Wednesday, November 21, 2012

உற்சாகபானப் பிரியர்கள்

சுவரெல்லாம் காரை பெயர்ந்த பெரியாஸ்பத்திரி. மூலைக்கு மூலை கறைபடிந்த சுவர்கள். அழுக்குக் கோட்டுடன் ஸ்டெத் மாலையணிந்த டாக்டர்கள். முட்டிவரை ஸ்டாக்கிங்ஸ் போட்ட கொண்டை நர்சுகள். ஃபினாயில் நாற்றத்தையும் பொருட்படுத்தாது ஆப்பிளையும் ஹார்லிக்ஸ் பாட்டிலையும் சுமந்தபடி பேஷண்ட்ஸ்ஸைப் பார்க்கக் கூட்டம் அம்முகிறது. மாலை நேரத்து விசிட்டிங் ஹவர்ஸ். கலெக்ஷன்னில்லையே என்று வருத்தப்படும் வார்டு பாய்கள். “உம்புள்ளை நாளைக்கே எந்திரிச்சு நடப்பான் பாரு” என்று ஆரூடமாக ஒரு அன்புத்தாயிடம் ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்த ஆயாவென்று சுறுசுறுப்பாக இருந்தது.


வார்டு நம்பர் 8. எமன் எப்போ வருவான் என்று பாசக்கயிற்றுக்காக வெயிட்டிங்கில் ஒரு பேஷண்ட். ”இனிமே நம்ம கையில ஒண்ணுமில்லை” என்று டாக்டர்கள் கையை விரித்துவிட்டார்கள். தொண்டைக்குக் கீழே உள்ளேயிருக்கும் அவயங்களெல்லாம் சாராயத்தினால் கரைந்துவிட்டது. எக்ஸ்ரேயெடுத்தால் உள்ளே ஹாலோவாகத்தான் தெரியும். சாவதற்கு முன்னாலேயே வெறும் கூடாக படுத்திருந்தான். ஆனால் சாகக் கிடந்தவன் இப்படியொரு நிலை தனக்கு வந்துவிட்டதென்று கவலைப்படுபவனாகத் தெரியவில்லை.

உறவினர்களும் நெருங்கிய நண்பர்களும் கடைசியாக ஒருதடவைப் பார்க்கலாம் என்று ஒவ்வொருத்தராக வார்டுக்குள் வந்து எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். கண்கள் சொருக கடைசி நிமிடத்தை எண்ணிக்கொண்டிருந்தான் அவன். சிறுவயது முதலேயே பழகிய நண்பனொருவன் மிகவும் வருத்தமாக அவன் பக்கத்தில் உட்கார்ந்து ஒரு கேள்வியைத் திரும்பத் திரும்ப கேட்டுக்கொண்டிருந்தன்.

“இப்படியெல்லாம் பண்ணக்கூடாதுன்னு சொன்னா கேட்டியாடா?”

அவனால் பேசக்கூட முடியாத நிலை. வெறுமனே பார்த்துக்கொண்டிருந்தான்.

“ஸ்வாமிகிட்ட நல்ல புத்தி வேணும்னு கேட்டிருக்கலாம்ல”

இதைக் கேட்டவுடன் பதிலுக்கு படுக்கையிலிருந்து அவன் ஏதோ முனகினான்.

“ஸ்வாமிகிட்ட நல்ல புத்தியைக் கொடுன்னு வேண்டியிருக்கலாம்லனேன்” என்று கூரை இடிந்து விழுமளவிற்குச் சத்தமாகக் கேட்டான்.

சாகற நேரத்தில் தன் நண்பனிடமிருந்து இப்படியொரு வசனத்தை அவன் எதிர்ப்பார்க்கவில்லை.

கண்ணாலையே சைகை செய்து பக்கத்தில் கூப்பிட்டான். நண்பன் போய் அவன் தலைமாட்டருகில் உட்கார்ந்தான். படுக்கையில் கிடந்தவனின் காதுக்கருகில் தலையைக் குனிந்தான்.

“எ......ன்....ன....... சொ.....ன்....ன....” என்று ஒவ்வொருவார்த்தையாக உதிரியாய் அவன் காதுக்கு சேருமளவிற்கு மட்டும் கேட்டான்.

“ஸ்வாமிகிட்ட நல்ல புத்திக் கொடுன்னு வேண்டியிருக்கலாம்ல”

“நான் அப்படித்தான் வேண்டிக்கிட்டேன். ஆனா.....”

“ஆனா...”

“அந்தப் பாழாப் போறத் தெய்வத்துக்கு “நல்ல புட்டி”யைக் குடுன்னு காதுல விழுந்துடிச்சு. நான் என்ன பண்ணட்டும்”ன்னு சொல்லிட்டு மண்டையைப் போட்டான்.
 
**************
 
போதையடிமைகள் மாதிரி மெட்ராஸ் காஃபி ஹவுஸின் ஃபில்டர் காஃபிக்கு ஆஃபிஸிலிருந்து ஒரு திருக்கூட்டமாக அடிமையாகி விட்டோம்.

சிக்கரி கலந்த காஃபிங்கறதுனாலத்தான் இவ்ளோ ஸ்ட்ராங்கா இருக்கு. அப்படிக் குடிச்சா உடம்புக்கு ஆகாது என்று யாராவது இன்னா நாற்பதாக நீதி சொன்னாலும் நாக்குக்கு புரிய மாட்டேன் என்கிறது. “கள்ளிச்சொட்டான்னா இருக்கு காஃபி” என்று காஃபியார்வலர்கள் சிலாகிப்பதற்கு எதுவும் உள்ளர்த்தம் உண்டாவென்று தெரியவில்லை.

திரும்பத் திரும்ப சப்புக்கொட்டிக்கொண்டு சாயந்திரமானா மெ.கா. ஹவுஸின் முன்னால் காசைக் கொடுத்துவிட்டு கையேந்தி நிற்கச் சொல்கிறது.

சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் சொன்ன ஒரு சன்னியாசக் கதை ஞாபகம் வருகிறது.

ஒருத்தர் ரொம்பவும் ஆச்சார அனுஷ்டானத்தோட இருக்கிற சாஸ்திரிகள். ஆத்துக்காரி கொஞ்சம் அப்பர் ஹாண்ட். உஹும் நீங்க நினைக்கிறா மாதிரி அடிக்கெல்லாம் மாட்டா. பிலுபிலுன்னு பிடிச்சிண்டு வாயாலையே வகுந்துடுவா. இந்த மனுஷனுக்கும் விஷமம் ஜாஸ்தி. எதாவது சொல்லி ஆத்துக்காரியை சீண்டிண்டே இருப்பார். ஒரு நாள் காலங் கார்த்தாலையே சண்டை முத்திப்போச்சு. அக்கம்பக்கமெல்லாம் கூடிப் போய் தெருவில ஒரே வேடிக்கை.

”இனிமே என்னால உங்கூட குடுத்தனம் பண்ண முடியாதுடி. ராட்சஷி. நா சன்னியாசியாப் போய்டறேன்”ன்னு ஆகாசத்துக்கும் பூமிக்கும் குதியாக் குதிச்சார்.

“எம்பளது வயசுல நீர் அப்படிப் போகணும்னு உமக்குத் தலையெழுத்து இருந்தா யாரென்ன பண்ண முடியும். பேஷாப் போங்கோ”ன்னு மாமி சொல்லிட்டு பக்கத்தாத்து மாமியோட சகஜமா பேச ஆரம்பிச்சுட்டா.

இவருக்கும் ரோஷம் தலைக்குமேல ஏறிண்டு கடகடன்னு திண்ணைய விட்டு இறங்கி வடக்கப் பார்க்க புறப்பட்டு போய்ட்டார். தோள்ல காசித் துண்டோட. பக்கத்தாத்து மாமியெல்லாம் வந்துக் கூடி நிண்ணுண்டு “இருந்தாலும் மாமாவை நீங்க இப்படி விரட்டியடிச்சுருக்கக்கூடாது”ன்னு ஒரே புலம்பல். மாமி அதெல்லாம் கண்டுக்கவேயில்லை.

“அடுப்புல ஸாம்பார் கொதிக்கறது”ன்னு உள்ளே போய்ட்டா. ”மாமி இப்படியொரு கல்நெஞ்சக்காரியா இருக்காளே”ன்னு எல்லோரும் முணுமுணுத்துட்டு அவாவா ஆத்துக்குப் புறப்பட்டு போய்ட்டா.

சாயந்திரம் நாலு மணியாச்சு. பால்காரன் பாலைக் கொடுத்துட்டு இந்தப் பக்கம் போனான் கார்த்தால வடக்கே போன மாமா விறுவிறுன்னு அந்தப் பக்கத்திலேர்ந்து திரும்பி வந்துண்டிருந்தார். ஃபர்ஸ்ட் செஷன்ல ஃபைட் சீன் பார்த்தவாள்லாம் திரும்ப ஒரு சண்டை பார்க்க ஆசையா ஓடி வந்தா.

திண்ணைமேல ஏறி சப்ளாங்கால் போட்டுண்டு ஜம்முன்னு உட்கார்ந்துண்டாராம் மாமா.

“சன்னியாசம்னு கிளம்பினேளே. சாயந்தரமே ஆத்துக்கு வந்துட்டேளே. என்னாச்சு மாமா”ன்னு எல்லாரும் நக்கலா விஜாரிச்சாளாம்.

“நாலு மணிக்கு காஃபி குடிக்கணும். அதான் திரும்பி வந்துட்டேன். ஆனா நிச்சயமா நாளைக்கு சன்னியாசம் போய்டுவேன்.”ன்னு ஜம்பமா சொன்னாராம்.

“உக்கும். ஆனானப்பட்ட காஃபியையே இந்த மனுஷ்யரால விடமுடியல. கஷாயத்தை எப்படிக் கட்டிப்பராம்”ன்னு தாவாங்கட்டையை குலுக்கி தோள்ல இடிச்சுண்டு சுடச்சுட காஃபியை கொண்டு வந்து திண்ணையில வச்சாளாம் மாமி.

#கஷாயம் கட்டிக்க ஆசை வந்தாலும் காஃபி ஆசை போகாதாம். காசிக்குப் போனாலும் காஃபிக்குதான் ஜெயமாம். தீக்ஷிதர்வாள் சொல்லியிருக்கார்.

21 comments:

ADHI VENKAT said...

மாமா சன்னியாசம் வாங்கப் போன கதை நன்னாயிருக்கு....:))

காபிக்கு இப்படியொரு சிறப்பா!!!!

என் பிறந்த வீட்டில் அனைவரும் காபிக்கு அடிமைகள். ஒருவேளை குடிக்கவில்லை என்றாலும் உயிரே போய் விடுவது போல் துடிப்பார்கள்.

நான் இதுவரை காபியே சுவைத்ததில்லை....அப்படி என்ன தான் இருக்கு...:)

முத்தரசு said...

கபே காப்பி உற்சாகம்

பகிர்வுக்கு நன்றி

பொன் மாலை பொழுது said...

தலைப்பில் பொடி வைத்து..................சரிதான் காபியும் உற்சாக பானம்தான் ஆனா அது அசல் பில்டர் காபியா இருக்கணும்

அப்பாதுரை said...

கடவுளுக்குக் காது வேறே கோணலா? சரிதான்.

காபி குடிப்பது கலை. குடிக்கும் காபியை ரசிப்பது முதுகலை.

வெங்கட் நாகராஜ் said...

//உஹும் நீங்க நினைக்கிறா மாதிரி அடிக்கெல்லாம் மாட்டா// ஹிஹி... :)

காபி இங்கே இந்தியா காபி ஹவுஸில் குடித்துக் குடித்து - இன்னும் அலுக்கல! :)

சுவையான கதை..

மோகன்ஜி said...

அடடா! காபி பத்தின பதிவா .. டிகாக்ஷன் காபி... கும்பகோணம் டிகிரி காபி... உங்காத்துல குடுத்தேளே ஸ்வாமி... அது மாரின்னா இருக்கு .. பேஷ்.. பேஷ்.. ரொம்ப நல்லா இருக்கு..

திண்டுக்கல் தனபாலன் said...

உற்சாக தரும் காஃபி... சூடாவே இருந்தது...
tm3

Anonymous said...

அது என்னமோ மத்தியானம் மூன்று மணிக்கும் குடிக்கும் காஃபி என்றைக்கும் ஒரு தனி கிக் இருக்கின்றது.- ராப் ஆண்டர்சன்

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_28.html) சென்று பார்க்கவும்... நன்றி...

கதம்ப உணர்வுகள் said...

அன்பின் ஆர்.வெங்கடசுப்ரமண்யன்...

தங்களின் தளம் இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி இருக்குப்பா...

http://www.blogintamil.blogspot.com/

RVS said...

@கோவை2தில்லி
நாங்கள் காஃபியடிமைகள்.
கருத்துக்கு நன்றி. :-)

RVS said...


@முத்தரசு
நன்றி

RVS said...


@Manickam sattanathan

ஃபிலடர்காஃபியேதான் கக்கு. :-)

RVS said...

@அப்பாதுரை

//குடிக்கும் காபியை ரசிப்பது முதுகலை.// அட்டகாசம் சார்! :-)

RVS said...



@வெங்கட் நாகராஜ்
காஃபிக்கு அலுப்பு உண்டா? நன்றி தலைநகரமே! :-)

RVS said...


@மோகன்ஜி
மெட்ராஸ்ல போட்ட காஃபியை விட மன்னார்குடியில் காஃபியின் டேஸ்டே தனி ரகம். கருத்துக்கு நன்றிண்ணா! :-)

RVS said...


@திண்டுக்கல் தனபாலன்
நன்றி தனபாலன்.

RVS said...


@ராப் ஆண்டர்சன்

கருத்துக்கு நன்றி. :-)

RVS said...



@திண்டுக்கல் தனபாலன்

//உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
// நன்றி.

RVS said...

@மஞ்சுபாஷிணி

//தங்களின் தளம் இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி இருக்குப்பா...
//
நன்றிங்க மஞ்சுபாஷிணி! :-)

இராஜராஜேஸ்வரி said...

காஃபிக்குதான் ஜெயமாம்.


சுவையான கம கம பகிர்வுகள் !

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails