Friday, April 4, 2014

பாலகுமாரனுடன் ஒரு சந்திப்பு

”சுகுருன்னா இன்னாபா?” என்று காதருகே ஒரு கிசுகிசுக் குரல். பின்னணி இசை போல “க்ளக்... க்ளக்... க்ளக்..”என்று குதிரையின் குளம்பொலியும் சன்னமாகச் சேர்ந்தே கேட்கிறது.

தலைக்குக் க்ரீடம். இடையில் உடைவாள். கட்டுறுதியான தேகம். முறுக்கிவிட்ட மீசை. ஆள் பார்க்க ராஜாவாட்டம் இருந்தார்.

”நீங்க யாரு சார்?” கேட்கும்போதே சிரிக்கிறேன்.

“ராஜ.......சோழன்” இடைப்பட்ட புள்ளிகளில் சிக்கிய வார்த்தை ராஜவா இந்திரவா என்று கேட்கமுடியாதபடி நகரத்தின் வாகனாதி ஒருவன் “பாம்..”என்று ஹார்னால் எழுத்தை அழித்துக்கொண்டு பறந்தான் ஒரு ப்ரம்மஹத்தி.

“ஓ! மன்னர்மன்னா.... நீங்களா? சுகருன்னு எங்கே கேட்டீங்க?”

“எழுத்தாளர் பாலகுமாரன் சொன்னாரே! நீங்களெல்லாம் அவர் இல்லத்தில் பேசிக்கொண்டிருந்த போது.. கங்கைகொண்ட சோழபுரம் கோவில் கர்ப்பக்கிரஹ வாசல் அகலத்தையும் லிங்கத்தின் ஆவுடையாரின் அகலத்தையும் ஒப்பிட்டுச் சொன்னாரேப்பா... அப்போ...”

“அதுவா? கனக்கச்சிதமாக என்று அர்த்தம்.... எங்களூர் ஆட்டோக்காரர்கள் பாஷை” என்றேன். சிரித்துக்கொண்டார்.

“ஆட்டோக்கள் என்றால்?”

“குதிரை மாதிரி ஒரு வாகனம். குதிரைக்கு கொள்ளு மாதிரி அதுக்கு பெட்ரோல் டீசல் கேஸ்... ஆட்டோ அதைக் குடித்துவிட்டு ஓடும். அவர்தான் ஆட்டோக்களின் முதுகு வாசகமாக “உன் வாழ்க்கை உன் கையில்” என்று திருவாசகம் தந்தார்.”

“ஓ! அற்புதமாக இருக்கிறதே...”

குதிரைக்கு இப்படியும் அப்படியும் வண்டிகள் உரசிக்கொண்டு இழைகிறது. குதிரையிலிருந்து குதித்து இறங்கி பக்கத்தில் சேப்பாயியில் வந்து என்னுடன் அமர்கிறார்.

“நீங்க அவரு சுகரு சொன்னப்பதான் அங்கே வந்தீங்களா?”

“இல்லையில்லை. தயிர்சாதமும், மிக்ஸர் பொட்டலத்துடனும் பெருஆவுடையார் கோயிலுக்குள் நாட்கணக்கில் தவமாக உட்கார்ந்திருந்ததும்.. டார்ச் அடித்துக் கற்சுவர் முழுவதும் தடவித்தடவிப் பார்த்தேன் என்றும் கண்களை மூடிக்கொண்டு மனசுக்குள் ஓடியதைப் பார்த்துச் சொன்னாரே... அப்பவும் அங்கே தான் இருந்தேன். ஆவுடையார் ஒரே கல்லால் ஆனது இல்லை. எட்டு பங்காக இருக்கிறது என்று சொன்னபோது அவரது தலைக்குப் பின்னால் நின்றிருந்தேன்..”

“ஃபுல்லா கேட்டிருக்கீங்க.. அப்போ நாங்க யோகி ராம்சுரத்குமாரை முதல்ல கும்பிட்டோமே.. அதையும் பார்த்தீர்களா?”

“ம்... பெக்கர்... பெக்கர்ன்னு பால்குமார் சொன்னாரே... பெரிய ரைட்டர்.. பெரிய ரைட்டர்... அப்டீன்னு சொல்லிட்டு அவருக்கு மாலை போட்டதையும்.. ம்... அப்போ கூட அந்த மாலையிலிருந்த சம்மந்திப் பூவோட காம்பு கழுத்தில் குத்திச்சும்னு சொன்னாரே....”

“அடேங்கப்பா.. பெக்கர்னு இங்கிலீஷ் வார்த்தையெல்லாம் பேசறீரு.... ”

”ம்... அரபியெல்லாம் கூட பேசுவேன்..”

“அப்புறம் முக்கியமா சொன்னாரே...”

“ஆமாம்.. தான் பெரிய ரைட்டர்னு இருந்த அகம்பாவத்தை அந்த மகான்தான் அறுத்தெரிஞ்சார்ன்னார்... அந்த மாலையோடு அவரை திருவண்ணாமலை வீதிகளில் ஊர்வலமாக அழைத்துக்கொண்டு வந்ததையும்.. வேஷ்டி அவிழும் நிலையில் இருந்ததையும்.. கடைசியில் ஆசிரமத்தில் வந்து யோகியின் காலடியில் விழுந்ததும் அவிழ்ந்த வேஷ்டி போர்வையாய் போர்த்திக்கொண்டதையும்..... சுவரோரத்தில் அரூபமாக நின்ற நான் அழுததை நீங்கள் பார்த்திருக்க முடியாது..”

”ஒற்றர் படை செய்வது போல வேற என்னவெல்லாம் ஒட்டுக் கேட்டீர்....”

“எதிலையும் உண்மையா இருக்கவேண்டும். உழைக்க வேண்டும் என்றும் சொன்னாரே.. அப்புறம் சினிமா என்று எதைப்பற்றியோ சொன்னாரே.. அதென்ன சதிராட்டம் போலா....”

”சினிமாவுக்கு வசனம் எழுதுபவன் வெறுமனே வசனம் மட்டும் எழுதாமல் அதை உச்சரிக்கும் ஏற்ற இறக்கங்களும் சொல்லித்தரவேண்டும் என்று சொன்னபோது அதைக் கேட்டிருக்கிறீர்கள். இல்லையா? அதுவும் பாட்ஷாவில் ”என்ன சொன்னீங்கண்ணே..” என்று கேட்கும் தங்கையிடம் “உண்மையைச் சொன்னேன்..” என்று ரஜினிகாந்த் சொல்வதை...”

“ஆமாம். கேட்டேன். மேலும் சாங் சீக்குவன்ஸ்.......என்று.....”

“சாங் என்றால் பாடல். அதாவது பாடல் காட்சிக்குக் கூட எழுத்தாளனைக் கூப்பிட்டு உட்காரச் சொல்வார்கள் என்று ஜோக்கடித்தார்...”

கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தார் ராஜாதிராஜர். ”அவர் பக்கத்தில் அமர்ந்திருந்த ஒரு பெண் அம்மன்குடியில் சுவற்றில் மாயமாய் மறைந்த ஒரு வயதானவரைப் பற்றியும் கங்கை கொண்ட சோழன் எழுதும்போது ஒரு பாகம் முழுவதும் அவர்கள் பயணித்த வாகனத்திலேயே மூன்றரை மணி நேரம் தொடர்ந்து கதையைச் சொல்லி முடித்ததையும் சொன்னார்களே யார் அவர்?”

“அவர் பாலகுமாரனின் சத்சங்கத்தின் அங்கத்தினர். அவரது எண்ண ஓட்டத்திலிருக்கும் கதைகளையும் புதினங்களையும் அவர் வாயாலேயே கேட்கும் பாக்கியம் பெற்ற புண்ணியவதி. இப்படி சகலசம்பத்துக்களையும் பெற்றதினால் அவர் பெயர் சம்பத்லக்ஷ்மி பாலாஜி!”

“மத்தியானம் சாப்பாடெல்லாம் பலமாக இருந்தது போலருக்கே..”

“செவிக்கு தாராளமாக உணவளித்தபின் வயிற்றுக்கும் வஞ்சனையில்லாமல் ஈந்தார். ஆர்வியெஸ்ஸுக்கு வெண்டைக்கா பிடிக்கும். இன்னும் கொஞ்சம் போடு... என்று உபசரித்ததும் காதில் விழுந்திருக்குமே..”

“ம்.. சாப்பாடு என்று சொன்னதும்.. சட்டென்று ஒன்று ஞாபகம் வருகிறது.. அவர் சொன்னாரே... அது பளிச்சுன்னு பிடிச்சது...” என்றார் மிதமிஞ்சிய பீடிகையாய். க்ரீடத்தை கழற்றி பக்கத்தில் வைத்துவிட்டு ஆசுவாசப்படுத்திக்கொண்டார்.

“என்னதது?” என்று புருவம் உயர்த்தினேன்.

“உள்ளங்கையகல வடை.. எட்டணாவுக்கு ரெண்டு. அல்வா அட்டகாசமா இருந்தது. வாயில போட்டதும் லொடக்குன்னு வயத்துக்குள்ளே போய்டுத்து.. அடடா... அல்வாவை வேஸ்ட் பண்ணிட்டோமே..ன்னு தோணித்து..ன்னு யாரோ சொன்னதாச் சொன்னாரே.. அதுல அல்வா வயத்துக்குள்ள போனதுக்கப்புறம் வேஸ்ட் பண்ணிட்டேனே.ன்னு சொன்ன ஆள் யாருப்பா.. அவராண்டைக் கேட்டுச் சொல்லு... வாயையும் வயிற்றையும் சேர்த்து வகுந்துடறேன்...”

“எப்போதும் உங்கள் குலத்தைப் பற்றிய நினைப்புதான். முப்போதும் சோழர்களின் ஸ்மரணையாகவே இருக்கார். சோழம்...சோழம்.. என்று வாயாரச் சொல்லிக்கொண்டு நீங்கள் கட்டிய கோவில்கள் என்று பார்த்துக்கொண்டு இந்தக் காலத்தில் உங்கள் நூற்றாண்டில் வாழ்ந்துகொண்டிருக்கிறார். நீங்களே நேரடியாகக் கேட்டுக்கலாம். கண் முன்னே காட்சி போல அழகாகச் சொல்வார்... கடைசி வரைக்கும் நீர் அங்கேதான் சுற்றிக்கொண்டிருந்தீரோ?”

“ஆமாம். எல்லோருக்கும் அவரது நூல் இரண்டைப் பரிசளித்து கையெழுத்திட்டுக் கொடுத்தாரே... அதையும்தான் பார்த்துக்கொண்டிருந்தேன்...”

”வீ ஆர் ஹானர்டு...”

“என்னப்பா... என்ன சொல்ற...” என்று பக்கத்திலிருந்த சின்னவள் மானஸா கண்ணுக்கு முன்னால் சொடுக்கினாள்.

அலையலையாய்க் கலைய மீண்டு வந்தேன்

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails