Friday, August 19, 2016

அறிவுஜீவிகளுக்கான அடையாளங்கள்

முட்டாள்கள் எடுத்த யாவற்றிலும் ”மூணே கால்” என்று ஸ்திரமாக இருப்பதும் அறிவுஜீவிகள் ”இதுவா? அதுவா? எதுவோ?” என்று சந்தேகத்தில் தள்ளாடுவதுமே இந்த நவீன யுகத்தில் பலவிதமான சிக்கல்களுக்கு அடிப்படைக் காரணமாக இருக்கிறது - என்கிற புகழ்பெற்ற பெர்ட்ரண்ட் ரஸ்ஸலின் உதிர்ந்த முத்துவிலிருந்து ஆரம்பிக்கிறது அந்த கட்டுரை.

அறிவுஜீவி என்று இனம் காண அவர்களிடம் பதினைந்து அடையாளங்கள் லட்சணங்களாகத் தென்படுமாம். நீங்களும் அறிவுஜீவியா என்று கீழ்காணும் பதினைந்தைப் படித்து தெரிந்துகொள்ளலாம்.
1. அறிவுஜீவிகள் போதிய அளவு நேரத்தை நானாவிதமான துறைகளில் செலவழித்து, நன்கு படித்து தங்களை எப்போதும் உரமேற்றிக்கொள்வார்கள். (நம்மில் எவ்ளோ பேர்?)
2. இணையமே கதியென அதன் காலில் விழுந்து கிடப்பார்கள். (அப்படியென்றால் நாமெல்லாம் அ.ஜீக்களே)
3. இராக்கோழியாக திரிவார்கள். (ரஹ்மான் நினைவுக்கு வரலாம். கால் செண்டரில் கடமையாக அகோராத்திரி வேலை செய்து ஜீவனம் நடத்துபவர் இதில் அடங்கா!! )
4. சொற்ப நேரமே மின்னணு உபகரணங்களை உபயோகிப்பார்கள். இல்லையேல் ஏகப்பட்ட செய்திகளினால் அஜீரணக் கோளாறு ஏற்பட்டுவிடுமாம். (நமக்கு ஒத்து வராது. அஷ்டபுஜ அனுக்ரஹம் கிடைத்தாலும் அனைத்துக்கும் ஒரு கருவி சொருகி உபயோகிப்போம்)
5. சங்கீதம் பயிலும் குழந்தைகள் பூரணமான ஞானம் பெறுகிறார்கள். (சங்கீதம் இரசிக்கும் பெரியவர்கள் என்றும் எழுதிக்கொள்வோம்.)
6. லாஹிரி வஸ்துகள் சரித்துக்கொண்டு மிதப்பார்கள். (கண்ணதாசனைக் காரணம் காட்டி பைசாவுக்குப் பிரயோஜனமில்லாமல் குடித்துக் கெட்டவர்கள் அநேகம்)
7. எவ்விதமாகவும் தங்களை வளைத்துக்கொள்ளும் விசால மனது படைத்தவர்களாகவும் இருப்பார்கள். (”நல்லத்துக்கு” என்று இந்த வரியின் முதலில் சேர்த்துக்கொள்ளவும்)
8. இது சரியா தவறா என்கிற நீண்ட மனப்போரட்டத்துக்குப் பிறகு தர்க்கரீதியாக அலசி ஆராய்ந்து அறிந்துகொண்டே எதையும் ஏற்பார்கள். (எந்தவொன்றுக்கும் நன்மை தீமை இரண்டு தெரிவதால்... அது ஆளை அலைக்கழிக்கும். “அனுபவிக்கணும்.. ஆராயக்கூடாது...” என்கிற வசூல் ராஜா கமல் தத்துவம் பலரை இயல்பாய் வாழ வைக்கும் மந்திரம்)
9. எதையும் தெரிந்துகொள்ளும் அதீத ஆர்வத்துடனும் பொசுக் பொசுக்கென்று கேள்விக் கணைகளைத் தொடுப்பவர்களாகவும் இருப்பார்கள். (வணிகவியல் மாணவன் இயற்பியல் வகுப்பிற்குச் சென்று குவாண்டம் மெக்கானிக்ஸ் கேட்டுக் குடைவது போல...)
10. சிந்தனைக்குத் தார்க்குச்சி போடும் வினாக்களை எழுப்பி அனைவரையும் மலரச் செய்வார்கள்.
11. வாழ்வில் சறுக்கி விழுந்தத் தங்களது தவறுகளிலிருந்து புதிய பாடங்களைப் படித்து ஏற்றம் கொள்ளும் பக்குவமடைந்திருப்பார்கள்.
12. வல்லவனுக்குப் புல்லும் ஆயுதமாக இருப்பார்கள்.
13. பேசப்படும் பொருள் மீதான தனது அறியாமையை நானூறு/நாலாயிரம் பேர் முன்பு லஜ்ஜையின்றி ஒத்துக்கொள்ளும் மகாத்மாக்களாக இருப்பர்.
14. ஒரு பொருளின் சத்யத்தின் அடிப்படையாகவே தங்களது கருத்துக்களை முன்வைப்பரே அன்றி அவை பற்றிய நம்பிக்கைகளின் பேரில் அல்டாப்பாக கருத்துரைக்க மாட்டார்கள்.
15. உணர்ச்சிப் பிழம்பானர்வகள். வெகு எளிதில் பிறத்தியாரிடம் கருணையோடும் அனுசரணையோடும் நடந்துகொள்வார்கள்.
மூலத்திற்கு குந்தகம் வராமல் மொழி மாற்றியிருக்கிறேனா என்று அறிந்துகொள்ள கீழே கொடுத்திருக்கும் சுட்டியைக் க்ளிக்கவும்.

திருப்பனங்காடு‬

”இன்னமும் அர்த்தராத்திரி வேளேல கோட்டை முனீஸ்வரர் வந்து இந்த ஸ்வாமிக்கு பூஜை பண்றார்ங்கிறது ஐதீகம்”
“ஐதீகமா.. இல்ல நடக்கறதா?”
“ஊர்ல சிலபேர் பார்த்துருக்கா... மூனீஸ்வரர் சித்த புருஷராச்சே... ரிஷிகள் சித்தர்களெல்லாம் ராத்திரிதான் சிவபூஜைக்கு வருவா.. அவர் பூஜை பண்ணின லிங்கத்தைதான் அகஸ்தியர் எடுத்து பூஜை பண்ணினார். அவர்தான் தாலபுரீஸ்வரர்.”
“மூனீஸ்வரரை ஊர்க்காரவங்கப் பார்த்திருக்காங்களா?”
“ஆமாம்.. பல தடவை கோயிலுக்குள்ள போன கால்தடமே இருக்குமே... ஒரு தடவை புடவை கட்டிண்டு ஊர்க்குள்ள போய்ட்டு... அப்புறமா இதோ.. எதிர்த்தார்ப்பல இருக்கிற பனைமரத்துலேர்ந்து பனம் பழம் பறிச்சு பூஜை பண்ணிட்டுப் போயிருக்கார்... மூனீஸ்வரரெல்லாம் சிரஞ்சீவி.. எல்லாக் காலத்திலேயேயும் இருப்பா...”
கழுத்தில் சிகப்புக் கல்லால் கோர்த்த மாலையும், சிரிக்கும் முகமாக அற்புதமாக கதை சொன்னார் வன்பார்த்தான் பனங்க்காட்டூர் என்றழைக்கப்பட்ட திருப்பனங்காடு க்ஷேத்திர தேவராஜ சர்மா குருக்கள்.
“முனீஸ்வரரைத் தர்சனம் பண்ணிட்டுதான் இங்க இருக்கிற சிவ மூர்த்தங்களை வழிபடணும்ங்கிறது இங்கே ஒரு சம்பிரதாயம்.. பனம் பழம் நேவேத்யம் பண்ணிட்டு சாப்பிட்டா குழந்தை பாக்கியம் கிடைக்கும்ங்கிறதும் காலம் காலமா இருக்கிற நிதர்சனம்... ”
**
வாலாஜாவிலிருந்து காஞ்சியின் சுற்றுப்புற தடதடக்கும் ரோடுகள் வழியாக ஐயங்கார் குளம் தாண்டுங்கள். அவ்வூர் எல்லையில் சாலை ஓர மரங்களின் ஊடே நூறு மீட்டர் தூரத்தில் ஒரு புராதன காலக் கற்றளி கோயில் தெரிகிறது. வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே நுழைய மனசுக்குத் தூண்டில் போடுகிறது. சிவதரிசனத்துக்காக திருப்பனங்காடு ஓடுகிறோம்.
மாலை ஐந்து மணிக்கு அடங்கும் வெய்யிலே தாங்கமுடியவில்லை. கண்ணுக்கெட்டிய தூரம் வரை நீளும் அந்த வெண்பாக்கம் ரோட்டில் வரும் ஒரே வலதுபுற சாலையில் வண்டியைத் திருப்புங்கள். அரை கிலோமீட்டருக்குள் ஸ்ரீசுந்தரர் தீர்த்தம் என்ற பெயர்ப்பலகை காட்டுமிடத்தில் ஒத்தையடிப் பாதை ஒன்று தெரிகிறது. அதென்ன சுந்தரர் தீர்த்தம் என்று புருவம் சுருக்குவோர் இன்னும் கொஞ்ச நேரம் இந்த வ்யாசத்தைப் படிக்க வேண்டும். புராணம் இருக்கிறது.
கோயிலுக்கு ராஜகோபுரமில்லை. ஊர்க்கோடியில் இருந்த சௌகரியத்தால் வயலிலிருந்து அறுத்த கதிர்களை அடித்து நெற்மணிகளைக் குவித்திருந்தார்கள். விஸ்வரூபமாய் எழுந்து முனீஸ்வரரைப் போன்று நின்றிருந்த அரச விருட்சமும் அதன் கீழ் இருந்த கோட்டை முனீஸ்வரர் கோயிலும் ஆயிரமாயிரம் கதை சொல்லின. கோவிலுக்கு ஐம்பது பாகை இடதுகைப் பக்க சாய்மானத்தில் பெரிய குளம் இருக்கிறது. அல்லி மண்டியிருக்கிறது. தண்ணீர்ப் பார்க்காத எந்த சென்னைக்காரனும் எட்டிப் பார்க்குமிடம்.
**
“வர்ற வழியில சுந்தரர் தீர்த்தம்னு போட்டிருந்ததே.. அது... ”
“மாசி மாசம் வர்ற பிரம்மோற்சவமப்ப அந்த தீர்த்தக்கரையில பெரிய திருவிழா நடக்கும்... “
“என்ன கதை?”
“காஞ்சீபுரம் ஏகாம்பரேஸ்வரரைத் தர்சனம் பண்ணிட்டு சுந்தரர் பனங்காட்டூருக்கு வரார்... அனல்வீசும் கோடைக்காலம். அப்போ அவருக்கு பயங்கர பசி வேற ஏறிப் போச்சு.. வெய்யில் பிச்சுப்புடுங்கறது.... கண்ணை இருட்டிண்டு கிர்ர்ருன்னு தலை சுத்தி மயக்கமா வருது... அப்போ வயோதிகர் ஒருத்தர் வயல் ஓர வரப்புல தேமேன்னு உட்கார்ந்திருக்கார். இவரைப் பார்த்ததும்... இந்தான்னு... ஒரு பட்டை தயிர்சாதம் நீட்றார்.. வயித்துக்கு சாப்பாடு கிடைச்சாலும்... இவ்ளோ வெய்யில் அடிக்கிறது.. சாதம் மட்டும் போதுமா.. தண்ணீ கிடையாதா?ன்னு... நீரில்லா இடந்தன்னில் நீர் அமுதளித்தல் நீதியோ...ன்னு சுந்தரர் அதிகாரமாக் கேட்ருக்கார்... அதுக்கு அந்த பெரியவர் நீர் வந்த இடந்தன்னில் நீர் இன்றிப் போகுமோ...ன்னு பொடி வச்சுப் பேசிட்டு... காலால தரையைக் கீறி விடறார்.. ஒரு ஊத்து கிளம்பி தண்ணி குபுகுபுன்னு வருது.. சுந்தரருக்கு ஆச்சரியம்.. அப்போ.. சுந்தரா ... நான் வன்பார்த்தான் பனங்காட்டூரை உடையவன்...ன்னு சொல்றார்... எங்கேயோ திரும்பிப் பார்த்துட்டு சுந்தரர் அந்தப் பக்கம் பார்க்கிறார்...கொஞ்ச தூரத்தில துரிதகதியில் போயிண்டிருக்கார் அந்தப் பெரியவர்... சுந்தரர் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க ஓடிப்போறார்..... “
கோயில் சன்னிதி வாசலில் நின்று தலபுராணம் கேட்பது ஒரு சுகானுபவம். அவர்கள் சொல்லும் சம்பவங்களில் நாமும் ஒன்றிப்போய் சுந்தரரையோ.. சம்பந்தரையோ... பக்கத்தில் நின்று பார்த்ததுபோல ஒரு திருப்தி.
"ரெண்டு அம்பாள்.. ரெண்டு ஸ்வாமி... எல்லாமே ப்ளஸ் டூவாயிருக்கே...."
"ஹா..ஹா.. அகஸ்தியர் பூஜை பண்ணின தாலபுரீஸ்வரர்... அப்புறமா அவரோட சிஷ்யர் புலஸ்தியர் ஒரு லிங்க பிரதிஷ்டை பண்ணி கிருபானாதீஸ்வரர்னு வழிபட்டார். அதனால ரெண்டு.. ரெண்டு இப்படியிருக்கலாமான்னு சில பேர் கேட்டப்ப... இதுக்கு திருஷ்டாந்தமா ராமேஸ்வரத்தைச் சொல்வா...சீதா மணலால பிடிச்சு வச்சு ராமர் பூஜை பண்ணின ராமலிங்கமும் ராமரோட பிரதான சிஷ்யர் பொஷிசன்ல இருந்த ஆஞ்சநேயர் கைலாஸத்துலேர்ந்து தூக்கிண்டு வந்து பூஜை பண்ணின விஸ்வலிங்கமும் இருக்கும்... அது மாதிரிதான்..."
"மனுஷா சிலையெல்லாம் இருக்கே... அந்த செட்டியார்தான் இந்தக் கோயிலை எடுத்துக் கட்டினாரா?"
"ஆமாம்.. அவர் பேர் ஏகப்ப செட்டியார். அவரோட கேஸ் ஒண்ணு கோர்ட்ல இருந்தது. அது ஜெயிச்சா அந்த முப்பதாயிரம் ரூபாய்லயும் இந்த பனங்காட்டூர் தலத்தோட திருப்பணிக்கு தர்றதா வேண்டினார். கேஸ் இவர் பக்கம் ஜெயிச்சு.. அந்த முப்பதாயிரத்துக்கு மேலேயே காசு போட்டு திருப்பணி நடத்தி... 1916ல கிராமத்தார்களிடமிருந்து சுதந்திர உரிமை வாங்கிண்டு 1928ல கும்பாபிஷேகம் பண்ணினார். அவா குடும்பத்தினர்தான் இன்னமும் அறங்காவலர்களா இருக்கா..."
**
கோயில் சுத்தமாக இருக்கிறது. நகரத்தார் திருப்பணிக் கோயில்களின் அழகே அதன் சுத்தமும் சுகாதாரமும்தான். திருவலம் வருகையில் ஸ்தல விருட்சமான பனை மரத்தின் எழில் கொஞ்சும் சிலா ரூபமிருக்கிறது. கோவிலுக்கு வெளியேயும் உள்ளேயும் ஆண்பனை பெண்பனை மரங்கள் ஜீவனோடு பனங்காட்டுக்குச் சாட்சியாக நிற்கிறது. இரண்டு தெக்ஷிணாமூர்த்திகளில் ஒருவர் மேதா தெக்ஷிணாமூர்த்தி. காலடியில் ரிஷபம் இருக்கிறது. வீகேயெஸ்ஸின் தகவல் இது. சுப்ரமண்யர், நடராஜர் சன்னிதிகள் கடந்து வந்து அம்பாள் சன்னிதிகளின் வாயிலில் நின்றால் தூண்களின் புடைப்புச் சிற்பங்கள் நம் கண்களைக் கவர்கின்றன. அதில் விசேஷமாகச் சொல்வதென்றால் இராமயண காதையின் "வாலி வதம்". அம்பாள் சன்னிதி வாயில் தூணில் வாலியும் சுக்ரீவனும் துவந்த யுத்தம் புரியும் சிற்பம். வெளியே வாசல் தாண்டி வில்-அம்பும் கையுமாக ஸ்ரீராமன் நிற்கிறான். மானசா ஓடிப்போய் ராமன் தூண் அருகே நின்று "ம்... வாலி சுக்ரீவன் சண்டை போடறது தெரியறது..." என்று பார்த்துவிட்டு உள்ளே நுழைந்து துவந்த யுத்தம் செதுக்கியிருக்கும் தூணருகே நின்று பார்த்தால் ராமனைக் காண முடியவில்லை. "இங்கேர்ந்து ராமர் தெர்லப்பா..." என்று விழிவிரிய ஆச்சரியப்பட்டாள்.
**
"எங்கண்ணாவுக்கு வர்ற மாசில சதாபிஷேகம். அவர்க்கு மூணு வயசாகும் போது கண்ல பூ பட்டு தெரியாமப் போய்டுத்து.... டாக்டர்லெல்லாம் ஒண்ணும் பண்ண முடியாதுன்னு கையை விரிச்சுட்டா.. எங்கப்பாம்மாவுக்கு வருத்தம். ஸ்வாமியை நினைச்சுண்டே ஆத்துக்கு வர்ற போது... ரெண்டு பண்டாரம் 'நல்லான் சிவபெருமான் நம்மை வருத்துவது கொல்லான் கூற்றுவனை வெல்வதற்கே'ன்னு பேசிண்டே போயிருக்கா...
எங்கப்பாவும் தாலபுரீஸ்வரரை அனுதினமும் வழிபட்டார். என்னோட மூத்த தமையனார்.. அதாவது பர்வதராஜன்னு கண்ணு தெரியாமப் போனவரோட அண்ணா.. அவர்.. தினமும் இந்த தலத்து மாரியம்மனுக்கு மலர்மாலைக் கட்டிப் போட்டு வழிபட்டார். என்னோட அப்பாவும் தினமும் ஒரு பாடலாகப் பாடி தாலவனேசப் பெருமானை வழிபட்டார். அப்போ சித்தர் போல வந்த ஒருவர் ஆமை ஓட்டைத் தேய்த்து எம் தமையனார் இமையில் தடவினார். ஒன்றிரண்டு நாள்ல கண்ணு திறக்க ஆரம்பிச்சு பார்வை முழுக்க வந்துடுத்து. அப்புறம் அவர் படிச்சு.. பாரீ கம்பெனி வேலை பார்த்து ரிட்டயர்ட் ஆயிருக்கார். அவருக்குதான் சதாபிஷேகம். கலியில நாங்க பிரத்யட்சமா பார்த்த தாலபுரீஸ்வரரின் அருள்.,..."
**
குருக்கள் கோயில் மகிமைகளை அடுக்கிக்கொண்டே போகிறார். நமக்கு ஆச்சரியமாக இருக்கிறது. திரும்பவும் வாலி வதம் பற்றிய பேச்சு வருகிறது. " நீங்க நல்லா கதை சொல்றேள்.." என்றேன். "சுத்துப்பட்டு கிராமத்து திருவிழாக்கள்ல ராமாயணம் மகாபாரதம் கதையெல்லாம் சொல்றேன்.. அப்பப்போ.." என்றார்.
"இந்த வாலியை குரங்கு வாலி , மனித வாலி, தெய்வ வாலி என்று தரம்பிரிச்சு . அ.சா. ஞானசம்பந்தம் சொல்லியிருப்பார். சுக்ரீவன் பொண்டாட்டியைக் கவர்ந்தப்போ குரங்கு வாலி, ராமன் மறைந்து பாணம் போட்டப்பா... ராமன்ட்டே நீ அம்புவிட்டத்து தப்புன்னு ஆர்க்யூ பண்ணினான்.. அப்போ மனுஷ வாலி... கடைசில தன்னோட தப்பை உணர்ந்து ராமன் கிட்டே... என் தம்பி சுக்ரீவன் எதாவது தப்பு பண்ணினான்னா... அவன் மேலே பாணம் போட்டுடாதேன்னு கேட்டப்ப தெய்வ வாலிம்பார்.." என்றேன். அதை ஆமோதித்து மேலும் பேச ஆரம்பித்தார்.
என்னோடு வந்த நண்பர்கள் தரிசனம் முடித்து அடுத்த கோயிலுக்கு கிளம்பத் தயாராயினர். "திருமுக்கூடல் நடை சார்த்திடப்போறா..." என்று அவசரப்படுத்தினார் அக்கௌன்ட்ஸ் வெங்கட் ராமன் சார். இன்னும் குருக்கள் கூட பேசினால் நிறையா விஷயதானம் பெறலாம். திருவாளர் காலத்தை கடிந்து கொண்டு புறப்பட்டோம்.
வரும் வழியில் பனங்காட்டூர் பச்சை வயல் வரப்போரம் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டோம். மூன்று கார்களும் திருமுக்கூடல் திசையில் சீறின. பாதி வழியிலேயே கோயில் நடை சார்த்திய விவரமறிந்தோம்.
"வாலாஜாபாத்-சுங்குவார்ச்சத்திரம் ரோட்டுல ஒரு ரெண்டு கி.மீட்டர்ல கட்டவாக்கம்னு ஒரு இடம். அங்கே விஸ்வரூப நரசிம்மர்... அவரை தர்சனம் பண்ணிட்டுப் போய்டுவோம்...” என்று மௌனம் கலைந்தார் அக்கௌண்ட்ஸ் வெங்கட்ராமன் சார்.
விண்ணுக்கும் மண்ணுக்குமாய் பதினாறு அடி நரசிம்மர். மடியில் லக்ஷ்மி பத்ம கமலத்தோடு. நரசிம்மரின் கால் நகமும் கை நகமும் நகாசு வேலைப்பாடானது. அற்புதமான மூர்த்தம்.
“சிங்கம் போல பிடரி மயிறு... தெத்திப் பல்லு... நீள நீளமா நகமாம்... ஆஜானுபாகுவான சரீரமாம்... பக்தனான ப்ரஹ்லாதன்.. எந்த தூணைக் காமிச்சானோ.. அதே தூணைப் பிளந்துண்டு... ஆஹாஹா... என்னோட பக்தனையாடா படுத்தினே.. இதோ வந்துண்டேண்டா...ன்னு கர்ஜிஜ்ச்சிண்டே இரண்யகசிபுவைப் புடிச்சு...” என்று சேங்காலிபுரம் பிரம்மஸ்ரீ அனந்தராம தீக்ஷிதரின் பாகவத உபன்யாசம் மனதில் வந்து போனது.
புளியோதரைப் பிரசாதம் பசியில் முணுமுணுத்த வயிற்றைத் தட்டிச் சாந்தப்படுத்தியது. ஸ்நேகிதர்கள் அனைவரும் கொஞ்ச நேரம் மனம் விட்டுப் பேசிக்கொண்டிருந்தோம். வானத்தில் தோன்றும் நட்சத்திர மண்டலங்களை தனது மொபைல் அப்ளிகேஷன் மூலமாக தொடர்பு கொண்டு “இதோ பாருங்க. இதுதான் ஜூபிடர்... குரு பகவான்...” என்று கன்னத்தில் போட்டுக்கொள்ளச் செய்தார் வீகேயெஸ்.
குருவையும் ஹரனையும் ஹரியையும் தரிசித்த திருப்தியில் மனம் குதூகலித்துக்கொண்டிருந்தது. சேப்பாயி நான் வழி சொல்லாமலே வீடு கண்டடைந்து என்னை இறக்கிவிட்டது. இந்த ஸ்நேகிதர் குழாமுக்கு என்ன புண்ணியம் செய்திருக்கிறேன் என்று மகிழும் போது வன்பார்த்தான் பனங்காட்டூர் பதிகத்தில் சுந்தரர் பாடியவையாக கோயில் வாசலில் நீலத்தி
ல் வெள்ளையாய் எழுதியிருந்தது நினைவில் எட்டிப் பார்த்தது. ஆரூரன் அருட்பணி அறக்கட்டளை என்கிற காவேரி டெல்டா திருவாரூர்ப் பெயர் பாலாற்று திருப்பனங்காட்டு அறக்கட்டளைக்கு எப்படி வாய்த்தது என்பதற்கும் பதில் கிடைத்தது. சுந்தரரின் அந்தப் பதிகம்.
பாரூரும் பனங்காட்டூர்ப் 
பவளத்தின் படியானைச் 
சீரூருந் திருவாரூர்ச் 
சிவன்பேர்சென் னியில்வைத்த 
*ஆரூரன் அடித்தொண்டன் *
அடியன்சொல் அடிநாய்சொல் 
ஊரூரன் உரைசெய்வார் 
உயர்வானத் துயர்வாரே

படம்: தாடியுடன் சிரிப்பவர் திருப்பனங்காடு சிவாச்சாரியார் தேவராஜசர்மா. மொபைல்: 9843568742
மேலும் படங்களுக்கு திருவாளர் வீகேயெஸ் மற்றும் எழுத்தாளர் வித்யா சுப்ரமண்யம் அவர்களது நேரக்கோட்டில் பார்க்கவும்.

ஓரிக்கை


சில வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஆலய ஓட்டம் எடுத்திருக்கிறேன். நீலா சித்தி படுத்தபடுக்கையாவதற்கு முன்பு சனி ஞாயிறுகளில் எனது சேப்பாயி மாயவரம் கும்பகோணம் பிராந்திய காவிரிக்கரை ஓர பச்சை நெற்பயிர்களுக்கு மத்தியில் குஷாலாகப் பயணித்துக்கொண்டிருக்கும். மண் வாசத்துடன் புறப்பட்ட காற்று திறந்த கார் ஜன்னல் வழியாக நுழைந்து தலை கோதும் போது லாஹிரி போதையில் கண்கள் சொருகியிருக்கிறேன். இப்போது சொட்டுத் தண்ணீரில்லாமல் வறண்டு போன அகண்ட பாலாறு செல்லுமிடங்களில் சேப்பாயி சுற்றுகிறது. எட்டு மணி நேரத்திற்குள் கூடு அடையவேண்டிய கட்டாயம்.
உனக்கு சில்ப சாஸ்திரம் தெரியுமா? ஆகமங்களில் தேர்ச்சியா? நம் நாட்டை ஆண்ட சேர சோழ பாண்டிய வரலாற்றின் மீதுள்ள ஆர்வமா? என்றெல்லாம் குடையாதீர்கள். எனக்கு சிவனையும் சிவக்குமாரையும் தெரியும். சிவக்குமார் என்றொரு அற்புதமான மனிதர், எங்களது இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தில் தமிழன் எக்ஸ்பிரஸ், சினிமா எக்ஸ்பிரஸ் போன்ற இதழ்களுக்கு ஆசிரியராக இருந்த பெருமகனார் (தற்சயம் கைலாஸவாசி, C/O நமச்சிவாயம்), ஒரு புத்தகத் திருவிழாவில் பு.மா. ஜெயசெந்தில்நாதன் எழுதிய “திருமுறைத் தலங்கள்” புத்தகத்தை எனக்கு அறிமுகம் செய்து சிவமார்க்கத்தில் திருப்பிவிட்டார். அதற்கு முன்னரும் பல கோயில்கள் சென்று வந்தவந்தான். இருந்தாலும் நால்வர் பாடிய தலங்களின் சிறப்புகளை எனக்கு ஓதி எனக்கு நல்மார்க்கம் காட்டிய புண்ணியாத்மா.
இரு தினங்களுக்கு முன்னர் அண்ணாமலையார் படத்துக்கு முன்பாக நான் அமர்ந்து, சுயமாய்ச் சுட்ட, படத்தை வெளியிட்டிருந்தேன். அந்த அண்ணாமலையாரை எனக்குப் பரிசளித்தவர் எனதன்பு சிவாண்ணா. இது போன்ற ஆலய தரிசனங்களுக்கு முன்னர் அவரை நினைக்காமல் பொழுது கழிந்ததில்லை. சேப்பாயியின் முதுகில் ஒட்டியிருக்கும் வாசகமான “ஸ்மரணாத் அருணாசலே!” அவரது பிரத்யேக பரிந்துரை.
பதிவின் பாதை மாறிவிட்டது. கோயம்புத்தூர் கோமகனார் கேகே ஐயர் (காசியைப் பற்றி ஞான ஆலயத்தில் அழகான தொடர் எழுதியவர்) ”கோவிலுக்கு எங்கயாவது போலாம்யா...” என்று கேட்டார். வன்பார்த்தான் பனங்காட்டூர் என்கிற சிவஸ்தலம் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்று. நான் இதுவரை தரிசிக்காத தொண்டைநாட்டு சிவபுரி. உடனே அந்தயந்த ஸ்நேகிதக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ”திருமுக்கூடல், பழய சீவரம் அப்படியே திருப்பனங்காடு... மூணும் போய்ட்டு வரலாம்...” என்று கோயில் திட்டத்தைத் தீவிரப்படுத்தினார் அக்கௌண்ட்ஸ் வெங்கட்ராமன் சார்.
வீகேயெஸ்-வல்லபா, பாலமுகுந்தன் - ஜெயந்தி, கிருஷ்ணமூர்த்தி கிருஷ்ணைய்யர்-சித்ரா என்ற தம்பதி பட்டாளத்துடன், வல்லபாவின் தந்தை ஹரிஹரன் மாமா, எழுத்தாளர் வித்யா சுப்ரமண்யம் மேடம், நான் சங்கீதா மற்றும் வினயமானசாவுடன் கோயிலுலா கிளம்பினோம்.
“காஞ்சீபுரம் வழியா திருப்பனங்காடு ஒரு ரூட்டு இருக்கு... முடிச்சூர்... வாலாஜாபாத் வழியாவும் போகலாம்.. அஞ்சு கிலோ மீட்டர் வாலாஜா வழி குறைச்சல்....” என்றார் எங்கள் டூர்களின் ஆஸ்தான ’மேப்’பர் வீகேயெஸ்.
தாம்பரம்-பெருங்களத்தூர் தாண்டியவுடன் எலும்பிச்சம் பழங்களை சக்கரங்களுக்கு இரையாக்கும் இரணியம்மன் கோயில் தாண்டி வரும் பாலத்தைப் பிடியுங்கள். அப்படியே வலது ஒடித்து வரும் படப்பை வாலாஜா சாலை மார்க்கத்தில் ( “நேர் ரோடு தம்பி... லாரியில வெயிட் இருக்கும் போது ஆக்ஸிலேட்டர்ல செங்கல் எடுத்து வச்சுடுவோம்.. எவ்ளோ நேரம் அளுத்துவோம்...” என்று எங்களிடம் ட்ரைவராக வேலை பார்த்த ராஜா அண்ணன் நியாபகம் ஏனோ வந்து படுத்தியது) ஆக்ஸிலேட்டரை அழுத்தி ஸ்டியரிங்கை பத்து பத்து டிகிரி திருப்பி, கனரக வானமில்லா சாலையில் வழுகிக்க்கொண்டு சென்று வாலாஜாபாத் அன்னபூர்ணா ஹோட்டலில் நிறுத்துங்கள். வாய்க்கு சுகமான காஃபி குடியுங்கள். எங்கள் எல்லோருக்கும் பிடித்திருந்தது. கல்லா பெண்மணியிடம் ஒவ்வொருத்தரும் காஃபி மகாத்மியம் பாடினோம். வடை சூடாக இல்லையென்றாலும் சுவையாக இருந்தது.
“வரும்போது இங்கதான் திருமுக்கூடல் அப்பன் வெங்கடாஜலபதி கோயில்.. நாம திருப்பனங்காடு போய்ட்டு ரிட்டர்ன்ல தர்சனம் பண்ணிடலாம். ஆர்க்கியாலஜி கண்ட்ரோல்ல இருக்கு.. சீக்கிரம் வரணும்...” என்று காஃபி சூடு வாயிலிருந்து ஆறுவதற்கு முன்னரே வெங்கட்ராமன் சார் குச்சி போட்டார்.
சரியாக தப்பாக போவதில் நான் மன்னன். கூகில் மேப்பே ஸ்தூலமாக எழுந்து வந்து வழி காட்டினாலும் அதற்கும் பெப்பே காட்டுவது என் வழக்கம். என்னை சாலையிலும் வாழ்விலும் வழிதவறாமல் நடத்திச் செல்பவள் எனது வாமபாகம் சங்கீதா. என் பெண்கள் இருவரும் திருப்புகழ் பாட அதை பின்னால் வரும் வீகேயெஸ்ஸுக்கு மொபைல் ரிலே செய்து கொண்டே கேகே அண்ணா “திரும்பணும்.. திரும்பணும்..” என்று கதறியும் திரும்ப வேண்டிய சந்திப்பை விட்டு தூரம் வந்தோம்.
துரத்திப் பிடித்த பாலமுகுந்தன் சாரும் கேகே அண்ணாவும் வீகேயெஸ்ஸும் சேப்பாயியைச் சூழ்ந்து கொண்டனர். கேகே அண்ணா ஓரிக்கை...ஓரிக்கை என்று பெரியவா ஜபம் செய்தார். வயதான் பெரியவர் ஒருவர் கையேந்தி நிற்கவும் கேகே அண்ணாவுக்கு பெரியவா நியாபகம் பொங்கி நெட்டித் தள்ள.... அவரின் கண்ணில் வழிந்த அந்த ஆசையைப் பார்த்து ”பெரியவா கூப்பிடறா... ஓரிக்கைக்கு போய்ட்டு அப்புறமா திருப்பனங்காடு போகலாம்..” என்று மேப்பர் வீகேயெஸ் வழிநடத்தினார்.
சிகையுடன் பாடசாலைப் பிரம்மச்சாரி பையனொருவன் நடை சார்த்தியிருந்த பெரியவா சன்னிதி முன்னால் நின்றுகொண்டிருந்தான். அனுதினமும் வேதம் சொன்ன தேஜஸ் முகத்தில் அப்பட்டமாக ஜொலித்தது. “நாலு மணிக்கு வந்துடுவாரு...” என்ற நீல சீருடை செக்யூரிட்டி வாசலையே பார்த்துக்கொண்டிருந்தார். குருக்கள் வருவதற்குள் திருவலம் வந்தோம். கல்லிலே கலைவண்ணம் கண்டோம். தென் திசையில் தெக்ஷிணாமூர்த்தியின் அற்புதமான சிலாரூபம். சனகாதி முனிவர்களோடு வியாஸர் வசிஷ்டர் முதலான ரிஷிமண்டலத்தோடு. கீழே மஹாபெரியவா.
வடதிசையில் சிவனாரின் பிரதோஷ நடனம். தும்புரு, நந்தி மத்தளம் போட, சுப்ரமண்யர் என்று தேவாதிதேவர்கள் குழுமி நின்று நடனம் காண பரம சந்தோஷத்தில் சிவபெருமான் முகத்தில் குமிழ் சிரிப்பு. பரமாச்சார்யாளும் அந்த நடனம் பார்ப்பதாக செதுக்கியிருந்தது நெஞ்சை அள்ளியது. எங்கள் குழுவினர் அனைவரும் பார்த்துப் பார்த்துப் பூரித்துப் போன சிற்பம். ”பட்டடக்கல் பாதாமி மாதிரி...” என்று அவற்றை அனுபவித்த வல்லபாவின் சர்ட்டிஃபிகேட்.
“ஐயிறு வண்டி பஞ்சரு... சாவி குடுத்துவுட்ருக்காரு....” என்று ஒரு மூத்த பிரம்மச்சாரி நடை திறந்தார். பெரியவா நேரில் அமர்ந்து “வா உள்ளே...” என்று கூப்பிட்ட மாதிரி இருந்தது. திவ்யமான தரிசனம். வலம் வந்தோம். காமாக்ஷியின் உற்சவர் சிலையொன்று அப்படியொரு வடிவுடன் இருந்தது.
ஸ்ரீராம் என்கிற ஆஃபீஸர் வந்தவுடன் “இவாள்லாருக்கும் கோயில் பற்றிச் சொல்லுங்கோ...” என்று அக்கௌண்ட்ஸ் வெங்கக்ட்ராமன் சார் விண்ணப்பித்தார்.
“இந்த மணி மண்டபத்துல மொத்தம் நூறு தூண். ஒரே கல்லால ஆனது. ஒவ்வொன்னும் ஒவ்வொரு தினுசா இருக்கும். அதாவது வேற வேற டிசையன்ல இருக்கும். பெரியவாவோட நூறு வயசைக் குறிக்கிறா மாதிரி நூறு தூண். பல்லவா, சோழான்னு எல்லோரோட ஆர்க்கிடெக்சரையும் கலந்து கட்டி கோயில் கட்டிருக்கோம். இந்தோ.. இந்த யாளியோட வாயில இருக்கிற கருங்கல் பந்து... பல்லவா சிற்பக்கலை. அப்புறம் இந்த மணி மண்டபமே ஒரு தேர் மாதிரி பண்ணியிருக்கோம். அதான் வாசல்ல இருக்கிற இந்த இரண்டு சக்கரம். இரண்டு சக்கரத்திலையும் இருக்கிற ஆரத்தில பன்னிரெண்டு ராசியிருக்கு. அதே மாதிரி மண்டபத்தோட நடு மையத்தில.. மேலே.. பாருங்கோ.. அங்கேயும் பன்னிரெண்டு ராசியும் கட்டத்தோட செதுக்கியிருக்கா... எல்லாமே கணபதி ஸ்தபதியோட கைங்கர்யம். முன்னூறு பேர் அவர்கிட்டே வேலை பார்க்கிறா.. அதோ.. அந்த செவுத்துல பாருங்கோ.. யானை.. அந்த மாதிரி வரைஞ்சுடுவார்... வேலை பார்க்கிறவா அதுமாதிரி கல்லை செதுக்கணும்...”
பேச்சு வளர்ந்தது. பனங்காடுக்கு நேரமானது. சரி கிளம்பலாம் என்று முடிவான போது ஓடிப்போய் பெரியவா படம் வாங்கிக்கொண்டோம். வித்யா மேடம் டெட்ரா பேக்கில் பச்சைக் கொத்தமல்லி இஞ்சி தட்டிப்போட்ட மோர் வாங்கி வந்திருந்தார்கள். வெய்யிலுக்கும் இதமான மோர், தொண்டையை நனைத்து வயிற்றையும் குளிர்வித்தது. மோர் வார்த்த மேடம் வாழ்க!
ஐந்து மணி ஆகிவிட்டது. ”திருப்பனங்காடு பதினைஞ்சு நிமிஷம் பார்த்துட்டு ஓடி வரணும்... அப்பன் வெங்கடாஜலபதி ஆர்க்கியாலஜி கண்ட்ரோல்ல இருக்கார்.. ஆறரைக்குள்ள நடையடைச்சுடுவா.. “ என்று பரபரத்தார் அக்கௌண்ட்ஸ் வெங்கட்ராமன் சார். சேப்பாயி கனைத்துக்கொண்டு அசுவமாக ஓட்டமெடுத்தது. காஞ்சிபுர வெளிப்புற சாலைகள் வேகத்துக்கு உகந்ததல்ல. மூன்று கார்களும் பின்னால் புழுதி எழும்ப சீறின.
ஐயங்கார் குளம் பார்க்கணும் என்று வீகே ஸ்ரீநிவாசய்யர் கேட்டுக்கொண்டே வந்தார். சிவனேன்னு திருப்பனங்காட்டிற்கு விரைந்தோம்.
அங்கே.....

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails