Friday, April 4, 2014

சகஸ்ர சந்த்ர தர்ஸீ

ஆஃபீஸில் நுழைந்ததும் பளபளவென்று க்ளேஸுடு காகிதத்தில் டேபிளில் ரெண்டு படம். ஸ்ரீசந்த்ரபகவான் மூலவர் மற்றும் உற்சவராகக் திருக்காட்சியளித்தார். படத்துக்குப் பின்னால் திங்களூர் என்று நீல ரெனால்ட்ஸால் கிறுக்கியிருந்தது. என்னுடைய வருகை மோப்பம் பிடிக்கப்பட்டு ஐந்து நிமிடத்தில் ஃபோன் வந்தது. “சார்! அதை ஸ்கேன் பண்ணிக்கோங்க. திங்களூர் சந்திரன்.. வர்ற ஜய வருஷத்துக்கு அவர்தான் அதிதேவதை!” என்றார் மறுமுனையிலிருந்து வெங்கட்ராமன்.

உற்சவர் தலைக்குப் பின்புறம் பிறை அம்சமாகத் தெரிந்தது. அதன் அழகை ரசித்து உற்றுப் பார்க்கப் பார்க்கக் கையைப் பிடித்து சடாரென்று உள்ளே இழுக்கப்பட்டேன். ஐந்து நிமிடம் அம்புலியில் ஆனந்தமாகப் பயணித்தேன். மரங்களுக்கிடையில் மன்னை தெரிந்தது. பிரம்மாண்டமான தெப்பக்குளம் தெரிந்தது. வளைந்து ஓடும் பாமணி ஆறு தெரிந்தது. ஆற்றங்கரையோர அரசமரம் தெரிந்தது. வேறு என்னவெல்லாம் தெரிந்தது என்று சொல்கிறேன், வாருங்கள்.

தலையை இடது வலதாகப் பெண்டுலமாய்த் திருப்பினால்தான் ஒரு கரைக்கு அடுத்த கரை தெரியுமளவிற்கு மாபெரும் தெப்பக்குளம். மன்னையின் ஹரித்ராநதி. நடுவே சின்னஞ்சிறு தீவுபோலுள்ள மேடான இடத்தில் ஸ்ரீவேணுகோபால ஸ்வாமி ராஜகோபுரமுள்ள ஒரு கோயிலில் சேவை சாதிக்கிறார். உதய சூரியன் கோபுரத்தின் முகத்திலும் சந்தியா காலத்தில் அக்கோபுரத்தின் முதுகிலும் விழும். ரெண்டுமே கொள்ளை அழகு.

”சகுந்தலா.. ஆத்தாவுக்கு ஒடம்பு சரியில்லேன்னியே... டாக்டராத்துக்கு அழைச்சிண்டு போனியா? இல்லே.. எங்காத்துக்கு மைதீன் வந்தார்னா பார்க்கச்சொல்லட்டா?.. ஏதோ வயத்துல சொருகிண்டுடுத்து போல்ருக்கு...” போன்ற விசாரிப்புகளோடு தினந்தோறும் அன்றைய நிகழ்வுகளின் ரீகேப் எங்கள் வீட்டின் வாசல்படியில் பாட்டியின் தலைமையில் சிறப்பாக நடைபெறும். ஜிலுஜிலுவென்று காற்று இதமாக வீசும். அவ்வப்போது தெற்கு வடக்காக உதிரியாய் பயணிகள் அமர்ந்திருக்கும் பஸ்கள் தடதடவென்று விரையும். ”நம்ம தெரு எப்பவுமே ஏகாதேசி தெருதான்... வடக்குத்தெருவுல எல்லாக் கம்பத்துலையும் விளக்கு ப்ரகாசமா கண்ணைப் பறிக்கிறது... இங்க எதுத்தாப்ல யாராவது வந்தா முட்டிண்டு மண்டை ஒடையும்..” போன்ற பொதுப்பிரச்சனைகளும் பேசப்படும்.

“தம்பீ... சித்த அங்கே பார்டா.. மைய மண்டபத்துக்கு மேலே பிறையா தெரியர்து?.. .. மூனாம் பிறையோ.. ஏங்க்கா?”

“ஆங்... போன ஞாயித்துக்கெழேமே அமாவாசை. திங்கள் ஒண்ணு, செவ்வாய் ரெண்டு இன்னிக்கு புதன் மூணு... ம்... மூணாம் பிறைதான்..”

“நாலாம் பிறை கண்ணுக்கு நன்னாத் தெரியும். நா படாத பாடு படறோம்.. அது மட்டும் நன்னா தெரியும்.. ஆனா, விசேஷமான மூனாம் பிறை தெரியவே மாட்டேங்கிறது.. ” என்று அங்கலாய்த்துக்கொள்வாள்.

இந்த இடத்தில் நினைவோடை முடிந்தது. இதற்கெல்லாம் விளக்கமளிப்பதுபோல ஒரு புஸ்தகம் வீகெயெஸ் படிக்கக் கொடுத்தார். சதாபிஷேகம் செய்துகொள்பவர்களுக்கான சகஸ்ர சந்தர பூஜா விதானம். திருனவேலி எஸ். சீதாராமன் தொகுத்து வெளியிட்டது. வேத சாஸ்திர ஜ்யோதிஷத்தில் புலமை பெற்று கர்மயோகியாகத் திகழ்ந்த “ஆண்டி வாத்யார்” என்றழைக்கப்பட்ட T.S. ஸுப்ரம்ஹண்ய ஸாஸ்த்ரிகளுக்கு வந்தனத்துடன். 0462-2330246 என்ற எண்ணில் லோட்டஸ் பிரிண்ட்டர்ஸை அழைத்து ஒரு காப்பி வாங்கிக்கொள்ளுங்கள். சந்த்ரனைப் பற்றிய விவரங்கள் பூர்ணமாக அடங்கிய புஸ்தகம்.

ஜ்யோதிஷ சாஸ்த்திரத்தில் 120 வயது பூர்ணாயுஸ் என்று கணக்கிட்டிருக்கிறார்களாம். ஆனால் 100 வயது வரை வாழ்வதே துர்லபம். என் பாட்டி எண்பளத்தொம்போது வயசு வரை திடகாத்திரமாக இருந்தாள். குளத்தைச் சுற்றி பிரதக்ஷிணம் பண்ணிக்கொண்டு, இருபது படியிறங்கி மங்கம்மா படித்துறையில் ஸ்நானம் பண்ணி, தன் துணியை தானே தோய்த்துக்கொண்டு மடி ஆசாரத்தோடு இருந்தாள். இது பாட்டி கதை இல்லை. பாட்டி காட்டிய சந்த்ரனைப் பற்றியது.

சகஸ்ர சந்த்ர தர்ஸீ சதாபிஷேகம் செய்துகொள்ளலாம் என்று ரிஷிகள் சம்மதித்துள்ளார்களாம். சகஸ்ர என்கிற 1000 முறை சந்த்ரனை தரிசனம் செய்வது பௌர்ணமியைக் குறிக்கிறது. இது 81 வயதில் சித்திக்கிறது என்று கணக்கிட்டிருக்கிறார். எப்படி?
80x 12 = 960 பௌர்ணமிகள். ஒவ்வொரு ஐந்தாண்டிற்கு ஒரு முறையும் 2 அதிமாஸங்கள் வருமாம். அதில் இரண்டு கூடுதல் பௌர்ணமிகள். எண்பதிற்கு 16 அதிமாஸங்கள். 16x2 = 32. ஏற்கனவே 960+32= 992. அப்புறம் ஒரு எட்டு மாதங்கள் எடுத்துக்கொண்டால் 992+8=1000. எண்பது வயது எட்டு மாதங்களில் அந்தப் பெரியவர் சகஸ்ர சந்த்ர தர்ஸீ ஆகிவிடுவார்.

அமாவாசை கழிந்து மூன்றாம் பிறை பரமஸிவனின் சிரசை அலங்கரித்ததாம். அதனாலேயே அவருக்கு சந்த்ரசேகரன் என்றும் சந்த்ரமௌளி என்றழைக்கப்படுகிறார். சதுர்த்தி அன்று விநாயகனைப் பழித்ததால் சந்த்ரனுக்கு சாபமளித்தார் விநாயகர். அவரைப் போற்றித் துதித்து சாபவிமோசனம் பெற்ற சந்த்ரனை சிரசில் சூடிக்கொண்டு பாலசந்த்ரன் ஆனார் அவர். ”நாலாம் பிறையைப் பார்த்துட்டியா.. போய் ஆனந்த விநாயகரையோ.. இல்லேன்னா முக்கில இருக்கிற வரசித்தி விநாயகரையோப் பார்த்து குட்டிண்டு தோப்புக்கரணம் போட்டு நமஸ்காரம் பண்ணிட்டு வாடா..” என்ற பாட்டியின் கட்டளையில் நான்காம் பிறை பார்த்த தோஷத்தை தீர்த்துக்கொள்வோம்.

பரமசிவனைக் கட்டித்தழுவும் போது உமாவுக்கு ஒரே பரவசம். அவர் சிரசில் சூடியிருக்கும் சந்த்ரனைப் பார்த்த நாணத்தால் ஈஸ்வரி தன் தாமரை போன்ற கண்களை லேசாக மூடிக்கொள்கிறாள். சந்த்ரனைக் கண்ட தாமரை தன்னை மூடிக்கொள்வது இயல்புதானே! சர்வேஸ்வரனின் தலையிலிருந்து சுடர்விடும் சந்த்ர ஒளி பட்டுதான் உமையின் தாமரைக் கண்கள் மூடிக்கொள்கிறது.... இப்படியாக புஸ்தகம் முழுக்க சந்த்ரனைப் பற்றிய ஏராளமான விஷயங்கள். நமக்கு உடனே நினைவுக்கு வருவது “வதனமே சந்த்ர பிம்பமோ...”தானே.

”இன்னிக்கு பஞ்சாங்கம் பார்த்தியோடீ பவானி” என்று தினமும் ஒரு முறை விஜாரிப்பாள் பாட்டி. மனோன்மணி விலாஸ் பாம்பு பஞ்சாங்கத்தின் பின்னால் ராமர் கட்டம் சீதா கட்டத்தில் கண்ணை மூடிக்கொண்டு [முன்னரே கண்ணால் உற்றுப் பார்த்ததில்] கைவைத்து “நினைத்த காரியம் ஜெயம்” படிப்பதில் அலாதி இன்பம். அதைத் தாண்டி பல்லி விழும் பலன் பார்ப்போம். ஆனால், பஞ்சாங்கத்தில் தினந்தோரும் திதியை அறிவதால் செல்வம் பெருகுமாம். கிழமையால் ஆயுள் வளரும், நக்ஷத்திரத்தால் பாபம் விலகும், யோகத்தால் ரோகம் அகலும், கரணத்தால் வெற்றி கிட்டுமாம். முனிவர்கள் மற்றும் ரிஷிகளின் வாக்கை ப்ரமாணமாக வைத்துக்கொண்டு கணிக்கபடுவது வாக்ய பஞ்சாங்கமென்றும் சூர்யன், சந்த்ரன் மற்றும் பூமி இவற்றின் ஆகர்ஷண சக்தியால் சந்த்ரனது பாதையில் ஏற்படும் இயக்கநிலை வித்யாசங்களைக் கணக்கிட்டுக் கூறுவது த்ருக் கணித பஞ்சாங்கமாம்.

ஸுக்ல பக்ஷ சந்திரனுக்கு அவனுடைய 15 கலைகள் வளருவதாகவும், க்ருஷ்ண பக்ஷத்தில் அவை கொஞ்சம் கொஞ்சமாகத்தேய்வதாகவும் புராணம். ராமன் சூர்ய வம்சத்தினன். நகுஷன், யயாதி என்ற முன்னோர்களை உடைய கௌரவ பாண்டவர்கள் சந்த்ர வம்சத்தினர்.

அத்திரி மஹரிஷிக்கும் அனுசுயா தேவிக்கும் பிறந்தவர் சந்த்ரன் என்கிற சோமன். சந்த்ரன் தேவகுருவான பிரஹஸ்பதியிடம் அனைத்துக் கலைகளையும் கற்றார். அவருடைய தேஜஸைப் பார்த்து தனது 27 நக்ஷத்திரப் பெண்களை தக்ஷப் பிரஜாபதி சந்த்ரனுக்கு மணம் முடித்து வைத்தார். ஆனால், சந்த்ரன் ரோஹிணியிடம் அதிக அன்பு செலுத்தியதால் மற்ற பெண்கள் தந்தையிடம் முறையிட்டார்கள். வெறுப்பான தக்ஷன் சந்த்ரனுக்கு க்ஷயரோகம் பீடிக்குமாறு சபித்தானாம். இது புராணம்.

சந்த்ர கிரஹணம் விட்ட ஸ்நானம் பண்ணுவதற்கு ஹரித்ராநதியின் மங்கம்மா படித்துறை மதில் கட்டையிலிருந்து குளத்துக்குள் டைவ் அடித்துக் குளித்த அப்பு சார் நீர்க்குமிழியாய் கொப்பளித்து ஞாபகம் வருகிறார். கிரஹணம் விலகிய சந்த்ரனின் ஒளியில் அவர் ஜிட்டுத் தலை குளத்து நீரில் பளபளவென்று தெரியும். அவருடைய எல்லோரும் குளிக்கலாமுக்கப்புறம் அந்தப் படித்துறை தெருவாசிகளால் நிறையும்.

அட! இன்னிக்கு சோம வாரம்!!

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails