Wednesday, September 17, 2014

கணபதி முனி - பாகம் 15 : பசியாற்றிய பரமன்

அந்த நீண்ட வீட்டின் வாசல் திண்ணையில் ஒருவர் படுத்திருந்தார். வீடு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்தது. அங்கே நின்று கணபதி பசிக் கொடுமையை பிரஸ்தாபித்து ஒரு ஸ்லோகம் படித்தார். திண்ணை ஆசாமி உருண்டார். உறக்கம் உதறினார். எழுந்து உட்கார்ந்தார்.

“யாரப்பா நீங்கள்? உள்ளூர்வாசி போலத் தெரியவில்லையே! உங்களுக்கு இந்த ராவேளையில் என்ன வேண்டும்?” என்று கேட்டார்.

“நாங்கள் ஆந்திர தேசத்தவர்கள். க்ஷேத்ராடமாக காஞ்சீபுரம் வந்தோம். பின்பு அங்கிருந்து அருணாசலேஸ்வரரை தரிசிக்க வந்திருக்கிறோம். இதோ இவன் என்னுடைய இளைய சகோதரன். கொடும் பசியில் துடியாய்த் துடிக்கிறான். இந்த அகாலத்தில் சத்திரம்சாவடியெல்லாம் மூடிவிட்டார்கள். அன்னம் கேட்ட வீட்டிலெல்லாம் இன்றைக்கு ஏகாதசியென்று அடுக்களையை அலம்பிவிட்டு நித்திரைக்குப் போய்விட்டார்கள். உங்களால் இவனுக்கு அன்னமிட்டு பசிப்பிணியைப் போக்க முடியுமா?” என்று கேட்டார்.

“ஆஹா! இது தெய்வ சங்கல்பம். தெய்வ சங்கல்பம்” என்று பரவசமடைந்தார் அந்த திண்ணை ஆசாமி.

கணபதியும் சிவராம சாஸ்திரியும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள். அவர் தொடர்ந்தார்..

”என்னுடைய மனைவி இப்போதுதான் விரதம் முடித்தாள். விரதம் முடித்த பின்னர் ஒவ்வொரு தடவையும் இரண்டு பிராமணர்களுக்கு போஜனம் செய்வித்து தக்ஷி்ணை கொடுப்பதாக வேண்டுதல். ஏகாதசியாதலால் இரவு போஜனத்திற்கு பிராமணர்கள் கிடைக்கவில்லை என்று கவலையாய் பூஜையறையில் இருந்தாள். கொஞ்சம் இந்த திண்ணையில் அமருங்கள். உள்ளே அழைக்கிறேன்” என்று துள்ளிக்கொண்டு வீட்டிற்குள் ஓடினார்.

பத்து விநாடிகள் அமைதியாய் கழிந்தது. சிவராம சாஸ்திரிக்கு வயிறு கடபுடவென்று பசியில் திட்டியது.

“வாருங்கள்..வரவேண்டும்.. வரவேண்டும்..” என்று உள்ளிருந்து தம்பதி சமேதராய் அழைப்பு திண்ணைக்கு வந்தது.

அவ்வீட்டின் நடுக்கூடத்தில் திறந்த மித்தம் இருந்தது. அதன் நடுவில் காவி தீட்டப்பட்டத் துளசிமாடமும் அதனருகில் அகல் விளக்கும் சுடர் விட்டு எரிந்தது. வீடே அலம்பி துடைத்துவிட்டாற் போல துப்புரவாக இருந்தது. பூஜை முடிந்ததற்கு அடையாளமாக வாசனாதிகளின் நறுமணம் நாசியை நிறைத்தது. அவரது மனைவி மடிசார் கட்டில் கையெடுத்துக் கும்பிடும் படியாக லக்ஷ்மி கடாக்ஷமாக இருந்தார்கள். கணபதிக்கு நிறைவாக இருந்தது.

இலை போட்டு விருந்து பரிமாறினார்கள். அருகிலிருந்து தம்பதிகள் இருவரும் அனுசரணையாகப் பந்தியைக் கவனித்தார்கள். கூட்டு, கறி, பாயஸம், ரசம் என்று சிவராம சாஸ்திரி ”யதேஷ்டம்... யதேஷ்டம்” என்று மூக்கில் ஒரு பருக்கை வரும் வரை சாப்பிட்டார். கணபதிக்கு பசியேயில்லை. சாஸ்திரத்திற்கு கொஞ்சம் சாப்பிட்டுக் கையலம்பினார். சிவராம சாஸ்திரியின் அகோரப் பசி அடங்கியது.

இருவரையும் நிற்க வைத்து சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தனர். தாம்பூலமும் தக்ஷிணையும் கொடுத்தார்கள். அங்கிருந்து விடைபெற்று இருவரும் ஒரு சத்திரத் திண்ணையில் படுத்து உறங்கினார்கள்.

பொழுது புலர்ந்தது. பட்சிகள் இரை தேடப் பறந்தன. அருணை மலையடிவாரத்தில் பரமாத்மாவிடம் சமர்ப்பிப்பதற்காக ஜீவனைக் கழிக்கும் சில ஜடாமுடி அடியார்களின் நடமாட்டம் தெரிந்தது. நேற்றிரவு தடபுடலான விருந்து அளித்தவர்களுக்கு நன்றி சொல்ல இருவரும் புறப்பட்டார்கள். அந்தத் தெருவில் பல முறைச் சுற்றிச் சுற்றி வந்தாலும் நேற்று பார்த்த அந்த வீடு மட்டும் அகப்படவில்லை. கணபதிக்கே தனது நினைவாற்றலின் வழுக்கலைக் கண்டு ஆச்சரியமாக இருந்தது. தப்பாக இரண்டு வீடுகள் ஏறி இறங்கினர். மொத்தமே இருபது இருபத்தைந்து வீடுகள் இருந்த அந்த தெருவில் விஜாரித்ததில் ”அறுபது வருஷமா இங்கே இருக்கேன். நீங்க சொல்லும் அடையாளத்தில் இங்கே யாரும் ஜாகையில்லையே...” என்று ஒரு மேலுக்கு துண்டு போர்த்திய வயோதிகர் ஒருவர் சொன்னார். கணபதிக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. இது இறைவனின் திருவிளையாடல் என்று புரிந்தது. அந்த வீதியிலிருந்து திரும்பிப் பார்த்தால் அருணை மலை கம்பீரமாக நிற்பது தெரிந்தது.

ஜோதி ஸ்வரூபனான சிவபெருமானே அங்கே மலையாய் நிற்கிறான். உள்ளொளி பெருக்கினால் அம்மலையில் அக்னி ஸ்வரூபமாய் சிவனிருப்பது நமக்கு பிடிபடும். கோயில் கர்ப்பக்கிரஹத்தில் குடியிருக்கும் லிங்க ரூபமும் பரந்து நிற்கும் மலையும் ஈஸ்வரனே என உணர்ந்தார் கணபதி. ஹர..ஹர.. என்று சகோதரர்கள் இருவரும் அங்கிருந்தே கன்னத்தில் போட்டுக்கொண்டார்கள். ஆத்ம பிரதக்ஷிணம் செய்தார்கள்.

இந்த நிகழ்வுக்குப் பின்னர் கணபதி அருணாசலேஸ்வரரின் பரம பக்தரானார். அவரது தவ வாழ்வில் திருவண்ணாமலையில் ஒரு புதிய அத்தியாயம் பிறந்தது.

சிவராம சாஸ்திரியும் கணபதியும் மூன்று நாட்களுக்கு அந்த சத்திரத்தில் தங்கினர். யாத்ரீகர்களுக்கு மூன்று நாட்களுக்கு மேல் அனுமதியில்லை. கணபதி அங்கு வசிக்கும் தர்மிஷ்டர்களை இன்னும் ஒரு வாரத்திற்கு ஆளுக்கொரு நாள் அவர்களுக்கு அன்னமிட முடியுமா என்று தேடினார். நான்கு பேர் கிடைத்தனர். அவர்களும் பகல்பொழுதில் மட்டும் போஜனம் அளிக்க முன் வந்தனர்.

கணபதிக்கு ஒரு பொழுது பிடி உணவு போதும். ஆனால் இளையவர் சிவராம சாஸ்திரியால் பட்டினி கிடக்க முடியவில்லை. “நீயானும் வீட்டிற்கு செல்லேம்பா..” என்று கெஞ்சினார் கணபதி.

இந்த இக்கட்டான நிலையில் இறைவனைத் துதித்து பாடிய ஸ்லோகத்தின் சாராம்சம்.

“இறைவா! வாழ்வாதாரத்தை தர மறுக்கும் நீயா எனக்கு ஆனந்தமயமான முக்தியளிக்கப் போகிறாய்? ஒரு பொட்டு மஞ்சளை கொடுக்க மறுக்கும் வியாபாரி கடையையே தூக்கிக் கொடுத்துவிடுவானா?”

இதிலெல்லாம் சற்றும் மனம் தளராத கணபதி அண்ணாமலையில் தனது தீவிர தவத்தைத் தொடர்ந்தார். அருணாசலேஸ்வரரைத் துதித்து ஆயிரம் ஸ்லோகங்கள் அடுக்கடுக்காகப் புனைந்தார். ஒவ்வொரு நாளும் ஒரு ஸ்லோகத்தை அருணாசலேஸ்வரர் சன்னதியில் நின்று பண்ணோடு பாடுவார். படித்தவர்களும் பாமரர்களும் நிதமும் இந்த அற்புத ஸ்லோகங்களைக் கேட்க பெருமளவில் கூடுவர். கார்த்திகை திருநாளுக்கு இரண்டு நாட்கள் முன்னர் ”ஹர சஹஸ்ரம்” என்ற இந்த ஆயிரம் ஸ்லோகங்களை பூர்த்தி செய்தார்.

ஆயிரம் ஸ்லோகங்களைப் பூர்த்தி செய்தவுடன் ஊரின் சில முக்கியஸ்தர்கள் கணபதிக்கு அங்கிருந்த சம்ஸ்கிருதப் பள்ளியில் ஆசிரியர் வேலைக்கு ஏற்பாடு செய்தனர். சிவராம சாஸ்திரியையும் போஷிப்பதாக ஊக்கமளித்தார்கள். இச்சமயத்தில் சிவராம சாஸ்திரி “அண்ணா! நான் வீட்டிற்கு திரும்புவதாக உத்தேசித்துள்ளேன்” என்று திரும்பினார். கணபதி மறுப்பேதும் சொல்லாமல் சட்டென்று ஒப்புக்கொண்டார்.

அதுவரை கணபதிக்கு தமிழில் எழுத்துக்கூட்டக் கூடப் பரிச்சியமில்லை. விண்ணில் அமாவாசையிலிருந்து அரைவட்ட நிலவு ஆவதற்குள் தமிழ் கற்றுக்கொண்டு அம்மாணவர்களுக்கு சம்ஸ்க்ருதத்தை அர்த்தப்பூர்வமாகப் போதித்தார். அவரது விசாலமான அறிவும் எதையும் கப்பென்று கற்பூரமாய்ப் பிடித்துக்கொள்ளும் திறமையும் கொஞ்சம் கொஞ்சமாக ஊருக்குள் பரவ ஆரம்பித்தது. மக்கள் அவரிடம் கோஷ்டியாகக் கூட ஆரம்பித்தனர். பின்னாலேயே எப்போதும் ஐந்தாறு பேர் ஊர்வலம் வந்தார்கள். இதுபோன்ற நட்சத்திர அந்தஸ்துகள் அவரது தவத்தைக் கெடுத்தன.

ஒரு நாள் கணபதி அருணை மலையில் ஏறிய போது...

‪#‎காவ்ய_கண்ட_கணபதி_முனி_15‬
‪#‎கணபதி_முனி‬

4 comments:

Yaathoramani.blogspot.com said...

மிக மிக அற்புதமான துவக்கம்
சமவெளி நதிபோல் சரளமான நடை
வாழ்த்துக்களுடன் தொடர்கிறேன்...

sury siva said...

interesting and
revealing.

subbu thatha

'பரிவை' சே.குமார் said...

ஆஹா... அருமையா இருக்குண்ணா...
தொடருங்க... தொடர்கிறோம்...

வல்லிசிம்ஹன் said...

வணக்கம் ஆர்விஎஸ் ஜி. கணபதி சாஸ்திரிகளின் காவ்யம் எவ்வளவு புனிதமாக நடக்கிறது. இவ்வளவு பெரிய ஞானியை அறியக் கொடுத்த நல்ல உள்ளத்துக்கு நன்றி.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails