Thursday, November 27, 2014

கணபதி முனி - பாகம் 16 : சுக்லாம்.. பரதரம்.. விஷ்ணும்... ப்ராம்மண ஸ்வாமி......

ஒரு நாள் தனது அத்யந்த சிஷ்யரான விஸ்வநாதனுடன் அருணை மலை ஏறினார் கணபதி. ”ஏனிந்த திடீர் கிரியேற்றம்?”. விஸ்வநாதனுக்கு கேள்வி மண்டையைக் குடைந்தது. மௌனமாகக் குருவைப் பின் தொடர்ந்தார் விஸ்வநாதன். மலையேறுவதின் நோக்கம் சட்டென்று புரியவில்லை. காற்று வீசி தலையைக் கலைக்க விரூபாக்ஷி குகையை வந்தடைந்தனர். கணபதி உள்ளே நுழைந்தார். யாருமில்லாமல் ”ஹோ...”வென்று இருந்தது.

”ப்ராம்மண ஸ்வாமி இங்கேதான் இருப்பார் என்று ஓடிவந்தேன் ..” கண்களைக் குகையைச் சுற்றிலும் இண்டு இடுக்கு விடாமல் தீவிரமாக ஓட விட்டார் கணபதி. ஊஹும். காணவில்லை. சற்று நேரம் இப்படியும் அப்படியும் தேடினார்கள். கீழே அண்ணாமலையாரின் கோபுரம் கம்பீரமாக விண்ணுக்கு வளர்ந்து நிற்பது தெரிந்தது. “சரி.. அவரை அடிவாரத்தில் தரிசிப்போம்...” என்று இருவரும் மலையிலிருந்து விடுவிடுவென்று இறங்கி நேரே பத்மநாபஸ்வாமி ஆஸ்ரமத்திற்கு விரைந்தனர்.

உள்ளே நுழைந்ததும் கண்ணெதிரே கௌபீனத்தோடு ஞானஸ்வரூபமாய் ப்ராம்மண ஸ்வாமி ஒரு மூலையில் சாந்தம் ததும்ப அமர்ந்திருந்தார். அவரைக் கண்ட உடனேயே காசியில் “துர்க்காமந்திர் யோகி” சொன்னது நினைவுக்கு வந்தது. துர்க்காமந்திர் யோகி என்ற நாமகரணத்துடன் சாட்சாத் சிவபெருமானே விஜயம் செய்து கணபதியுடன் பேசியது, கடிதத்தில் கணபதியின் கோட்டோவியத்தை வரைந்தது, போன்ற அற்புதங்களை இத்தொடரை விடாமல் படித்து வருபவர்களுக்கு நியாபகம் இருக்கலாம். அந்த யோகி “ஸ்தூலசிரஸ்” என்று அன்று காசியில் கணபதிக்கு விளக்கிய சன்னியாசத் தன்மைகள் நிரம்பப் பெற்றவராக ப்ராம்மணஸ்வாமி தெரிந்தார். கருணை பொழியும் கண்களுடன் அவரிடம் ஒரு பிரம்ம தேஜஸ் சுடர்விட்டதைக் கணபதி கண்டுகொண்டார். ஆன்மிகத்தின் உச்சத்தில் அவர் தெய்வாம்சமாக அமர்ந்திருப்பது கணபதியின் ஞானக் கண்ணுக்குப் புலப்பட்டது.

யோகிகளும் ஞானிகளும் சத்சங்கமாகக் கூடிய அந்த ஆஸ்ரமத்தில் சிறிது நேரம் இருவரின் கண்கள் மட்டுமே பரஸ்பரம் பேசிக் கொண்டன. சதஸில் நடுநாயகமாக வீற்றிருந்த பத்மநாபஸ்வாமிக்கு கணபதியின் சம்ஸ்கிருத பாண்டித்தியத்தின் அசர அடிக்கும் தன்மை தெரியும். அங்கே நிலவிய மௌனத்தைக் கலைத்து ”கணபதி! சுக்லாம் பரதரம் விஷ்ணும் என்கிற கணேச ஸ்லோகத்திற்கு பாஷ்யம் சொல்லேன்.....” என்று ஆரம்பித்துவைத்தார்.

வெல்லக்கட்டியாய் அந்த விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்ய ஆரம்பித்தார். அன்று ஆஸ்ரமத்தில் குழுமியிருந்தவர்கள் பூர்வ ஜென்மத்தில் மஹா புண்ணியம் செய்திருக்கவேண்டும். அந்த குட்டியோண்டு நாலுவரி பிள்ளையார் ஸ்லோகத்திற்கு நானாவிதமான விளக்கங்களைப் பகிர்ந்துகொண்டார். அக்ஷரம் அக்ஷரமாக நிறுத்திப் பொருள் சொன்னார். பக்தஜனம் பிளந்த வாயை மூடாமல் கேட்டுக்கொண்டிருந்தது. 

இப்பிரசங்கத்திலிருந்து சூட்சுமமாக எழுந்த ப்ரவண ஸ்வரூப விக்னேஸ்வரர் அந்த ஆஸ்ரமம் முழுவதும் ஆக்கிரமித்தார். பத்மநாபஸ்வாமி பக்திப் பரவசமடைந்தார். இந்தக் கூட்டத்தில் சலனமேயில்லாமல் ஒரு மூலையில் ப்ராம்மண ஸ்வாமி சிவனேன்னு அமர்ந்திருந்தார். கொடுத்த விளக்கங்களுக்கெல்லாம் சிகரம் வைத்தார்ப்போல “சுக்லாம் பரதரம் விஷ்ணும்..”மை ப்ராம்மண ஸ்வாமியோடு ஒப்புமைப்படுத்தி அதிரடியான பிரவசனத்தில் இறங்கினார். ஆச்சரியத்தில் கூட்டம் நிமிர்ந்தது.

”கௌபீனம் அணிந்திருப்பதால் அவரே சுக்லாம்பரதரா. முற்றும் உணர்ந்து சர்வவியாபியாக இருப்பதால் அவரே விஷ்ணு. சந்திரனைப் போல ஜொலிக்கிறார். மனம், ஐம்புலன்கள், சிந்தனை, சுயம் ஆகியவற்றை வென்ற சதுர்புஜர். அமைதி கொஞ்சும் முகத்தவராதலால் ப்ரச்சன வதனர். தன்னிடம் சரணாகதியடைந்து தியானிப்பவர்களின் வாழ்வில் இடறும் தடைகளைக் களைகிறார்”

இதைக் கேட்கக் கேட்கப் பக்தர் கூட்டம் பேருவுவகை அடைந்தது. கரவொலி எழும்பி ஆசிரமக் கூரையைத் தட்டியது. எதற்கும் சலனமில்லாமல் அமர்ந்திருந்த ப்ராம்மண ஸ்வாமி சன்னமாக புன்முறுவல் பூத்தார். அகவொளி வாய் வழியே தவழ்ந்து வந்து பளிச்சிட்டது.

சரியாக ஒரு மாதம் கழித்து கணபதியின் மனைவி விசாலாக்ஷியும் ஐந்து வயது மகன் மஹாதேவ சாஸ்திரியும் அருணாசலத்திற்கு வந்திறங்கினார்கள். வந்த கையோடு இருவரையும் அழைத்துக்கொண்டு ப்ராம்மண ஸ்வாமியை ஆசிரமத்தில் தரிசித்து குடும்ப சகிதம் நமஸ்கரித்தார். ஆசீர்வாதம் பெற்றார். ஆனால் இன்னமும் ப்ராம்மண ஸ்வாமியை அவரே கதியென்று முழுச் சரணாகதியடைய கணபதிக்கு உத்தரவாகவில்லை. காலம் உருண்டது. கணபதி திருவண்ணாமலையில் நிலைகொண்டார்.

இதற்கிடையில் கல்பாத்தி ராமஸ்வாமி என்கிற சிஷ்யர் கணபதி அருணாசலேஸ்வரரைத் துதித்து இயற்றிய ஹரசகஸ்ரத்தை அவரது கிராமத்துக்கு படியெடுக்கக் கொண்டு சென்றார். எதிர்பாராத விதமாக அவர் அங்கேயே இறந்துவிட ஹரசகஸ்ரம் தொலைந்து போனது ஏனைய சிஷ்யர்களுக்கும் பக்தர்களுக்கும் பெருத்த ஏமாற்றம்.

*

திருவண்ணாமலையில் தபஸுக்காகத் தங்கியதிலிருந்து முறைப்படி ரிக் வேதம் கனபாடமாகக் கற்கவேண்டும் என்பது கணபதியின் அவா. காதல். வேதத்தைக் கரைத்துக் குடித்த கனபாடிகள் ஒருவரிடம் சேர்ந்து முறைப்படி ரிக் படித்தார். ஒரு வருடத்திற்குள் மனனம் செய்து சப்ஜாடாக மூளைக்குள் ஏற்றிக்கொண்டு அதற்கான பொழிப்புரைகளையும் பலர் எழுதிய பாஷ்யங்களையும் கரைத்துக் குடித்து முழுத் தெளிவு பெற்றார்.

கணபதி இப்போது வேத விற்பன்னராகிவிட்டார். வேதோக்த சடங்குகளைப் பற்றியும் இந்துமத சம்பிரதாயங்களில் ஏற்படும் இன்னபிற சந்தேகங்களையும் நிவர்த்தி செய்வது அவருக்கு முழுநேர வேலையாயிற்று. பஞ்சகச்சமும் கட்டுக்குடுமியுமாக ஒரு சிஷ்யப் பட்டாளம் அவர் பின்னால் எங்கும் சென்றது. அவர் புகழ்பாடவும் சொல் கேட்கவும் ஏராளமானோர் திரண்டனர். இப்போதும் அவரது தவத்தைத் தொடரமுடியாமல் போனது.

சென்னையிலிருந்து சாத்தஞ்சேரி ஏ. ராமஸ்வாமி என்பவர் கணபதியைக் காண பிரத்யேகமாக அருணாசலத்திற்கு ஒரு நாள் வந்திருந்தார். ஹை கோர்ட்டில் கிளர்க் உத்யோகம். பார்த்த கணமே தொபேரென்று நெடுஞ்சாண்கிடையாக கணபதியின் பாதங்களில் விழுந்து சேவித்தார். கணபதியின் பாதாரவிந்தங்களைத் தொடும் போது ராமசாமிக்குள் ஒரு இனம்புரியாத மகிழ்ச்சி பொங்கியது. பூரணமான ஏதோ ஒன்று உள்ளத்தை மொத்தமாக நிறைத்தது. ஜென்மஜென்மாந்திரமாகப் பழகிய அத்யந்தர் ஒருவரை ஸ்பரிசித்தது போல உள்ளம் இனித்தது. பரமானந்தத்தில் திளைத்து தன்னை சிஷ்யனாக்கிக்கொள்ளும்படி விஞ்ஞாபனம் செய்தார். அவருடைய அதிர்ஷ்டம் “சரி.. ” என்று கணபதியும் உடனே ஒத்துக்கொண்டார்.

அவ்வப்போது இருவரும் விஸ்ராந்தியாக உட்கார்ந்திருக்கும் வேளைகளில் கோர்ட் ராமஸ்வாமியின் பூர்வாசிரமக் கதைகளைக் கேடறிந்தார் கணபதி.

“எனது பாட்டனார் பக்திப் பழம். இஷ்ட தெய்வங்களைத் துதித்து ஏராளமான கிருதிகளை இயற்றியுள்ளார். பல உபநிஷத்துக்களுக்கு ஆளை இழுத்துப்போடும் பாஷ்யங்களை எழுதியுள்ளார். தியோசாஃபிகல் சொஸைட்டியினர் அதை அச்சிட்டு வெளியிட்டுள்ளனர். உபநிஷத் ப்ரம்மம் என்றே அவரை ஊர் அழைத்தது. தியாகப்ரம்மத்தின் தகப்பனாரின் ஸ்நேகிதர் அவர். தியாகராஜர் காஞ்சி விஜயத்தின்போது உபநிஷத் ப்ரம்மத்தின் ஆஸ்ரமத்தில் இளைப்பாறினார்...”

இவ்வாறாக பழைய ருசிகரமானச் செய்திகளை பகிர்ந்துகொண்டிருக்கும் போது ராமஸ்வாமிக்கு கணபதி முனி போன ஜென்மத்தில் தனது பாட்டனார் உபநிஷத் ப்ரம்மம்தான் என்று ஏனோ மனசில் பட்டது. அதுவே சத்தியம் என்று தீர்மானித்தார்.

”ஸ்வாமி! எங்கள் பாட்டனாரே உங்கள் ரூபத்தில் இப்புவியில் அவதரித்திருக்கிறார் என்று எனக்குப் படுகிறது. அவரது ரத்தசம்பந்த சந்ததியினாரன எங்களுக்கு உங்கள் அருளாசி வேண்டும். மேலும் எனக்கும் மந்திர தீக்ஷை அளித்து காத்தருள பணிகின்றேன்” என்று கைகூப்பி காலடியில் அமர்ந்தார். அவருக்கு கணபதி ”கணேச மந்திர” தீக்ஷை அளித்தார்.

இதிலிருந்து பிரதி மாதம் ராமஸ்வாமி ஐயர் சென்னையிலிருந்து அருணாசலத்திற்கு வந்து கணபதியை தரிசிப்பதை வழக்கமாக்கிக்கொண்டார். ஒவ்வொரு முறையும் “நீங்கள் ஒரு முறையாவது சென்னைக்கு எங்கள் அகத்துக்கு எழுந்தருள வேண்டும்.” என்று கைகூப்பி அன்பொழுக அழைப்பார். அதற்கு இசைந்து ஒரு முறை கணபதி சென்னைக்கு வந்தார். ராமஸ்வாமி ஐயரின் அம்மா தொண்டு கிழம். கூன். கண் பார்வை போய் பல வருடங்களாகிவிட்டது. கணபதியின் காலில் விழுந்து நமஸ்கரித்தார்.

ராமஸ்வாமியின் கையைத் தொட்டுக் கூப்பிட்டு “பல வருஷத்துக்கு மின்னால் இந்தத் திருவடியின் ஸ்பரிசத்தை உணர்ந்திருக்கிறேன்” என்று சொன்னபோது அவருக்கு மயிர்க்கால்கள் குத்திட்டு நின்றன. உபநிஷத் ப்ரம்மம்தான் கணபதியாக அவதரித்திருக்கிறது என்பதை தெய்வசாட்சியாக நம்பினார். முதிய அன்னையை விட்டு அகல மனமில்லாததால் தூர பிரதேசங்களிலிருந்து வந்த பல உயரிய பதவிகளை உதறினார் ராமஸ்வாமி ஐயர். இத்தகைய தாய் பக்தியைக் கண்டு ராமஸ்வாமியை மெச்சினார் கணபதி.

கணபதி முனியின் வருகையை அறிந்து அடுத்த நாள் பஞ்சகச்சமும் குடுமியுமாக மூவர் ராமஸ்வாமி ஐயரின் கிரஹத்துக்கு வந்தனர். அதில் டாம்பீகமாக இருந்தவர் பஞ்சாபக சாஸ்திரி. வக்கீல் தொழில். தேஜஸாக இருந்தவர் வேதம் வெங்கடராய சாஸ்திரி. புகழ் பெற்ற சம்ஸ்க்ருத பண்டிட். மூன்றாமவர் பெஸ்ட் அண்ட் கோ அதிபர் தண்டலம் சுப்ரமண்ய ஐயர். எல்லோரும் பல சமாசாரங்களைப் பேசிக் கொண்டிருக்கும் போது கணபதி ஒரு சம்ஸ்க்ருத ஸ்லோகத்தை மடமடவென்று மாரியாகப் பொழிந்தார்.

அது....

வீல் சேர்

பரபரப்பான மாலை. மௌண்ட் ரோடில் இம்மி பிசகாமல் வண்டி ஓட்டவேண்டிய கட்டாயம். மென்னியை முறிக்கும் ட்ராஃபிக். காலை அகட்டி ப்ளாட்ஃபாரமோரம் நின்றாலும் சந்து கிடைத்த கேப்பில் ஆட்டோகாரர் நுழைந்துவிடுவார். சாந்தி, தேவியெல்லாம் தாண்டிய திருப்பம். அஸெம்பிளியாகப் பிறந்து ஹாஸ்பிடலாக உருமாறியக் கட்டிடத்தின் எதிர் கரை. ”அப்டி ஓரமா நில்லுங்க.. ரொம்ப நாளி நின்னா டோ பண்ணிட்டு போயிருவேன்...” கண்டிக்கும் சார்ஜெண்ட். சர்ஜிகல் கடைகளின் மும்முரமான வியாபார நேரம்.

“வீல் சேர் ஒண்ணு வேணும்.”

“இதோ இங்க இருக்கு பாருங்க.. இப்படியா? இல்ல வேற மாடலா?”

“இது ஓகே.. வேற என்னவெல்லாம் மாடல் இருக்கு?”

“ஆள் எப்படி இருப்பாங்க..”

“ஒல்லியாதான் இருப்பாங்க.. ஆனா பெரிய வீல் வச்சது வேணாம்...”

“இருங்க கொண்டாரேன்..”

அவர் கொண்டு வருவதற்குள்...
கார்வண்ணமாக இருந்தார். வயது: ஐம்பதுகளின் கடைசியில் இருப்பார். முன் பக்கம் பளபளப்பாகச் சொட்டை விழுந்திருந்தது. அரைவாசி மீதமிருந்த பாகத்தில் முளைவிட்ட முன்னூறு மயிர்களை நாலாபக்கமும் பரவவிட்டு கபாலத்தைக் கவனமாக மூடியிருந்தார். சிரித்த முகம். முன் காலில் தையல் போட்ட கறுப்பு ஷூ. சலவை செய்த ஷர்ட் பேண்ட். இதோ வந்துவிட்டார்.

“ம்.. இதைப் பாருங்க.. சின்ன வீலு. காத்தெல்லாம் அடிக்க வேண்டாம். இம்போர்டட். மலேசியா ப்ராண்டு.”

“ஸ்டாப்பர் இருக்கா?”

“ம்.. பின்னால பிடிச்சு.. இதோ.. இங்கப் பாருங்க.. இப்படி அழுத்தினா வீல்ல ப்ரேக் பிடிச்சுடும்.”

“இதை எப்படி மடக்குவீங்க?”

“பின்னால இருக்கிற இந்த லிவரை அழுத்தினீங்கன்னா... முதுகு சாயிற பக்கம் பின்பக்கம் கவுந்துடும். அப்புறம் உட்கார்ற இடத்துல நடுப்பற கீழே அழுத்தினா ரெண்டு கையும் உள்பக்கம் மடங்கிடும். அப்படியே மடிச்சுத் தூக்கி கார்ல, பஸ்ல, ஃப்ளைட்லன்னு எங்க வேணா தூக்கிக்கிட்டுப் போவலாம். எட்டு கிலோ தான் மொத்த வெயிட்டு...இதோ இப்படி ஒத்தைக் கையால தூக்கலாம்.. ”

கிட்டத்தட்ட அசராமல் அரை மணி நேரம் வீல் சேரைப் பற்றி பிரசங்கம் செய்தார். இடையிடையே யாருக்கு வாங்குறீங்க? கொஞ்சமாவது நிப்பாங்களா? எவ்ளோ தூரம் தள்ளணும்? அடிக்கடி வெளியில கூட்டிக்கிட்டுப் போவீங்களா? டாய்லெட்டு எந்திரிச்சு போவ முடியுமா? இல்லேன்னா கம்மோடு வச்சுத் தரட்டா? போன்ற தேர்வு செய்வதற்கு ஒத்தாசையானப் பல கேள்விகள்.

“கைப்பிடியில ஏதோ பெயிண்டு போன மாதிரி இருக்கே. பரவாயில்லையா?”

“சரியாத்தான் இருக்கு. டெஸ்ட் பண்ணி எடுத்தாந்தேன்... “

“வேற பீஸு இல்லையா?”

“சரி.. நீங்களும் கூட வாங்க.. பார்க்கலாம்...”

பல சைஸ் அட்டை பெட்டிகள் கோபுரமாய் அடுக்கியிருந்த ஸ்டோர் ரூமில் இன்னொரு வீல்சேர் பாக்கெட்டைப் பிரித்தார். நிமிர்த்தி உட்காரவைத்தார். கைப்பிடி சரியாக உட்கார அடம்பிடித்தது. டக்டக்கென்று அசைத்தார். ஊஹும்.

“சொன்னேன்ல.. அது நல்ல பீஸு.. ஒரு பொட்டு பெயிண்டு போனா பரவாயில்லை... இதுல கைப்பிடியே நிக்க மாட்டேங்குது.. உருவிடுச்சுன்னா?”

”சரி.. அதையே எடுத்துக்கறேன்..”

மீண்டும் ஒருமுறை வீல்சேரை டெஸ்ட் செய்தார். பில் போட்டார்.

“கார்ல வந்தீங்களா?”

”ஆமாங்க..”

”கொண்டு வந்து தரட்டுங்களா?”

“இல்ல பரவாயில்லை... நானே தூக்கிட்டு போறேன்...”

“கூடிய சீக்கிரம் எந்திரிச்சு நடப்பாங்க.. கவலைப்படாதீங்க...”

திரும்பிப்பார்த்தேன்.

சிரித்தார். கடைக்குள்ளே திரும்பினார். அப்போதுதான் கவனித்தேன்.
வலதுகாலை லேசாக இழுத்துக்கொண்டு நடந்தார்.

ஆண்டவன் அதற்குமேல் அவரைச் சோதிக்கமாட்டான் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

கொலு டூர் 2014‬

”வெத்திலைப் பாக்கு வாங்கிக்க...” என்று வீடு வீடாக விஸிட் செய்யும் விருந்தின சம்பிரதாயம் ஒன்று கொலுக் காலங்களில் வழக்கில் உண்டு. ஹோம் மினிஸ்டரை அழைத்துச் செல்லும் இல்லங்களில் மினி ஜாங்கிரி, ஹல்டிராம்ஸ் சோன்பப்டி, ஒரு வாய் காஃபி, தட்டை, கொ.கடலை சுண்டல் என்று வண்டியோட்டிய நமக்கும் ஒரு ப்ளேட் சன்மானமாகக் கிடைக்கிறது.
அத்யந்த நண்பர்கள் சிலரின் வீடுகளுக்கு செல்லும் பாக்கியம் கிடைத்தது. ஐந்து படி, ஏழு படி, டைனிங் டேபிள் மற்றும் ஸ்டூலுடன் சேர்த்து ஒன்பது படி என்று விதம் விதமான கொலுக்கள். தேவாதி தேவர்கள் பல ரூபத்தில் காட்சி தருகிறார்கள். பார்த்த முக்கால்வாசி கொலுவில் சீரியல் பல்பை சிவன் கழுத்தில் பாம்பாகப் போட்டிருக்கிறார்கள். செட்டியார் முன் அரிசி, புளி, பருப்பு வகையறாக்கள் சொப்பு சாமான்களில் வைத்திருக்கிறார்கள். அஷ்டலக்ஷ்மி அநேகமாக எல்லா வீட்டிலும் கொலுவீற்றிருக்கிறார்கள். படிக்கொரு பிள்ளையார் வீற்றிருக்கிறார். இடுப்பில் கையோடு பாண்டுரங்கர், லக்ஷ்மி நரசிம்மர், அர்த்தநாரி, மரப்பாச்சி.... ப்ளாஸ்டிக் சம்படமாவது கட்டாயம் கிஃப்ட்டாக உண்டு.
நண்பர் சத்யாவின் வீட்டில் பசங்களுக்கு ஐஸ்க்ரீம் சுண்டல். யாருக்கு எப்படி வலைவிரிப்பது என்பது சத்யாவிற்கு கைவந்த கலை. சத்யாவின் கடைக்குட்டியை ”சு...ரு..தி..” என்று கொண்டை வைத்த வடிவேலு மாதிரி அழைத்து என் உள்ளத்தில் மகிழ்ச்சியை நிரப்பிக்கொண்டேன். சங்கீதாவின் ஸ்நேகிதி வீட்டில் ஒன்பது படி. படியோரங்களில் ஜிகினா பேப்பர் ஒட்டி ஜிலுஜிலுவென்று இருந்தது கொலு. என் புத்ரிகளின் திருப்புகழ் கச்சேரி அமோகமாக நடந்தது. அப்போது அங்கு வந்திருந்த சக ”வெத்திலைப் பாக்கு வாங்கிக்க...” பார்வையாளர் தம்பதி சமேதராகத் திருவேங்கடமுடையானைப் பற்றி அற்புதமாகப் பாடினார். செவிக்கின்பம்.
“எங்கப்பா தொன்னுத்தெட்டு வயசு வரைக்கும் இருந்தார். கடேசி வரைக்கும் டென்னீஸ் கிரிக்கெட்ன்னு விளையாடிண்டு, கேரம்ல ரெட் அண்ட் ஃபாலோ பாக்கெட் பண்ணிண்டு திடகாத்திரமா இருந்தார்...” என்று அவர் சொன்னபோது மனசுக்குள் ஒரு முறை பௌலிங் செய்ய ஓடிப்பார்த்தேன். மூச்சு வாங்கி இரைத்தது. சொன்னவர் முகத்தில் அப்படியொரு பெருமிதம். ”பாரதம்... ராமாயணம்னு டிஸ்கஸ் பண்ணுவோம். கம்பீரமா பேசுவார். பியெஸ்ஸி பிஸிக்ஸ் படிக்கறச்சே கூட அடி வாங்கியிருக்கேன்...” என்று காலர் தூக்கிக்கொள்ளும் பெருமையாகச் சொன்னார்.
திருமதி கோமதி ராஜாராம் அவர்களது வீட்டில் மனோகரமான ராதேகிருஷ்ணர் வரவேற்றார். திருவாளர் ராஜாராமிற்கு சங்கீதத்தில் அப்படியொரு லயிப்பு. வயலின், கீபோர்டு, மிருதங்கம் என்று இழுத்தல், அமுக்குதல், தட்டுதல் வாத்தியங்களைப் பூஜை போட்டு வைத்திருந்தார். நந்தினி”அம்பா தர்மசம்வர்த்தினி..” பாட நீல்கமல் ப்ளாஸ்டிக் சேரில் தாளமிட்டு அவரது வாசிக்கும் ஆசையை பூர்த்திசெய்துகொண்டார். அவரது வீட்டில் பைரவ் கூட வாலாட்டி “ஊஊஊ...” என்று ராகம் பாடுகிறது. மனைவிக்கு வெத்திலைப் பாக்கோடு எனக்கு தசமஸ்கந்தம் பரிசாகக் கொடுத்து என்னை மகிழ்ச்சியின் உச்சியில் உட்காரவைத்தார். இன்னும் நான் அங்கிருந்து இறங்கவில்லை.
அண்ணாத்தே சுரேஷ் சீனுவின் சென்னை வீட்டைச் சுற்றிலும் மன்னை மாந்தர்கள். மந்தக்காரத்தெரு மாமி ஒருவரைப் பார்த்தேன். ”ஊர்க்காராளைப் பார்த்ததும் ஊருலகம் மறந்து போயிடுமே..” என்று லேட்டாக வீடு திரும்பும்போது இடி வாங்கினேன். கீதா மன்னி அவர்கள் அவரது தந்தையார் திரு. வ.சா.நாகராஜன் கல்கி, கலைமகள் போன்ற பத்திரிகைகளில் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு புஸ்தகம் கொடுத்தார்கள். நான் பிறப்பதற்கு முன்னதாக கலைமகளில் வெளிவந்த “அவர் சிரிப்பு” படித்தேன். ஒரு ஹானஸ்ட் ஆஃபீஸரின் கதை. சுருக்கென்று எழுதியிருந்தார் வ.சா.நா. மனசைத் தைத்தது. கல்கியில் வெளிவந்த ”மோர்க் குழம்பு” குடிக்கணும். சாரி படிக்கணும்.
நான் பார்த்து வளர்ந்த குழந்தை, எங்களூர் மாணிக்கம் சௌமி சென்னையில் வைக்கும் முதல் கொலு. டிசம்பரில் குட்டிக் கிருஷ்ணனோ, ராதையையோ எதிர்பார்க்கும் நேரத்திலும் ஐந்து படிக்கு கொலு வைத்து சுண்டல் செய்கிறது. பார்ப்பதற்கு மகிழ்ச்சியும் பூரிப்பும் வருகிறது. ஊரிலிருந்து சௌமியின் 90+ பாட்டியும் வந்திருந்தார். என் பாட்டியின் செட். என் பாட்டிக்கும் சேர்த்து அப்பாட்டியை நமஸ்கரித்து ”தீர்க்காயுசா இருக்கணும்டா தம்பி...” ஆசீர்வாதம் பெற்றேன்.
இது போன்ற கொலு விஸிட்களில் நிறைய பாட்டிகளையும் தாத்தாக்களையும் சந்தித்து உரையாடும் சந்தர்ப்பம் கிடைக்கிறது. தங்களது காலத்து சம்பிரதாயங்களை விடாமல் நிறைவேற்றும் வைராக்கியத்துடன் இருக்கிறார்கள். பரஸ்பரம் பரிசுப் பொருள் பரிமாறிக்கொள்ளும் மகிழ்ச்சி கிடைக்கிறது. ஒவ்வொரு வீட்டின் பழக்க வழக்கங்களும் மரபுகளும் அறியக் கிடைக்கிறது. அனைத்துக்கும் மேலாக எப்போதும் சார்த்திக் கிடக்கும் பட்டணத்து வீடுகளின் கதவுகள் கூட விசாலமாகத் திறந்துகொள்கிறது.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails