Monday, October 17, 2011

மன்னைக்கு ஒரு அதிரடி விஸிட்!


கார் சக்கரங்கள் மேலப்பாலத்தில் ஏறி ரோட்டோர மணலில் சரசரக்கும் போதே பழைய நினைவுகள் புரையேறத் தொடங்கிவிட்டது. ”மன்னார்குடி போய்ட்டு வரலாம் வரியாடா?” என்று என் சோதரி அன்பாக கேட்டவுடன் ”மன்னை ஆசை” மண்ணாசை பொன்னாசையைப் போல எவ்ளோ வயசானாலும் விடாத அரசியல்வாதிகளின் பதவியாசையாய் மனதை கெட்டியாகப் பிடித்துக்கொண்டது. காரோட்டும் சாரதியாய் வர ஒத்துக்கொண்டேன். இருந்தாலும் ஒரு பொறுப்பான(?) பதவியில் குப்பை கொட்டுவதால் எனது பாஸிடம் முறைப்படி அனுமதி பெற்று எங்கக்காவுக்கு சரியென்று ஓ.க்கே சொன்னேன்.  அனுமதித்த பாஸ் நீடூடி வாழ்க!

கும்பகோணம் வெங்கட்டரமணாவில் காஃபி சாப்பிடாமல் சேப்பாயிக்கும் ரெஸ்ட் கொடுக்காமல் மன்னை மண்னை மிதிப்பதற்கு பொங்கும் ஆவலில் ஆக்ஸிலில் ஏறி உட்கார்ந்தேன். வளைவுகள் நிரம்பிய கும்பகோ-மன்னை சாலையில் ஓட்டுவதற்குள் பெண்டு நிமிர்ந்துவிடும். கை கழன்றுவிடும். நீடாமங்கலம் பெரியார் சிலையருகில் வழக்கம் போல லாரியும் பஸ்ஸும் கலந்து கட்டி மேய்ப்போனில்லாத மந்தையாய் தண்டவாளம் தாண்டி இரைந்து நின்றது. ”பப்பப்பாம்..பாம்.. பப்பப்பாம்..பாம்” என்று வைத்த கையெடுக்காமல் வாகன ஒலிப்பான் ஒலிக்கும் ஹார்ன் மாணிக்கங்கள் இன்னமும் ட்ரைவர்கள் போர்வையில் அங்கே உலவிக்கொண்டிருந்தார்கள். நீடாவைத் தாண்டி மன்னை சாலையை பிடித்து நான்காவது கியர் மாற்றுவதற்குள்ளாக ரயில்வே கிராஸிங் சிக்னல் ”கூ....” என்று மெதுவாக வரச் சொல்லிக் கூவியது.

ஸ்பீட் ப்ரேக்கரில் ஏறிக் குதித்த இந்த காற்றடைத்த பையோடு ஆசையடைத்த மனஸும் தொடர்வண்டி ஆசையில் இருமுறை துள்ளிக் குதித்தது. ராயபுரம் பாலம் கடக்கையில் அகஸ்மாத்தாக கவனித்தபோது வலதுபுறம் அமைதியாக, நேற்று பூப்பெய்திய பெண் போல அடக்கமாக, வனப்போடு காவிரியின் தங்கை பாமணி ஆறாக கரைபுரண்டு ஓடி வந்துகொண்டிருந்தாள். கார் ஜன்னலைத் திறந்ததும் ”சலசல”வென்று என் காதுகளில் கொஞ்சு மொழி பயின்றாள். ஆற்றிலிருந்து மண்வாசனையுடன் ஈரப்பதம் நிரம்பிய காற்று ஈன்றவளைப் போல முகத்தை வாஞ்சையுடன் அலம்பிவிட்டது. அந்தக் காற்றுக்கு ஏசியெல்லாம் தூசி. உள்ளுக்குள் புத்துணர்ச்சி வெள்ளமாய்ப் பெருக்கெடுத்தது.

வாசல் சுத்தமாக பெருக்கி சுகாதாரமாக இருந்த மன்னார்குடி தேசிய மேல்நிலைப் பள்ளி வாசலில் வண்டியை நிறுத்தும்போது சுதர்ஸன் காஃபிக் கடையில் இருந்து காஃபிப் பொடி வறுத்து ஒட்டு மொத்த கடைத்தெருவிற்கும் காஃபியாசை மூட்டிக்கொண்டிருந்தார்கள். பள்ளிக் காலங்களில் அந்தக் கடையில் மதிய சாப்பாடு முடித்து வாடிக்கையாளர்களுக்கு பொடியளந்து சேவைபுரிந்த ஞாபகம் நினைவில் வந்து முட்ட போய் ஒரு எட்டு எட்டிப்பார்த்தேன். “ஏய்! எப்படியிருக்கே!” என்று கல்லாவிலிருந்து எழுந்து கையைப் பிடித்துக்கொண்டார், முன்பு மீசையும் இப்போது மழித்த, முன்பு இளமையோடும் இப்போது வயதாகியும் இருந்த முதலாளி. நெற்றியில் ஸ்ரீசூர்ணம் மிஸ்ஸிங்!

அர்த்தஜாம மணியோசை கேட்டு ஆனந்தவிநாயகரிடம் ஓடினேன். வெள்ளிக்கிழமை சந்தனக்காப்பில் ஜொலித்தார். சென்னைப் பகுதிகளில் காணமுடியாத கண்கவர் அலங்காரம். ஒரு தேர்ந்த சிற்பியின் லாவகத்துடன் சம்பந்த குருக்கள் பையன் புஷ்பங்களாலும் சந்தனத்தினாலும் அலங்கரித்திருந்தார். தரிசனம் முடித்து வலம் வந்து நெற்றியில் விபூதியை பூசும் போது ஹமீது ஞாபகம் வந்தது. எட்டாவதில் ஸ்கூல் கிரிக்கெட் டீமில் புதுசாக என்னை பந்து பொருக்கிப் போட பதினோராவது ஆளாக சேர்த்துக்கொண்டபோது ஹமீதுதான் கேப்டன். ஃபாஸ்ட் பௌலர். கையை கனவேகமாக சுழற்றுவது தான் தெரியும், கீப்பர் கையில் பாலிருக்கும். தினமும் ஆனந்தவிநாயகர் கோயிலுக்கு வந்து குட்டிக்கொண்டு தோப்புக்கரணமிட்டு விபூதி பூசாமல் பள்ளிக்குள் காலடி எடுத்து வைக்கமாட்டார் சமய நல்லிணக்க ஹமீது.

அடுத்த அரைமணி நேரத்தில் அன்றைய கணக்கை முடித்துக்கொண்டு ராச்சாப்பாடு என்னை மன்னையில் இன்முகத்தோடு விருந்துபசரிக்கும் என் உடன் பிறவா சகோதரி ரோஹினி ஸ்வாமிநாதன் வீட்டில் தஞ்சமடைந்தேன். ரொம்ப நாளைக்கப்புறம் ரம்மி வித் சீக்ரெட் ஜோக்கர் சககுடும்பமாக விடிய விடிய ”ஊம்... அவருக்கென்ன... அவ எங்க போனா... அச்சச்சோ... அவளுக்கு ராஜயோகந்தான்..” என்று ஊர்க்கதை பேசிக்கொண்டு சுவாரஸ்யத்தில் ஜோக்கரை டிஸ்கார்ட் செய்து விளையாடினோம். யப்பாடி! எல்லாத்துக்கும் மன்னையில் எவ்ளோ நேரம் இருக்கு!!

காலையில் முதல் வேலையாக ஒத்தை தெரு ஆனந்த விநாயகருக்கு அபிஷேகம். இரண்டு குடம் பால், நூறு எம்.எல் டாபர் ஹனி, ஒரு லோட்டா பன்னீர், நாலு சாத்துக்குடி, ஒரு சொம்பு இளநீர், சந்தனம், பஞ்சாமிர்தம் என்று யானை முகத்தனை ஐந்து கரத்தனை குளிர்வித்தோம். அண்ணனைப் பார்த்த கையோடு நேராக காளவாய்க்கரை சக்திவேல் முருகன் ஆலயம். முருகனை தரிசிக்கப் போகும் வழியிலிருந்த சாமி தியேட்டர் வயசாகி, வாசல் கிரில் கதவு துருப்பிடித்து பழசாகி களையிழந்து காணப்பட்டது. ”வர்ற தீபாவளிக்கு நம்மூரு சாமியிலதான் தளபதி ரிலீஸ்” என்று ஒரு தீபாவளிக்கு சூப்பர் ஸ்டார் பக்தர்கள் மார்தட்டி பெருமையாக பேசிக்கொண்டார்கள். அந்த வருடம் ரசிக சேனைகளுடன் தளபதி திருவாரூரில் வெளியானார்.

குட்டையருகில் முருகன் விபூதி அலங்காரத்தில் இன்முகத்தோடு இருந்தார். ஒன்றிரண்டு முருக பத்தர்கள் சாயங்கால வேளையில் ஒரு முழம் பூவும் வாழைப்பழமுமாக சிம்பிளார்ச்சனை செய்து தரிசித்து இன்புற்ற சக்தி வேல் முருகன் இப்போது காலையிலிருந்தே கௌமாரர்களுக்காக ஓவர் டைம் செய்கிறார். “அந்தக் கூடை என்னிது... பச்சைக் கலர் ஒயர்க்கூடை இங்க.. பூசாரி அந்த ப்ளாஸ்டிக் கவரை இந்தப் பக்கம் குடுங்க” என்று தேங்காய்ப் பழ அர்ச்சனைக் கூட்டம் அம்முகிறது. “இங்க ஒரு பெரியவர் பூசாரியா இருந்தாரே.... இருக்காரா?” என்ற என் கேள்விக்கு வெள்ளை அண்ட் வெள்ளையில் தர்மகர்த்தா போலிருந்த ஒரு இளைய முதியவர் கையிரண்டையும் சோகத்தோடு மேலே காண்பித்து “ஏழு வருசமாச்சு” என்று அண்ணாந்து பார்த்து சொற்ப வார்த்தைகளில் முடித்துக்கொண்டார்.

முருகனுக்கு ஒரு கும்பிடு போட்டு அஷ்டாங்க நமஸ்காரம் செய்து விட்டு அடுத்ததாக மன்னை நகரின் திருவிழா நாயகர், அன்று ஞாலம் அளந்த பிரான், கோபில கோப்பிரளய முனிகளுக்காக கோபியர்களுடன் ஹரித்ராநதியில் ஜலக்கிரீடை செய்து காண்பித்த அந்த கோவர்த்தனகிரிதாரி, மணி நூபுர தாரி ராஜகோபாலனை தரிசிக்க சென்றேன். விண்ணை முட்டும் கஜப்ருஷ்ட ராஜகோபுர விமான நுழைவாயில் ஆஞ்சநேயர் சன்னிதியில் செம்பகேசன் சாரைக் காணோம். தீக்ஷிதரைவிட பள்ளியில் அவர் எங்களுக்குத் தமிழாசிரியர். பாவம்! இன்னமும் நான் இதுபோல வலைத்தளத்தில் தமிழில் எழுதுவது தெரியாது. தாயார் சன்னிதியில் சம்பத் தீக்ஷிதருக்கு செம எரிச்சல். எல்லோரையும் கடுகடுத்தார். பின்னால் செண்டும் கையுமாக செம்பகலெக்ஷ்மித் தாயார் மலர் முகம் பூத்தபடி இருந்தாள்.

புரட்டாசி சனிக்கிழமையும் நாளுமாக பரவாசுதேவப் பெருமாளின் திவ்ய தரிசனம் கிடைத்தது. ராஜகோபாலன் மாடு மேய்க்கும் திருக்கோலத்தில் திறந்த மார்பும், தலையில் முண்டாசும் அதையே இடுப்பில் கொசுவிய வேஷ்டியுமாக ஏக வஸ்திரத்தில் (சிங்கிள் பீஸ்), கையில் சாட்டையுடனும் கன்றுக்குட்டிகளுடன் புன்முறுவலுடன் அருள் புரிந்தார். சந்தான கோபாலனைக் கையில் ஏந்தி ”கரார விந்தேன முகார விந்தம்” பாடி வழிபட்டு துளசிப் ப்ரசாதத்தை மென்று கொண்டே தும்பிக்கையாழ்வாருக்கு குட்டிக்கொண்டே ப்ரதக்ஷினம் செய்தேன். வெளிப்பிரகாரம் வலம் முடித்து கோயிலுக்கு வெளியே வரும் வேளையில் ராஜகோபுர இடுக்கில் அம்பாளின் ஆடிப்பூர தேர்முட்டிக்கு அருகில் மதிய வெய்யிலில் பெஞ்ச் சுடச்சுட உட்கார்ந்து இருவர் ஹாட்டாக காதலித்தனர். அவன் இளிப்பதும் அது தலையைக் குனிவதும், அவள் இளிப்பதும் அவன் கை ரேகை பார்ப்பதுவுமாக ஒரு அடி இடைவெளியில் நான் பார்க்கும் வரையில் வரைமுறையோடு இருந்தார்கள்.

இதற்கிடையில் மன்னையில் தேர்தல் திருவிழா களை கட்டியிருந்தது. டி.ஆர்.பாலுஜி மன்னை நாராயணசுவாமியின் பெயர்த்திக்காக ஜீப்பில் நின்று கொண்டு ஜி ஊழல் பற்றியெல்லாம் பேசாமல் நாசூக்காக வாக்குச் சேகரித்தார். “உங்கள் சின்னம்....” என்று மைக் அலற ஒருவரும் பதிலுக்கு அலறாததால் மீண்டும் அவர்களே அதை பூர்த்தி செய்துகொண்டார்கள். அவரது மகன் டி.ஆர்.பி.ராஜா, ஸிட்டிங் எம்மெல்லே ஏழடிக்கு ஜீப்பக்கத்திலிருந்து தரையில் நின்று கொண்டே அப்பாவிடம் அடிக்கடி காதில் குசுகுசுவென்று சேதி சொன்னார். ஓட்டுரிமை உள்ளோர் அல்லாதோர் அனைவரிடமும் கைகுலுக்கி பாந்தமாகக் பணிவன்போடு ஓட்டுக் கேட்டார். அடுத்து நேராக மன்னை எக்ஸ்பிரஸ் நிறுத்துமிடம் பார்ப்பதற்காக பாமணி செல்லும் பாதையில் வண்டியை விட்டேன்.

முள்வேலியில்லாமல் ஆட்டோயில்லாத தண்டவாளங்களில் அசிங்கமில்லாத அதிசய ஆச்சச்சர்ய ரயில் நிலையமாக இருந்தது மன்னார்குடி ரயில் நிலையம். சமோசா, முறுக்கு, வாட்டர் பாக்கெட் விற்பனை இன்னமும் ஆரம்பமாகவில்லை. குறு பெரு வியாபாரிகள் கடை விரிக்கவில்லை. ஒரு பக்கம் மிச்சமிருக்கும் ஃபிளாட்பார வேலைகள் ”மாலும் ஹை.. நஹி ஹை” என்று ஹிந்தி பேசும் தொழிலாளிகள் ஆற அமர ஒவ்வொரு ஜல்லியாக எடுத்துப் போட்டு தொழில் சுத்தமாக செய்துகொண்டிருந்தார்கள். ஸ்டேஷன் மாஸ்டர் மற்றும் இஞ்சின் ட்ரைவர் இருவர் மட்டும் அந்த ஆளரவமற்றுக் கிடந்த பரந்த ரயில் நிலையத்தில் பயமில்லாமல் குறட்டைவிட்டு ரெஸ்ட் எடுத்துக்கொண்டிருந்தார்கள். தூரத்தில் ஒரு மதியக் காகம் தொண்டை கிழிய கரைந்ததில் துயில் களைந்து அதிர்ச்சியோடு எழுந்து விடுவார்களோ என்று அச்சப்பட்டேன்.

சாயந்திரம் காரை நேஷனல் ஸ்கூல் வாசலில் நிறுத்திவிட்டு நடைராஜாவாக ஒரு பஜார் பயணம் சென்றேன். தெரிந்தவர் தெரியாதவர் அறிந்தவர் அறியாதவர் என்று சகலரையும் ஒரு உடனடி ஸ்டாக் எடுத்தேன். “மாப்ளே! எப்படியிருக்கே.. இளைச்சுட்டே.. முன்னால லைட்டா சொட்டை விழுந்திருச்சு... கண்ல லேசாக் கருவளையம் இருக்கே.. ” என்று கைகுலுக்கி தோள் தட்டி ஷேமலாபங்கள் விசாரித்தார்கள். நிறைய இடங்களில் ஃபாஸ்ட் புட் திறந்துவிட்டார்கள். சுப்ரமணிய முதலியார் நாட்டு மருந்துக்கடையும் வாசலில் வெள்ளை உரசாக்கு மூட்டையை கழுத்துவரை சுருட்டி அடுக்கிய எலும்பிச்சம்பழக் கடையும் அமோகமாக அப்படியே இருந்தது.

பத்தாம் வகுப்புத் தோழன் கணேஷின் ரெடிமேட் கடையில் இன்னமும் தீபாவளி விற்பனை சூடு பிடிக்கவில்லை. ”என்னடா?” என்று விசாரித்ததில் “எலெக்ஷன் முடியனும் மாப்ள” என்று அவனிடமிருந்து தேர்தல் பதிலாக வந்தது. ஜீவா பேக்கரி துரை கழுத்தில் கட்டிய கர்ச்சீப் நனையும் அளவிற்கு கேக் விற்பனை மும்முரத்தில் என்னை கவனிக்கவில்லை. கிருஷ்ணா பிஸ்கட்ஸ் வாசலில் வழக்கமாய்ச் சைக்கிளும் கையுமாக குழுமியிருக்கும் வயதான கருப்புச் சட்டைக்காரர்களை காணவில்லை. எஸ்.பி.ஐ ஏடிஎம்மில் பணம் எடுக்கத் தெரியாத இரண்டு வாலிபர்கள் பின் நம்பரை என்னிடம் நம்பிக்கையாகச் சொல்லி பண உதவி கேட்டார்கள்.

பந்தலடியில் உடுப்பி கிருஷ்ணாபவன் வாசலில் கூட்டுறவு பால் விற்பனையாளர்கள் ”சூடான பால்” விற்றுக்கொண்டிருந்தார்கள். டில்லி ஸ்வீட்ஸ் யுவராஜை கடையில் காணவில்லை. உற்சாகமாக யாரிடமோ கையாட்டி சைகையாய்ப் பேசிக்கொண்டிருந்த டைலர் ஸ்டைலோ மணி மிகவும் நரைத்து மூப்புத் தட்டியிருந்தார். வேஷ்டியை மடித்துக் கட்டியும், கைலியை தொடை தெரியும் வரை வரிந்து கட்டிக்கொண்டும் எனது ஜனம் இன்னமும் அப்படியே ராஜவீதிகளில் நடமாடிக்கொண்டுதான் இருக்கிறது. எனக்குத் தான் சென்னை திரும்பும் நேரமாகிவிட்டது. இதோ. கிளம்பிவிட்டேன். ஹரித்ராநதி கடக்கும் போது “மீண்டும் எப்போது?” என்று மனசு கிடந்து அடித்துக்கொண்டது யாருக்கு கேட்டிருக்கும்?

பின் குறிப்பு: இந்தப் பதிவெழுதியவரே இந்தப் புகைப்படத்தையும் எடுத்துள்ளார் என்பது ஒரு விசேஷ செய்தியாகும்.

-

64 comments:

CS. Mohan Kumar said...

ஒரு நல்ல விஷயமா போயிட்டு அதை பத்தி விளக்கமா சொல்லலையே ?

பெசொவி said...

ராட்சஸா.......................என்னமா எழுதரே, நீ? ஒவ்வொரு வரியும் கலக்குது, கீப் இட் அப், வெங்கட்!

அமைதி அப்பா said...

'டபுள் செஞ்சுரி'க்கு வாழ்த்துக்கள்!

//உற்சாகமாக யாரிடமோ கையாட்டி சைகையாய்ப் பேசிக்கொண்டிருந்த டைலர் ஸ்டைலோ மணி மிகவும் நரைத்து மூப்புத் தட்டியிருந்தார்.//

ஸ்டைலோ பெயர் மறந்து போயிருந்தது. ஞாபகப் படுத்தியமைக்கு நன்றி. இப்போதும் ஸ்டைலோதான் நம்பர் ஒண்ணா?

82-ல் நான் பின்லேவில் படித்தபோது 'ஸ்டைலோ'வில் தைத்துப் போடுவது ஒரு கௌரவமாக இருந்தது. அண்மையில் அந்தப் பெயரை நினைவுக்கு கொண்டுவர சிரமப்பட்டேன்.

எல்லாம் சரி, லீவ் கிடைக்காமல் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் அவதிப்படும், என் போன்றவர்களின் வயிற்றெரிச்சலை அதிகப்படுத்தி விட்டீர்களே:-)))))!

Matangi Mawley said...

இந்த மன்னார்குடி காரா எல்லாருக்கும் இருக்கற ஒத்தும- nostalgia ... எங்க அப்பாகிட்டயும் 'மன்னார்குடி' ன்னு சொன்னா போரும்... ஒடனே "national high school , ஹரித்ரா நதி, ராஜகோபால ஸ்வாமி, தொப்ப உத்சவம், மோகினி அலங்காரம்..." னு switch போட்டாப்ல list போட ஆரம்பிச்சுடுவா.
"ராஜகோபாலன் மாடு மேய்க்கும் திருக்கோலத்தில் திறந்த மார்பும், தலையில் முண்டாசும் அதையே இடுப்பில் கொசுவிய வேஷ்டியுமாக ஏக வஸ்திரத்தில் (சிங்கிள் பீஸ்), கையில் சாட்டையுடனும் கன்றுக்குட்டிகளுடன் புன்முறுவலுடன் அருள் புரிந்தார்."-- இந்த pose எனக்கு ரொம்ப பிடிக்கும்.. ஒரு சாவி கொத்து கூட தொங்கும்... :)
very nice experience reading it... :)

சிவகுமாரன் said...

உங்கள் மன்னார்குடிக்கு பக்கத்தில் , ஒரு நிறுவனம் என்னை வேலைக்கு அழைக்கிறார்கள். வேண்டாம் என்று நினைத்திருந்தேன்,
உங்கள் பதிவு , போலாமா என்று யோசிக்கத் தூண்டியது.

Ramesh said...

Mannai is not my native and I have not gone there in fact - but I started liking just because of this article - especially the railway station - who dislikes their native? good article and thanks for the same

ஸ்ரீராம். said...

சொல்ல வேண்டிய விஷயத்தைச் இன்னும் சொல்லாததால் இது இங்கு முடியவில்லை என்று நினைக்கிறேன். தொடரும் இல்லை? பழைய இடங்களில் புதிய மாற்றங்களில் பழசை/மனசை பொருத்தி ரசித்து நடை பயின்று வந்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது.

siva said...

நானே ஊருக்கு போய் வந்த உணர்வு... எப்போ ட்ரெயின்ல போக போரீங்க?

Madhavan Srinivasagopalan said...

ஒவ்வொரு லயனும் படிக்கச்சே.. அதுக்கேத்த மாதிரி பதில் கமென்ட் போடணும்னு ஐடியா வந்துட்டே இருந்திச்சி..
படிக்க படிக்க லயித்து போயி.... சும்மாவா.. நம்ம ஊராச்சே.. பிறந்த வளந்து படிச்சு.. நம்மள இந்த நெலைமைக்கு ஆக்கினதே நம்ம ஊருதான..
உணர்ச்சி வசப் பட வைத்து விட்டது.... யோசனையில வந்த கமேண்டுலாம் போயி போச்சு..

டிசம்பர் மாசம் அஞ்சே அஞ்சு நாளுக்கு சென்னை வர்ற வேல இருக்கு.. அதுல ஒருநாள் கட் அடிச்சிட்டு மன்னை போயிட்டு வரலாம்னு ஒரு யோசனை.. அதான் டைரக்டா ரயிலே போகுதே.. ம்ம்.. பாக்ககலாம்.. நம்ம ராஜகோபாலனுக்கு என்னைய பாக்குறதுக்கு சான்ஸ் கெடைக்குதான்னு..

raji said...

பதிவு எழுதியவருக்கு மட்டும்தான் நான் குட் சொல்லுவேன்.ஃபோட்டோ எடுத்தவர்
ரொம்ப கஞ்சப்பிசினாறி போல.அவர் மட்டும் உம்மாச்சி சேவிச்சுட்டு எங்களுக்கு கோபுரம் மட்டும் போட்டுட்டார்.அதுவுமில்லாம எங்க கண்ல பாமணி,மன்னை ஸ்டேஷன்லாம் காட்டவே இல்லை.அதனால அவ்ர் கூட டூ விட்டுடலாமான்னு பாக்கறோம்.

raji said...

//முள்வேலியில்லாமல் ஆட்டோயில்லாத தண்டவாளங்களில் அசிங்கமில்லாத அதிசய ஆச்சச்சர்ய ரயில் நிலையமாக இருந்தது மன்னார்குடி ரயில் நிலையம். சமோசா, முறுக்கு, வாட்டர் பாக்கெட் விற்பனை இன்னமும் ஆரம்பமாகவில்லை. குறு பெரு வியாபாரிகள் கடை விரிக்கவில்லை.//
அதுக்கெல்லாம் இன்னும் கொஞ்சம் டைம் எடுக்கும் சார்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

டீவில லைவ் ப்ரோகிராம் பார்த்த மாதிரியே இருந்துச்சு, போரடிக்காத டீட்டெயிலிங்..... அருமை!

Unknown said...

சொர்க்கமே என்றாலும் அவங்க அவங்க சொந்த ஊருதான் மைனர் வாள்
சொர்க்கம்
நீங்கள் சென்று வந்ததது ,ஊருக்கு சென்ற நிறைவை தந்தது
சோ இப்போதைக்கு ஊருக்கு போற யோசனை சற்று தள்ளி வைக்க படுகிறது
இராஜகோபால எல்லாரையும் காப்பாத்துப்பா..
ராம ராம ராம்
வாழ்க வளமுடன்

Unknown said...

டெல்லி ஸ்வீட்ஸ் யுவராஜ் அதிகம் வருவது இல்லை...
என்று கேள்வி //

காபி வித் அனுபோல
சுதர்சன் வித் மன்னை என்று சொல்லலாம்.

இன்னும் வளரனும்
நம்ம ஊர் எங்க வளரவிடராணுக..

Unknown said...

Mannai is not my native and I have not gone there in fact - but I started liking just because of this article - especially the railway station - who dislikes their native? good article and thanks for the same
Monday, October 17, 2011//

SIR after 40years THIS railway station comming for us.very soon will be improved..

பத்மநாபன் said...

கூடவே கூட்டிட்டு போய்ட்டிங்களே மன்னை மன்னா....

வெங்கட் நாகராஜ் said...

உங்களுடனேயே பயணித்த ஒரு உணர்வு மைனரே... எத்தனை விவரங்கள்....

எங்கே நம்ம பக்கத்தில் காணோமேன்னு நினைத்தேன்.. மன்னை பயணம் காரணம் என இப்போது புரிந்தது... :))

Venkatesh Balasubramanian said...

Simply superb... Just got the feeling of enjoying Mannai through your words... One question though, Anaikarai Palam moodi yarumei anadha vazhiyaga sella mudiyathu endru last juneil naan sendra pothu, naan Chidambaram, mayavaram tiruvarur vazhiyaga mannai sella vendiyaaitru. Ippodhu anaikarai palam thirandhu vittargala?

RAMA RAVI (RAMVI) said...

ஏகப்பட்ட விஷயம்.சொந்த ஊருனாலே எல்லோருக்கும் தலை கால் புரிவதில்லை.(என்னையும் சேர்த்துதான்)

சுவாரசியமான நினைவுகளோட ஒரு சுகமான பயணம்.

அப்பாதுரை said...

ஆட்டோயில்லாத தண்டவாளங்களில்?

Yaathoramani.blogspot.com said...

அவரவர் சொந்த ஊர் நினைவுகளை கிளறிவிட்டுப் போகிறது
உங்கள் பதிவு.எப்படி இவ்வளவு இயல்பாகவும் சரளமாகவும்
படிப்பவர்களையும் அப்படியே உடன் அழைத்துப் போவது போல்
எழுத முடிகிறது ? ஏக்கப் பெருமூச்சு விட்டுக் கொள்கிறேன்
எதற்கும் கொடுப்பினை வேண்டும்
அருமையான பதிவு.தொடர வாழ்த்துக்கள்

ஸ்ரீராம். said...

http://www.udanz.com/page.php?page=savaal2011

தக்குடு said...

ஊருக்கு போகர்து & போனதை பத்தி பேசர்து/எழுதர்து/பேசர மாதிரி எழுதர்து எல்லாமே( நீர் அந்த வகையரா)ஒரு சுகமான இன்பம்தான் மைனர்வாள்!! உங்களோட அழகான வர்ணனையால எந்த சிரமமும் படாம எல்லாரும் ஒரு தடவை மன்னார்குடி போயிட்டு வந்துட்டோம். ராஜகோபாலன் உங்களை இதே மாதிரி எப்போதும் சந்தோஷமா வச்சிருக்கனும்!னு வேண்டிக்கறேன். :)

அப்பாதுரை said...

அடுத்த வருஷப் பயண லிஸ்டில் சேர்த்தாச்சு.. அப்படியென்ன பொல்லாத மன்னைனு பாத்துருவோம்.

அப்பாதுரை said...

//ஃபோட்டோ எடுத்தவர்
ரொம்ப கஞ்சப்பிசினாறி போல.

ஹிஹ்ஹிஹிஹ்ஹிஹ்ஹி

Rekha raghavan said...

தூள் கிளப்பிட்டீங்க போங்க. அருமையா எழுதறீங்க.

RVS said...

@மோகன் குமார்
அதப் பத்தி அப்புறமா விலாவாரியா எழுதலாம்னு விட்டுட்டேன் மோகன். :-)

RVS said...

@பெசொவி
மனம் திறந்த பாராட்டுக்கு மிக்க நன்றி! :-)

RVS said...

@அமைதி அப்பா
ஓ. இவ்ளோ நாளா நீங்க மன்னார்குடின்னு எனக்கு தெரியாது ப்ரதர்.

ஸ்டைலோ மணி மாதிரி நா மிமிக்கிரி பண்ணி காண்பிப்பேன். :-)

டபுள் செஞ்சுரி இப்பத்தான் பார்த்தேன்.

கருத்துரைக்கு நன்றி! :-)

RVS said...

@Matangi Mawley
அந்த சாவிக் கொத்தை விட்டுட்டேன். முக்கால்வாசி அந்த திருமுகத்தை தவிர நான் வேறெங்கும் பார்ப்பதில்லை. நம்பளைப் பார்த்து சிரித்துக்கொண்டே இருப்பது போலிருக்கும். :-)

உங்கள் தகப்பனாரும் மன்னார்குடி என்பதில் மகிழ்ச்சியே! :-)

RVS said...

@சிவகுமாரன்
தலைவரே! தாராளமா போய் சேருங்க.. நல்ல பீஸ்ஃபுல்லான ஊரு... :-)

RVS said...

@Ramesh

Thanks for enjoying the article. Please do visit again. :-)

RVS said...

@ஸ்ரீராம்.
அது ஒரு சீரியஸ் நிகழ்வு. அதை இங்கு சேர்க்க வேண்டாமே என்று தான்.

மீரா டீச்சரைப் பார்த்துவிட்டு தான் வந்தேன்!!

கருத்துக்கு நன்றி. :-)

RVS said...

@siva
நன்றி சிவா.

டில்லி ஸ்வீட்ஸ் யுவராஜ்ஜின் பையனுக்கு என்னை நன்றாகத் தெரியும். கம்ப்யூட்டர் படிக்க வந்தான்.

கிரிக்கெட் மூலம் நிறைய பேருக்கு என்னை தெரிந்திருக்கும் வாய்ப்பு அதிகம் ப்ரதர்.

கருத்துக்கு நன்றி. :-)

RVS said...

@Madhavan Srinivasagopalan
பாராட்டுக்கு மிக்க நன்றி மாதவா! ஒரு தடவை மன்னார்குடி போய் சேவிச்சுட்டு வா!! :-)

RVS said...

@raji
மேடம். நான் வள்ளல். முகப்புஸ்தகத்தில் போதும் போதும்ங்கிற அளவிற்கு படம் போட்ருக்கேன்! சரியா? :-))

RVS said...

@பன்னிக்குட்டி ராம்சாமி
ரொம்ப நன்றிங்க. ஊருக்கு போகிறதா இருந்தாலே எக்ஸ்ட்ரா ரசனை நரம்பு ட்யூன் ஆயிடுதுங்க.. :-)

RVS said...

@siva

இரண்டு வெவ்வேறு சிவா கமெண்டியிருக்கிறார்கள். இருவருக்கும் நன்றி. இதற்கு முன்னர் போட்டது மன்னை சிவாவிற்கு. இது இரண்டாமவருக்கு.

ரொம்ப நன்றிங்க. :-)

RVS said...

@பத்மநாபன்
எங்கூடவே வந்ததுக்கு நன்றி பாலை மன்னா! :-)

RVS said...

@வெங்கட் நாகராஜ்
தலைநகரமே... பாராட்டுக்கு மிக்க நன்றி! :-)

RVS said...

@Venkatesh Balasubramanian
பாராட்டுக்கு நன்றி. அணைக்கரை பாலம் இன்னமும் வேலை நடைபெறுகிறது. அக்கரைக்கு போறதுக்கு ஆத்துக்குள்ளயே இறக்கிவிட்டுடறாங்க... :-)

RVS said...

@RAMVI
இரசித்ததுக்கு நன்றிங்க மேடம். :-)

RVS said...

@அப்பாதுரை
பங்க்சுவேஷன் போடலை... சுக்குமி ளகுதி ப்பிலி ஆயிடிச்சு. ஒரு ரைமிங்கா படிக்கலாம் தல. :-)

RVS said...

@Ramani
ரொம்ப நன்றி சார்! மனசு ஒன்றிப் போய்விடுகிறது. அப்படியே கொட்டி விடுகிறேன். நன்றி. :-)

RVS said...

@ஸ்ரீராம்.
நேற்றைக்கு எழுத ஆரம்பித்தேன். முடிக்க டைம் இல்லை. ஞாயிற்றுக்கிழமை முடிச்சு திங்கள் ரிலீஸ்... :-)

RVS said...

@தக்குடு
ரொம்ப நன்றி தக்குடு. இராஜகோபாலனின் அருள் இருக்கும் எவர்க்கும் இன்பம் நூறு சதவிகிதம் கியாரண்டி. :-)

RVS said...

@அப்பாதுரை
வாங்க தல. நா கூட்டிகிட்டு போறேன். :-)

RVS said...

@ரேகா ராகவன்
ரொம்ப நன்றி சார்! நீங்கெல்லாம் ஒரு பாராவிலேயே சகலத்தையும் முடிச்சுடறீங்களே! :-)

இராஜராஜேஸ்வரி said...

இந்தப் பதிவெழுதியவரே இந்தப் புகைப்படத்தையும் எடுத்துள்ளார் என்பது ஒரு விசேஷ செய்தியாகும்/

நான்ஸ்டாப் கொண்டாட்டம்.

பாராட்டுக்கள்.!

ரிஷபன் said...

ராஜகோபால தரிசனம்..
இந்த முறை நவராத்திரிக்குப் போனபோது ஹரித்ரா நதியை மட்டும் பார்த்தேன். சந்நிதிக்குப் போக முடியாமல் நேரம் தப்பிப் போனது. காரப்பங்காட்டில் இருந்து கிளம்பும்போதே லேட். சேரங்குளம் நம்மங்குறிச்சி எல்லாம் மிஸ்ஸிங். கூட வந்தவர்கள் தில்லைவிளாகம் போய் வந்தார்கள்.
ம்ம்..

Sivakumar said...

//ரயில்வே கிராஸிங் சிக்னல் ”கூ....” என்று மெதுவாக வரச் சொல்லிக் கூவியது.//

பியூட்டிபுல் லைன்ஸ்!

Sivakumar said...

//ஸ்ரீசூர்ணம் //

சற்று விளக்க முடியுமா?

Sivakumar said...

//ஏக வஸ்திரத்தில் (சிங்கிள் பீஸ்)//

Cant stop laughing :-))))

Sivakumar said...

'மதிய வெயில் பெஞ்ச் சூடேற காதலர்கள் ஹாட்டாக பேசியது'. - செம லைன். 'கருப்பு' சட்டைக்காரர்கள் தங்களை காணாததில் ஆச்சர்யமென்ன? அது என்ன வேஷ்டியை மடித்துக்கட்டி, கைலியை தொடை தெரிய? வேஷ்டியை மடித்துக்கட்டினால் தொடை தெரியாதா?

மன்னை மன்னரே, ஊரில் பல பேரை தெரிந்து வைத்துள்ளீர்கள். டி.ஆர். பாலு தங்களை அரசியலுக்கு இழுத்தாலும் இழுக்கலாம். பதிவு எழுதியவர் இன்னும் ஒரு சில படங்களை போட்டிருக்கலாம். மொத்தத்தில் மன்னைக்கு எங்களையும் அழைத்து சென்றுள்ளீர்கள். நன்றிகள் பல.

குரு said...
This comment has been removed by the author.
குரு said...

இங்கு இருந்து கொண்டு (DUBAI) இதை எல்லாம் படிக்க மனம் ஏங்குகிற்து

Anonymous said...

இங்கு இருந்து கொண்டு (DUBAI) இதை எல்லாம் படிக்க மனம் ஏங்குகிற்து

குரு

RVS said...

@! சிவகுமார் !
ஸ்ரீசூர்ணம் என்பது வைஷ்ணவர்கள் நெற்றியில் கோடு போல இட்டுக்கொள்வது.

வேஷ்டியை மடித்துக்கட்டினால் முட்டிக்கால் வரைதான் கட்டுவார்கள்.

கைலியை தூக்கிக்கட்டுவது கட்டையை சுழற்றுவதற்கு முன்னால் தொடை தெரிய கட்டுவது..

கருத்துக்கு நன்றி சிவா! :-)

RVS said...

@இராஜராஜேஸ்வரி
நன்றி மேடம். :-)

RVS said...

@ரிஷபன்
தில்லைவிளாகம் பச்சை நரம்பு தெரியும் ஸ்ரீராமர் அற்புதம்...

கருத்துக்கு நன்றி சார்! :-)

RVS said...

@Guru
ஏக்கத்தை உண்டுபண்ணியதற்கு ஸாரி!! :-)

அமைதி அப்பா said...

//RVS said...

@அமைதி அப்பா
ஓ. இவ்ளோ நாளா நீங்க மன்னார்குடின்னு எனக்கு தெரியாது ப்ரதர்.//

மன்னிக்கவும், மன்னார்குடி எனது சொந்த ஊரல்ல. நான் இரண்டு வருடம் மட்டும் அங்கு தங்கிப் படித்தேன்.

எனக்கு சொந்த ஊர் வேதாரணியம் அருகே ஒரு குக் கிராமம் சார். 'அதான், எழுதுறதப் படித்தாலே புரியுதே' என்று தாங்கள் நினைப்பதை என்னால் அறிய முடிகிறது;-)))!.

Sivakumar said...

ஸ்ரீசூர்ணம் விளக்கத்திற்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

ஊர்ப்பக்கம் போயிட்டு வந்தாலே, அது ஒரு தனி ஃபீலிங்க்தான் :-)

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails