Sunday, August 2, 2015

தெலுங்கு ஆர்.வி.எஸ்

சுந்தரத் தெலுங்கு போலவே நம் காதுக்குள் அமிழ்தைப் பொழியும் தமிழை உச்சரிப்பார் சுரேஷ். ”இத்துக்கோ.. வந்துட்டோ... நீங்க பெரீய அத்திகாரி....” என்று சில தமிழ் எழுத்துக்கள் அவரது வாயில் கடாமுடாவென்று அரைபட்டு உடைபடுவது விஜயவாடா விஜயலெக்ஷ்மி நுனி நாக்கில் ஸ்டைல் தமிழ் பேசுவது போல ரசிக்கும்படியாக இருக்கும். [விஜயவாடா விஜயலெக்ஷ்மி யாரென்று தெரியாமல் தலையைச் சொறிபவர்கள் தனியாக கமெண்ட் பக்கம் வரவும்]
தலைமுடி கறுப்பாக இருந்ததிலிருந்து காதோரம் நரை ஏறியிருப்பது வரை காலம் கடந்து சிநேகிதம். கூகிளுக்குப் போட்டியாக தானொருவனாக நின்று ஜெகத்தோருக்குப் பதில் சொல்லியே தீர்வேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு புஸ்தகங்கள் படிப்பவர். இன்று எதையெதையோ பேசிக்கொண்டே இருந்த போது எதிர்பாராத க்ளைமாக்ஸாக தெலுங்கு இலக்கியம் பற்றி பேச்சு திரும்பியது.
“சுரேஷ்.. தெலுங்குல யாரெல்லாம் பெரிய இலக்கியவாதிகள்?”
“நெற்றயா பேரு இருக்காங்க.. யாரென்னு சொல்ல... .... .... ஆர்விஎஸ்?””
“ஆர்விஎஸ்ஸுக்கு தமிழே தகராறு... நாக்கு தள்ளுது.. ஏன் என்னை போயி தெலுங்கு இலக்கியவாதிகள் லிஸ்ட்ல ஏத்தி பேசுறீங்க சுரேஷ்.. மீகு தெலுகு தெல்லேது....”
“லேது... அது நாகு.... சரி... அதை விட்டுடுவோம்.. ஆர்விஎஸ்ஸுன்னு தெலுகுல பெரிய ரைட்டர் இருந்தாரு...”
”ஆர்விஎஸ்?”
”ஆமா... ராசகொண்டா விஸ்வநாத சாஸ்திரி... ர.வி.சாஸ்திரின்னு நிறையா பேரு சொல்லுவாங்க... நானு ஆர்.வி.எஸ்ன்னுதான் சொல்லுவேன்....”
“ஆஹா.. நம்ம பேரு... பெரிய ஆளா?”
“பின்ன... எப்பவுமே ரொம்ப கஷ்டப்படறவங்களை, டவுண்ட்ராடன்ஸை வச்சுக் கதை எழுதுவாரு.... அவரு லாயர்... வந்த கேசையெல்லாம் வச்சே கவர்மெண்ட்டை எதிர்த்து நெறையா Boldஆ எழுதுவாரு.. ”
“ம்.... என்னென்ன நாவல் எழுதியிருக்காரு... சுரேஷ் காரு....”
“அல்பஜீவின்னு ஒரு நாவல்.. அப்புறம்.. இன்னும் இருக்கு.... நாவலை விடுங்க.. ஒரு இன்சிடெண்ட் சொல்றேன்.. கேட்டுக்கோங்க.. அவரு எவ்ளோ பெரிய ஆளுன்னு புரியும்..”
“ம்..”
“என்.டி.ஆர் பெரிய ஆளு.. உங்களுக்கெல்லாம் தெரியும். விஷ்ணுவோட அவதாரம்னு நினைச்சுக்கிட்டே வாழ்ந்தவரு.. அவரோட ஃப்ரெண்டு ஸியென்னார்ன்னு.. அவரும் ஒரு ரைட்டரு... உங்களுக்கெல்லாம் தெரிஞ்சிருக்காது.... ”
“ஸியென்னார்னா?”
“ஸி. நாராயண ரெட்டி... அவரு ஆர்விஎஸ்ஸுக்கும் ஃப்ரெண்டு.... ஆர்விஎஸ்ஸுக்கு ரெண்டு கிட்னியும் ஃபெயிலியர் ஆகி வீட்ல படுக்கையில கிடக்காரு... அப்போ ஸியென்னார் என்.டி.ஆர்கிட்டே ஆர்விஎஸ்ஸுக்கு எதுனா ஹெல்ப் பண்ணலாம்னு சொன்னாராம்... என்.டி.ஆரும் சரி என்ன தேவைன்னு பார்த்துக்கிட்டு வாங்கன்னு சொல்லி அனுப்பினாரு... ஸியென்னார் நேரே ஆர்விஎஸ்கிட்டே வந்து உங்க கிட்னிக்கு என்.டி.ஆர் ஹெல்ப் பண்றேன்னு சொல்றாரு... என்ன சொல்றீங்க?ன்னு கேட்டாரு”
”ஓ... ஆர்.வி.எஸ் வேண்டாம்னு சொல்லியிருப்பாரே..”
“ஆமாம். எப்படி சொன்னாரு தெரியுமா?”
“எப்டி?”
“நானு உங்களுக்கு தெரிஞ்சவங்கன்னு என்.டி.ஆர் ஹெல்ப் பண்றாரு.. ஆனா ஊர்ல என்னை விட மோசமா எவ்ளோ பேரோ இருக்காங்க.. அவங்களுக்கு ஹெல்ப் பண்ணச் சொல்லுங்க.. நானு இந்த ஹெல்ப்பை எடுத்துக்கிறதை விட செத்துப் போய்டுவேன்.. வேண்டாம்...ன்னு சொல்லிட்டாரு... கொஞ்ச நாள்ல செத்தும் போய்ட்டாரு.. பெரிய மனுஷன்...”
”நெசம்மாவே பெரிய மனுஷந்தான்.. சின்னச் சின்ன ஹெல்ப்புக்கெல்லாம் அரசாங்கத்தையும் விருது தர்றவன் காலையெல்லாம் பிடித்துத் தொங்குகிற ஆளெல்லாம் இருக்கிற காலத்துல இப்படியும் ஒரு ஆளான்னு ஆச்சரியமா இருக்கு சுரேஷ்.. ”
“வேற யாராவது தெலுகு இலக்கியவாதிகள்?”
“இவருக்கு ஃப்ரெண்ட் காளிப்பட்டணம் ராமாராவ்னு ஒருத்தர்.. காரா காரான்னு வாசகர்கள் கூப்பிடுவாங்க... ரொம்ப குறைச்சலாதான் எழுதியிருக்காரு.. ஆனா அந்த குறைச்சலான கதைகள்ல தீசிஸ் பண்ணின ஆட்கள் ரொம்ப பேரு...”
“ஓ.. அப்படியென்ன கதை எழுதினாரு....”
“ஒரேயொரு வரி சொல்றேன்.. அப்புறமா சொல்லுங்க இவரு கதையெல்லாம் எப்படி எழுதியிருப்பாருன்னு....”
“ம்.. சொல்லுங்க...”
“காலில்லாத யானை படியில்லாத மாடிக்கு தூக்கிக்கிட்டுப் போறா மாதிரி...ன்னு ஒரு வரி வரும்.. நெனைச்சுப் பாருங்க.. ஒரு கேரெக்ட்ரால முடியாத காரியத்துக்கு அவர் கொடுத்த ஸிமிலி.... எப்படியிருக்கு?”
“அப்டிப்போட்டுத் தாக்கு... அபாரம் சுரேஷ்.. கதை பேரு என்ன?”
“யக்ஞம்”
அப்புறம் சுரேஷ் நிறையா தெலுங்கு இலக்கியங்கள் பற்றிப் பேசினார். எனக்கு காலில்லாத ஒரு யானையும் அதற்கு முன்னே படிகளில்லாத மாடியும் தோன்றித் தோன்றி மறைந்தது. காலில்லாத யானை.... படியில்லாத மாடி..... காலில்லாத யானை.... படியில்லாத மாடி.... காலில்லா.....படியில்லா........

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails