Sunday, August 2, 2015

சிகே என்கிற சந்திரகாந்த்



ஐஸ் க்யூப்ஸோடு கலந்த Black Dog தொண்டையைச் சில்லிட்டு வயிற்றில் மிதமாய் எரிந்து ஜோராய்க் கரைந்துகொண்டிருந்தது. சிகேவுக்கு ஃபுல் மப்பு. நேற்றிரவு அடித்த கூத்துகளெல்லாம் கலர்க்கலராக கண் முன்னே சுழன்றது. பானுஸ்ரீக்கு ரொம்பவும்தான் ஏத்தம். எவ்ளோ திமிர் இருந்தா ”தில்லிருந்தா நீ வாடா..... உன்னை நிக்க வச்சுக் வகுந்து ரெண்டா கூறு போட்ருவேன்.. ஸ்கௌண்ட்ரல்...” தொண்டை கிழிய கத்தினாளே. கையில் கோப்பையுடன் எவ்ளோ பேர் வேடிக்கைப் பார்த்தார்கள். சிகேவுக்கு மனதில் புகைந்துகொண்டிருந்தது.

“ஃபோகஸ் நேரேடா.... நீயும் க்ரேன்ல ஏறு... டேய்... பின்னால நிக்கறவங்களை ஓரமா போச்சொல்லு..... ஃப்ரேம் அசிங்கமாவுது... ” சலசலப்புகள் காதில் விழுந்தது. கண்களைத் திறந்து பார்த்தார் சிகே.
கைலியை மடித்துக்கட்டிக் கொண்டு மீன்பாடியில் ஏறி உட்கார்ந்தாயிற்று. ஆமாம். நீங்கள் இந்தப் படத்தில் பார்ப்பது சி.கேவைத்தான். பஸ் ஸ்டாண்ட் சமீப மார்க்கெட்டின் மூ.சந்திற்கு பக்கத்து ஓரம். இன்னும் அரை மணி நேரமாவது இப்படி தம் பிடித்துத் தேமேன்னு அமர்ந்திருக்கவேண்டும். “சைதாப்பேட்டை பாலத்தாண்ட ஒரு எறக்கம் வருமே... அங்கேயிருந்து ஈர்க்குச்சிக்கு சுடிதார் போட்டுவுட்டா மாதிரி வரும்டா இந்த ஜிகிடி..” என்று தகவலறிந்த வட்டாரங்கள் சரக்கு கொஞ்சம் ஏறியவுடன் பார்ட்டிகளில் கெக்கேக்கே என்று சிரித்து கைதட்டுவார்கள். சி.கேவுக்கு இந்த மாதிரி ஜனங்களிடம் நெருங்குவதற்கு பயம். தூரத்திலிருந்து காதை மட்டும் திறந்துவைத்துக்கொண்டு லாகிரியை ரசித்துச் சீப்பிக்கொண்டிருப்பார். ஐம்பதிலிருந்து ஐம்பத்தைந்து இருக்குமா? “வைரம் பாஞ்ச கட்டைடா..” என்று போனவாரம் டெக்ஸாஸிலிருந்து இரண்டு நாட்கள் சென்னைக்கு வந்திருந்த பெரியவன் விக்கியிடம் முஷ்டி மடக்கினார். “பார்த்துப்பா.. புடைக்கிற நரம்புல சுளுக்கிக்கப்போவுது.... அப்புறம் எல்லாம் கேன்சலாயிடும்.. ஸ்காட்ச்சுக்கு டப்பு கெடைக்காது நைனா...” என்று கையை இழுத்துக் கிண்டலடித்தான் விக்கி.
”வண்டியைக் கொஞ்சம் நகர்த்துப்பா...” என்ற குரல் சி.கேவைப் பிடித்து அங்கே இழுத்துவந்தது.
“நானும் இறங்கணுமா?” எழுந்திருக்க எத்தனித்தார்.
“நோ..நோ.. சி.கே.. நீங்க அப்படியே இருங்க... டேய் பழனி... வண்டியை செவுத்து ஓரத்துக்கு நவுத்துடா... அப்பதான் ஆங்கிள் சரியா இருக்கும்... ஃப்ரேம்ல அந்த போஸ்டர்லாம் வரணும்... அப்படியே ஓடிப்போய் தந்தி வாங்கிட்டு வா... மீன்பாடில உட்கார்ந்திருக்க சி.கே முன்னாடி போடு.. ”
பழனி சுவற்றுக்கு முட்டுக் கொடுக்கும் தூரத்தில் வண்டியை பாந்தமாக நிறுத்தினான். “தந்தி வாங்கிட்டுவா...” என்று தெருமுனைக்கு குரல் கொடுத்தான்.
“சி.கே.. பீ கூல்.. டிஸ்டர்ப்டா இருக்கீங்களா? யு ஹாட் எனஃப் ஸ்லீப் யெஸ்டர்டே? இப்போ உங்களோட மூட் ரொம்ப முக்கியம்... இல்லைனா இந்த சீன் எகிறிடும்..”
சென்ற வருடத்தின் பெஸ்ட் ஃப்லிம் மேக்கர் ஆதித்யா. ஏழு வெள்ளித்திரைக்கு வந்தது. ஏழும் சூப்பர் டூப்பர் ஹிட். ஏ.பி.சி என்று எல்லா செண்டரும் படம் பிச்சிக்கிட்டுப் பறந்தது. படத்துக்குப் படம் மக்களைப் பைத்தியம் பிடிக்க வைத்தான் ஆதி. நாற்பதில் இருபதின் உற்சாகம். எதிலும் உச்சம் பார்க்காமல் விடமாட்டான். விடாக்கொண்டன். ஸ்வாமி விவேகானந்தரின் அவேக் அரைஸ்ஸை அதிதீவிரமாக பின்பற்றுபவன். இப்படி சொல்லும் போது சிலர் ”பானுஸ்ரீயையும்தான்” என்று அவன் முதுகுக்குப் பின்னால் பேசுவார்கள். “என்ன பண்ணுவீங்களோ.. ஏது பண்ணுவீங்களோ.. எனக்குத் தெரியாது....” என்று விரட்ட ஆரம்பித்துவிட்டால் அவன் பக்கத்தில் ஒரு பயல் நிற்கமாட்டான். தெறித்து ஓடிவிடுவார்கள்.
“ஷாட் ரெடி பண்ணனும்... ADயெல்லாம் என்ன எழவைப் பண்றானுங்களோ... காசு கொடுத்து வச்சிருக்கிற என் புத்தியை.. ” என்று முடிக்காமல் விட்டவனின் அருகில் செருப்பால அடிக்கணுமா என்பது போல் பார்த்துக்கொண்டே ஒரு அஸிஸ்டெண்ட் வந்தான்.
“பானு எங்கடா?”
பேய் முழி முழித்தான். டைனோஸரிடம் மாட்டிய பூனையாய் “தெர்ல சார்... இந்நேரம் வந்திருப்பாங்கன்னு....” கடைசி ‘னு’வை எப்போது முடிப்பான் என்று தெரியாமல் இன்ஃபினிட்டியாய் இழுத்துக்கொண்டிருந்தான்.
“கோ.. சர்ச் ஹர்.. தட் ப்ளடி ஹாஸ் டு பி ஹியர் இன் அனதர் ஃபைவ் மினிட்ஸ்... கோ..கோ...” செட் அடங்க அலறினான். பூனை தலை தெறிக்க ஓடியது.
பரபரப்பானது மொத்த யூனிட்டும். அடுத்ததாக வரும் கனவு சீனுக்கு க்ரூப் ஆடுவதற்கு குழுமியிருந்த துணைகளில் வாயெல்லாம் வெற்றிலை போட்டிருந்த ஒருத்தி ”பானு எங்கேன்னு இவன் கிட்டேதானே கேட்கணும்.. இவன் ஏன் எல்லார்கிட்டேயும் கேட்டுக்கிட்டிருக்கான்... பைத்தியமாயிட்டான் போல்ருக்கு....”. தெலுங்கு சுமதியும் பாலிவுட் மல்லிகாவும் சிரித்தார்கள். “ராத்திரி எங்கே விட்டோம்னு மறந்துட்டானோ....” என்று விஷமமாய்க் கண்ணடித்தாள் மல்லி. “கன்னிமாராவுலதான்....” என்று பதிலுக்கு கண்ணடித்து ஆமோதித்தாள் சுமதி. குழு சிரிப்பில் குலுங்கியது.
“டிஃபன் ஆச்சுல்ல... இப்படி கூடிக் கூடி ஒக்காறாதீங்கன்னு எத்தன தடவ சொல்றது.... பாவனா வந்து நின்னப்புறம் ரெண்டு நிமிசத்துல டான்ஸுதான்.... மாஸ்டர் குடுத்த ஸ்டெப்ஸை ட்ரையல் பார்க்கலாம்ல...ம்... இல்லைன்னா காலு சுளுக்கினா மாதிரி கன்னாபின்னான்னு ஸ்டெப்ஸ் போட்டு பத்து பதினைஞ்சு டேக் வாங்கி தாலிய அறுப்பீங்க... ம்.. ம்.. அந்த மூலைக்கு போங்க...” என்று ஆதியின் பின்னால் நிற்கும் படைவீரன் ஒருவன் அனைவருக்கும் தார்க்குச்சி போட்டான்.
”மீன்பாடி வண்டிக்குப் பக்கத்துல ஒருத்தனை நிக்கச் சொல்லு... போனதடவை சொன்னேன் பாண்ட் வாண்டாம்... கைலியோட நிக்கச்சொல்லுன்னு.... வுட்டா ஆலயம்மன் கோயில் பூசாரிக்கே பாண்ட் போட்டு வலது காதுல தொங்கட்டானோட ப்ரேக் டான்ஸ் ஆட வுட்ருவீங்கப்பா....ச்சே...”
“அவரு சாமியடறத்துக்குப் பதிலா ‘மாரியம்மா..மாரியம்மா...’ ப்ரேக் ஆடினா நல்லாயிருக்ம்ல ஆதி...”
“சிகே.. நக்கலா... இதையே ராமராஜன் கரகம்னு ஆடிட்டாரு...”
எல்லாம் தயார். மொத்த யூனிட்டும் காத்திருக்கிறது. பானுஸ்ரீ இன்னும் வரவில்லை. குறுகிய காலத்தில் முன்னுக்கு வந்தவள். அழகும் அறிவும் சேர்ந்து நிறைகுடமாய் தளும்புகிறவள். சிரித்தால் கன்னத்தில் குழி விழுந்து இழுக்கும். ஆதி தவித்தான். சி.கே ஒரு யோகிபோல அந்த மீன்பாடியில் அமர்ந்திருந்தார். மீண்டும் மீண்டும் அவள் கத்தியது நினைவுக்கு வந்து அவரைத் துரத்தியது. “டாட்.. வாட்ஸ் தெ ப்ராப்ளம் வித் தட் கேர்ள்?” என்று நேற்று விக்கி ஸ்கைப்பில் கூப்பிட்டான்.
“ஏண்டா?”
“ஃபேஸ்புக்ல கன்னாபின்னான்னு ஸ்டேட்டஸ் போட்ருக்கா... ஆயிரக்கணக்குல லைக்கு... நூத்துக்கணக்குல கமெண்ட்ஸ்... “
“என்னான்னு?”
“Touch me. If you dare to go to hell. ‪#‎NotForCK‬
“என்னடா சொல்றே?”
“இதுதாம்பா ட்வீட்டர்ல ஃபேஸ்புக்லல்லாம் போட்ருக்கா...”
”ம்... இப்ப என்ன?”
“இப்ப என்னவா? ஊரே பத்தி எரியுது... கமெண்ட்ல ஒருத்தன் கேக்கறான் ஏற்கனவே அம்பது பர்செண்ட் பானுஸ்ரீக்குக் கொடுத்தாச்சேன்னு.. இன்னொருத்தன் மாறுகால் மாறுகையா மேடம்னு... வாட் இஸ் திஸ் க்ராப் பா...” சகட்டுமேனிக்கு விக்கி எகிறினான்.
“பொதுவா பானு துணி கிடைக்காத பரம ஏழை மாதிரி சிங்கிள் பீஸ்ல கிளாமரஸ்ஸான படம்தானே போடுவா.. இப்ப எதுக்குடா பொங்கறா?” இண்டெர்நெட் தொடர்பு துண்டித்ததில் விக்கி மறைந்துபோனான்.
சி.கே என்கிற சந்திரகாந்த் தமிழ்த் திரையுலகில் கொடிகட்டிப் பறக்கும் ஜாம்பவான். ஐம்பது வயசுக்கு மேலே ஆனாலும் தினமும் நெற்றியில் விபூதி துலங்கும் சில ப்ரொட்யூசர்களும் “இதை எடுத்தா நிச்சயமா சில்வர் ஜூப்லிதான் சார்...” என்று கண்களில் நம்பிக்கைத் தெரிய கதை சொல்லும் இளைய ஃப்ளிம் மேக்கர்களும் அவரது ஆஃபீஸ் நோக்கி படையெடுக்கிறார்கள்.
இரண்டு மாதங்களாக இந்தப் பிரச்சனை இழுக்கிறது. வெளிவட்டாரத்தில் அனைவரும் விசாரித்துவிட்டார்கள். தலைகாட்ட முடியவில்லை. சி.கே இதில் கொஞ்சம் வீக்தான். குடும்பத்திற்கே தெரிந்த கதை. "ஸ்ருதிபேதம்" வெற்றி விழா பார்ட்டியில் ஈஸியாரில் பானுஸ்ரீயின் மேல் கைவைத்தது தப்பாகிவிட்டது. இந்த ஆதி பயலும் அங்கே இருந்தான். மூச்சுக்காட்டாமல் நகர்ந்துவிட்டான். அன்று Mind Twisters ஜெயின்தான் விலக்கிவிட்டார்.
“பானு வந்தாச்சா?” ஆதி அலறினான்.
செட் நிசப்தமானது. இப்படியும் அப்படியுமாக ஒன்றிரண்டு மணித்துளிகள் நகர்ந்தன.
“ஓகே... சி.கேவோட இந்த சீனை முடிச்சிடுவோம்.. சிகே... இந்த படத்தின்படி உங்க பையன் ஒரு ஊதாரி.. நீங்க உழைக்கிற காசையெல்லாம் குடிச்சி அழிக்கிறான். பத்தாதத்துக்கு பொம்பளை சகவாசம். பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல கொரியர் ஆஃபீஸ் இருக்கு. அங்க உங்களுக்கு தெனமும் சவாரி குடுப்பாங்க.. அதுக்காக வண்டியைப் போட்டு உட்கார்ந்திருக்கீங்க.. அப்போ.... ஃபுல்லா குடிச்சிட்டு உங்க பையன் தள்ளாடிக்கிட்டே எதிர்சாரியில போறான்......”
“ஆதி.. நூறாவது தடவையா சொல்றீங்க... விட்டுடுங்க... நான் பார்த்துக்கிறேன்.. அடப்பாவி நீயெல்லாம் விளங்குவியா? உன்னால வீட்டுக்கு ஒரு ப்ரயோஜனமும் இல்லையே... நாசமாப்போறவனே... அப்டீங்கற மாதிரி நான் பார்த்துக்கிட்டே இருக்கணும்... அப்போ ஹீரோயின் பானுஸ்ரீயும் இந்த மார்க்கெட்டுக்கு கார்ல வந்து இறங்குவாங்க... “
“ஆமா.. அதுக்கப்புறம் நீங்க போய் பையனா மேக்கப் போட்டுட்டு வந்தா பானுஸ்ரீயோட கட்டிப்பிடிச்சு ஒரு ட்யூட் ஆடிட்டு இன்னிக்கி ஷெட்யூலை முடிச்சுக்கலாம்..”
”ம்.. சரி.. ஆக்‌ஷன் குடுங்க...”
சி.கே கேமிரா படம் பிடிக்காத மார்க்கெட் மூலைக்கு கண்களை விரட்டி மோன நினையில் அமர்ந்திருந்தார்.
“ஸ்டார்ட்.. கேமிரா.. ஆக்‌ஷன்...”
க்ரேனில் ஜிவ்வென்று வானம் பார்க்க கேமிரா பறந்துகொண்டே படம் பிடித்துக்கொண்டிருக்கையில்...
“யாருப்பா.. அது.. பாதியில குறுக்கால வர்றது?”
போலீஸ். வண்டியில் உட்கார்ந்திருந்த சி.கேவை கரம் பற்றி இறக்கி தூரத்தில் நிறுத்தியிருந்த ஜீப்பிற்கு அழைத்துக்கொண்டு போனார்கள். மொத்த யூனிட்டும் ஸ்தம்பித்தது. லைட் பாய் ஒருவன் பக்கத்தில் நிற்பவன் காதில் கிசுகிசுத்தான்.
“பானுஸ்ரீயை யாரோ கொன்னுட்டாங்களாம்”

பின்குறிப்பு: இப்பதிவோடு இணைத்திருக்கும் படத்திற்கு ஒரு கதை எழுத வேண்டும் என்று முகநூலில் கேட்டார்கள். ஒரு நெடுங்கதையை சிறுகதையாக சுருக்கிவிட்டேன். பானுஸ்ரீயின் கொலை மர்மத்தை விடுவிப்பவர்க்கு ஒரு டபரா செட் பரிசு.

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails