Sunday, August 2, 2015

கணபதி முனி - பாகம் 23: ரமணா!

தேர் அசைந்தாடி அழகாக வந்து கொண்டிருந்தது. வடமேற்கில் ஒரு இடத்தை விட்டு நகர மறுத்தது. வடம் பிடித்த கூட்டம் துவண்டது. எவ்வளவோ பிரயர்த்தனப்பட்டும் இம்மியளவு கூட தேர் நகரவில்லை. பாதையில் பள்ளமோ மேடோ இல்லை. சமதளத்திலும் நகராத தேரைக் கண்டு அனைவருக்கும் ஆச்சரியம். களைத்துச் சலித்துப் போய் நாளைக்கு வடம் பிடிக்கலாம் என்று அனைவரும் கலைந்தனர்.

நிருதி லிங்க கோயில். நள்ளிரவு தாண்டியிருந்தது. லேசாக கண் அயர்ந்த கணபதியின் கனவில் அருணாசலேஸ்வரர் கோயில் குருக்களும் கணபதியின் சீடருமான ராமலிங்கம் புகையாய்த் தோன்றினார். “ஐயனே... வடமேற்கில் நங்கூரம் பாய்ச்சியது போல சமதளமான பாதையில் அண்ணாமலையார் தேர் நின்றுவிட்டது. நீர் மனது வைத்தால்தான் தேர் நகரும் போலத் தெரிகிறது.” என்று கூறி மறைந்தார். தன்னைச் சுற்றி ஏதோ அமானுஷ்யமான ஒன்று நடக்கின்றது என்று ஞானக்கண்ணால் அறிந்த கணபதி அந்த அகால வேளையில் சட்டென்று நிருதி லிங்க கோயிலில் இருந்து புறப்பட்டு தேரிருக்கும் இடத்திற்கு விரைந்து வந்தார்.
காவலுக்கு உட்கார்ந்திருந்தவர்களிடம் என்னவென்று விசாரித்தார். தேரிலிருக்கும் அருணாசலேஸ்வரரை தலைமேலே கைதூக்கித் தொழுதார். “நான் காலையில் வருகிறேன்” என்று அவர்களிடம் கூறிவிட்டு வேத பாட சாலையை நோக்கி நடக்கலானார். காவல் புரிந்தவர்கள் ஏதோ ஒரு வித ஆச்சரியத்துடன் அவரையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். அமைதியாய் அருணாசலேஸ்வரரும் தான்.
*
காலையில் கூட்டம் அலைமோதியது. வடத்தைக் கையில் எடுத்துக்கொண்டு இழுக்கத் தயாராய் நின்றிருந்தனர். கணபதி வந்தார். அருணாசலேஸ்வரரை நமஸ்கரித்தார். மனதார வேண்டிக்கொண்டார். அதுவரை அசைவின்றிருந்த தேர் முதல் இழுப்பிற்கே தடதடவென்று ஓட ஆரம்பித்தது. கூட்டம் “அண்ணாமலைக்கு அரோகரா... “ என்று ஆர்ப்பரித்தது. கணபதி அசந்து போனார். இதில் ஏதோ பூடகமான விஷயம் உள்ளது என்று உணர்ந்தார். கணபதியின் சீடர்களில் ஒருவரான விஸ்வநாத ஐயர் அவரை தனது வீட்டிற்கு அழைத்திருந்தார். கணபதி அவரது வீட்டிற்கு சென்றார்.
விஸ்வநாத ஐயரின் கிரஹத்தில் அவருக்கு அன்று காலை நடந்தைவகளையே மீண்டும் மீண்டும் அசை போட்டுக்கொண்டிருந்தார். நிலைகுத்தி நின்றிருந்த தேரானது இவ்வுலகத்தில் ஆன்மிக நெறி சுத்தமாக நின்றுவிட்டதையும் பின்னர் தான் தொட்ட பின்பு கடகடவென்று ஓடிய தேர் அந்நெறியை தாராளமாகத் தழைக்கச் செய்வது போலவும் சிந்தித்தார். உட்காரமுடியாமல் தவித்த கணபதி மத்தியான்ன வேளையில் விரூபாக்ஷி குகையை நோக்கி நடந்தார்.
ப்ராம்மண ஸ்வாமி தனிமையில் அமர்ந்திருந்தார். அவருடைய உதவியாளர் பழனி ஸ்வாமியும் ஒரு ஓரத்தில் இருந்தார். கணபதி ப்ராம்மண ஸ்வாமியை சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தார். என்ன வேண்டும் என்கிற தோரணையில் ப்ராம்மண ஸ்வாமி பார்த்தார்.
“ஸ்வாமி! என்னுடைய சக்திக்கேற்ப மந்திர ஜெபங்களைப் படித்துக் கற்றுணர்ந்தேன். ஆனால் இன்னமும் சத்தியமான தவம் என்ன என்பதை அறிகிலேன். அதை அறிவதற்கும் உணர்வதற்கும் தங்களின் இறை வழிகாட்டுதல் தேவைப்படுகிறது. அருள வேண்டும் ஆண்டவரே” என்று ,மீண்டும் ஒரு முறை நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வேண்டினார்.
கொஞ்ச நேரம் ப்ராம்மண ஸ்வாமி கண்கொட்டாமல் கணபதியையே பார்த்துக்கொண்டிருந்தார். சில நிமிடங்கள் அமைதியாய்க் கரைந்தன. பின்பு மெதுவாய்ப் பேச ஆரம்பித்தார்.
“யாரொருவர் தனக்குள் கிளர்ந்தெழும் ‘நான்’ என்பதை அசைவில்லாமல் உற்று நோக்குகிறார்களோ அதுவே ஒரு தவம். ஜபம் செய்யும் பொழுது எழும் மந்திர த்வனியின் அதிர்வுகளை உள்வாங்கிக்கொண்டு வெறுமனே அமர்ந்திருப்பதும் தவமே”
இத்தகைய ஆன்மிக வழிகாட்டுதலினால் கணபதிக்கு சொல்லவொணா ஒரு மகிழ்ச்சி ஏற்பட்டது. மீண்டும் ப்ராம்மணசாமியை விழுந்து வணங்கினார்.
ப்ராம்மணசாமி கணபதியை மீண்டும் தவமியற்றும் பாதைக்கு கொண்டு வந்தது 1907ம் வருடம் நவம்பர் மாதம் பதினெட்டாம் தேதி. ஞானசொரூபனான ஒரு குரு வாய்ப்பதற்கு கொடுத்துவைத்திருக்க வேண்டும். கணபதிக்கு அது திருவண்ணாமலையில் வாய்த்தது. வேதங்களில் விவரிக்கப்படும் தவவாழ்வை போதிக்கும் குரு இங்கே வாழ்கிறார். அவரே அந்த அனுபவக்கடலில் மூழ்கிய முனிவராகவும் இருக்கிறார். அவரின் வழித்தடத்தை பின்பற்றுவர்கள் வேத கலாச்சாரத்தை பின்பற்றுபவராகிறார்கள். புத்தியும் பிராணனும் ஓரிடத்தில் நிசப்தமாக ஆத்மா என்கிற புள்ளியில்இணையவேண்டும். இது அங்கே அவர் எதிரே நடக்க ப்ராம்மணசாமி ஒத்துக்கொண்டார். இதை விட வேறு பேறு உண்டோ?
ஆத்மவிசாரம் அவ்வளவு எளிதல்ல. விழிப்பற்ற விழிப்புநிலையில் மனதோடு ஒன்ற வேண்டும். அலைபாயும் மனதை அடக்கி அதை அந்த விழிப்பற்ற விழிப்பு நிலைக்கு தள்ளுவது சிரமமான காரியம். பிடிவாதமாக மனதைக் கட்டிப்போடமுடியாது. ‘நான்’ என்ற அதிகார ஊற்றின் கண்ணில் மனதை நிலை நிறுத்துவது ஒரு கலை. யோகத்தின் உச்சம். தபஸின் கால். இப்படியிருப்பது லேசுப்பட்டதில்லை. தான் என்கிற அகந்தையை விட்டொழிக்க வேண்டும். அதிலிருந்து விடுபட்டு ”தான் யார்?” என்பதைக் கண்டுகொள்ளும் முயற்சியாக தரை தட்டாத ஒரு கிணற்றுக்குள்ளே தலைகீழாக குதிப்பது போல.. ஆழம்.. ஆழம்...ஆழம்... என்று போய்க்கொண்டே “நான்”னைக் கண்டுபிடிக்க பயணிக்க வேண்டும்.
ப்ராம்மண ஸ்வாமியிடமிருந்து இந்த ஆத்மவிசார வித்தையை எளிதில் கற்றுக்கொண்டார் கணபதி. இதில் ஒருநிலைப்பட்டு அடங்குவது மிகவும் கடினம் என்று வியந்தார்.
சிறு சலனத்தில் சிந்தனை கலைந்தார். பழனி ஸ்வாமி உள்ளே வந்தார்.
“ப்ராம்மண ஸ்வாமியின் இயற் பெயர் என்ன?” ஆர்வமாய் வினவினார் கணபதி.
“வெங்கட்ராமன்”
மனதில் இருமுறை அப்பெயரை உச்சரித்தார். பின்பு கண்களை மூடி “ரமணா.. ரமணா” என்று மந்திர உச்சாடனம் செய்வது போல சத்தமாக சொன்னார். பழனி ஸ்வாமிக்கு அந்தப் பெயர் மிகவும் பிடித்துப்போனது. ரமணர் மஹரிஷி. அன்றிலிருந்து கணபதி ப்ராம்மண ஸ்வாமியை “பகவான் ரமண மஹரிஷி” என்று வாய் நிறைய அழைக்கலானார். தன்னுடைய குருவின் புகழ்பாடி ஒரு ஐந்து ஸ்லோகங்களை அப்பொழுதே இயற்றிப் பாடினார். குழு மகிழ்ந்தது. ரமணர் ஒரு இறைப் புன்னகையோடு அந்த ஸ்லோகங்களை ஏற்றுக்கொண்டு அமர்ந்திருந்தார். இருவரும் இருந்த அந்த அறையில் ஆத்ம ஜோதி சுடர்விட்டு பிரகாசமாய் எரிந்தது.
கணபதி படித்த ஸ்லோகத்துக்கும் “ரமணா” என்று அன்பொழுக பக்தியோடு அழைத்தற்கும் பதிலாக பகவான் ரமணர் அப்போது......

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails