Friday, November 15, 2013

ஸ்நேகித சிஸ்டர்ஸ்

அப்படியொன்றும் அவர்கள் அமிர்தவர்ஷினியெல்லாம் பாடிவிடவில்லை. ஸ்ருதி பாக்ஸை திருகி விட்டு வாயைத் திறக்க ஆரம்பித்ததும் வானத்தைக் கிழித்துக்கொண்டு மழை கொட்டோ கொட்டென்று கொட்டியது. இன்று சின்னதும், பெருசும் அவர்களின் ஸ்நேகித சிஸ்டர்களுடன் எங்கள் பேட்டையிலுள்ள முருகன் கோயிலில் திருப்புகழ் கச்சேரி செய்தார்கள். சேர்ந்திசை.

திருப்புகழ் கற்றுக்கொடுக்கும் பத்மா மாமி கையில் ஜால்ராவுடன் தாளம் போட “பாதிமதியென”வும், “பத்தியால் யானுனை பலகால”முவுக்கும் போவோர் வருவோர் கேட்டுவிட்டு திருநீரும் கையுமாக இராச் சாப்பாட்டுக்குக் குக்கர் வைக்கவும், சன்னையோ, ஜெயாவையோ, கலைஞரையோ, விஜயையோ பார்க்கச் சடுதியில் பறந்தார்கள்.

மழை பெய்யும் போது திருக்கோயிலுக்குள் அகப்பட்டுக்கொண்ட பக்தர் கூட்டம் நாலைந்து திருப்புகழை போனால் போகிறது என்று உட்கார்ந்து கேட்டது.

கடைசியில் நாகராஜ் குருக்கள் ”அடுத்த வருஷம் சஷ்டிக்கும் நீங்களெல்லாம் ஒரு கச்சேரி பண்ணனும்” என்று வாழ்த்தி, பெண்டுகளுக்கு ஒரு துண்டு சாமந்திப் பூவும் தேங்காய் மூடியும் சம்பாவனையாகக் கொடுத்து மரியாதை செய்தார்.

அந்த சாமந்திப்பூ செண்பகப்பூப் போல மணத்தது. கொடுத்த தேங்காய் மூடி பிரசாதம் பூரண பொற்கும்பமே கொடுத்தாற் போலவும் எனக்குத் தோன்றியது.

1 comments:

வெங்கட் நாகராஜ் said...

குழந்தைகளுக்கு எனது வாழ்த்துகள்.....

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails