Thursday, November 27, 2014

கணபதி முனி - பாகம் 17 : சம்ஸ்க்ருத ஸாகரம்

கணபதி சம்ஸ்க்ருதத்தில் வர்ஷித்த ஸ்லோகம்....

ஸ்யாது ஸர்வஞ ஸிரோமணி தீதிதி தோஷப்ரதர்ஷநேபி பது:
பவதாம் ஸங்க: ஸங்கர ஹரிணத்ருஸோ ஹாஸநா ஸாஸ்த்ரி

தீதிதி என்கிற ந்யாய சாஸ்திரத்திலேயே பிழை காணும் பாண்டித்தியம் கொண்ட இந்த சாஸ்திரி உங்களுடைய சந்தேகங்களை நிவர்த்தி செய்யட்டும் என்கிற பொருளில் அமைந்த இந்த ஸ்லோகத்தில் உள்ளர்த்தமாக இன்னொன்றும் உள்ளது. அம்பிகையின் புன்னகையை ஒப்புமைப்படுத்தும் ஒரு அற்புத விளக்கம். உதட்டில் புன்னகை தவழும் மான்விழியாள், சிவனின் வாமபாகமானவள், அவனது செஞ்சடையில் ஒளிரும் சந்திரகலையில் படிந்த கறையைக் காட்டுபவள், குருவாகயிருந்து உங்களது சந்தேகங்களைத் தீர்க்கட்டும்.

இருபொருள்படும்படிச் சிலேடையாக அமைந்த ஸ்லோகத்தில் சம்ஸ்க்ருத பண்டிதர்கள் வாயடைத்து ஸ்தம்பித்துப் போயினர். வெங்கட்டராய சாஸ்திரியைப் பற்றி கணீர்க் குரலில் கணபதி பாடிய இந்த ஸ்லோகத்தில் மயங்கிய தண்டலம் சுப்ரமண்ய ஐயருக்கு இன்னொரு ஆசை பொத்துக்கொண்டு வந்தது. கைகூப்பிக் கேட்டார்...

“சர்வேஸ்வரனான சிவபெருமான், ஜெகதீஸ்வரீயான அவரது பத்னி பார்வதி அவர்களது புத்திரர்களான கணபதி, சுப்ரமண்யர் என்று அந்த தெய்வக்குடும்பத்தைப் பற்றி ஒரே ஸ்லோகத்தில் எழுதினால் பரம சந்தோஷமடைவோம்...” என்று கணபதியிடம் விண்ணப்பித்தார். பக்கத்திலிருந்தவர்களும் அதை பலமாக ஆமோதித்தார்கள்.

அவர் கேட்டு வாயை மூடுவதற்கு முன் கணபதி ப்ரவாகமாக இன்னொரு ஸ்லோகம் சொல்ல ஆரம்பித்தார்.

ஜகதீதர ஜாமாதா பவதாம் பவ்யாய பூயஸே பவது
கஞ்சிதகிஞ்சநமபி யதிவீக்ஷா விததாதி ஸக்ரஸமம்

வந்திருந்தவர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்தது இப்பாடல். வார்த்தைகள் துள்ளி விளையாடியதைக் கண்டு அசந்து போனார்கள்.

ஜகதீதர ஜாமாதா: (இமய)மலையின் மாப்பிள்ளை - சிவன்.
ஜகதீதரஜா மாதா: மலையவன் ஹிமவானின் மகளான அம்மா - பார்வதி. (அல்லது) இரு பிள்ளைகளுக்கு அம்மாவான ஹிமவான் புத்ரி. அவளின் கருணா கடாக்ஷம் ஆண்டியைக் கூட இந்திரலோகமாளச் செய்யும். அவளது பூர்ணமான அருள் கிடைப்பெறுக.

மூவரும் இந்த ஸ்லோகத்தை கணபதியின் அருட்பிரசாதமாக எழுதிக்கொண்டனர். “சென்னையிலேயே இன்னும் இரண்டு நாட்கள் தாங்கள் தங்க வேண்டுகிறோம்” என்று கணபதியிடம் கைகூப்பினர். அவர் வேறு சிந்தனையில் ஆழ்ந்திருந்தார். “சிறு விழா ஏற்பாடு செய்து உங்களை சிறப்பிக்க எண்ணுகிறோம்” என்று அவரது சிந்தனையை உலுக்கியதும் சட்டென்று மௌனம் கலைத்து ”பள்ளியின் விடுமுறையில் வருகிறேன்” என்று கைகூப்பி அனுப்பிவைத்தார்.

அவர்கள் சென்றதும் ரகுவம்ஸம் குமாரஸம்பவம் போன்ற சம்ஸ்க்ருத காவ்ய புஸ்தகங்களைப் புரட்டிக்கொண்டிருந்தார். சற்று நேரத்தில் வாசலில் நிழலாடியது. அது ரங்கையா நாயுடு. தலைக்கு கோபுரமாக டர்பன் கட்டியிருந்தார். ராமசாமி ஐயரின் ஸ்நேகிதர். சென்னை கிருஸ்துவக் கல்லூரியில் தெலுங்கு ப்ரொபஸர். அவருடன் இன்னொருவரும் வந்திருந்தார்.

“வணக்கம். நான் ரெங்கையா நாயுடு..” கணபதியிடம் கை கூப்பினார்.

“வணக்கம்” தீர்க்கமான ஒரு பார்வையை அவர் மேல் மேயவிட்டார் கணபதி.

“இவரும் ரெங்கையா நாயுடு. என் ஸ்நேகிதர்” இன்னொருவரும் “வணக்கம்” என்றார். ப்ரொபஸர் ரெங்கையா நாயுடுவின் நண்பராகக் கூட வந்த ரெங்கையா நாயுடுவிடம் ஒரு ஓலைச்சுவடிக் கட்டு இருந்தது. பல சம்ஸ்க்ருத பண்டிட்டுகளிடம் அந்த ஏடுகளைப் பிரித்துக் காண்பித்து அர்த்தம் கேட்பார். தெரியவில்லை என்று உதடுபிதுக்குபவர்களை எள்ளி நகையாடி அந்த இடத்தைக் காலி செய்வார். இப்படி அவனமாப்பட்டவர்கள் டஜனுக்கு மேல். இது அவரது வாடிக்கை.

அவரது கையிலிருந்தது புஷ்டியான மருத்துவ குறிப்புகள் அடங்கிய ஓலைச்சுவடி. மருத்துவம் மட்டும் தெரிந்தவர்களுக்கு நுணுக்கமான சம்ஸ்க்ருத அர்த்தங்கள் புரிவதில்லை. சம்ஸ்க்ருதம் மட்டும் அறிந்தவர்களுக்கு நுட்பமான மருத்துவக் குறிப்புகள் கண்ணைக் கட்டும். இப்படி ஒரு இக்கட்டான ஸ்லோகங்களை வைத்துக்கொண்டு பல சம்ஸ்க்ருத பண்டிட்டுகளின் மானத்தை வாங்கி குரூர திருப்தி பட்டுக்கொண்டிருந்தார் இந்த ரங்கையா நாயுடு.

ப்ரொபஸர் ரெங்கையா நாயுடு கண்பதியிடம் சம்பிரதாயமாக க்ஷேமலாபங்களை விசாரித்து முடித்தவுடன் கூட வந்த ரெங்கையா நாயுடு அவரது விஷமத்தனத்தை ஆரம்பித்தார்.

“அகிலமே போற்றும் தங்களது சம்ஸ்க்ருத பாண்டித்தியத்தைப் பற்றி நானறிவேன். உமது நாவில் சரஸ்வதி தாண்டவமாடுகிறாள்.” என்று பீடிகையோடு ஆரம்பித்தார். சரி..சரி.. விஷயத்துக்கு வாரும் என்றது சம்ஸ்க்ருத சிம்மமாக அமர்ந்திருந்த கணபதியின் கண்கள்.

“எனது தாத்தன் பூட்டன் காலத்து பொக்கிஷமாக ஒரு ஓலைச்சுவடிக் கட்டு இருக்கிறது. அதிலிருக்கும் ரகஸியங்களை அறிந்துகொள்ள பலநாட்களாக தவம் கிடக்கிறேன். பலரிடம் கேட்டுப் பார்த்துவிட்டேன். ஊஹும். பொருள் சொல்வார் யாருமில்லை. தாங்கள் தான் உதவ வேண்டும் ஸ்வாமி” என்று கள்ளச் சிரிப்போடு அந்தக் கட்டை நீட்டினார் ரெங்கையா நாயுடு. கணபதி உள்ளுக்குள்ளே சிரித்துக்கொண்டார்.

முதல் சுவடிலிருந்து முற்றும் சுவடு வரை அந்தக் கட்டை முழுமூச்சாகப் படித்தார். அரைமணிகூட ஆகவில்லை. கட்டை மூடி விட்டுத் தலையை நிமிர்த்தி ”ஊம் உங்களது சந்தேகங்களைக் கேளுங்கள்...” என்றார் கணபதி. ரெங்கையா நாயுடுவுக்கு ஆச்சர்யமான ஆச்சர்யம். “எனது கேள்விக்கான பதில்கள் அந்த ஸ்லோகத்தோடு இணைத்திருக்கும் பொருளோடு ஒத்திருக்கவேண்டும்”. “ம்.. நிச்சயமாக...” என்றார் தெய்வீகச் சிரிப்போடு கணபதி.

கேள்விகள் படபடவென்றுக் கேட்கப்பட்டன. ரெங்கையா நாயுடு வாயை மூடுவதற்குள் பதில்கள் சுடச்சுட பறந்தன. ப்ரொஃபஸர் ரெங்கையா நாயுடு விழிவிரிய நடுவில் உட்கார்ந்திருந்தார். கேள்வி கேட்ட ரெங்கையா நாயுடுவுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அரை மணிக்குள் நூற்றுக்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிகளை எப்படி புரட்டிவிட முடியும். அப்படியே புரட்டினாலும் கேட்கப்படும் எந்தக் கேள்விக்கும் மின்னல் போல பதிலளிக்க முடியுமா? அதிசயம். அபூர்வம்.

“ஒரே புரட்டலில் எப்படி இது சாத்தியம்?” என்று கேட்டார் ரெங்கையா நாயுடு. ஓலைச்சுவடி கட்டு கொண்டுவந்தவர். “இந்த கட்டில் இருக்கும் எல்லாவற்றையும் கூட என்னால் அக்ஷரம் பிசகாமல் சொல்லமுடியும். செய்யவா?” என்று ஆரம்பிக்க எத்தனித்தார் கணபதி. அப்படியே சாஷ்டாங்கமாக தெண்டனிட்டார் ரெங்கையா நாயுடு. “நீர் ஒப்பற்ற பண்டிட். உமது சிறப்புக்கும் பாண்டித்யத்துக்கும் ஈடு இணை இங்கே யாருமில்லை.” என்று புளகாங்கிதமடைந்தார். ப்ரொபஸர் ரெங்கையா நாயுடு உச்சி குளிர்ந்திருந்தார். ”ராமசாமி ஐயருக்கு நெஞ்சார்ந்த நன்றி சொல்லவேண்டும். இப்படியாகப்ட்ட உன்னத மனிதரை எனக்கு அறிமுகம் செய்துவைத்திருக்கிறார்...” என்று உவகை கொண்டார்.

இந்த சம்ஸ்க்ருத வித்தையைக் காட்டிவிட்டுக் கணபதி அருணைக்குத் திரும்பினார்.

நரசிம்ம சாஸ்திரி கண்பார்வைக் கோளாறை சொஸ்தப்படுத்தும் நிமித்தம் சென்னைக்கு வந்தார். கணபதியின் ஸ்நேகித வட்டம் அவர் மீண்டும் சென்னை வருவார் என்று ஆவலோடு எதிர்பார்த்தார்கள். ஆனால், கணபதிக்கு அவரது தந்தை வருவது பற்றித் தெரியாது. சிகிச்சை முடிந்து அவர் திருவண்ணாமலை சென்றார். நேரே ப்ராம்ண ஸ்வாமியைச் சென்று தரிசித்தார். திரும்பும் பொழுது கணபதி தனது தந்தையுடன் சென்னை வரை வந்தார்.

நரசிம்ம சாஸ்திரி கலுவராயிக்கு ரயிலேறியபின், ராமஸ்வாமி ஐயரின் வீட்டிற்கு வந்தார். அவரது இல்லம் ஒரு சின்னத் தீப்பொட்டியாக இருந்தது. பார்வையாளர்கள் போக்குவரத்து அதிகரிக்க பக்கத்தில் எஸ்.துரைசாமி என்கிற சட்டக்கல்லூரி மாணவரின் இல்லத்தில் பகல்பொழுதைக் கழித்தார் கணபதி. வரும் ஆர்வலர்களின் சந்தேககங்களுக்கும் கேள்விகளுக்கும் அவர்களைப் புண்படுத்தாமல் கணபதியளிக்கும் விளக்கங்களும் அவரது தளர்வுறாத சோர்வுராத திடகாத்திரமும் துரைசாமிக்கு பேராச்சிரிய்த்தை அளித்தது. இத்துடன் ஒரு முறை கேட்ட ஐந்தாறு பக்க பாடல்களையோ கட்டுரைகளையோ மீண்டும் சொல்லும் கணபதியின் திறனைக் கண்டு அவரொரு வணங்கத்தக்க தெய்வப்பிறவி என்று நினைத்தார் துரைசாமி.

ஒருநாள் துரைசாமி தனது நண்பர்களுடன் கணபதியின் சம்ஸ்க்ருத வித்வத்திற்கு பரீக்ஷை வைத்துப் பார்க்க எண்ணினார். கால்சராயும் சட்டையுமாக ஒரு கூட்டம் அவரை சூழ்ந்துகொண்டது. கணபதிக்கு முதலில் பவ்யமாகத் தாம்பூலம் தந்தார்கள். “எனக்கு தாம்பூலம் தரித்துப் பழக்கமில்லை...” என்று தடுத்தார் கணபதி. “ஓஹோ. சரி பரவாயில்லை. உங்களால் ஒரே ஸ்லோகத்தில் தாம்பூலத்தின் நன்மை தீமைகளைப் பற்றிப் பாட முடியுமா?” என்றனர். தொணியில் சவால் தொக்கியிருந்தது.
இசைந்தார். பாடினார்.

ஸுதாதிக்யம் ஸ்ப்ருஹேச்சரத்ரு: ப்பலாதிக்யம் ஸ்ப்ர்ஹேத்பிஷக்
பத்ராதிக்யம் ஸ்ப்ரஹேஜ்ஜாயா மாதா து த்ரிதயம் ஸ்ப்ருஹேத்.

(உன்) வாய் வெந்து போவதால் எதிரி சுண்ணாம்பையும், (உனக்கு) இரத்த சோகையை ஏற்படுத்துவதால் மருத்துவர் பாக்கையும், (உன்) இச்சையைத் தூண்டுவதால் மனைவி வெற்றிலையையும், இம்மூன்றையும் சம அளவில் கலந்து (நீ) தாம்பூலம் தரிப்பதை (உன்) அம்மாவும் விரும்புவார்கள்.

கரகோஷித்தார்கள். கல்லூரிப் பசங்கள் கூட்டம் அசடு வழிந்தது. இவர் எப்பேர்ப்பட்ட மகான். மடக்குகிறோம் என்று துடுக்குத்தனமான கேள்விகேட்ட நமது மடமைதான் என்ன? என்று உள்ளூர வருத்தப்பட்டார்கள்.

“பாரத இலக்கியங்களுக்கும் அயல்நாட்டு இலக்கியங்களுக்கும் இருக்கும் நுணுக்கமான வித்யாசங்கள் என்னவென்று கூறமுடியுமா?” என்று சம்பாஷணையை அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்தினான் ஒரு குடுமி வைத்த மாணவன். கணபதி இதற்கு என்ன பதில் கூறினார் என்பதை அடுத்த பாகத்தில் பார்ப்போம்....

{இப்பகுதியில் இடம் பெற்றிருக்கும் சம்ஸ்க்ருத ஸ்லோகங்களின் தமிழ் வடிவைத் தந்தருளியவர் Ramkumar Narayanan ஸ்வாமின். அவருக்கு என் ஹ்ருதயப்பூர்வமான நன்றிகள்}

‪#‎காவ்ய_கண்ட_கணபதி_முனி_17‬
‪#‎கணபதி_முனி‬

திருப்புகழ் கச்சேரியில் பாட்டி

ஆறரைக்கு சாலிகிராமத்தில் ப்ரோக்ராம். வீட்டிலிருந்து ஆறரைக்கு கிளம்பினோம். பாதி தூங்கிக்கொண்டிருந்த சாலைகளினால் ஞாயிற்றுக்கிழமையென்று தெரிந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக வண்டிகள் சோம்பலாக உருண்டுக்கொண்டிருந்தன. ஒரு வலதுக்கு தப்பிதமாய் இடது திரும்பி பத்து நிமிடம் சேப்பாயிக்கு கூடுதல் வேலை கொடுத்தேன். ”ணா.. சாலிக்கிராமம் காவேரி ரங்கன் நகர்...” என்று வழிகேட்டு “இப்டிக்கா லெப்ட்ல போயி ஷ்ட்ரெயிட்டா...” என்று விரோதமாக எதிர்திசையில் திருப்பிவிட்ட ஆட்டோகாரரை மன்னித்துவிடலாம். வழி தெரியாது என்றால் மானம் கப்பலேறிவிடும் என்று நம்பும் சென்னைப் பழக்கம்.

காவேரி ரங்கன் நகர் காவேரி விநாயகர் ஆலயத்தில் கந்த சஷ்டி விழா. சின்னவளும் பெரியவளும் பத்மா மாமியோடும் தோழிகளோடும் திருப்புகழ் கச்சேரி பண்ணப் போயிருந்தார்கள். முக்குக்கு முக்கு விஜாரித்து கோயிலை அடையும் போது ஸ்பீக்கரில் ”முருகா...முருகா..” கோரஸாகக் கேட்டது. கச்சேரி ஆரம்பித்துவிட்டது. சொற்ப கூட்டமிருந்தது. சன்னிதிக்கு நேரேயே நான்கு மைக், ஒரு ஸ்ருதிப் பெட்டி, ஒரு டோலக்கு ஏற்பாடாகியிருந்தது. ப்ளாஸ்டிக் சேர்களில் உட்கார்ந்திருந்தவர்களில் அநேகம் பேர் ரிடையர்ட் ஆனவர்கள். முட்டிக்கு மூவ் தடவியவர்கள்.

பச்சை ஜாக்கெட்டில் வாய் மந்திரமாக “முருகா.. முருகா..” ஒலிக்க பார்வையாளர்கள் ஓரமாக ஒரு பாட்டி. ஒரு ஜான் மல்லி சூடிய தீர்க்க சுமங்கலி. நெற்றியில் துலங்கிய திருநீரும் குங்குமமும் நம்மை மானசீக நமஸ்காரம் பண்ணச் சொன்னது. லலிதா சகஸ்ரநாமமும் கந்த சஷ்டி கவசமும் பாராயணம் செய்திருக்க வேணும். ”மாலாசை...” பாடினாலும் “பத்தியால் யானுனை...” பாடினாலும் தனக்கு மட்டும் கேட்கும்படி பாடினார்கள். சேர்ந்திசையாகத் திருப்புகழ் கேட்டு அவர் கண்களில் ஆனந்தபாஷ்பம். அவரைப் பார்க்கும் நமக்குள் பக்தி ஊறுகிறது.

ஒரு மணி நேரம் காதுக்கு தெவிட்டாத விருந்து. தெரு மணத்தது. திருப்புகழ் பாடி முடித்து வள்ளி தேவசேனா சமேத சுப்ரமண்யருக்கு அடுக்கு தீபாராதனை ஆயிற்று. கண்களில் ஒற்றிக்கொண்டவுடன் பிரசாதத்துக்கு வரிசை நீண்டது. ஒவ்வொரு வாய் எலுமிச்சை சாதம், தயிர்சாதம். ஒரு கை உருளை வறுவல். காலை நொடித்தபடி வரிசைக்கு வந்த பாட்டிக்குக் கூட்டம் வழிவிட்டு முன்னுக்கு அனுப்பியது. கையில் வாங்கிக்கொண்டு கோபுரவாசலில் செருப்பைத் தேடிக்கொண்டிருந்தார். பிரசாதம் வாங்கிக்கொண்டு வெளியில் வந்தேன். பாட்டியைக் காணவில்லை. வீடு எங்காவது பக்கத்தில் இருக்கக்கூடும். விடு.

யாரது? தூரத்தில் மங்கிய வெளிச்சத்தில் தாங்கித் தாங்கி நடப்பது தெரிந்தது. பின்னாலிருந்து பார்க்கும் போது இடது கை முழுசாகவும் வலது கை பாதியாகவும் தெரிந்தது. மடக்கிய வலது கையில் பிரசாதமாக இருக்கும். பேரனுக்கோ பேத்திக்கோ. வண்டியை எடுத்துக்கொண்டு போகும் வழியில் இறக்கிவிடலாம் என்று ஓடினேன். திருப்பிக்கொண்டு வரும் போது கண்ணுக்கெட்டியதுவரை யாருமில்லை. ஞாயிறு இரவு. வெறிச்சோடிய சாலை. மக்கள் வீடுகளுக்குள் அடங்கியிருந்தனர்.

 பாட்டிக்கு எந்தத் தெரு? எந்த வீடு? முருகா.

நரியப்பன் - காகாஸ்வரன்

”நாம் இனிமே இந்த மரத்துக் கிளையில் இருக்கக்கூடாது... வேற அட்ரெஸுக்கு போயிடணும்..” சிணுங்கியது பெண் காகம். ஆண் காகம் வருத்தம் தோய்ந்த முகத்துடன் “கா....” என்று ஈனஸ்வரத்தில் கரைந்தது.
”என்னுடைய முட்டைகளையெல்லாம் அந்த கரும் பாம்பு தின்றுவிடுகிறது. நமக்கு சந்ததியே இல்லாமல் செய்துவிடும் போலிருக்கிறதே...” என்று அழுதது. 

“இதே மரக்கிளையில்தான் நான் பிறந்தேன். வளர்ந்தேன். உன்னைக் கல்யாணம் செய்து கொண்டேன். இதோ குடும்பம் நடத்துகிறேன். இங்கிருந்து என்னைக் கிளம்பச்சொல்லாதே.. ப்ளீஸ்...” என்றது.

“எனக்கென்ன பதில்?” முறைத்தது பெண் காகம்.

“இதை புத்திசாலித்தனமாக அணுக வேண்டும். என்னுடைய நண்பன் குள்ள நரியப்பனிடம் ஆலோசனை கேட்கிறேன். அவன் புத்திசாலி...” என்று கூறி சிறகடித்துப் பறந்து சென்று நரியை அழைத்து வந்தது.

சினிமாக்களில் எல்லோரும் திரை பார்க்க பின்னணி இசை ஒலிக்க காதுகளில் ரகசியம் பேசி தலையை மட்டும் ஆட்டிக்கொள்வார்களே.. அது போல நரி பேச காகம் தலையசைத்து விட்டு சிரித்தபடி பறந்தது. மரத்தின் மேல் அமர்ந்திருந்த காகாயினிக்கு எதுவும் புரியவில்லை.

சிறிது நேரத்தில் ஆண் காகம் எதையோ தூக்கிக் கொண்டு வந்து மரத்தினருகில் இருந்த பாம்புப் புற்றுக்குள் பொத்தென்று போட்டது.

“என்னது அது?” என்று விசாரித்தது மனைவி காகம் காகாயினி.

“பொறுத்திருந்து வேடிக்கையைப் பார்...” என்று ஒரு இறக்கையால் காகாயினியை அணைத்து புற்றின் மீதிருந்து கண்ணெடுக்காமல் அமர்ந்திருந்தது புருஷன் காகாஸ்வரன்.

சிறிதுநேரத்தில் ஐந்தாறு ஆட்கள் அந்தப் புற்றருகில் அவசர அவசரமாக சூழ்ந்துகொண்டார்கள். கையிலிருந்த கோடாலியாலும் ஈட்டியாலும் அந்தப் புற்றை இடித்துத் தரைமட்டமாக்கினார்கள். பாம்பை அடித்துக் கொன்று விட்டு அங்கே பளபளவென்று ஜொலித்த வைர அட்டிகையை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டனர். பொண்டாட்டி காக்காவுக்கு ஏகப்பட்ட சந்தோஷம்.

இறக்கையால் கட்டிப் பிடித்து அலகோடு அலகாக முத்தமிட்டு “எப்படி இது
நடந்தது?” என்று வெற்றிக் கதை கேட்டது.

“ராணி பக்கத்துக் குளத்திற்கு தினமும் குளிக்க வருவார்கள். அவரது நகையை கொத்திக் கொண்டுவந்து பாம்புப் புற்றில் போட்டுவிடு. வீரர்கள் ஓடி வந்து புற்றை அழித்து பாம்பையும் கொன்று போடுவார்கள். நீ இந்த மரத்தை விட்டு நகராமல் மகிழ்ச்சியாக காலம் தள்ளலாம்... என்று நண்பர் நரியப்பன் ஐடியா கொடுத்தார். பாம்பு பக்கிரி தீர்ந்தான்” என்று சொல்லி இறக்கைகளைச் சடசடத்தது.

“கா..கா...கா..கா..” என்று இருவரும் டூயட் பாடினார்கள்.

சுபம்.

*
பாட்டி வடை சுட்டக் கதையில் காகத்தை பாடச் சொல்லி ஏமாற்றிய நரி இந்தக் கதையில் அதற்கு உபகாரம் செய்து பாவத்தைக் கழுவிக்கொண்டது.

பின் குறிப்பு: இக்கதையின் மூலம் கன்னடம். ஏகே ராமானுஜன் தொகுத்து ஆங்கிலத்தில் எழுதிய இந்திய நாட்டுப்புறக் கதைகள் புஸ்தகத்திலிருந்து உருவினேன். கதைக் கருவைச் சிதைக்காமல் என் போக்குக்கு கேரெக்டர் பெயர் கொடுத்து எழுதி இறுதியில் க்ளைமாக்ஸ் இணைத்து சுபம் போட்டது அடியேனின் துடுக்குத்தனம்.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails