Friday, March 18, 2016

விட்டலாபுரம்

காத்தான் கடையில் ஈஸியாரில் ஏறி சென்னை நோக்கி வரும்போது இடதுபுறமே இரண்டு விட்டலாபுரம் வருகிறது. முதல் விட்டலாபுரத்திற்குள் நுழைந்து ”இங்க விட்டலன் கோயில்..” என்று நாங்கள் கேட்ட நபர் தன்னிலை தவறியிருந்தது “எழ்ன்ன கேழ்ழ?” என்ற வாழைப்பழ வாயோடு கேட்டபோது விளங்கியது. அவரது பழரச மூச்சுக் காற்றுப் பட்டாலே நமக்கும் போதையேறிவிடுமளவிற்கு ஃபுல்லாக “ஏத்தி”யிருந்தார். சேப்பாயி யாரும் சொல்லாமலே மெயின் ரோட்டுக்குத் திரும்பியது.
இன்னும் கொஞ்ச தூரத்தில் ஒரு பிரியாணிக்கடையில் இறங்கி கேட்டேன். “நேரா போனாக்க எஸ்.ஏ கலியாண மண்டவம் வரும்... அங்கினலேர்ந்து அடுத்த லெப்ட்டூ” என்று பரோட்டோ மாவு பிசையப் போய்விட்டார். எஸ்.ஏ மண்டபம் தேடும் பணி துவங்கிய போது “கூகிள் மேப்ஸ் போட்ருக்கேன்.. போங்கோ...” என்று சாதூர்யமாகப் பேசியது யாராக இருந்துவிட முடியும்.. சங்கீதாதான்...
“இதுக்குள்ளதானே...” நுழைவதற்கு முன் தெருவிளக்குகள் இல்லாத கும்மிருட்டாக இருந்த இடத்தில் தயங்கினேன். கிராமத்து மின்மினிப் பூச்சிகளின் சிமிட்டல்கள் கூட கிடையாது. காரின் முகப்பு விளக்கு இறங்கும் வரையில் தார்ரோடு விரித்த ஓர் பாய் போலத் தெரிந்தது. அவ்வளவுதான்.
“கூகிள் இந்தப் பக்கம்தான் காமிக்குது.. தைரியமாப் போங்க..”
ஒன்றிரண்டு கி.மீ உருட்டிய பின்னர்....
மங்கிய வெளிச்சத்திலிருந்த பொட்டிக்கடையில் சோடா குடித்துக்கொண்டிருந்த யூத்திடம் கேட்கலாம் என்று தலையை நீட்டிய போது எதிர் திசையில் செங்கல்பட்டிலிருந்து வந்த தனியார் பேருந்து விட்டலாபுரம் முழுவதற்கும் ரேடியோ வைத்தது போல “நெஞ்சுக்குள்ளே இன்னாரென்று.....” பாடிக்கொண்டு வந்து நின்றது. ஒரு பெரியவரையும் கைலியில் அரைக்கைச் சட்டையை மடக்கிய ஒருவரையும் உதிர்த்துவிட்டு ”உலகே அழிஞ்சாலும்.. உன் உருவம்....” என்று பாடிக்கொண்டே கடந்து போயிற்று.
இறங்கிய டப்பாக்கட்டு கைலிக்காரர் “அந்தோ....” கை காண்பித்து அப்படியே அனுப்பிவைத்தார். மெயின்ரோட்டிலிருந்து வலது கைப்பக்கம் நூறு அடியில் கோயில் இருந்தது. ஆனால் அந்தத் தெரு முழுவதும் கும்மிருட்டு. பொட்டு வெளிச்சமில்லை. எந்தக் கோயில் போனாலும் அங்கு வாசலில் விற்கும் பூக்கடையில் தட்டு வாங்குவது என் வழக்கம். கோயில் வாசலில் உட்கார்ந்தால் புண்ணியத்தோடு பொருளும் கிடைக்கும் என்றால் சந்தோஷமடைவார்கள். விட்டலேஸ்வரருக்கு ஒரு முழம் பூ கிடைக்காமல் போய்விடுமோ என்று அஞ்சினேன்.
இருட்டில் கடை போட்டிருந்த பெண் மூங்கில் தட்டு நிறைய சம்பங்கியுடன் அந்த பிராந்தியத்துக்கு சுகந்தத்தையும் விற்றுக்கொண்டிருந்தார்.
“துளசிமாலை இல்லைம்மா?”
“வித்துப்போச்சி சாமி. மணமா சம்பங்கி வாங்கிட்டுப் போ....”
உள்ளே சொற்ப கூட்டம் இருந்தது. கர்ப்பக்கிரஹ வாசலில் க்ருஷ்ண ப்ரேமி அண்ணா அபிஷேகம் செய்யும் படம் மாட்டியிருந்தார்கள்.
ஆஜானுபாகுவான விட்டலன். அவரது தோளுக்கு தோளாய் இருபுறமும் ருக்மணி சத்யபாமா. மலர்மாலைகளில் பார்க்கப் பார்க்க பரவசமாயிருந்தது. நீங்கள் நேரே நிற்கும் போது உங்களது உயரத்தில் தரையிலிருந்து சமமாக தெய்வம் நின்றால் எப்படியிருக்கும்? அப்படியொரு தோற்றம். ”பாகவதர் ஃபோன் பண்ணினார்.. நீங்கதானா அது?” என்று விஜாரித்த பட்டர்பிரான் வார்த்தைகளில் கண்டீஷனும் செயல்களில் இளகியமனதோடும் தீபாராதனை காட்டினார். “வலது பக்கத்துல பாருக்கோ... இந்தக் கோயில் மின்னாடி எப்படியிருந்தது.. இப்போ எப்படியிருக்குன்னு படம் போட்ருக்கோம்.. சிவராத்திரி விட்டலனுக்கு விசேஷம்... இவர் ப்ரேமிக விட்டலேஸ்வரர்... ” என்றார்.
பிரதக்ஷிணம் வந்தோம். லக்ஷ்மி சன்னிதி இருந்தது. பின்னர் ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு ஒரு தனிச் சன்னிதி இருந்தது. பக்கத்து சன்னிதியில் வரதராஜரும் கடைசியில் விஷ்வக்சேனர் என்கிற சேனை முதலியார் சன்னிதிகளும் ஒரே வரிசையில் இருந்தன. எல்லா சன்னிதியிலும் விளக்கு எரிந்தது. சேனை முதலியார் சன்னிதியிலிருந்து மன்னைக்கு நியாபகம் தாவியது. ஸ்ரீவித்யா ராஜகோபாலனின் பங்குனி பிரம்மோற்சவம் போது சேனை முதலியார் ஒரு சுற்று வந்தவுடன் தான் புறப்பாடு ஆகும்.
டயாபடீஸுக்கு ஏற்றவாறு சர்க்கரை பொங்கல் செய்து பிரசாதமாய் விநியோகித்துக்கொண்டிருந்தார்கள். கைக்கு ஒரு தொண்ணை தருகிறேன் என்று இருகைகளிலும் கொடுத்தார் அந்த மூதாட்டி. விட்டலன் சன்னிதியில் அமிர்தமாய் இருந்தது. பெருமாள் பிரசாதத்திற்கே பிரத்தேயகமாக இருக்கும் ஒரு அலாதியான சுவை.
“இது கிருஷ்ண தேவராயர் காலத்து கோயில்.. கி.பி பதினைஞ்சாம் நூற்றாண்டு...” என்றார் அக்கௌண்ட்ஸ் வெங்கட்ராமன் சார்.
“ம்.. பார்த்தேன்.. வாசல்ல ஆர்க்கியாலஜி போர்டு இருக்கு.. அவரோட பிரதிநிதியாமே.. யாரோ.. கொண்டைய தேவ சோழ மஹாராஜான்னு... சோழர் பரம்பரை ஆளு.. கிருஷ்ணதேவராயருக்கு ஊழியம் பார்த்திருக்கார்... அவர்தான் கட்டினதாம்.. போர்டுல இருக்கு....”
“தேரெல்லாம் இருந்திருக்கு... “ என்று கடைசி வாய் சர்க்கரைப் பொங்கலை வாயில் போட்டுக்கொண்டார்.
வாசலில் பூக்காரம்மா வீட்டுக்கு புறப்படத் தயாராயிருந்தது.
“ஒண்ணு சொல்ல மறந்துட்டேனே...” என்று அவசராவசரமாக நெருங்கினார் அக்கௌண்ட்ஸ் வெங்கட்ராமன் சார்.
”என்ன?”
“இங்க டெய்லி டோலோத்ஸவம் உண்டு. பெரிய பாகவதர் வந்தார்னா... அபங்.. பஜனையெல்லாம் பாடி உங்களை ஆடச் சொல்வார். ஆடாம வீட்டுக்குப் போக முடியாது...”
“அடுத்த தபா ஆடிடுவோம்...”
கடையடுக்கிக்கொண்டிருந்த பூக்காரம்மா “ஒரேயொரு சம்பங்கி மாலதான் இருக்கு.. வூட்டுக்கு வாங்கிட்டுப் போ...” என்று துரத்தியது.
மறுநாள் காலை பூஜையின் போது அந்த மாலையை வெங்கடேசப்பெருமாளுக்கு சார்த்திய போது அந்த ஃப்ரேமுக்குள் ப்ரேமிக விட்டலேஸ்வரர் தெரிந்தார். சம்பங்கியின் வாசனையில் மனஸில் பக்திரசம் பொங்கியது.

4 comments:

ஸ்ரீராம். said...

அருமை. என்ன கோவில் சுற்று? முக நூலிலும் பார்த்தேன்.

sury siva said...

www.youtube.com/watch?v=HkBGBH2XOp8

V Mawley said...

படிச்சாச் ..!

மாலி

'பரிவை' சே.குமார் said...

நல்லாயிருக்கு அண்ணா...

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails