Sunday, March 27, 2016

தோழா


இயக்குநர் வம்ஷி தொழில் தர்மம் தெரிஞ்ச நியாயவான். இது இண்டச்சபில்ஸ் என்கிற ஹாலிவுட் படத்தின் தழுவல் என்று படத்தின் முதல் ஃப்ரேமிலேயே கறுப்பு-வெளுப்பில் பிள்ளையார் சுழிபோலப் போட்டுவிட்டுதான் கதையை ஆரம்பித்தார்.

உதயத்தில் சைக்கிள் செயினை உருவிக்கொண்டு உக்கிரமாக சண்டையிட்ட நாகார்ஜுனையும், ரட்சகனில் “கையில் மிதக்கும் கனவா நீ” என்று சுஷ்மிதா சென்-னை அலேக்காகத் தூக்கிக்கொண்டு மாடிப்படிகளில் காதல் வழியத் துள்ளி ஏறிய நாகார்ஷுனையும் பார்த்த ரசிகர்களுக்கு தோழா நாகார்ஜுன் கற்பனைக்கு எட்டாத வேஷம். தெலுகு ரசிகர்கள் இப்படிப் பொட்டிப்பாம்பாக அடங்கிய அ.நாவை ஏற்றுக்கொள்வார்களா?
இருபதடி உசர பெயர் ஸ்டாண்ட் கொள்ளாமல் பட்டியலிடப்பட்ட கம்பெனிகளுக்கு எஜமானனாக வரும் கொழுத்த செல்வந்தரான அக்கினேனி நாகார்ஜுன் பாதி காட்சிகளில் கண்ணாலேயே நடித்திருக்கிறார். பாரா க்ளைடிங் என்றழைக்கப்படும் பாராசூட்டில் விண்ணிலிருந்து மண்ணுக்குப் பறந்து வரும்போது 150அடி உயரத்திலிருந்து அறுத்துக்கொண்டு விழுந்துவிடுகிறார். அதனால் Tetraplegia என்கிற வியாதியால் சக்கர நாற்காலியே கதியென்ற வாழ்வுக்குத் தள்ளப்படுகிறார். இடுப்புக்குக் கீழேயும் கை கால்களும் உணர்வற்றுப் போய்விடுகிறது. அவரை தினப்படி பேணுவதற்கு அக்கறையான ஆள் வேண்டும். அந்த ஆள் கார்த்திக்.
அளவோடு அற்புதமாக நடித்திருக்கிறார் கார்த்திக். குடும்பத்தில் தன்னை உதவாக்கரையாக நினைக்கும் அம்மாவிடமும் தங்கை தம்பிகளிடமும் பேரெடுக்க பாடுபடும் பாசக்கார இளைஞன். பணம் சம்பாதிக்க வழிதெரியாமல் திருடியதாகவும் சித்தியாகிய அம்மாவுக்கு (வயசான ஜெயசுதா...) ஒத்தாசையாக இருக்க சின்ன வயசிலேயே வேலைக்குப் போகப் பாடுபட்டதாகவும் நாக்-கிடம் விவரிக்கும் கார்த்திக் நடிப்பில் மிளிர்கிறார்.
நாகார்ஜுனும் கார்த்திக்கும் திரையில் தோன்றும் காட்சிகளில் நம்மையும் மீறி ஒருவிதமான ஸ்நேகபாவம் தோன்றுவது டீம் தோழாவின் வெற்றி.
சென்ற சில படங்களாக அக்கா மாதிரி வந்து லிங்காவில் பெரியக்காவாகிய அனுஷ்கா ஐந்தாறு சீன்களில் அழகான அம்மாவாக வந்தார். சின்னக் குழந்தைக்கு அம்மாவாக வந்தார் என்று அனுஷ்கா ரசிகர்கள் படித்து இன்புறுக. அனுஷ்கா... அனுஷ்ம்மா....
ஜொள் விடுவது எப்படி என்று விடலைப்பசங்கள் கார்த்திக்கிடம் பாடம் கற்றுக்கொள்ளுமளவிற்கு இந்தப் படம் முழுக்க இளம் பெண்களைக் கண்டால் தியேட்டரில் நாம் சறுக்கி விழுமளவிற்கு ஜொள்... ஜொள்.. ஜொழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்...... வாய் பிளந்து கண்கள் சொருகி... ஜொள் இலக்கணம்.
இசையமைப்பாளரைக் கட்டிப் போட்டு க்ளைமாக்ஸுக்கு முன்னால் பாடல் வாங்கியிருக்கிறார்கள். பாரீஸ் வரைக்கும் கார்த்திக்கையும் தமன்னாவையும் அழைத்துக்கொண்டு போய்விட்டு ஒரு பாடல் இல்லாமல் திரும்பலாமா? ஓ. சென்ற வரியில் தமன்னா என்று சொன்னேனா? ஆமாம். தமன்னாவும் இப்படத்தில் இருக்கிறார். மெழுகு பொம்மையாக ஆங்கிலேய ஸ்த்ரீகளின் மோஸ்தரில் குட்டைப் பாவாடையுடனும் உதட்டைக் குவித்துப் பேசும் “கய்ய்க்குச்சய்ய்ய்...ச்ச்சுச்சுலுல்லூ...” என்று (குழந்தையாக!) கன்னத்தைப் பிடித்துக் கிள்ளிக் கொஞ்சத் தூண்டும் பெண்ணாக கார்த்திக்கின் ஜொள் அளவைக் கூட்டுவதற்கு வருகிறார்.
படத்தின் அடிநாதம் அற்புதமானது. கூலிக்கு மாரடிக்காமல் அர்ப்பணிப்போடும் அன்போடும் செய்யப்படும் காரியமானது அமரத்துவத்தை எட்டுகிறது. அந்த அன்பின், பாசத்தின் விஸ்தீரணம் வார்த்தைகளால் விவரிக்கமுடியாதது. கார்த்திக்கிற்கும் குடும்பம் உள்ளது என்றுணர்ந்த நாக் அவரை தாயாரிடம் அனுப்புகிறார். குடும்பமாக சந்தோஷமாயிருக்கிறார்கள் என்று மங்களம் பாடுகிறார்கள்.
போக்குவரத்து விதிகளை மீறி பியெம்டபிள்யூவை கன்னாபின்னாவென்று ஓட்டுவதும்... அதைக் கண்டித்து பிடிக்க வந்த காவலர்களை ஏமாற்றும்படியாக நாகார்ஜுனுக்கு உடம்பு சரியில்லை போன்று நடிப்பதும் இப்படியாகப்பட்ட ஃபீல் குட் படத்தின் மாத்தை கொஞ்சம் குறைக்கிறது.
ஏற்கனவே தாராளத்தைக் காட்டும் தமன்னாவை வைத்துக்கொண்டு ”நெமிலி” என்ற பாட்டுக்கு வந்து குத்தாட்டம் போட பம்பாய் சரக்கு போல ஒரு பார்ட்டியை ஆட விட்ட பொட்லூரி (தயாரிப்பாளர் பா... அவரை எழுத வேண்டாமா?) தயாள குணம் மிக்கவர்.
பாடல்கள் எதுவும் மனசில் நிற்கவில்லை என்றாலும் கோபி சுந்தரின் பின்னணி இசை அபாரம். பாரீஸ் வீதிகளில் தமன்னாவோடும் நாகர்ஜுனோடும் கார்த்திக் சுற்றும் போது கிடாரும், ட்ரம்பெட்டும், சாக்ஸும் பட்டையைக் கிளப்புகிறது. படத்தின் ஒளியமைப்பு ரிச்சாக இருக்கிறது. தொழில்நுட்பம் கொப்பளிக்கும் தியேட்டர்களில் இவ்விசைக் கேட்பது செவிக்கின்பம். பிரமாதம்.
நடுவே படம் கொஞ்சம் தொங்கும் போது ப்ளாச்சுக் கட்டி நிமிர்த்துவதற்காக ஒரு கார் ரேஸ் வைத்திருக்கிறார்கள். பாரீஸ் வீதிகளில் பறக்கும் கார்கள். அது இல்லையென்றாலும் ஜனம் இந்தப் படத்தைப் பார்க்கும் என்ற நம்பிக்கையை வம்ஷிக்கு யாரேணும் சொல்ல வேண்டும்.
ம்.. சொல்ல மறந்து விட்டேன். பிரகாஷ்ராஜ் நடித்திருக்கிறார். விவேக் ஐந்தாறு சீன்களில் வருகிறார். ரொம்பவும் சமர்த்தாகவும் வசூல் ராஜாவில் பார்த்தது போல அசட்டுச் சிரிப்போடும் பிரகாஷ்ராஜ்ஜும் அரைகுறை தாடியுடன் கார்த்திக்கின் நலம்விரும்பியாக விவேக்கும் சில காட்சிகளில் திரையில் தெரிகிறார்கள். உதறிய பிரஷ்ஷிலிருந்து சொட்டிய சிவப்புப் பெயிண்டிங்கை இருவது லட்சம் கொடுத்து வாங்கும் நாகார்ஜுனைக் காட்டி மார்டர்ன் ஆர்ட்டை கிண்டலடிக்கிறார்கள். அதைவிடக் கொடுமையாக ஐந்தாறு கலரில் கார்த்திக்கைக் கிறுக்கச் சொல்லி அதை இரண்டு லட்சத்திற்கு விற்கிறார்கள். “நீ படைப்பாளி.. நா துடைப்பாளி......” என்று எச்சல் துப்பி கமல் மார்டன் ஆர்ட் செய்யும் காதலா.. காதலா வித்தை கண்ணில் வந்துபோனது.
ஸ்ரேயான்னு ஒருத்தங்க சிவாஜியில ரஜினிக்கு ஜோடியா நடிச்சாங்களாம். அவங்க ஒரு அஞ்சு நிமிஷம் திரையில் தெரியறாங்க. பயம்மா இருந்தது.
பி.எஸ். வினோத்தின் காமிரா அதி அற்புதம். வெள்ளைத் திரையில் வர்ணக் கோலங்களாக காட்சிகள் எழுகிறது. பாரீஸ் நகரத்தையோ வடசென்னையையோ பருந்துப் பார்வையில் காட்டும் போது கண்களுக்கு விருந்து. ஈஃபில் மேலே என்கிற பாடலைப் படம் பிடித்த விதம் மனதைக் கொள்ளையடிக்கிறது.
கார்த்திக்-நாகார்ஜுன் ஃபிசிக்கலான கெமிஸ்ட்ரியைப் பார்க்கப் பார்க்கப் பரவசமாக இருக்கிறது. நிச்சயமாக ஒரு தபா பார்க்கலாம் தோழா. தப்பில்லை. கேளிக்கை உத்திரவாதம்.

1 comments:

சிவகுமாரன் said...

லாப்டாப்பில் இருக்கிறது படம். பார்க்க அலுப்பாய் இருந்தது. தங்கள விமர்சனம் பார்க்கலாம் என்கிறது.
நன்றி RVS

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails