Friday, April 4, 2014

கறுப்பு வெள்ளை வர்ணங்கள்

சோனியைச் சுற்றி எறும்புகள். வசந்த் டிவியில் தேனருவி ஒடிக்கொண்டிருந்தது. பிறை நெற்றியின் பாதி ஏரியாவைக் குங்குமப் பொட்டுக்கு எழுதி வைத்துவிட்டு படுக்கையில் உருண்டு பாடிக்கொண்டிருந்தார் விஜயகுமாரி. முழு முகத்தை காமிரா அபகரிக்க திரை முழுக்க விஜயகுமாரியின் உருண்டை முகம் வியாபித்திருந்தது. அஞ்சனம் எழுதியக் கண்களை கோலியாக இங்குமங்கும் உருட்டிச் சாய உதடுகளைப் பழித்துச் சுழித்து காட்சிக்கு உயிரூட்ட பிரயத்தனப்பட்டுக்கொண்டிருந்தார். இப்போதெல்லாம் முகத்துக்குப் பதில் க்ளோஸ் அப் ஷாட்டில் இடை நடிக்கிறது.

ஊரடங்கிய வேளையில் கறுப்பு-வெள்ளைப் பார்ப்பது கலர்க்கலர் நினைவுகளை மீட்டுத் தருகிறது. சாலிடேர் (அ) பிபில் இருக்கும் வீட்டைத் தெருவே முற்றுகையிட்டு ஒளியும்-ஒலியும் பார்க்கும். கண்ணதாசனின் தத்துவப் பாடல்களில் கல் மனசையெல்லாம் கரைய வைத்த பின்னர் ஒரு காதல் கலர்ப்பாட்டு போனால் போகிறது என்று போடுவார்கள். பூஸ்டர் சரியில்லையென்றால் பூச்சிபூச்சியாய்த் தெரியும். இப்போது சேனலைத் திருப்பத் திருப்ப ”ஒங்க’லு’க்காக பாட்டு வந்துகிட்டேயிருக்கு...பார்த்து எஞ்சாய் பண்ணுங்க...” என்று திகட்டுமளவிற்கு வண்ண வண்ணப் பாடல்கள்.

ஆனாலும் வர்ணஜாலங்களுக்கு நடுவில் கறுப்பு-வெள்ளை அலாதி சுகம்தான்.

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails