Friday, April 4, 2014

மன்னார்குடி டேஸ் -- நாகராஜனின் கடைசி தினம்

ருசித்துப் புசித்தத் தயிர்சாதப் புறங்கையை சுவாரஸ்யமாய் நாவால் துடைத்துக்கொண்டே கை அலம்பலாம் என்று கொல்லைப் பக்கம் வருகிறீர்கள். கொல்லை வாசல்படிக்கு நேரே பொட்டிட்ட துளசி மாடம். அதனருகில் பந்தல் புடலை நீளத்தில் ஒரு பாம்பு படமெடுத்து பார்த்துக் கொண்டிருக்கிறது. பழி வாங்கும் படங்களிலெல்லாம் வருமே...அது மாதிரி தலையைத் தூக்கிக் கொத்தும் பார்வையுடன். காலை நேர வெய்யிலில் அதன் மேனி கண்ணாடி மாதிரி பளபளத்துக் கண் கூசச் செய்கிறது. அதனெதிரே பாட்டி பவ்யமாக நமஸ்காரம் பண்ணிக்கொண்டிருக்கிறாள். உங்களுக்குத் திக்குன்னு தூக்கிவாரிப் போடாது? எனக்கு அப்படிதான் இருந்தது.

நாக்கில் சலைவா சொட்டில்லாமல் நக்கியதில் சாப்பாட்டுக் கையை அரையிலே துடைத்துக்கொள்ளுமளவிற்கு ஏற்கனவே சுத்தமாகிருந்தது. பிரபல ரஜினி படங்களில் வருவது போல பப்பகாரத்தில் “ப..ப..ப்ப....ப்ப...” என்று வார்த்தையில் நொண்டியடித்துக் கொண்டிருந்தேன். கிணற்றடிக்குப் போவதற்கு சித்தி வாணாய் அருக்கஞ்சட்டி என்று பத்துப்பாத்திரங்களை எடுத்துக்கொண்டு பின்னாலையே வந்தாள். “திடுமுனு உனக்கு பேச்சுப் போய்டுத்தா? பாட்டின்னு சொல்ல நாக்கு எழும்பலையாடா?” என்று நக்கலடித்தவள் நேரே பார்த்ததும் திறந்த வாய் திறந்தபடிக்கு அதிர்ச்சியாகிக் கல்லாய்ச் சமைந்தாள். ”கல்லாய்ச் சமைந்தாள்” அறுபது எழுபதுகள் மாதிரி இருக்கோ? எஃப்பியின் கவர் ஃபோட்டோவாக நின்றாள்.

ஆசுவாசப்படுத்திக்கொள்வதற்கு இரண்டு நொடி பிடித்தது. “எ...ன்...ன....டா......து...?” என்று திக்கித்திக்கி கீறல் விழுந்த ஸிடி போலப் பேசினாள். இந்தப் பக்கம் வந்தால் வாசலுக்கு ஓடுவதற்காக கண் எடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தேன்.

பாதி நமஸ்காரத்தில் தலையைத் தூக்கி “போய் அந்த அகல் விளக்கை எடுத்துண்டு வாடி....” என்று சாரதா பாட்டி சத்தமான ரகஸ்ய குரலில் கட்டளையிட்டாள். பாம்பு சமாதானமாக நின்று கொண்டிருந்தது. பாட்டி அதன் முன் விழுந்து விழுந்து பஞ்சாங்க நமஸ்காரம் செய்துகொண்டிருந்தாள். வெண்கலப் பானையிலிருந்த கடலைப் பருப்பு பாயஸத்தை ருசி பார்த்தது போல நாக்கிரண்டையும் வெளியே உருட்டி விளையாடியது. படையே நடுங்குமாம்... பையன் நான் நடுங்க மாட்டேனா?

“பா.ட்.டி..,. பா.ம்.பு...பா...ட்..டி... பா.. ம்.. பு... ” என்று எனக்கு ஜுர வேகத்தில் வார்த்தைகள் வழுக்கிக்கொண்டு வந்து விழுந்தன. முணுமுணுத்தேன். சாப்பிட்டது ஜீரணம் ஆகிவிட்டது. பயத்தில் கொல்லைப்பக்கம் வருவது போலிருந்தது. இராவேளைகளில் பக்கத்தாத்து கொல்லையிலிருந்து பறித்த பூவரசு இலையில் பீப்பீ செய்து ஊதினால் கூட “விளக்கு வெச்சப்புறம் ஊதாதேடா... ‘அது’ வந்துடும்...புஸ்ஸுன்னு... ” என்று கையைச் சர்ப்பமாக்கி மிரட்டுவாள். மலங்க மலங்க விழித்துவிட்டு திரும்பவும் காருக்குருச்சி அருணாசலம் மாதிரி வாயில் வைத்து “பீ..பீ....” என்றதும் “ஸர்ப்பம் வரும்டா... இவனொருத்தன் இங்கிதமா சொன்னா புரிஞ்சுக்காமப் படுத்துவன்..” என்று பிடிங்கிக் கசக்கித் தூரத் தூக்கிப் போட்டுவிடுவாள். “ஆடு பாம்பே... விளையாடு பாம்பே...” என்ற பாடலுக்கு ஸ்வர்ணமுகி நடனமாடி பிரபலப்படுத்தியிருந்தார். ஊரிலுள்ள நண்டு சுண்டு நார்த்தாங்காயெல்லாம் தலைக்கு மேலே கையிரண்டையும் வைத்துக்கொண்டு வெறும் தரையில் நீச்சலடித்து நாகா டான்ஸ் ஆடிக்கொண்டிருந்த சமயம். அதற்கு ”ட்ரெஸ்ஸெல்லாம் பாழ்...” என்று அம்மாக்கள் திட்டுவர்.

பாட்டு நல்லாயிருக்கே என்று “நாதர் முடி மேலிருக்கும்..” என்று மெல்ல ஆரம்பித்தால் கூட “படவாப்பயலே... பாடாதேடா... பாம்புச் செவிக்கு எட்டிடும்...” என்று கப்பென்று வாயைப் பொத்தி அமர்க்களம் செய்வாள். நாகபஞ்சமி போன்ற விசேஷ நாட்களில் பால் கொடுத்துக் கொண்டாடிய அவளுக்கு இப்படி ஒரு நிலையா என்று பதறியது என் உள்ளம். அந்த பாம்பிற்கு அன்றைக்கு வேறு வேலையில்லை போலிருக்கிறது. சூப்பர்வைஸர் மாதிரி மிடுக்காக ரெண்டு பக்கமும் பார்த்துட்டு அப்படியே நின்ற வாக்கில் உறங்கிக்கொண்டிருந்தது. படம் எடுத்தபடியே!

முட்டி போட்டுக் குனிந்து கைகளை நிலத்தில் ஊன்றி முதுகில் குழந்தைகளை ஏற்றி “ஆனை...ஆனை.. அரசரானை.. அரசரும் சொக்கரும் ஏறும் ஆனை...” விளையாடும் போஸிலிருந்த பாட்டி நான் ”பா....ட்டி.. பாம்.......பு....” என்று பாண்டியாடியதைக் கேட்டு “நேக்கு தெரியும்டா... நீலா அகல்ல நல்லெண்ணெய் ஊத்தி பஞ்சு திரி போட்டுக் கொண்டாடீ.... சீக்கிரமா..” என்றாள். பாம்பு வேடிக்கைப் பார்த்தது.

அகல் விளக்கு வருவதற்குள் துரிதகதியில் இந்த லொகேஷனைப் பார்த்துவிடலாம். நிலை வாசலுக்கு நேரே சமுத்திரம் போல தெப்பக்குளம், கொல்லைப்புறம் துரு பிடித்தத் தகர கேட்டைத் திறந்தால் (திறக்கும் போது ”ட்ர்ர்ர்ர்...டொர்ர்...” என்ற க்ரீச்சொலி எட்டூருக்குக் கேட்கும். குட்டிகளுடன் மேயும் பன்றிகள் ”புர்..புர்...”ரென்று தெறித்து ஓடும்) பாமணியாறு, நடுவில் எங்கள் அகம். கொல்லையில் ஆறேழு தென்னைமரத்து நிழலில் ஜகடை போட்ட கிணறு. வாளியை உள்ளே விட்டு ஒண்ணு... ரெண்டு... என்று பத்து எண்ணி இழுப்பதற்குள் வாளி தண்ணீரோடு வெளியே வந்துவிடும்.

துளசிமாடத்திலிருந்து ஒரு ஒத்தையடிப் பாதை கிணற்றுக்கு காம்ப்பஸ் பிடித்து வரைந்த ஆர்க் போல சட்டென்று ஓடும். இப்போது பாம்பு படமெடுத்து ஆடிக்கொண்டிருக்கிறதே அதற்கு பின்னால் ஒரு பெருநெல்லி மரம். காய்க்கும் காலத்தில் மரத்தடியில் நடந்து போனால் மெல்லிய தென்றலுக்கு ரெண்டு பழுத்த காய் தலையில் விழும். ”நெல்லிக்கா தின்னுட்டு சொம்பு சொம்பா ஜலம் குடிக்காதீங்கோடா.. தொண்டை கட்டிக்கும்..”ன்னு பாட்டி இரைவாள்.

நெல்லிமரத்திற்கு இடதுபுறம் வாழையடி வாழை என்கிற கூற்றை மெய்ப்பிக்கும் குலை தள்ளியும் தள்ளாமல் கன்னியாகவும் நிற்கும் வாழைமரங்கள். இன்னும் கொஞ்ச தூரத்தில் செம்பருத்திச் செடி. மரம் மாதிரி கிளைபரப்பி செழித்து வளர்ந்திருக்கும். கிளைக்குப் பத்து பூ. சிகப்பும் பச்சையுமா செடியிலேயே மாலை மாதிரி.

ஏப்ரல் மேயில் கூட கிணற்றுத் தண்ணீர் தொட்டா ஐஸ் மாதிரி ஜிலோர்னு இருக்கும். தலைக்கு ஊத்திண்டா குளிரும். அந்தக் கிணற்றுக்கு பக்கவாட்டில் ராஜேஸ்வரி டீச்சர் அக்காவாத்தில் புற்றுக் குன்று இருக்கும். எறும்புகளின் உழைப்பில் பாம்புக் குடும்பம் குழந்தை குட்டிகளுடன் குடித்தனம் நடத்திக்கொண்டிருந்தது.

கட்.

இங்கே பாம்பு ஏதோ புன்னாகவராளி கேட்டா மாதிரி அரை மயக்கத்தில் நின்று கொண்டிருந்தது. கடன்காரன் வசூலுக்கு நிற்கிறா மாதிரி இடத்தை விட்டு அசையக் காணோம்.

நேத்திக்கு சாயந்திரம் ”டீச்சர் நேத்திக்கு கொல்லையிலே இவ்ளோ பெரிய பாம்பு பார்த்தேன்” என்று பக்கத்து வீட்டு சீனு அம்மா சித்தியிடம் காண்பித்துக்கொண்டிருந்து ஞாபகம் வந்தது. கையிரண்டையும் ஸ்கூல் ட்ரில் மாஸ்டர் ஒன் டூ த்ரி சொல்லும் போது ஆகாசத்தையும் பக்கத்து பசங்க மேலெ இடிக்கிற மாதிரியும் நீட்டுவோமே.. அந்த மாதிரி டூ கமாண்டுக்கு கையை விரித்துக் காட்டினார்கள். பாற்கடல் கடைய கயிறான வாசுகியை நேரே பார்த்தா மாதிரியான ஒரு பிரமிப்பு அவர் கண்ணில் மின்னியது.

அகல் வந்தது.

சடாரென்று பாம்பு குனிந்தால் கொத்தாத தூரத்தில் அந்த விளக்கை நகர்த்தி நமஸ்கரித்தாள் பாட்டி. தலையில் போடுமா போடாதா என்று தூரத்திலிருந்து நடுங்கிக்கொண்டிருந்தேன். “தம்பி... சித்த இப்டி வாடா.. நாகராஜனுக்கு சமர்த்தா ஒரு நமஸ்காரம் பண்ணு பாப்போம்...” என்று பாட்டி கூப்பிட்டபோது ட்ராயர் அவிழ குடுகுடுன்னு ஓடிப்போய் வாசல் கதவைப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருந்தேன். அப்புறம் பால்பழமெல்லாம் (சுத்த ஆசாரமான வூடாதலால் முட்டை கிடைக்காது என்று நாகராஜனுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.) கொடுத்து மாப்பிள்ளை உபசாரத்தோடு அனுப்பி வைத்தாள் என்று கேள்விப்பட்டேன்.

இந்தக் கூத்து காலையில் நடந்தது. சாட்டிலைட் டீவி என்னும் அசுரன் அப்போது ஜனிக்கவில்லையாதலால் சாயந்திர வேளைகளில் வாசல்படியில் உட்கார்ந்து கொண்டு பொது விஷயங்களை அலசுவர். பெண்டிர்தான். வம்பென்று சொல்லக்கூடாது. “ராஜேஸ்வேரி ஆத்துல ஒரு வாழும் பாம்பு இருக்குடி சகுந்தலா. நா கொல்லைப்பக்கம் போகும் போதெல்லாம் சிறகுமேலெல்லாம் ஏறி “சரக்..சர்க்..”ன்னு உலாத்திண்டிருக்கும். சில நேரம் சாரையும் சர்ப்பமுமா கட்டிப் பொரண்டு சண்டை வேறே... ” இந்த இடத்தில் சகுந்தலா நிறுத்தி “பாட்டி சாரையும் சர்ப்பமும் இந்த மாதிரி பின்னிப் பினைஞ்சுதுன்னா வைரம் கக்குமாமே? அப்டியா? என்று பேச்சுக்கு சுவாரஸ்யத்தை இணைத்தார்.

“அது கெடக்குடி... இன்னிக்குக் கார்த்தாலே சடசடன்னு துளசிமாடத்துக்கிட்டே வந்து எட்டிப் பார்த்துது. பெரிய திருவிழால வெள்ளி சேஷ வாகனத்துல ராஜகோபாலன் சுத்தி வருவாரே... அந்த வெள்ளி சேஷ வாகனம் மாதிரி பளீர்னு ஜொலிச்சுதுடி. நேக்கு கையும் ஓடலை.. காலும் ஓடலை.... போன வாரமே கிணத்தடியில சட்டை உரிச்சுக் கிடந்துது. தாம்புக்கயிறு நீளத்துக்கு... வாழும் பாம்போன்னோ.. அடிக்கடி கண்ல படறது... நானும் நாகராஜா... கண்ல படாம மண்ல மறைஞ்சு போன்னு வேண்டிண்டு.....” ஐந்தாறு பேர் மெய்மறந்து காலட்சேபம் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

ஏழு மணி வாக்கில் “ஏதோ வழவழன்னு கை மேலே ஏறித்து...” என்று உலுக்கிக்கொண்டு எழுந்திருந்தாள் பாட்டி. அப்போது சாணி தெளித்த வாசலில் சைக்கிளோடு நின்றிருந்தேன். ”அதோ..அதோ.. போவுது....” என்று மாநாட்டில் கலந்துகொண்ட அம்மணிகள் கூச்சலிட்டார்கள். காலையில் ப்ரேக் ஃபாஸ்ட் கொடுத்த கைக்கு உம்மா கொடுத்துவிட்டு நைட் டின்னருக்கு வந்திருந்தார் நாகராஜன். வாசல் படிக்கு உட்புறம் முதற்கட்டில் மாடிப்படிக்கு கீழே 2x2 வில் ஒரு சின்ன மித்தம் உண்டு. கொல்லைக் கதவு சார்த்திவிட்டால் மிச்சம் மீதியை பைசல் பண்ணிவிட்டு பாத்திரம் அலம்புவதற்காக இருக்கும் தொட்டி மித்தம் அது. வீட்டிற்கு வந்த கெஸ்ட் போல அதில் வாலைச் சுருட்டிக்கொண்டு படுத்துவிட்டது.

அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு வாசல் மீட்டிங் கலைக்கப்பட்டது. அவரவர் தத்தம் வீடுகளுக்கு ஓடினார்கள். தெரு பரபரப்பானது. பழுதெல்லாம் பாம்பாக தென்பட்டது. சைக்கிளை எடுத்துக்கொண்டு வடக்குத் தெருவிற்கு போய்விடலாம் என்று பெடலில் கால் வைத்தேன். “தம்பீ!” என்ற பாட்டியின் அபயக்குரல் என்னைத் தடுத்தது. “எஸ்ஸென்னார் ஆத்துல இளங்கோவைச் சித்தக் கூப்பிடுடா... அப்டியே கையாலேயேப் பிடிச்சுப்புடுவன்...” என்று தைரியம் கொடுத்தாள். இரண்டு வீடு தள்ளியிருக்கும் ஆர்ட்டிஸ்ட் எஸ்ஸென்னார் வீட்டில் இரு புதல்வர்கள். பெரியவர் தமிழரசன். இளவல் இளங்கோ. கலை என்ற அக்காவும் உண்டு.

வாசலோடு கொல்லை திறந்துகிடந்தது. “இளங்கோ அண்ணே.....” என்று கத்தினேன். மனைவி மக்கட்செல்வம் இருந்தாலும் எஸ்ஸென்னார் பாட்டிலோடுதான் குடும்பம் நடத்திக்கொண்டிருந்தார். கோப்பையில் குடியிருக்கும் ஆர்ட்டிஸ்ட். சரக்கு உள்ளே போனால் கை ஆடாமல் வரைவார். லாஹிரி வஸ்து போடவில்லையென்றால் கண்ணுக்கு காதும் காதுக்கு மூக்கும் வரைவார். வரலக்ஷ்மி நோன்பிற்கு நடுக்கூடத்தில் கலசத்துடன் அவர் வரைந்த லக்ஷ்மி படத்துக் நமஸ்கரிக்காமல் ஜாக்கெட் பிட் வாங்கிக்கொண்டு சென்ற சுமங்கலிகள் இல்லை. அவர் கூடத்தில் உட்கார்ந்து வரைந்த அன்னிக்கு “ஹப்பா...” என்று மூக்கைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டாள் பாட்டி. எஸ்ஸென்னார் வாசலில் ஒரு மோன நிலையில் அமர்ந்திருந்தார். இன்னொருதரம் “இளங்கோ அண்ணே இருக்கா?”ன்னு கேட்டேன். அவர் சஞ்சாரித்துக்கொண்டிருந்த அந்த சந்தோஷ லோகத்திலிருந்து மீண்டு வரவேயில்லை. பாட்டி வாசலுக்கு வந்து மிரட்சியுடன் என்னைப் பார்த்துக்கொண்டே நிற்கிறாள்.

“பாட்டி! நிலைவாசல் கதவை மூடி வையுங்க. வூட்டுக்குள்ளே புகுந்திருச்சுன்னா அப்புறம் புடிக்கவும் முடியாது. அடிக்கவும் முடியாது” என்று பக்கத்துவீட்டு சீனு அம்மா பீதியைக் கிளப்பினார்கள்.

முண்டா பனியனும் அரைக்கு பூப்போட்ட கைலியுமாய் தமிழரசு அண்ணே எட்டிப்பார்த்தார்.

“என்னடா சின்னதம்பி?”

“அண்ணே! வீட்ல பாம்பு வந்திருச்சு. பாட்டி இளங்கோ அண்ணனை கூட்டுண்டு வரச்சொன்னாங்க...”

“பாம்பா... ஓடியா பார்ப்போம்....” என்று ஹவாய் செருப்பை மாட்டிக்கொண்டு என் முன்னால் போனார். இளங்கோவுக்கு மூத்தவர் தமிழரசன். ஆலைக்கரும்பு ஏற்றிக்கொண்டு வ் வீதிவழி செல்லும் ட்ராக்டர்களில் பின்பக்கமாய் ஓடிப்போய் ஏறி திருட்டுக் கரும்பு பறித்துத் தெருவிற்கு வாரிக் கொடுக்கும் ராபின்ஹுட்.

“டீச்சர்... கம்பு இருக்கா...” சித்தியைப் பார்த்துக் கேட்டார்..

துணி உலர்த்தும் கம்பை எடுத்துக்கொண்டு வந்த சித்தியை “அடிப்பாபி... பாம்பு அடிக்க துணி ஒணத்தற மடி கம்புதான் கிடைச்சுதா..” என்று அந்த நேரத்திலும் ஒரு பிடி பிடித்தாள் ஆச்சாரப் பாட்டி. வீட்டிற்கு ஓடிப் போய் ஒரு சவுக்குக் கட்டையை எடுத்துக்கொண்டு வந்தார். நேரம் ஓடிக்கொண்டிருந்தது.

மித்தத்திலிருந்து காம்பௌண்டிற்கு வெளியே செல்லும் பைப்பிற்குள் தஞ்சம் புகுந்தது பாம்பு. சவுக்குக் குச்சி தடிமன். மித்தத்தின் ஓட்டைக்குள் நுழையவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் கூடியிருந்தது. பாலு சார், அக்கம்பக்கத்து வீட்டு ஆம்பிளைகள் பொம்மனாட்டிகள் என்று ஒரே கூட்டம்.

“புகை போட்டா வந்துருங்க...” வேடிக்கை பார்க்க வந்தவர்களில் ஒருவர் ஐடியா கொடுத்தார்.

“அந்த ஓட்டைக்குள்ள எப்படிங்க புகை போடறது?” தமிழரசண்ணன் லாஜிக் கேட்டார்.

புகை போடுவதைப் பற்றிய மந்தராலோசனைக் கூட்டம் அங்கேயே நடைபெற்றது. பாதியில் வந்து இளவல் இளங்கோ கலந்துகொண்டார். இதற்குள் மணி ஒன்பதைக் கடந்திருந்தது. தஞ்சையிலிருந்து வரும் கணேசா பஸ் கூட்டத்தைப் பார்த்துக் கொஞ்சம் மெதுவாக்கி “டீச்சர் வீட்ல என்ன?” என்று விசாரித்துவிட்டு சென்றது.

கடைசியில் இளங்கோ அண்ணன் கையில் ஒரு மண் பானையுடன் வந்தார். பேக்கரி அண்ணாச்சியிடம் மரச்சிராய் கேட்டு வாங்கி வந்து பானைக்குள் போட்டு நெருப்பு மூட்டி புகை வளர்த்தாயிற்று. “கோபு வாத்தியாரை அழைச்சிண்டு வந்தா அவர் தீயில்லாமல் கண்ணை எரிக்கிறா மாதிரி ஹோமம் வளர்ப்பார். நிமிஷத்துல இங்கே புகை போட்டுடுவார்” என்று கூட்டத்தில் ஜோக் வேறு.

பானையின் கழுத்தை அந்த ஓட்டைப் பக்கமாக இளங்கோ அண்ணன் கவுத்துப் பிடித்துக்கொண்டு வாசல் பக்கம் தமிழரசண்ணன் சவுக்குக்கட்டையோடு அலெர்ட்டாக நின்றார். புகை கசிந்துகொண்டிருந்தது. அஞ்சு நிமிஷம், பத்து நிமிஷம்.. ஊஹும். சாம்பிராணி புகை போட்டது போல பாம்புக்கு சுகமாய் இருந்திருக்கும். அல்லது சிரமபரிகாரமாய் தூங்கியிருக்கவேண்டும்.

“வெளியில போயிருச்சுன்னு நினைக்கிறேன்..” என்று பீதியைக் கிளப்பினார் ஒருவர். அக்கம்பக்கம் வீடுகளில் பாம்பு தேட உள்ளே போய்விட்டார்கள்.

“எப்படிங்க.. இவ்ளோ பேர் வெளியில நிக்கிறோம்.. நம்பளைத் தாண்டி....”

“கண்ல படாம மண்ல மறைஞ்சு போன்னு பாட்டி வேண்டிக்கிட்டாங்க... நம்ப கண்ல மண்ணைத் தூவிட்டு போயிருக்குமோ...”

“இல்லீங்க.. பாம்பு மூச்சு விட்டா அந்த இடத்துல ஓட்டை விழுமாம். எங்கிட்ட கிராமத்து ஆளு ஒருத்தர் சொன்னாரு... உங்க மித்தது பைப்ல ஓட்டையிருக்குமோ?” என்று இன்னொருத்தர்.

“ஓட்டையில்லாம மித்தத்து தண்ணி எப்படிங்க ட்ரையின் ஆகி வெளியில வரும்...”

“ச்சே..ச்சே... காம்பௌண்டு சுவத்துல புதைச்ச குழாய்க்குக் கீழே ஓட்டையிருந்தா.. பாம்பு மூச்சு விட்டு ஓட்டைப் போட்டுக்கிட்டு அப்படியே கீழே இறங்கி போயிருக்கும்...”

”கீழேன்னா.. எங்கே நாக லோகத்துக்கா?” இப்படி இன்னொருத்தர்.

அன்ன ஆகாரமில்லாமல் தெரு ஜனங்கள் காத்திருந்தார்கள். பத்து மணி அடித்தது. பத்து மணிக்கு ஃபேஸ் மாற்றுவதற்காக பத்திருபது செகண்ட்டுக்கு கரண்ட் நிப்பாட்டுவார்கள். பொசுக்கென்று கரெண்ட் கட் ஆகியது.

கூட்டம் சிறு சலசலப்பிற்கு பின் அமைதி காத்தது. காம்பௌண்டிற்கு வெளியே திடீரென்று ஆய்..ஊய்யென்று கூச்சல். தப்பித்தோம் பிழைத்தோமென்று பாம்பு நடுரோட்டில் சரசரவென்று ஊர்ந்து செல்ல ஆரம்பித்தது. தமிழரசண்ணன் கட்டையோடு துரத்தினார். கோபி வீட்டைத் தாண்டும்போது வால் பகுதியில் ஒரு போடு. துண்டானது. துண்டாகி விழுந்த வால் துடித்தது. முண்டத்தோடு பாம்பு இன்னும் விறுவிறுப்பாக போக ஆரம்பித்தது. ஓங்கி தலையில் நச்சென்று போட்டார். அப்புறம் பின்னால் முருங்கக் குச்சியோடு விரட்டிய சிலர் செத்த பாம்பை தொப்தொப்பென்று அடித்தார்கள். கடைசியாகப் போய் எட்டிப் பார்த்த நானும் ஒரு சுள்ளியைப் பொறுக்கி எடுத்துக்கொண்டு அடித்தேன்.

“அச்சச்சோ... தமிழரசு பாம்பை அடிச்சுக் கொன்னுட்டீயேடா? நாசாமாப் போச்சு... ” திடீரென்று பாட்டி புலம்பினாள். பாம்பு Vs தமிழரசன் பார்த்த பார்வையாளர்களுக்கு பேரதிர்ச்சி. பாம்பை அடித்துக் கொல்ல ஆளைக் கேட்டதே பாட்டிதான். இப்போ இப்படி அலறுகிறாளே என்று விந்தையாய்ப் பார்த்தார்கள்.

“என்னாச்சு பாட்டி?” என்றார் கொலை முடித்த கையோடு இருந்த தமிழரசு அண்ணன்.

“நான் இளங்கோவைத்தானே பாம்படிக்கச் சொன்னேன். நீ ஏன் அடிச்சே? உங்கம்மா இந்திராணி எங்கே?” என்று அவரின் அம்மாவைக் கூட்டத்தில் தேட ஆரம்பித்தாள்.

வேடிக்கைப் பார்த்தக் கூட்டத்திற்கு ஒன்றும் விளங்கவில்லை. இந்திராணியம்மாள் வந்தார்கள்.

“இந்திராணி... இன்னிக்கி வெள்ளிக்கிழமை. வீட்டுக்கு மூத்த பிள்ளை பாம்பை அடிக்கக்கூடாது. அதுவும் வாழும் பாம்பு. சர்ப்ப தோஷம் பிடிக்கும்பா. ஏம்ப்பா... அதை அப்படியே குளத்து மதிலோரமா தோண்டிப் புதையுங்கோ... இந்திராணி ஒரு அகல் விளக்கு நல்லெண்ணை ஊத்தி உங்காத்துலேர்ந்து எடுத்துண்டு வா... இளங்கோ...ரோட்டுல ஒரு பீஸில்லாமல் அந்தக் குழிக்குள்ளே போட்டு மூடுப்பா... தமிழு... நன்னா குழியை மூடிட்டியோன்னோ?... இந்தா இந்த விளக்கை ஏத்து.... அப்பனே நாகராஜா... எல்லோரையும் காப்பாத்துடாப்பா....ம்... போலாம்.... ”

அதற்கு பிறகு தெருக் கொல்லையில் வசிக்கும் வாழும் பாம்பிற்கெல்லாம் தமிழண்ணேதான் அஜாதசத்ரு. ஜனமேயஜன் சர்ப்பயாகம் பண்ணி எல்லாப் பாம்பையும் ஹோமத்தீயில விழவச்சு அழிச்சா மாதிரி தமிழ் சவுக்குக்கட்டை ஆயுதத்தால் பல்லியினத்தை ஒழித்துக்கட்ட ஆரம்பித்தார். வெள்ளிக்கிழமைகள் நீங்கலாக.

எஸ்ஸென்னார் அந்த வீட்டை விட்டு குடி மாறிய ஆறு மாசத்துக்கப்புறம் ஒரு நாள் “நேத்திக்கு கிணத்தடியில பாம்பு சட்டை உரிச்சிருந்துதுடி... எம்மாம் பெருசு.... போன விசே இதே மாதிரி வந்தப்ப தமிழு இளங்கோவெல்லாம் இருந்தான்கள்.... இப்போ...” என்று பாட்டி வாசல் படி மாநாட்டில் சக பங்கேற்பாளர்களிடம் அங்கலாய்த்துக்கொண்டிருந்தாள்.

நாமளா போய் சீந்தாட்டா பாம்பு ஒண்ணும் பண்ணாது என்று இத்தனை வருஷத்துக்கப்புறம் புத்திக்கு உரைத்தாலும் பயம் நம்மை விடுவதில்லை. தமிழரசு அண்ணனையும் இளவல் இளங்கோவையும் அதற்கு பிறகு இன்னும் நான் சந்திக்கவில்லை! எந்த ஊர்ப் பாம்போ! எந்த புற்றோ!! எவர் கண்டார்?

[ரொம்ப நாட்கள் கழித்து மீண்டும் ஒரு புதிய மன்னார்குடி டேஸ் எபிஸோட் எழுதினேன். இது 27வது அத்தியாயம்]

1 comments:

புவனேஸ்வரி ராமநாதன் said...

நலமாக உள்ளீர்களா ஆர்.வி.எஸ்.... சமீபத்தில்தான் மன்னை
சென்று பேரழகுப் பெருமான் ராஜகோபாலனை தரிசனம் செய்து வந்தோம். அங்கு சென்றதும் மீண்டும் இங்கேயே வந்து விட மாட்டோமா என்றிருந்தது. இன்று உங்கள் பதிவு அன்றைய மன்னை வாழ்க்கைக்கே என்னை கூட்டிச் சென்றுவிட்டது. மரங்கள் நிறைந்த கொல்லைப்புறம், நீர் வற்றாத கிணறு, முற்றங்களுடன் வீடு, என எங்கள் பழைய வீடு நினைவுக்கு வந்துவிட்டது. சுகமான பழைய நினைவுகளை மீட்டெடுத்த ஆர்.வி.எஸ்.. வாழ்க. வாழ்க. நலமுடன்.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails