்கமும் பார்த்தார் 'ராஜா-ராணி' ராகவன். கண்ணுக்கு எதிரே மங்கிய மசமசப்பான உருவத்திலிருந்து சரியாக ஜூம் செய்யப்பட கேமெராவின் வியூபைன்டரில் வந்து விழுந்தது போல சோனா கண்ணுக்கு தெரிந்தாள். கொஞ்ச நஞ்சம் எறும்பு கடிப்பது போல இருந்த போதை கூட இப்போ டாடா பை பை சொல்லிக் கொண்டு ஓடிப்  போய்விட்டது.

"என்னங்கப்பு.. தெரிஞ்சுதா... கடேசியா அவங்க போன்லேர்ந்து இந்தம்மா போனுக்குதான் கால் போயிருக்கு... என்னாச்சு சொல்லு..." என்று அதட்டினார்.
"இல்ல சார்! அவங்க எனக்கு ரொம்ப நாள் சிநேகிதம். அப்பப்ப பேசுவாங்க.." என்று வினயமாக பதிலளித்தாள் சோனா.
"உனக்கும் கொலையானாங்களே அவங்களுக்கு என்ன தொடர்பு?" கண்ணை மூடி நிதானமாக கேட்டார் பாண்டித் துரை.

"சினிமாவுக்கு ரெண்டு பெரும் நாயகியா நடிக்கணும்ன்னு நல்லா சம்பாதிக்கனும்ன்னு வந்தோம். பாலராஜா இயக்குனரோட படத்துல ரெண்டு பேருக்கும் ஒரு வேஷம் கிடைச்சுது. ஏதோ அன்னிக்கு வறுமைக்கு வயித்த கழுவ ஒரு வேலை மாதிரியும் கிடைச்சுது. அப்புறம் இன்னும் ரெண்டு படத்துக்கு வனஜாவை சில பேர்ட்ட சிபாரிசு பண்ணி ராகவன் சேர்த்துவிட்டார். அப்புறம் கொஞ்ச நாள்ல அவரே ஆசை நாயகியா நிரந்தரமா ஒரு வீடு வாங்கிக் கொடுத்து வச்சுக்கிட்டாறு."
 "அப்புறம்..."
"வேற ஒன்னும் இல்ல சார்!"
"சாகறத்துக்கு முன்னால போன்ல என்ன சொன்னாக..."
"இல்ல... இப்பெல்லாம் ராகவன் சார் கண்டுக்கவே மாட்டேங்கறாரு.. தலைகால் தெரியாம நிதானம் இல்லாம குடிச்சா இந்த அட்ரெஸ் தெரிஞ்சவங்க யாராவது கொண்டு வந்து விடறதோட சரி.. சில சமயம் ஒரு டீ..காப்பி போட்டு சாப்பிட்ரத்துக்கு கூட வீட்ல காசு பேர மாட்டேங்குது .."ன்னு சொல்லி அழுதாங்க சார்!"
"வேற ஒன்னும் இல்லையா..."
"இல்ல சார்!"
"ரெண்டு நாளைக்கு முன்னாடி ராத்திரி என்ன பேசுனாங்க" என்று ஏர்டெல் ஆசாமிகள் கொடுத்த எண்கள், கூப்பிட்ட தேதி, கிழமை, நாள், நட்சத்திரம் என்று முழு ஜாதகம் இருக்கும் லிஸ்டை தோளில் அங்கவஸ்திரம் போல போட்டுக்கொண்டு குடைய ஆரம்பித்தார் பாண்டித்துரை. ராகவன் தாகமே இல்லாமல் ஒரு தம்ப்ளர் தண்ணீர் கேட்டு வாங்கி குடித்தார். வெளியே மழை இன்னும் கொஞ்சம் வலுத்தது. இங்கு புலன் விசாரணை சூடு பிடித்தது.
"ராகவன் சார் முதல் சம்சாரம் அவர் கிட்டயிருந்து எல்லாத்தையும் பிடிங்கிகிச்சு. இருந்தப்பவே அரையணா ஒருஅனா கொடுப்பாரு. இப்ப ரொம்ப சுத்தம்.. "ன்னு சொல்லிட்டு வனஜா அழுதா. நான் அவளுக்கு சமாதானம் சொன்னேன். சாரைப் பார்த்து நான் உனக்காக கேட்கறேன். நீ கவலையை விடுன்னு சொல்லி தைரியம் சொன்னேன்" என்று சரளமாக பேசினாள்.
ஓரத்தில் மௌனமாக உட்கார்ந்து எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த ராம்
"சார்! அவங்களை ஏன் சார் குடையறீங்க. யார் கொன்னாங்களோ அவங்களை போய் புடிங்க சார். சும்மா எங்களை கொண்டு வந்து பதினொரு மணிக்கு மேல இங்க உக்கார வச்சுகிட்டு. பாருங்க ராகவன் சார் எவ்ளோ வருத்தமா உட்கார்ந்திருக்காருன்னு. ராகவன் சாரை பத்தி உங்களுக்கு தெரியாது. அவரால சி.எம் கிட்ட கூட இப்ப நினச்சாலும் பேச முடியும்" என்று உதார் விட்டு எகிற ஆரம்பித்தான்.
லத்தியை சுழற்றி வேகமாக மேசையில் "டமார்..." என்று அடித்து 
"டேய்... இப்ப நீயி வாயப் பொத்திகிட்டு இருக்கியா..." என்று எழுந்து ருத்திரதாண்டவம் ஆடினார் பாண்டித்துரை. அவர் மீசை துடித்தது. நரம்பு நர்த்தனம் ஆடியது.

ஸ்டேஷன் கப்சிப் ஆனது. பா.துரையை அலட்சியபடுத்தி மழை மட்டும் விடாமல் தொணதொணவென்று பெய்தது கொண்டிருந்தது. சோனா மழைக்காக நடுங்கினாளா அல்லது பாண்டித்துரையின் ஆர்ப்பாட்ட கூச்சலுக்கா என்று தெரியவில்லை, கால் இன்னமும் தனியாக தடதடத்துக் கொண்டிருந்தது.
"இன்னிக்கி சாயந்திரம் எங்க இருந்தே" என்றார் சோனாவிடம்.
"ஏ.வி.எம்ல பக்தி படம் சூட்டிங். வேப்பிலை பாவாடை கட்டிக்கிட்டு அஞ்சாவது ப்ளோர்ல உட்கார்ந்திருந்தேன்."
"யார்ட்ட பொய் சொல்ற!"
"சத்தியமா சார்"
"இன்னொரு முறை சொன்னே முன் பல்லு எல்லாம் பேர்ந்துடும்..." என்று உருட்டினார் பாண்டித்துரை.
"சோமு இங்க வாங்க..." என்று அழைக்க மழைக்கு போலிஸ் ஸ்டேஷன் பக்கம் ஒதுங்கியவன் போல கே.ஆர் பிலிம்ஸ் தயாரிப்பு மேற்பார்வை உள்ளே வந்தான். சோனா அதிர்ந்தாள்.
"சொல்லுங்க...இவங்க இன்னிக்கி அங்க வந்தாங்களா?"
"இல்ல சார்! இவங்களை கூப்பிட்டப்ப ஆட்டோல எங்கயோ போய்கிட்டு இருக்கிற சத்தம் கேட்டது. வரலையான்னு கேட்டப்ப.. இன்னிக்கி ஒரு நாள் அட்ஜஸ்ட் பண்ணிக்கன்னேன்னு கெஞ்சிச்சு... சரின்னு உட்டுட்டேன்..." என்று கைகட்டி சொன்னான்.
"இப்ப சொல்லு.. எங்க போயிருந்தே.. அடையார் தானே..."
"அபாண்டமா பேசாதீங்க சார்! உங்க வாய் புளுத்து போய்டும்.."
"என்னடி கண்ணகி மாதிரி சீரற.. மெட்ராச எரிச்சுடுவியோ.. " என்று கேட்டுக்கொண்டே நேராக ராகவனிடம் போய் கொத்தாக சட்டையை பற்றி நடு ஸ்டேஷனுக்கு தரதரவென்று இழுத்து வந்தார். இன்ஸ்பெக்டரின் எதிர்பாராத இந்த செயலால் தடுமாறினார் ராகவன்.
"சொல்லுங்க.. உங்களுக்கும் சோனாவுக்கும் என்ன தொடர்பு..."
போதை முழுவதும் போய் உடம்பெங்கும் வேர்க்க விறுவிறுக்க...
"எனக்கு ஒன்னும் தெரியாது சார். நான் அப்பாவி."
"அப்புறம் எதுக்கு இந்த பாவிக்கு அடிக்கடி சோனா போன் பண்ணறா"
"அது ஏதாவது பட சான்ஸ் இருக்கான்னு கேட்டு பண்ணுவா சார்"
"ஒரு நாளைக்கு பத்து தடவையா.. அது சரி அப்படியே இருந்தாலும் நீயே இப்ப எதுவும் படம் எடுக்கலை.. எவ்ளோ பேர்ட்ட டெய்லி கேட்டு படம் வங்கிக் கொடுப்பே.. ராத்திரி பன்னெண்டு மணிக்கு போன் பண்ணினா கூடவா.. பன்னெண்டு மணிக்கு படம் வாங்கி கொடுப்பியா இல்ல படுக்கை வாங்கி கொடுப்பியா...ம். சொல்லு..." என்று அந்த அங்கவஸ்திரத்தில் ஒரு பகுதியை பார்த்துக் கொண்டே மிரட்டினார் பா.துரை.
விசாரணை போன திக்கில் திக்கித்துப் போனான் ராம். அவனுக்கு ஆகாயம் கீழேயும் மேலேயும் இடம் மாறுவது போல இருந்தது. காதலி இன்னொருவனுக்கு கள்ளக் காதலி ஆனாளா என்று மனது உடைந்து இதயம் நொறுங்கினான்.
"எங்கே உன் கையை நீட்டு....." என்று அவளுக்கு கட்டளையிட்டார்.
இரு கையின் ஆயுள் ரேகை பாயும் இடங்களில் தடிமனாக சிகப்பாக ரத்தம் கட்டியிருந்தது. ராம் மூர்ச்சையானான். ராகவன் எல்லாம் முடிந்தது என்று எண்ணிக்கொண்டு போலீஸ் ஸ்டேஷன் நடு கூடத்தில் குத்த வைத்து கீழே உட்கார்ந்தார்.
"இனி மறைச்சு பிரயோஜனம் இல்லை.. சொல்லு..."
"எனக்கு வாழ்க்கையில பணம் சம்பாரிக்கறது ஒன்னு தான் குறி. என் அழகால இந்த உலகத்தை வாங்கிடலாம்ன்னு நினச்சேன். ஒன்னும் ஆகலை. என்னோட குடும்பத்தை பிரிந்தேன். காதல், கத்திரிக்கா கொள்கைன்னு இந்த ஆள் மாதிரி என்னால இருக்க முடியலை. பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லைன்னு படிச்சுருக்கேன். ஒன்னும் பெருசா கோபுரத்துக்கு போக முடியலை. அப்பத்தான் இருக்க ஒரு வீடாவது நமக்கு வேணாமான்னு, ராகவன் சார் கிட்ட கொஞ்சம் நெருங்கி பழக ஆரமிச்சேன். எப்பப் பார்த்தாலும் அவர்ட்ட பணம் பணம்ன்னு நச்சரிச்சுக்கிட்டு இருந்த வனஜா கிட்டேயிருந்து அவருக்கும் விடுதலை தேவைப்பட்டது. அவளை கழுத்தை நெரித்து கொன்னுட்டு தற்கொலைன்னு ப்ரூவ் பண்றதுக்கு பாடிய எரிய விடறத்துக்காக அடுப்படியில கேசை திறந்து ரெடியா வச்சுருந்தேன். கட்டில்ல உட்கார்ந்து பேசிகிட்டே இருந்தப்ப குளிக்க கிளம்பினா." கொஞ்சம் மூச்சு வாங்கிக்கொண்டாள் சோனா. பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்தான் ராம்.

"அப்படியே பெட்ரூம் ஓரத்துல கட்டியிருந்த கொடி கயிறை எடுத்துகிட்டு பின்னாலையே போனேன். மொதெல்ல திமிறினா. நல்லா சுருக்கு போட்டு அழுத்திக் கொன்னேன். பாடிய அடுப்படிக்கு கொண்டு போறதுக்கு முன்னாடி கேஸ் எவ்ளோ பரவியிருக்குன்னு எட்டிப் பார்க்கறதுக்கு போனேன். அப்ப மாடிப் படியில யாரோ ஏறற சத்தம் கேட்டது. கதவை சார்த்தாம வந்துட்டோமேன்னு பயப்பட்டேன். இது உள்ள நுழைஞ்சு எட்டி பார்த்து பயந்து நின்னுக்கிட்டு இருந்தப்ப பின்னால நைசா  நழுவி ரோடுக்கு ஓடி ஆட்டோ ஏறி ரூமுக்கு போய் தலைவலிக்குதுன்னு படுத்துக்கிட்டேன். நீங்க போன் பண்ணி இந்தம்மாவை அனுப்பி என்னை இங்க கூட்டிகிட்டு வந்துட்டீங்க." என்று முழுசாக எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் ஒப்பித்தாள்.
"நீங்க ஏன் காசு கொடுத்து ராமை வனஜா வீட்டுக்கு அனுப்புனீங்க?" என்ற பா.துரை கேள்விக்கு
"அடிப்படியில தீ பிடிச்சு எரிஞ்சு வனஜா செத்துட்டாங்கறதை கன்ஃபர்ம் பண்ணிக்கவும், என் மேலே யாருக்கும் சந்தேகம் வராம இருக்கனும்ன்னும் தான் அப்படி செஞ்சேன் .." என்று குற்றத்தை ஒப்புக்கொண்டார் ராகவன்.

காதலும், காதலியையும் தொலைத்து விட்ட சோகத்தில் ராம் பைத்தியம் பிடித்தது போல இருந்தான். ராகவனையும், சோனாவையும் அற்ப மானிட பதர்களாக பார்த்தான்.
ராமை பார்த்து "நீங்க போகலாம்" என்றார் பாண்டித்துரை.
அவருக்கு நன்றி சொல்லிவிட்டு வெளியே வந்தான் ராம். மழை விட்டிருந்தது. விடியற்காலை சந்திரன் குளிர் பிரகாசம் கொடுத்துக்கொண்டிருந்தான். வானத்தில் நட்சத்திரங்கள் இவனை பார்த்து சிரித்தன. ஆவின் பால் வேன் வலது பக்க மஞ்சள் நிற இண்டிகேட்டர் போட்டு திரும்பியது. தெருநாய் ஒன்று குப்பைத் தொட்டியை முகர்ந்து பார்த்துவிட்டு ஓடியது. நாளைக்கு நல்ல பொழுதாக விடியும் என்ற நம்பிக்கையில் அந்தத் தெருவின் கடைசி தெருவிளக்கின் கீழே நிதானமாக நடந்து சென்றுகொண்டிருந்தான் ராம்.

(இந்தப் படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள், குணசித்திர வேடங்கள், உதவி இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என்று கருப்பு பின்புலத்தில் வெள்ளை எழுத்துக்கள் ஓடிக்கொண்டிருக்கிறது)



பட உதவி: zazzle.com.au

பின் குறிப்பு: இதுவரை பொறுமையாக படித்த அனைத்து நல்ல இதயங்களுக்கும் நன்றி. உங்கள் பின்னூட்டத்தில் ஆஸ்கர் பெறுவேன் நான். நன்றி.

-

30 comments:

bandhu said...

பிடியுங்கள், ஆஸ்கர்!

பத்மநாபன் said...

நேரம் இல்லாத காரணத்தால் ...கடைசிப் பக்கத்திற்கு தாவுவோம் அல்லவா ..அது போல் கடைசி பதிவு மட்டும் படிக்கலாம் என படிக்க ஆரம்பித்தேன்..நடையும் எழுத்தும் டிடைல்ஸ் கொடுத்த விதமும் தானாக முன் பகுதிகளுக்கு இழுத்து சென்று படிக்க வைத்துவிட்டது...

கொலையுதிர்காலத்தின் குட்டித்தம்பி என்று தாரளமாக சொல்லலாம்..

Anonymous said...

// "என்னடி கண்ணகி மாதிரி சீரற.. மெட்ராச எரிச்சுடுவியோ.. "//

அடிக்கிற அக்னி வெயில்ல ஏற்கனவே மெட்ராஸ் எரியிறது பத்தாதா..??

Anonymous said...

வாவ். ரொம்ப நல்ல எழுதறீங்க.

நாலு நாளா பின்னோட்டம் தரலாமுன்னு யோசனை. இப்பதான் முடிந்தது (கதையும்தான்).

ரகு.

பி.கு - Flight 172 முழுசா பார்த்தேன். 'அய்யா.. அம்மா.. அம்மம்மா' தான் கிடைக்கலை.

அப்பாதுரை said...

சட்னு முடிச்சிட்டீங்களோ?

இது டாப்பு.
>>>மனது உடைந்து இதயம் நொறுங்கினான்

எல் கே said...

நல்ல நடை ஆர்வீஎஸ். இந்த மாதிரி குட்டிக் கதை எல்லாம் எழுதறத விட்டுட்டு கொஞ்சம் பெருசா எழுதுங்கோ

RVS said...

@bandhu
நன்றி முதல் வருகைக்கும் ஆஸ்காருக்கும். அடிக்கடி வாங்க... ;-)

RVS said...

@பத்மநாபன்
புரிந்து கொண்டேன் பத்துஜி!
பாராட்டுக்கு நன்றி. ;-))

RVS said...

@! சிவகுமார் !
நன்றிங்க... தொடர்ந்து வாசித்து பின்னூட்டம் இட்டமைக்கு. தெம்பாக இருந்தது. ;-))

Madhavan Srinivasagopalan said...

Due to busy schedule, I am yet to read from Part - I

I will read all the parts leisurely & comment.. later..

RVS said...

@ரகு.
பாராட்டுக்கு ரொம்ப நன்றி சார்!
அய்யா அம்மா அம்மம்மா.. தேடித் பார்க்கறேன்.. கிடைச்சா போடறேன்.. ;-))

RVS said...

@அப்பாதுரை
ரொம்ப சரி அப்பாஜி! சட்டுன்னு முடிச்சுட்டேன். ஒரு நாவல் எழுதற அளவிற்கு சரக்கு இருந்தது. மக்களை இதுக்கு மேல வேதனைப் படுத்த வேண்டாம்ன்னு.....
ரசித்ததற்கு நன்றி ஜி! ;-)

RVS said...

@எல் கே
எழுதறேன் அண்ணே! இப்பவே அடிக்கடி வர பாதி பேர் சொல்லிக்காம கொள்ளாம ஓடிட்டாங்க..
ஆனாலும் நாம வுடுவோமா... தல நீங்க சொல்லிட்டீங்க... முயற்சி பண்றேன்.. நன்றி.. ;-))

Chitra said...

கொஞ்சம் பத்தி பத்தியாக பிரித்து இடம் விட்டு எழுதுங்க... மற்றபடி, கதையும், உங்கள் எழுத்து நடையும் விறுவிறுப்பாக இருந்துச்சு...உங்களுக்குள் இருக்கும் கதாசிரியரை அடையாளம் காட்டி இருக்கிறது. பாராட்டுக்கள்!

ஸ்ரீராம். said...

அருமை. அருமையாக, எளிமையாக எழுதி இருக்கிறீர்கள்.

Uma said...

ரொம்ப சுவாரசியமாக கொண்டு போனீர்கள். தொடர்ந்து எழுதுங்கள். பாராட்டுக்கள்.

இராஜராஜேஸ்வரி said...

விறு விறுப்பான தொய்வில்லாத கதைக்குப் பாராட்டுக்கள்.

raji said...

exellent writing.continue dis.
love story and thrilling story over.
now y dont u write a family story
(i mean a thodarkadhai)

ரிஷபன் said...

உங்களுக்கு சுலபமாய் த்ரில்லர் கைவருகிறது.. பாராட்டுகள்..

Kri said...

If I were to tell you the truth, the narration and the micro details were awesome but story went along the known lines. But I won't blame you, he wrote everything ages ago!

HE = Sujatha!

தக்குடு said...

RVS அண்ணா, கொஞ்சம் டைட் ஆயிடுத்து, 2-3 ஒட்டகத்தை காணும், அதை வேற தேடி புடிக்கனும். நிதானமா படிக்கறேன்.

இப்படிக்கு,
சொல்லிக்காம காணாம போனவர்களில் ஒருவன்

RVS said...

@Madhavan Srinivasagopalan
O.K..OK.... ;-)

RVS said...

@Chitra
தொடர்ந்து எழுதும் போது ஒரு ஃப்ளோல சில சமயங்கள்ல பத்தி பிரிக்காம விட்டுடறேன்.. சரி பண்ணிப்போம்... ஏற்கனவே பத்துஜியும் சொல்லியிருக்கார்...
பாராட்டுக்கு நன்றி.. ;-)

RVS said...

@ஸ்ரீராம்.
தொடர்ந்து வாசித்ததற்கு மிக்க நன்றி ஸ்ரீராம். ;-)

RVS said...

@Uma
பாராட்டுக்கும் தொடர் வாசிப்பிற்கும் நன்றிங்க உமா.. ;-))

RVS said...

@இராஜராஜேஸ்வரி
Thank you! Thank You!! ;-))

RVS said...

@raji
அந்த பக்கம் நமக்கு வருமான்னு தெரியலை.. இப்படிக் கேட்டு சொ.செ.சூ வச்சுக்கிறீங்க.. விதி வலியது.. ;-)))))

RVS said...

@ரிஷபன்
ஊக்கம் நிறைந்த பாராட்டுக்கு மிக்க நன்றி சார்! ;-)

RVS said...

@Krish Jayaraman

Dear Sekar, I am totally agreeing with You. I read lot of his stories. Surely there will be some impact in my writings. Thanks for your compliments. (I am taking your comment as compliments. ha..ha.. What a positive thinking? ) ;-)

RVS said...

@தக்குடு
நா வேணா கொஞ்சம் ஹெல்ப் பண்ணட்டா.. ;-))
சீக்கிரமா தம்பி திரும்பனும்..... ஒட்டகம் கிடைக்கணும்...... ;-))))

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails