Friday, September 24, 2010

நாய்கள் ஜாக்கிரதை!

stray dogs
சேப்பனும் கறுப்பியும் 
அதிகாலையில் வாக்கிங் சென்றால் நமக்கு உற்ற தோழன் பைரவர் தான். தன்னுடைய குடும்பத்தோடு ஒரு பூபாளம் பாடி நடப்பதற்கு வரவேற்கும் போது மனசு அப்படியே சட்டுன்னு விட்டுப் போய்டும். ஸ்கூல் முனையில் நின்று கொண்டு காலையில் இருந்தே ஏரியாத் தகராறில் "எங்க ஏரியா உள்ள வராதே..." என்று எதிரிகளுடன் மல்லுக்கட்டிக் கொண்டு இருக்கும். கொஞ்ச தூரம் தலையை தொங்கப்போட்டுக் கொண்டு ஓடும் அப்புறம் நின்று அங்குமிங்கும் நிமிர்ந்து பார்க்கும் அப்புறம் திரும்பவும் தலையை தொங்கப் போட்டுக்கொண்டு ஓடி வரும். அந்தத் தெரு அதன் ராஜ்ஜியத்தில் உள்ளது என்று அந்த உலாத்தலில் நமக்கு தெரிந்துவிடும். எவ்வளவு விதம்விதமான ஸ்வர ஸ்தானத்தில் குரைக்கிறது. எதிரி தெரு நாய்க்கு எட்டுக் கட்டையில் ஒரு "லொள்... லொள்...." என்றால் தனது குட்டிக்கு அடிக்குரலில் ஒரு செல்ல சின்ன "வ் ..வ்....வ்.. ர்...ர்...ர்..".  நேற்று நான் வாக்கிங் செல்லும் இடத்திற்கு புதிதாக வந்த ஒரு மத்திம வயது இளைஞர் அந்த சேப்பன் (சிகப்பாக உள்ளதால்) இவரிடம் ஏதோ ஆயிரம் ரூபாய் கைமாத்து கேட்டது போல லேசாக முறைக்க, பதிலுக்கு கறுப்பி(சேப்பனின் மனைவி) யுடன் சேர்ந்து கோரஸாக ஒரு டோஸ் ஐந்து நிமிடம் கொடுத்தது. மத்திமர் அதோடு விட்டிருக்கலாம்,  குரைத்தலில்ல் வெகுண்டு திரும்ப முறைத்துவிட்டு, பழமொழிக்கேற்ப குனிந்து கல்லை தேடினார் கிடைக்கவில்லை. அவரின் எண்ண ஓட்டத்தை புரிந்துகொண்ட சேப்பன் துரத்த ஆரம்பிக்க, பிடித்தார் ஒரு மரண ஓட்டம். சேப்பன், கருப்பி இருவரும் தம்பதி சமேதராக தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள லிமிட் வரை துரத்திவிட்டு அடுத்த எல்லையில் உள்ள சகாக்களிடம் அவரை பத்திரமாக விட்டுவிட்டு திரும்பியது. இவ்வளவு களேபரத்தின் இடையில் நான் பாட்டுக்கு "என் வழி தனி வழியாக" நடந்துகொண்டிருந்தேன். என்னை அவர்களில் ஒருவராக பாவித்து தொந்தரவு செய்யாது விட்டுவிட்டது. ஒருக்கால் அந்தத் தெருவின் வாக்கிங் வாடிக்கையாளர் என்று நினைத்ததோ என்னமோ.

இப்படி தெருநாய்கள் அட்டகாசம் செய்யும்போது, அரை டிராயர் போட்டுக்கொண்டு சுச்சா கக்காவுக்கு கொண்டு விடுவதற்காக சீமை நாய்களை கையில் பிடித்துக் கொண்டு சில கனவான்கள் வருவார்கள். அந்த நாய் இவர்களை இரும்புச் சங்கிலியால் கைகட்டப்பட்ட மனோகரா சிவாஜி போல தர தரவென்று தெருமுழுக்க இழுத்துக்கொண்டு போகும். ஓரத்தில் பதவிசாக ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே நடந்து செல்லும் நம் மேல் பாய எத்தனிக்கும். "சார். பயப்படாதீங்க ஒன்னும் பண்ணாது. நம்ம ரேம்போ கடிக்கமாட்டான்" என்று நம்மை சமாதானப் படுத்துவார்கள். "குலைக்கற நாய் கடிக்காது" என்பதற்கு  பதிலடியாக வரும் சதி லீலாவதி வசனம் "அது நமக்கு தெரியும், ஆனா நாய்க்கு தெரியனுமோனோ.." தான் அவர்களுக்கும் பதில். சில தினங்களுக்கு முன் சற்று கூர்ந்து கவனித்ததில் சில கெட்டிக்கார சீமை ஆண் நாய்கள் தெருவோர ஸ்லிம் பியூட்டி கருப்பியை பார்த்து வாலாட்டுகிறது. குரைக்காமல். 

கல்லூரி வயதில் நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. ராஜகோபாலும் நானும் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தோம். ஆறு புள்ளி ரெண்டடி இருப்பான். ராஜகோபால் சைக்கிளில் எப்போதும் முன்னாடி பாரில் தான் உட்காருவான். அன்றும் அப்படி சென்றுகொண்டிருக்கும் போது அவன் வீட்டுக்கு அருகில் ஒரு திருப்பம் வரும். அது ஆளில்லா திருப்பம் ஆனால் அதிக நாயுள்ள திருப்பம். எனக்கு கொஞ்சம் உதறல், ஏனென்றால் ஒவ்வொன்றும் வேட்டை நாய் போல் இருக்கும். கவ்வினால் குறைந்தது அரை கிலோ கறி எடுத்துவிடும். இவன் சும்மா இருக்காமல் பயத்தில் நாயுடன் தோழமை கொண்டாடுவது போல "ஹாய்" என்று கையை தூக்கி வாழ்த்துச் சொன்னான். இவன் அடிக்க கை ஓங்குகிறான் என்றஞ்சி  ஓரமாக போய்கொண்டிருந்தது பாய்ந்து வந்து "வள்" என்று அவன் காலில் அதன் பல் தடம் பதித்து சென்றுவிட்டது. அவ்வளவுதான். அவன் ஒரேடியாக பயப்பட்டு கதற உடனே ஹாஸ்பிடலுக்கு ஓடினோம். "தொப்புளை சுற்றி ஊசி போடவேண்டும் சட்டையை தூக்கு" என்று அந்த ஓமன மலையாள நர்ஸ் சொன்னதும் அவனுக்கு எங்கிருந்தோ வெட்கம் வந்து பிடுங்கி தின்றுவிட்டது. வெட்கத்தில் சட்டை நுனியை தூக்கி வாயில் சொருகிக்கொண்டு காலால் கோலம் போடும்போது தெரிந்த தொப்புளில் "நறுக்" என்று குத்திவிட்டாள் அந்த மலையாள பகவதி நர்ஸ். ஒரு வாரம் தொடர்ந்து ஊசி போட்டுக்கொண்டான். வார இறுதியில் துளிக்கூட வெட்கம் இல்லாமல் உள்ளே நுழையும் போதே சட்டையை தூக்கிக்கொண்டு போகும் வரைக்கும் துணிந்துவிட்டான் ராஜகோபால். அது ஒரு நர்ஸ் ஊசிப் போன கதை. இங்கே வேண்டாம்.


எங்கேயோ கேட்ட ஜோக்:
ஒருவர்: என்ன பன்னி கூட வாக்கிங் போய்கிட்டு இருக்கே?
நாயுடன் செல்பவர்: ஹே இது நாய். பன்னின்ற..
ஒருவர்: இல்லைப்பா.. நான் நாய்க்கிட்டே கேட்டேன்.

மகாபாரதத்தில் மஹாபிரஸ்தானிக பர்வத்தில் (மேலுலக யாத்திரை) தன்னிடம் அன்பு பாராட்டிய நாயையும் உயிரோடு ஸ்வர்க்கத்திர்க்கு அழைத்துச் சென்ற தருமன் கதை எல்லோருக்கும் ஞாபகம் இருக்கட்டும்.

35 comments:

மதுரை சரவணன் said...

//(மேலுலக யாத்திரை) தன்னிடம் அன்பு பாராட்டிய நாயையும் உயிரோடு ஸ்வர்க்கத்திர்க்கு அழைத்துச் சென்ற தருமன் கதை எல்லோருக்கும் ஞாபகம் இருக்கட்டும்.//
அருமை. வாழ்த்துக்கள்

மோகன்ஜி said...

நாய்களைப் பற்றி நல்லாவே எழுதியிருக்கிறீர்கள். தெரு நாய்கள் தொல்லை தான் என்றாலும், தெருவுக்கே லட்சணம் அதில் திரிகின்ற ஸ்வானம் தானே? இப்பத்தானே பள்ளிகளில் பாலியல் கல்வி தேவைன்னு கூப்பாடு??,நம் பள்ளிக் கூட நாட்களில்,கார்த்திகை மாசம் பூராவும் நமக்கு கிளாஸ் எடுத்த செப்பனையும் கறுப்பியும் கிண்டல் பண்ணலாமா?நம்ம ரெண்டு பேர் ப்ளாகும் இப்பல்லாம் டிஸ்கவரி சேனல் போல இல்ல மாறிடுச்சு?

Gayathri said...

haa haa nallaa irukku

ஸ்ரீராம். said...

"இரும்புச் சங்கிலியால் கைகட்டப்பட்ட மனோகரா சிவாஜி போல..."

ஹா..ஹா...

நாயைச் சொல்கிறீர்கள்.. எங்கள் ஏரியாவில் பாம்புகளே எங்களுக்கு வழி விடும்..."நம்ம பக்கத்து வூட்டுக் காரனடா..." என்பது போல!!!

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

///ஒருக்கால் அந்தத் தெருவின் வாக்கிங் வாடிக்கையாளர் என்று நினைத்ததோ என்னமோ.///

ஹா ஹா... இருக்கும் இருக்கும்..
நானும் வாக்கிங் போகும் போது.. சில பல பைரவர் லொள்ளுவதில்லை.. :-)))

//அந்த நாய் இவர்களை இரும்புச் சங்கிலியால் கைகட்டப்பட்ட மனோகரா சிவாஜி போல தர தரவென்று தெருமுழுக்க இழுத்துக்கொண்டு போகும்.///

ஹா ஹா ஹா.. முடியலங்க... செம சூப்பர்... :-))

////"குலைக்கற நாய் கடிக்காது" என்பதற்கு பதிலடியாக வரும் சதி லீலாவதி வசனம் "அது நமக்கு தெரியும், ஆனா நாய்க்கு தெரியனுமோனோ.." ///

ஹா ஹா.. என்னங்க இது..இப்படி பின்றீங்க..
இதே அனுபவம் எனக்கும் நேர்ந்தது.. சூப்பர்.. :-))

//ஒருவர்: என்ன பன்னி கூட வாக்கிங் போய்கிட்டு இருக்கே?
நாயுடன் செல்பவர்: ஹே இது நாய். பன்னின்ற..
ஒருவர்: இல்லைப்பா.. நான் நாய்க்கிட்டே கேட்டேன்.////

கடவுளே... செம செம.. :-)))))))

RVS said...

நன்றி மதுரை சரவணன்.

அன்புடன் ஆர்.வி.எஸ்.

RVS said...

"வள்ள்ள் ...வள்.." ஹி.... ஹி... Thank You கொஞ்சம் குரைத்து சொன்னேன் மோகன்ஜி....

அன்புடன் ஆர்.வி.எஸ்.

RVS said...

வாழ்த்துக்கு நன்றி காய3. ;-)

அன்புடன் ஆர்.வி.எஸ்.

RVS said...

ஸ்ரீராம் எதுக்கு கையில மகுடியோட போங்க... ;-) ;-)

அன்புடன் ஆர்.வி.எஸ்.

RVS said...

வாய் விட்டு சிரித்து ரசித்ததற்கு நன்றி ஆனந்தி ;-)

அன்புடன் ஆர்.வி.எஸ்.

தமிழ் ஜோக்ஸ் ARR said...

டேய் தம்பி.. என்னை நினைவிருக்கா..? கலக்கறே வெங்கிட்டு.. சரி.. அந்த ராஜகோபால்.. "பார்ட்டி"யா..?

மன்னார்குடி மதிலழகு வலைப்பூவில் நூல்பிடித்து இங்கு வந்தேன்..

அருமை.. தொடர்ந்து அசத்து..!

RVS said...

ராஜாண்ணே... நல்லா இருக்கேன்... வாழ்த்துக்கு நன்றி. டயம் கிடைக்கும் போது ஒரு தடவை வலையை சுத்தி வாங்க. வலைக்குள் மாட்டிப்பீங்க சொல்லிப்புட்டேன் ஆமா... மன்னார்குடியை பத்தி எழுதப்போறேன். புக்கா போடற அளவுக்கு... ;-) ;-)

அன்புடன் ஆர்.வி.எஸ்.

பத்மநாபன் said...

வள்..வள்..வள்....சரியான லொள்.......

சில கனவான்களை நாய் இழுத்துசெல்வதையும் , அவர்கள் நாக்கு தள்ள பல்டி அடிச்சு ஓடுவதையும் பார்த்திருக்கிறேன்....

நர்ஸ்க்காகவே, நாய்க்கடி மிஸ்ஸாயிட்ச்சேன்னு வெங்கட் புலம்புனதாக ராஜகோபால் பிளாக்குல இப்பதான் படிச்சேன்......

RVS said...

பத்துன்னா போற போக்கில எம்மேல ஏன்னா உழுந்து புடுங்கறேள்...... நான் பாட்டுக்கு ஓரமா போய்கிட்டு இருக்கேன்.. ;-) ;-)

அன்புடன் ஆர்.வி.எஸ்.

கௌதமன் said...

நன்றாக, நகைச்சுவையாக எழுதி இருக்கின்றீர்கள். நான் வாக்கிங் போகின்ற பார்க்கில், இரண்டு மூன்று பேர்கள், கையில் குச்சியுடன் வருவதைப் பார்த்திருக்கின்றேன். நகர்வலம் வரும் பைரவர்களை சமாளிக்க எளிய வழி!

RVS said...

நாய்க்கு பயந்து ஒரு சேஃப்டிக்கு நாலைந்து பேராய் குருப்பாக போவார்கள் கௌதமன் சார்.

அன்புடன் ஆர்.வி.எஸ்.

ஹேமா said...

இன்றைய காலகட்டத்தில் நாயாய்ப் பிறப்பதே நல்லதுபோல இருக்கு ஆர்.வி.எஸ்.கொடுத்த வைத்த ஜென்மங்கள்.இன்றைக்காகக் கவலைப்படுவதுமில்லை.நாளைக்காக யோசிப்பதுமில்லை.ஆனாலும் நீங்க
ரொம்பத்தான் திட்டுறீங்க அவங்களை !

RVS said...

நான் திட்டலை ஹேமா.. அவங்கதான் குலைக்கறாங்க... அப்படின்னேன்.. நீங்க தப்பு சொன்ன தப்பு போட்டுக்குறேன்.. ;-)

அன்புடன் ஆர்.வி.எஸ்.

அப்பாதுரை said...

காலங்காலையில் வாய் விட்டு சிரிக்க வச்ச ஜோக். நாளைய முதல்வர் RVS...வாழ்க!

RVS said...

அப்பா சார். வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி..

அன்புடன் ஆர்.வி.எஸ்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

மனுஷனுக்கு..வாயைக் கட்டி..வயத்தைக் கட்டி.. எங்கேயோ கூடுவாஞ்சேரிக்குத் தென்கிழக்கால.. தொண்ணூறு கிலோ மீட்டர் தூரத்தில,
ப்ளாட் ஒண்ணு வாங்கிப் போட்டு..தொண்ணூத்தாறு மாசம் கழிச்சு..அந்த இடத்தை குடும்பத்தோட ஜாலியாப் பார்க்கப் போக..இவனோட போறாத காலம்..அங்க,
எவனோ ஒருத்தன் குடிசை போட..அந்த தெரு நாய் பொழைப்பே தேவலைன்னு ஆயிடும் இவனுக்கு !!!
பாவம் தெரு நாய்கள்! காசு கொடுத்துத் தான் இடம் வாங்க வேண்டும் என்கிற விஷயம் அவற்றுக்குத் தெரியவில்லை.தெரிந்திருந்தால்....

Chef.Palani Murugan, said...

இது மார்க‌ழி மாத‌மில்லையே

RVS said...

ஆர்.ஆர்.ஆர். சார் என்னாச்சு? எனக்கு ஒன்னும் புரியலை. :(

அன்புடன் ஆர்.வி.எஸ்.

RVS said...

ஆமாம். இது மார்கழி மாதம் இல்லை செஃப். இருந்தாலும் ஒரு டஜன் நிற்கிறது.

அன்புடன் ஆர்.வி.எஸ்.

பத்மா said...

discovery புகழ் (நன்றி மோகன்ஜி) R V S சார் ,
நேற்று இது பற்றி தான் நினைத்து கொண்டிருந்தேன் .எங்கள் சிறிய தெருவில் மூணு வீடுகளை தத்தெடுத்துக் கொண்டிருக்கும் எங்கள் தெரு நாயை பற்றி..
நான் ஆட்டோவில் தெரு முனை திரும்பியவுடனே ஓடி வந்து ஆட்டோ கூடவே ஓடி வரும் .நன் வருவதில் மகிழும் ஜீவன் இருப்பதில் எத்தனை மகிழ்ச்சியாய் இருக்கிறது..நேற்று காலில் அடி பட்டு விட்டது போல .ஓட முடியவில்லை .வீட்டு வாசலுக்கு வந்து காலை தூக்கி காட்டி நம் கொஞ்சலை எதிர் பார்த்து நின்றது ..SO SWEET .

RVS said...

நன்றியின் இலக்கணம் நாய். நேஷனல் ஜியோகரஃபிக்காய் கமென்ட் போட்டதற்கு நன்றி பத்மா. ;-) ;-)

அன்புடன் ஆர்.வி.எஸ்.

Madhavan Srinivasagopalan said...

//என்னை அவர்களில் ஒருவராக பாவித்து தொந்தரவு செய்யாது விட்டுவிட்டது. ஒருக்கால் அந்தத் தெருவின் வாக்கிங் வாடிக்கையாளர் என்று நினைத்ததோ என்னமோ.//

நாய்களுக்கு மோப்ப சக்தி அதிகமென்பதால், அடிக்கடி அவ்வழியாக செல்பவர்களை அதற்கு மோப்பத்தினால் அடையாளம் தெரியும்.
அதுவே காரணம்.

what is '...... அடி அடி ?

சாய்ராம் கோபாலன் said...

நான் கல்லூரி முடித்து 1986 பெங்களூர் போன சமயத்தில் எப்போதும் மார்கழி போல் இருக்கும். நாய்கள் ஒரே குஜால் டைம் தான் !

நாங்கள் இருந்த ஜாகையில் (மாருதி சேவா நகர், லிங்கராஜபுரம்) ஆகிய இடங்களில் பைரவர்கள் ஏராளம் ஏராளம்.

காலையில் நம்மை பார்த்து வாலை ஆட்டி வணக்கம் சொல்லும் அதே நாய்கள், ராத்திரி நாங்கள் வீடு திரும்பும்போது வெறியுடன் திறத்துவார் பாருங்கள் !! Canine Teeth அவ்வளவு பயமாக இருக்கும் !

ஏதோ கைனடிக் ஹோண்டாவாக இருந்ததால் காலை தூக்கி ஹான்டில்பாரில் வைத்து ஓட்டும் அளவு பயங்கர ப்ராக்டிஸ் !!

அப்பாதுரை,

லிங்கராஜபுரம் நாய்கள் நினைவு வருகின்றதா ? சினிமா பார்த்துவிட்டு எவ்வளவு முறை வாசல் கேட்டை எகிறி குதித்து மாடி ரூமில் துங்கி இருக்கின்றோம் ? அப்படியும் ஒரு படம் விட்டதில்லை !!

RVS said...

மாதவா நீ நாயாலாஜி தெரிந்தவன். கண்டுபிடித்துவிட்டாய்... குட். ;-) ;-)

அன்புடன் ஆர்.வி.எஸ்.

RVS said...

ஊரில் ராத்திரி மட்டும் வந்து லாட்ஜிங் போல எங்கள் வீட்டு வாசல் வராண்டாவில் வந்து ஒரு நாய் படுத்துக்கொள்ளும். மிச்சம் மீதி போட்டால் சாப்பிட்டு விட்டு வாலாட்டும். கரெக்டாக வாசலில் போட்டிருக்கும் கால்மிதி சாக்கில் தான் வந்து படுத்துக்கொள்ளும். யாரையும் பார்த்து குலைக்காது. மெதுவாக கண்ணை மூடி மூடி திறக்கும். எப்போதும் நிஷ்டையில் இருப்பது போல இருக்கும். மிகவும் சமர்த்தான அமைதியான நாய். பெங்களூர் நாய்களைப் போல போக்கிரி இல்லை சாய்.. ;-) ;-)

அன்புடன் ஆர்.வி.எஸ்.

வெங்கட் நாகராஜ் said...

பகிர்வுக்கு நன்றி. ”இது எங்க ஏரியா - உள்ளே வராதீங்க” நாய்களின் குரைப்பு - ஹிஹி....

RVS said...

நன்றி வெங்கட்..

அன்புடன் ஆர்.வி.எஸ்.

அப்பாதுரை said...

லிரா நாய்களை நினைவுபடுத்தியதற்கு நன்றி (?) சாய்.
நாயை விட வேகமாக எட்டுகால் பாய்ச்சலில் கேட் ஏறிக் குதித்து (ஒரு முறை எக்கச்சக்கமாய் அடிபட்ட) நாளெல்லாம் பொன்னாள்.

அப்பாதுரை said...

தருமன் (பாய்ஸ்லே பெரியவர்) கடைசி காலத்தில் நடந்து போய்க்கிட்டிருந்தப்ப ஓஞ்சு ஓஞ்சு போனாராம். இன்னும் கொஞ்சம் மலையேறினா சொர்க்கமோ நரகமோ எதுனா ஒரு இடத்துக்குப் போயிரலாம்.. ஆனா முடியலை... ஒரு அடி கூட எடுத்து வக்க முடியல.. ஓஞ்சு போன தருமன் திடீர்னு தலை தெறிக்க ஓட்டமெடுத்தாராம்.. சிகரத்து வந்ததும் தி பிக் மேன் அவரைத் தடுத்து, 'போதும் தருமன், பினிஷ் லைன் தாண்டி ஓடிக்கிட்டிருக்கியே, உனக்கு சொர்க்கம் வேணுமா நரகம் வேணுமா,னு கேட்டாராம். அதுக்கு தருமன், "யோவ், நீயெல்லாம் பிக் மேனாயா? பின்னால துரத்திக்கிட்டு வர நாயை நிறுத்துயா, அப்புறம் சொர்க்கம் நரகம் எல்லாம் தரலாம்.."னு மூச்சு வாங்கிக்கிட்டே சொன்னாராம். கொஞ்சம் திரும்பிப் பார்த்த பிக் மேன், "நில்லுயா தருமன்... நானும் வரேன்.. டவுசரைக் கிழிக்குது"னு பின்னாலயே ஓடினாராம். இது பைரவர் புராணத்திலே சொல்லப்பட்டிருக்கிறது. இதைப் படித்தவர்களுக்கும் கேட்டவர்களுக்கு நாய் துரத்தி வரும் கெட்ட சொப்பனமெல்லாம் தீரும்.

RVS said...

தருமனை மட்டுமல்ல என்போன்ற அதர்மனையும் ராஜபாளைய பைரவர்கள் துரத்துவது போல பயங்கர கனாக்கள் வருது அப்பா சார். ஆமா.... இந்த மாதிரி சோக்கெல்லாம் எப்படி சார்.. தருமா தேவதை நேரிலேயே வந்து உங்களை மிரட்டக் கடவது...

அன்புடன் ஆர்.வி.எஸ்.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails