Wednesday, May 30, 2012

உங்களுக்கு ஆட்சேபனை இல்லைன்னா

அர்பணிப்புப் பாடல்கள், அர்த்தபுஷ்டிக் கட்டுரைகள், வியக்கவைக்கும் கதைகள், பொருள் பொதிந்த கவிதைகள், ஐன்ஸ்டீன் விஞ்ஞானம் என்று முழுமூச்சாக முகப்புஸ்தகலிக்கியத்தில் இயங்குபவர்கள் மத்தியில் ஏதேனும் உருப்படியாக எழுதவேண்டும் என்று நினைத்தாலும் ரெண்டுங்கெட்டானாக எதாவது கிறுக்கிப் பொழுதைப் போக்குகிறேன். உடனடி லாட்டரி போன்று தடாலடியாக உரசிப் பார்த்து ”நல்லாயிருக்கு.. நல்லாயில்லை” என்று சர்ட்டிஃபிக்கேட் தர ஒரு நண்பர் பட்டாளம் சேர்ந்துவிட்டதால் அங்கேயே பெரும்பொழுதைக் கழிக்கிறேன். என்னுடைய பிறந்தவீடான ப்ளாகிற்கு அதிலிருந்து சில விஷயங்களை திண்ணைக் கச்சேரியாக இங்கு பகிர்கிறேன்.

********சமூகசேவை*********
ஜிகுஜிகு உடையணிந்த அழகு தேவதைகள் கூட்டமாக சுற்றி வந்து லாலிலல்லி பாடுகிறார்கள். லாப்டாப்பில் கொக்கோகப் படம் பார்த்துக்கொண்டிருக்கும்போது விதையில்லாத திராட்சையும் மன்மதன் தோட்டத்து முந்திரியும் தங்கத் தாம்பாளங்களில் பரப்பி ஊட்டி விடுகிறார்கள். வைரமும் வெள்ளியும் பணமும் அறையின் மூலை முடுக்கெல்லாம் குவியல் குவியலாகக் கொட்டிக்கிடக்கின்றன. ஏழெட்டு தன்னார்வலர்கள் பன்நாட்டு வர்த்தகத்தை 24x7 கவனித்துக்கொள்கிறார்கள். காலையும் மாலையும் ஊருக்குப் போதனை. இரவில் உள்ளுக்குப் போதை. வாழ்க்கை உல்லாசமாகக் கழிகிறது. திடீரென்று ஒருநாள் இரும்புக் குழாயை எடுத்து பின்னந்தலையில் ”டங்...”கென்று அடித்து கபாலத்தைப் பிளக்கிறான் கயவன் ஒருவன். பாதியில் உடைத்துக்கொண்ட பைப் போல செங்குருதி தலையிலிருந்து பீய்ச்சி சுற்றிலும் அடிக்கிறது. வெள்ளைச் சுவரெல்லாம் பளிங்குத் தரையெல்லாம் திட்டுத்திட்டாக இரத்தச் சேறு.

உடம்பெல்லாம் வெலவெலக்க வியர்த்து விறுவிறுத்துத் திடுக்கிட்டு எழுந்தான் உத்தமபுத்திரன்.

“என்னாச்சு?” பக்கத்தில் படுத்திருந்த ஃப்ரெண்ட் கேட்டான்.

“ச்சே. ஒரு கனவு”

“என்ன கெட்ட கனவா?”

”பாதி நல்லது பாதி கெட்டது”

“எப்புடீ”

“காவியும் ருத்ராட்சமுமா பளபளன்னு நான் சாமியாரா சமூகசேவை செஞ்சுகிட்டு இருக்கேன்... அப்போ....”

(இப்போது ஒரு முறை முதல் பாராவைப் படிக்கவும்)
 
*******”உங்களுக்கு ஆட்சேபனை இல்லைன்னா.....”*********


இளையராஜாவைத் தவிர்த்து யாரும் இந்தப் பாடலுக்கு மெட்டமைக்க முடியாது. வாணி ஜெயராமின் குரலில் எதிரொலிக்கும் அந்த ஏக்கம் தீபாவின் முகத்தின் வழியாக திரையில் வழிகிறது. உங்களுக்கு ஆட்சேபணை இல்லைன்னா என்று சொல்லி அடுத்தடுத்த கட்டமாக வண்டியை மைனர் நகர்த்தும் போது அமைத்த அந்த மலைப்பாதை காட்சியமைப்பும் அதற்கு பக்கபலமாக பின்னணியில் ஒலிக்கும் இளையராஜாவின் இசையும் காலம் கடந்து நிற்கும். க்ளாஸிக் பாடல். மதுவந்தி ராகம்!! போதையாக இருக்கிறது.

ராஜா துள்ளி விளையாண்டிருக்கும் என்னுள்ளில் எங்கோ....





**********வீட்டுக்கு வெள்ளை ***********
 ”டேய்! வீட்டுக்கு வெள்ளையடிச்சா மாதிரி இருக்குப் பாருடா”

என்று உடம்பெல்லாம் திருநீறு பூசிய வாரியார் சுவாமிகளைப் பார்த்து ஒருவன் கேலி செய்தானாம். அறிவில் பெரியவரான வாரியார் அமைதியாக அவனைப் பார்த்து புன்னகைத்து

“அப்பா! குடியிருக்கிற வீட்டுக்குதான் வெள்ளையடிப்பாங்க.. குட்டிச்சுவத்துக்கு இல்லை” என்றாராம்.

#காலையில் விஜய் டிவி பக்தித் திருவிழாவில் கேட்டது!!

*********கலகலப்பு@மசாலா கேஃப்: ***************

லாஜிக் இல்லாமல் மேஜிக் காட்டியிருக்கிறார்கள். கட்டையை எடுத்து மண்டையில் போடுவது, சீரியஸாக பேசி காமடி செய்வது என்று டிபிகல் சுந்தர்.சி படம். ரெண்டு ஹீரோ ரெண்டு ஹீரோயின் ரெண்டு வில்லன் நாலு பாட்டு படம் பூரா வெடிச் சிரிப்புன்னு ரவுண்டு கட்டி கலக்கியிருக்கிறார்கள்.

கேபிளார் (Sankar Narayan) வசன உதவியில் நகைச்சுவைக்குப் பஞ்சமில்லை. எங்கேயும் எப்போதும்மில் நடித்த அஞ்சலியா என்று ஒருமுறை கிள்ளிப்பார்க்கத் தோன்றுகிறது.(நம்மை நாமே கிள்ளிப்பார்க்கத் தோன்றுகிறது என்று எழுதியிருக்கவேண்டும்). எக்கச்சக்க தாராளம்.

படத்தில் ரகுவாக நடித்திருந்த சிவாவும் எங்கள் பின்னால் உட்கார்ந்திருந்தது இந்த துப்பறியும் சாம்புவால் இடைவேளையில் கண்டுபிடிக்கப்பட்டது. பக்கத்தில் போய் கை குலுக்கும்போது இடது கையால் முகத்தை மறைத்துக்கொண்டு ”படம் முடிஞ்சு பார்க்கலாமே! ப்ளீஸ்” என்று பணிவுடன் கேட்டு எங்களைவிட்டு அகன்று நட்சத்திரமாகிக் கொண்டார்.

இரண்டாவது பாதியில் நகைச்சுவைக்கு பஞ்சமேயில்லாமல் பல் சுளுக்கும் வரை சிரிக்கவைக்கிறார் சந்தானம். போதாக்குறைக்கு மனோபாலா வேறு ஈர்க்குச்சி உடம்பால் பல பயில்வான்களை கிச்சுகிச்சுவில் புரட்டிப்போட்டுவிடுகிறார்.

படம் முடிந்து இரண்டு வார்த்தைகள் சிவாவிடம் பேசுவிட்டு வந்தேன். 7 டிகிரிக்கு குனிந்து நெஞ்சில் வலது கரம் வைத்து என்னுடைய “நல்லா பண்ணியிருக்கீங்க”வைப் பெற்றுக்கொண்டார்.

அழுத்தம் நிறைந்த இக்காலகட்டத்தில் காசு கொடுத்து அழ விருப்பம் இல்லாத காரணத்தினால் சத்தியம் புன்னகை மன்னர்களால் நிரம்பியிருந்தது.

வயிறு வலிக்கச் சிரிச்சாச்சு. ஒரு முறை மகாநதி பார்க்கணும்.
 

***********ஓடுண்டு கந்தையுண்டு **************

ஸில்வர் ஸ்பூனோடு இம்மண்ணில் அவதரித்த அவதூதர் பட்டினத்தார். காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே என்ற ஞானம் ஏற்பட்ட பின்னர் இறைவன் திருவடிகளைத் தொழுது ஞாலத்திற்காக நிறையப் பாடினார். துறவிகளுக்குண்டான லக்ஷணங்களை ஒரு பாடலில் சொல்கிறார். படிக்கிற நமக்கே சுரீர் என்கிறது. காவி உடுத்துபவர்களுக்கு உரைக்கவில்லையே! சர்வாலங்கார பூஷிதர்களாக இருக்கும் ஆண்டிகள் ஓடுண்டு, கந்தையுண்டு என்கிற மூன்றாவது வரியைப் படித்திருப்பார்களா?

மாடுண்டு கன்றுண்டு மக்களுண்டென்று மகிழ்வதெல்லாம்
கேடுண்டெனும்படி கேட்டுவிட்டோ மினிக்கேண் மனமே
யோடுண்டு கந்தையுண்டுள்ளே யெழுத்தைந்து மோதவுண்டு
தோடுண்ட கண்டனடியார் நமக்குத் துணையுமுண்டே
--பட்டினத்தார்

வினை தீர்த்தவனை வேண்டும் இப்பாடலில் புலன்கள் ஒவ்வொன்றும் சிற்றின்பங்களில் ஈடுபட ஈடுபாடேயில்லாமல் செய்யும் பூசைகளை நீ எவ்வாறு ஏற்றுக்கொள்வாய் என்று சீறுகிறார்.

கையொன்று செய்யவிழியொன்று நாடக் கருத்தொன்றெண்ணப்
பொய்யொன்று வஞ்சகநாவொன்றுபேசப் புலால்கமழு
மெய்யொன்றுசாரச் செவியொன்று கேட்க விரும்புமியான்
செய்கின்ற பூசையெவ்வாறு கொள்வாய் வினைதீர்த்தவனே.
--பட்டினத்தார்

#பொருள் பொதிந்த பாடல்கள். பொருள் தேடுபவர்களுக்கும் அருள் தேடுபவர்களுக்கும் செய்திகள் நிறைய!!


**********அதிகாரம்*************
”ரெண்டு கேன்வாஸ் எடுங்க” அதிகாரமாய் குரல் வந்த திக்கில் நாலரை அடிக்கு அம்மா ஒருவர் ரெண்டு அடி வளர்ந்த தன் குழந்தைக்கு ஷூ கேட்டார்.

“நா இல்லீங்க... அவர்ட்ட.....” என்ற என்னுடைய தயக்கமான இழுவைக்கு “சொல்லுங்க மேடம்..” என்று பாட்டாக்காரர் பறந்து பந்தோபஸ்த்துக்கு வந்தார்.

அதன்பிறகு 5 முறை ”ஸாரி...ஸாரி” என்று அந்த சுடிதார் பெண்மணி மாப்புக் கேட்டு அந்தப் பக்கம் காலணி வாங்க வந்த எல்லோருக்கும் என்னை ”இவர் பாட்டாக்காரர் அல்ல” என்று அறிமுகப்படுத்திவைத்தார்.

#சிகப்புக் கலர் பனியன் போட்டதால் வந்த வினை! 

*********நடுநிசி மருத்துவர்கள் ***************
நேற்றிரவு ந்யூரோ ஸ்பெஷலிஸ்டிடம் சதாபிஷேகம் கண்டவர்கள் எல்லா சேர்களிலும் பளபளவென்று காத்திருந்திருந்தார்கள். வியாதியஸ்தர்கள் மற்றும் பேய் பிசாசு பிடித்தவர்களுக்கு ராத்தூக்கம் வராது என்பார்கள். டீக்காக இன் ஷர்ட் பண்ணிய தாத்தாக்களும் மற்றும் ஜீன்ஸ் பேத்திகளுடன் வந்த எந்தப் பாட்டிகளுக்கும் கண்ணில் பொட்டுத் தூக்கம் இல்லை! ஒவ்வொருவரும் டாக்டரிடம் அரை மணிநேரம் லோகாதய சமாச்சாரங்கள் பேசி வம்பளக்கும் திறமை படைத்தவர்கள்.

சென்னை வந்துதான் இதுபோல நடுநிசி வரை டாக்டர்கள் ஸ்டெத்தும் கழுத்துமாகத் தொழில் பார்ப்பதைப் பார்க்கிறேன். வயதானவர்களை அழைத்துக்கொண்டு க்ளினிக் போக வேண்டும் என்றாலே அன்றைக்கு சிவராத்திரிதான். மன்னையில் மாக்ஸிமம் ஒன்பது மணிக்கு க்ளினிக் நடை சார்த்திவிடுவார்கள். டாக்டர் ப்ரேம்மோஹனாக இருந்தாலும் சரி.. அல்லது டாக்டர் சந்திரசேகராக இருந்தாலும் சரி... 


***********கொரியர்களைப் பிடிக்கவில்லை **************
கொரியர்களைக் கண்டால் எனக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. அவர்களது குச்சிக் குச்சி முடிக்கோ சப்பை மூக்கிற்கோ குந்துமணி கண்ணிற்கோ இல்லை. இந்தியர்களை டமாரச் செவிடர்களாகப் பாவித்து வடிவமைத்த செல்ஃபோன்களை நமது சந்தையில் ஊடுருவ விட்டிருக்கிறார்கள்.

ஒரு அவசரத்திற்கு ரோட்டரி ஹாஸ்பிடல் சென்றால் மார்கழி மாத கூம்பு ஸ்பீக்கரை முழுங்கியது போல ஒரு செல்ஃபோன் முழங்கியது. கூர்ந்து நோக்கியதில் நோக்கியா போலிருந்தது. பெட்டில் வலியோடு படுத்திருந்தவர்களுக்கு ஹாஸ்பிடல் உள்ளே ஆம்புலன்ஸ் புகுந்தது போல இருந்திருக்கும். வியாதியின் உச்சத்தில் நாட்களை எண்ணிக்கொண்டிருப்பவர்களுக்கு எமதர்மராஜாவின் வாகனத்தின் கூப்பாடு போலக் கூட கேட்டிருக்கும்.

கிட்டத்தில் பைலட் போல ஹெட்செட் மாட்டியிருந்தவரிடம் “என்ன மாடல்” என்று கேட்ட போது “அது கொரியன் செட்டு” என்றார். என்ன செட்டு? பெரிய ஷேவிங் செட்டு!!
  
-
 

20 comments:

ஸ்ரீராம். said...

-மதுவந்தி....அழகான ராகம், அழகான பெயர். திரு வொய். ஜி மகேந்திரனின் மகள் பெயர் இதுதான். இந்த ராகம் பெயர் என்பதாலேயே நினைவில் நிற்கிறது!!
-பாட்டா ஜோக் படையப்பா ஜோக்கை நினைவு படுத்துகிறது!
-நடுநிசிக் கள்வர்கள்.... மன்னிக்கவும் அது மாயாவியின் கதை இல்லை? நடுநிசி மருத்துவர்கள்....வியாபாரத்துல போட்டி அதிகம் பாஸ்..... டைம்லாம் பார்க்க முடியுமா?

கே. பி. ஜனா... said...

அது மதுவந்தி ராகமா? 'என்னுள்ளில் எங்கோ..' பாடல் என்னுள்ளில் எங்கும் எப்போதும் ஒலிக்கும் மிகப் பிடித்த பாடல். இரண்டாவது சரணத்துக்கு முன் வரும் பின்னணி இசையில் பின்னியிருப்பார் இளையராஜா!

Rathnavel Natarajan said...

அருமை சார்.

வெங்கட் நாகராஜ் said...

அருமையான கச்சேரி. முகப்புத்தகத்தில் தவறவிட்டதை இங்கே கண்டு மகிழ்ச்சி. என்னுள்ளில் எங்கோ... அருமையான பாடலை மீண்டும் கேட்கத் தந்ததற்கு ஒரு ஸ்பெஷல் நன்றி மைனரே....

சாந்தி மாரியப்பன் said...

வாரியார் தன்னைக் கிண்டல் செய்தவர்களை வாரியது அருமை..

"படையப்பா" பார்த்த கையோடு அந்தம்மா பாட்டாக்கடைக்கு வந்துருப்பாங்களோ :-))

ராஜா ராஜாதான் என்னிக்குமே.

பத்மநாபன் said...

முகப்புத்தகத்திலிருந்து வலைப் பதிவுக்கு ....வலைப்பதிவிலிருந்து முகப்புத்தகத்திற்கு என விழும் இரண்டு மாம்பழமும் ருசியாத்தான் இருக்கு.... அடிங்க ..அடிங்க....

Aathira mullai said...

இதுதான் உண்மையான திண்ணைக்கச்சேரி.கதம்பமாக ஒரு அழகான பாடல். இராகம் தெரியாது.ஆனால் இனிமையாக எத்தனை முறை கேட்டாலும் ஜெய் இணையதள வானொலியில் தினமும் என் விருப்பப் பாடலாக இதுவும் அவர்கள் படத்தில் வரும் காற்றுக்கென்ன வேலி இரண்டு பாடல்களும் இடம்பெறும். ஒலிபரப்பாளர் என்ன தினமும் இப்பாடலைக் கேட்கிறீர்களே என்பார்.

கொரியர் என்றவுடன் அஞ்சல் கொரியர் என்று நினைத்து விட்டேன்.
பட்டினத்தாரைக்காட்டி காவிக்காரர்களுக்கு ஒரு மிறட்டல் விட்டுள்ளீர்கள். அவர்கள் இப்போதெல்லாம் எதற்கும் பெப்பே பார்ட்டி ஆகிவிட்டார்கள்.
மொத்தத்தில் அசத்தல் பகிர்வு.

நீண்ட நாட்களுக்குப் பின் நலம் விசாரிக்கத்தான் வந்தேன். அப்படியே சின்ன கருத்தும்....நலமா ஆர்.வி.எஸ்

RVS said...

@ஸ்ரீராம்.

சில பேர் ராத்திரி எட்டு மணிக்கு மேல வந்துதான் கல்லா கட்டுறாங்க. :-)

RVS said...

@கே. பி. ஜனா...
ஆளை அப்படியே அசத்துவது ராஜாவின் பாணி சார்! :-)

RVS said...

@Rathnavel Natarajan
நன்றி சார்! :-)

RVS said...

@வெங்கட் நாகராஜ்

பாராட்டுக்கு நன்றி தலைநகரமே! :-)

RVS said...

@அமைதிச்சாரல்
நன்றிங்க மேடம். :-)

RVS said...

@பத்மநாபன்

ஓகேங்க ரசிகமணிஜி! :-)

RVS said...

@kg gouthaman
:-)

RVS said...

@ஆதிரா
நல்லா இருக்கேங்க... நீங்க எப்படி இருக்கீங்க?

ரொம்ப நாளா ப்ளாக் பக்கமே காணுமே!

பாராட்டுக்கு நன்றிங்க.. :-)

அப்பாதுரை said...

உங்கள் எழுத்தில நல்ல மெருகேறியிருக்கிறது. சபாஷ்.
மாப்புக்கு ஒரு ஷூ போடும் சாக்கில் - சான்ஸை மிஸ் பண்ணிட்டீங்களே?

மோகன்ஜி said...

முகப்புத்தகத்து கச்சேரியை கேட்க முடியவில்லையென்னு நினைச்சேன். ரசமான தொகுப்பு. மதுவந்தி மனசை மயக்குதுங்க..

கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி மதுவந்தி தான்.

அப்புறம் 'ஹலோ மி டியர்ராங்க் நம்பர்...
இருங்க.... 'இலக்கணம் மாறுதோ இலக்கியம் ஆனதோ ' கூட மதுவந்தி (ன்னு நினைக்கிறேன்)

அப்பாதுரை said...

மதுவந்தின்றது இஸ்காச்சா பட்டையா?

கௌதமன் said...

// அப்பாதுரை said...
மதுவந்தின்றது இஸ்காச்சா பட்டையா?//

'இஸ்காச்சு, பட்டை' எல்லாம் மதுவந்தி இல்லைங்கோ; மதுவாந்தி!

அப்பாதுரை said...

ஆ! மதுவாந்தில பாடுறாங்களா? ஒரு மப்புல அப்படித்தான் இருக்கும்..

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails