Wednesday, September 17, 2014

கணபதி முனி - பாகம் 8 : நாஸிக் தபசு

....ஜடாமுடியுடன் ஒரு வயதான யாத்ரீகர் சொப்பனத்தில் நின்றார். ”கணபதி. இன்னும் ஏன் இங்கு நேரத்தை விரயம் செய்கிறாய்? ஸுகேது உன்னிடம் பேசியதை என்னிடமும் சொன்னார். நாஸிக்தான் பிரம்மகிரியின் நுழைவாயில். அங்கிருந்து திரியம்பகம் சென்று தவமியற்று” என்று ஆக்ஞையிட்டார்.

கனவு கலைந்தது. சட்டென்று தூக்கம் விடுபட்டது. கண் விழித்தார். அது பிரம்ம முஹூர்த்தம் முடிந்து அதிகாலைப் பொழுது. காசி விழித்திருந்தது. பவானி சங்கரத்திடம் யாத்ரீகர் சொப்பனத்தைப் பற்றிக்கூறினார். ”இது தெய்வசங்கல்பம். ஆண்டவன் கட்டளை. அப்படியே செய் கணபதி....” என்று ஆசீர்வதித்தார். தந்தை சொல் கேட்காமல் எதுவும் செய்ததில்லை கணபதி. நாஸிக் செல்ல ஒப்புதல் அளித்து நரசிம்ம சாஸ்திரியும் கணபதிக்கு எழுதியிருந்தார். பவானி சங்கரத்திடம் விடைபெற்றுக் காசியிலிருந்து மேற்கே நாஸிக்கிற்கு பயணப்பட்டார்.

நாஸிக்கை இன்னும் சிறிது அவகாசத்தில் அடைந்துவிடலாம். கண்ணுக்கெட்டிய தூரத்தில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாக தலைகள் தெரிந்தன. கும்பலாக நிற்கிறார்கள். ஏதோ விவகாரம் போலிருக்கிறது.

தசக்கிரீன் தங்கை சூர்ப்பனகையின் மூக்கை லக்ஷ்மணன் அறுத்த இடம் நாஸிக். இராமாயண காலத்திலிருந்து இன்று வரை லக்ஷ்மணனின் கோபத்துக்கு ஆளான இடம் என்று நாஸிக்வாசிகள் சொல்வார்கள். நாஸிக்கின் விளிம்பில் இளையபெருமாள் லக்ஷ்மணன் கோயில் ஒன்றும் இதற்கு அடையாளமாக இருக்கிறது.

கணபதி நாஸிக்கை அடையும் போது நகரத்துக்குள் அன்னியர்கள் பிரவேசிக்க தடை விதித்திருந்தார்கள். நகரமெங்கும் பெரியம்மை தலைவிரித்தாடியது. நோயின் உக்கிரம் கருதியும் மேலும் பரவுவதைத் தடுக்கும் பொருட்டும் சுகாதரத்துறையினர் வெளியூர்க்காரர்களை நகர எல்லையில் தடுத்தார்கள். பெரிய அரசமரத்தின் கீழிருந்த கிராமக் கோயிலில் பகற்பொழுதைக் கழித்தார்.

இரவு வந்தது. நிர்மலமான வானத்தில் நட்சத்திரங்கள் ரத்தினங்களாக இறைந்திருந்தன. மினுமினுப்பு காண்போரைச் சொக்கியது. நடுவில் பால் நிலா பொழிந்தது. இதமான குளிர். இதில் கணபதியின் உள்ளம் குதூகலமடைந்தது. உற்சாகத்தில் காளிதாசனின் ரகுவம்சக் காவியத்திலிருந்து சில ஸ்லோகங்களைப் பிரவாகமாகப் பாடினார். பக்கத்தில் காவலிருந்த ஒரு சுகாதாரத்துறை அதிகாரி.. “ஆஹா... அற்புதமாகப் பாடுகிறாய். இந்த ஒவ்வொரு ஸ்லோகத்திற்கும் அர்த்தம் சொல்வாயா?” என்று ரசிகனாய்ப் பக்கத்தில் வந்து உட்கார்ந்துகொண்டார்.

சக்கரவர்த்தி ரகுவின் புத்திரன் அஜன் ஒரு ஸ்வயம்வரத்தில் பங்கு கொள்ள குதிரையில் பறந்து கொண்டிருந்தான். ஸ்வயம்வர நகரம் நெடுந்தொலைவு இருந்ததால் தனது பரிவாரங்களுடன் அன்றிரவு ஒரு மலையடிவாரத்தில் கூடாரமடித்துத் தங்கினான். பொழுது புலர்வதற்கு முன்னர் அஜனைத் துயிலெழுப்ப இந்த ஸ்லோகத்தை அவரது ஆஸ்தான பாடகர்கள் பூபாளமாகப் பாடினார்கள்.

“ராஜன்னு.. நீங்கள் துயிலும் போது லக்ஷ்மி சந்திரனோடு ஸ்நேகமாயிருந்தாள். நீங்கள் நித்திரை கலைந்து எழுந்ததால் உங்கள் முகத்தாமரையோடு போட்டி போட முடியாத சந்திரன் அஸ்தமிக்கிறான்.”

மன்னனின் முகமும் சந்திரனும் தாமரையாகப் பாடப்படுகிறது. லக்ஷ்மி பத்மாசினி.
சுகாதார அதிகாரிக்கு புரிந்தும் புரியாமலும் இருந்தது. கணபதியை நெருங்கி....

“இந்தப் பாட்டில் ஏதோ பிழை இருக்கிறது போலிருக்கிறதே... ” என்றார்.

“என்ன பிழை?”

“அஜ ராஜா சந்திரனோடு இரவைக் கழித்த லக்ஷ்மியை பகலில் தான் ஏற்றுக்கொண்டார் என்று பாடுவது கலாசாரமாகத் தெரியவில்லையே...நெருடுகிறதே....” என்று இழுத்தார்.

கணபதி வெடித்துச் சிரித்தார். விவரம் கேட்டவருக்கு சிரிப்பின் அர்த்தம் புரியவில்லை. “தயை கூர்ந்து எனது சந்தேகத்தைத் தீர்த்துவைக்க முடியுமா?”. கற்கும் ஆர்வம் கண்களில் பொங்கியது.

”லக்ஷ்மியோடு சந்திரனும் பாற்கடலில் பிறந்ததால் சகோதரன் ஆகிறான். ஆகையால் இது தவறாகாது..” பளிச்சென்று சூட்டிகையான விளக்கமளித்தார் கணபதி.

கணபதியின் இந்தப் பதில் சுகாதார அதிகாரிக்கு ரொம்பவும் திருப்தியளித்தது. தனது வாக்சாதூர்யத்தால் மறுநாள் அங்கிருந்து சிறப்பு அனுமதியில் நாஸிக்கிற்குள் நுழைந்தார்.

நாஸிக்கில் கச்சாமுச்சாவென்று இரைச்சல். சந்தைகள். கடை வீதிகள். ஜனநெருக்கடி. தவமியற்றயிலாத சூழ்நிலை நிலவியது. விடுவிடுவென்று பதினெட்டு மைல்கள் நடந்து த்ரயம்பக க்ஷேத்திரத்திற்குள் நுழைந்தார். அங்கு மஹாதேவரைத் தொழுதார். கதிரவன் மறையும் பின் மாலை பொழுதில் குசவர்த்தாவை அடைந்தார். அங்கிருந்து பிரம்மகிரிக்கு பொடிநடை தூரம்தான். பிரம்மகிரியில்தான் கோதாவரி நதி பிறக்கிறாள். ப்ரம்மகிரியை ப்ரம்மராந்த்ரா என்பார்கள். அதாவது தெய்வீக சக்திகளை உச்சி சிரசில் உள்வாங்கி உடம்புக்குள் செலுத்தும் இடம். குசவர்த்தாவை சக்தியின் பீடமாக சிரசிலிருக்கும் ஆயிரம் இதழுள்ள தாமரை. த்ரயம்பகாதான் ஹிருதயம். அங்கேதான் சிவன் சிம்மாசனமிட்டிருக்கிறார் என்பது ஐதீகம்.

குசவர்த்தாவில் ஒரு ஏழை அந்தணர் வீட்டில் அன்றிரவு ஓய்வெடுத்தார். மறுநாள் காலையில் ஒரு டாக்டரிடம் அந்த அந்தணர் அழைத்துச்சென்றார். அவர் தனவந்தர். ஸம்ஸ்கிருதம் பயில்வதில் ஆர்வமும் துடிப்பும் உள்ளவர். விருந்தினரை ”அதிதி தேவோ பவ:” என்று உபசரிப்பவர். அவரின் ஒத்தாசையோடு நீலாம்பிகா கோயிலில் ஒரு தனியிடத்தை தவத்துக்குத் தேர்ந்தெடுத்தார். பதினான்கு நாட்கள் இடைவிடாமல் தொடர் தவம் புரிந்தார். டாக்டர் தனது நண்பர்களிடம் கணபதியின் ஸம்ஸ்கிருத இலக்கிய ஆளுமையை பிரஸ்தாபித்தார். அன்றிலிருந்து தினமும் இரவு டாக்டர் தனது நண்பர்களுடன் நீலாம்பிகா கோயில் மண்டபத்தில் கணபதியின் இலக்கிய சொற்பொழிவுகளை ரசித்தார்கள்.

அப்போது நாஸிக்கிலிருந்து பிரவசனம் கேட்க வந்த ராம் பாவு என்ற நண்பர் “நீங்கள் இன்று அஷ்டாவதனம் செய்ய வேண்டுகிறேன்..” என்று கை கூப்பினார். மஹாவிரதத்தோடு தவமியிற்றிக் கொண்டிருந்ததால் போதிய தேகபலம் இல்லாதிருந்தார். ஆனாலும் ஆர்வலர்களுக்காக அதைச் செய்தார். ராம் பாவு அதிசயத்தில் ஆழ்ந்தார். கணபதியை நாஸிக்கிற்கு வரும்படி நச்சரித்தார். ”நான் அங்கே உங்களது தவத்திற்கான ஏற்பாடுகளைச் செய்து தருகிறேன்” என்று உறுதியளித்தார்.

நாஸிக்கில் அனுதினமும் ராம் பாவு கணபதியுடன் இலக்கியவிசாரத்தில் ஈடுபட்டாரே தவிர தவமியற்ற ஏற்பாடு எதுவும் செய்யவில்லை. அதிருப்தியடைந்த கணபதி நகரெங்கும் சுற்றித் திரிந்து ஒரு தனியிடம் தேடினார். அப்போது லக்ஷ்மணன் கோயில் கண்ணுக்கு அகப்பட்டது. கோயில் மண்டபத்தில் காலெடுத்து வைத்ததும் கதவு மறைவிலிருந்து மின்னலென முன்னால் வந்த அர்ச்சகர் “வாடா... திருட்டுப் பயலே... அகப்பட்டாயா...” என்று திட்டி கையைப் பிடித்துத் தரதரவென்று கோயிலுக்கு வெளியே இழுத்துப்போனார். “நானா திருடன்? ஏனிப்படி.. “ என்று கணபதி சொல்லவந்ததையும் அவர் காதுகொடுத்துக் கேட்கவில்லை. “உன்னை மாஜிஸ்ட்ரேட்டிடம் கொண்டு போய் நிறுத்துகிறேன் பார்.. உன்னை ஜெயிலில் போடுவார்கள்.... அப்போதுதான் புத்தி வரும்...” என்று குதியாய்க் குதித்தார்.

அப்போது அக்கோயிலைக் கடந்த ராம் பாவுவின் ஸ்நேகிதர் கூச்சலைக் கேட்டுக் கோயிலுக்குள் எட்டிப் பார்த்தார். கணபதியைப் பிடித்து வைத்திருந்த அர்ச்சகரைப் பார்த்தார். கணபதியின் அசௌகரியமான முகத்தைப் பார்த்தார். அவர் கணபதியின் ப்ரவசனங்களை கேட்டு இன்புற்றவர். “நிறுத்துங்கள்.. இவரைப் பிடித்துத் தள்ளாதீர்கள்...” என்று லக்ஷ்மணன் கோயில் அர்ச்சகரைப் பாய்ந்து தடுத்தார். அர்ச்சகர் கோபமாக முறைத்தார். முகம் சிவந்தது. “எதற்காக இவரைப் பிடித்து வைத்திருக்கிறீர்கள்?” என்று ராம் பாவுவின் நண்பர் கேட்டார். ”ராம லெக்ஷ்மண சீதாவுக்கும் ஆஞ்சநேயருக்கும் ஆபரணங்களை எடுத்து வந்தேன். இங்கே மண்டபத்தில் வைத்துவிட்டு பிரகாரக் கிணற்றில் ஜலம் எடுக்க சென்றேன். அப்போது சில ஆபரணங்களை யாரோ திருடிவிட்டார்கள். மிச்சமிருப்பவைகளை திருட வருவான் என்று நினைத்தேன். அதே போல் வந்தான். பிடித்துவிட்டேன்” என்றார்.

“இல்லை.. இவர் ஸம்ஸ்கிருத பண்டிட். தவமியிற்றும் உத்தமர்.. அருட்கலைகள் வாய்க்கப் பெற்றவர்..”

“திருடனுக்கு வக்காலத்து வாங்குகிறீரா? உம்மையும் மாஜிஸ்ட்ரேட்டிடம் பிடித்து ஒப்படைக்க வேண்டியதுதான்...” என்று அவரையும் திட்டினார்.

அதுவரை பொறுமையாக நின்ற கணபதி முனிக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது. உடனே முகம் சிவக்க ”இந்த நாஸிக் நகரமே அழியட்டும்...” என்று கோபாக்னியில் ஒரு ஸ்லோகம் சொன்னார்.

அந்த ஸ்லோகத்திலிருந்த மொழியும் அதை ஜபித்த தோரணையும் அர்ச்சகரை கிடுகிடுக்க வைத்தது. ”திருடன் என்று தவறாக எண்ணிவிட்டோமே” என்று மனம் வருந்தினார். ஆனால் சாபமிட்டது இட்டதுதான். கணபதியும் வருந்தினார். ஒருவர் செய்த தவற்றுக்கு ஊரைச் சபித்துவிட்டோமே என்று நொந்துகொண்டார். இச்சாபத்திலிருந்து நாஸிக் நகர மக்களைக் காக்க வேண்டி கடவுளிடம் வேண்டினார். மீண்டும் ராம் பாவு வீட்டிற்கு செல்ல மனமில்லாமல் தவத்துக்குத் தனியிடம் தேடினார்.

ஒரு பாழடைந்த கோயில் தென்பட்டது. நவசூட்டி என்று பெயர். அங்கு தவமியற்ற ஆரம்பித்தார். லக்ஷ்மணன் கோயிலில் நடந்த துர்சம்பவத்திற்கு தானே காரணம் என்று ராம் பாவு மிகவும் வருத்தப்பட்டார்.

இந்த பாழடைந்த கோயிலில் கணபதி தொடர்ந்து எழுபது நாட்கள் தவமியற்றினார். நித்யமும் ஒரு தம்ப்ளர் பால் மட்டும் அருந்தினார். ராம் பாவு தான் செய்த தவற்றுக்கு பரிகாரமாக தினமும் நவசூட்டி கோயிலுக்கு கணபதிக்காகப் பால் கொண்டு செல்வார். எழுபதாவது நாள் சிவபெருமான் கணபதியின் கனவில் தோன்றி “நீ திரும்பி ஊருக்குச் செல்..” என்று கட்டளையிட்டார். மறுநாள் காலையில் ஜபதபங்களை முடித்துக்கொண்டு ஊர் திரும்ப ஆயத்தமான கணபதியிடம் ராம் பாவு “நாஸிக்கில் பெரியம்மை நிறைய பேரை தீர்த்துவிட்டது. உங்களைத் திட்டிய அர்ச்சகரின் குடும்பமும் பூண்டோடு அழிந்தது. பெரும்புயல் வீசியது. மரங்களை வேரோடு பிடிங்கி கட்டிடங்களில் சாய்த்து பலர் மாண்டனர். ஊரில் இரண்டு கோயில் கூட இடிந்துவிழுந்தது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் நாஸிக்கிற்கு வெளியே பொட்டு காற்று மழை இல்லை.”

கனத்த இதயத்துடன் கணபதி அங்கிருந்து விடைபெற்றார். செகந்திராபாத்தில் இறங்கி தந்தை நரசிம்ம சாஸ்திரியைச் சந்தித்து நமஸ்கரித்தார். ”வீட்டிற்கு போகலாம்ப்பா...” என்றார் நரசிம்ம சாஸ்திரி.

“பத்ராசலம் ராமரை தரிசித்துவிட்டு வருகிறேன்...”

“குடும்பத்தை கொஞ்சம் நினைத்துப்பாரப்பா.. நீ இப்போது கிரஹஸ்தன்.. தபஸிற்குச் சென்று ஆறு மாதங்கள் ஆகின்றன... ” என்று சுனங்கினார்.

சரியென்று அவரது பேச்சுக்குக் கட்டுப்பட்டு தந்தையுடனேயே கலுவராயிக்கு சென்றார். வீட்டில் தன்னுடைய காசி நாஸிக் த்ரியம்பக தபோ அனுபவங்களைத் தந்தையிடம் பகிர்ந்துகொண்டார். பவானி சங்கரத்தின் காசி அகத்தில் சந்திந்த துர்க்காமந்திர் யோகி தபால்பெட்டியில் சேர்த்தக் கடிதத்தை கையில் எடுத்தார் நரசிம்ம சாஸ்திரி.

“யாரப்பா உனது படத்தை இந்தக் கடிதத்தில் அழகாக வரைந்தது?” என்ற தந்தையின் கேள்விக்கு கண்பதியின் கண்கள் ஆச்சர்யத்தில் மிளிர்ந்தது. கடிதத்தின் மேல் பாதியில் கணபதியின் படம் மிக அழகாக வரையப்பட்டிருந்தது. இதைக் கண்டவுடன் விர்ர்ர்ர்ர்ரென்று ஒருவித மின்சாரம் அவர் சரீரத்தில் பாய்ந்தது போல உணர்ந்தார். இது எப்படி? மூடிய உறையைப் பிரித்து அந்த கடிதத்தில் யோகி படம் வரைந்திருக்கலாம். பரவாயில்லை. ஆனால்.. ஆனால்.. இது எப்படி?

இது எப்படி சாத்தியமாகும்? மேனி அதிர்ந்தது. ஒரு பரவச நிலையில் இருந்தார்.. இது கடவுளின் திருவிளையாடலோ?... மீண்டும் மீண்டும் அந்தக் கடிதத்தை திருப்பித் திருப்பிப் பார்த்தார்... இது எப்படி சாத்தியமாகும்.. நரசிம்ம சாஸ்திரி “என்னப்பா?” என்று வினோதமாகப் பார்த்தார்... கணபதிக்கு மீண்டும் காசி க்ஷேத்திரத்தில் நடந்தவைகள் காட்சிகளாக மனக்கண்ணில் ஓடின... இது எப்படி?.. இதே கேள்வி மூச்சு விடும் போதும் இழுக்கும் போதும் தோன்றித் தோன்றி மறைந்தது....

கணபதி முனியையே ஆச்சரியத்தில் தலைசுற்ற வைத்த அது என்ன?... ஒன்பதாம் அத்தியாயத்தில்...

‪#‎காவ்ய_கண்ட_கணபதி_முனி_8‬
‪#‎கணபதி_முனி‬

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails