Saturday, February 22, 2014

அன்னதாதா

"கிணத்துல கங்கை வர்றன்னிக்கு இந்த தடவ ஊருக்கு போவலையா?” கார் துடைக்க நின்ற போது கண்டக்டர் கேட்டார். திருவிசநல்லூர்க்காரர். எம்டிசியிலிருந்து சமீபத்தில் ரிட்டயர்ட் ஆனவர். தெருக்கோடியில் குடியிருக்கிறார்.

“இல்லீங்க.. நீங்க போய்ட்டு வந்தீங்களா?”

“ஒரே கூட்டமான கூட்டம். காவேரில முட்டிவரைக்கும்தான் தண்ணி. பக்கத்து வூட்லலெல்லாம் க்யூவில நிக்க முடியாதுன்னு ஆத்துல உளுந்து எந்திரிச்சு வந்துட்டாங்க.. ”

“பாலம் வரைக்கும் நின்னுச்சா?”

“மேக்கால அதையும் தாண்டி...”

”கிணத்துல தண்ணி பொங்கி வழிஞ்சுதா?”

“இல்லீங்க.. கொஞ்சம் கயித்தை வுட்டுதான் இறைச்சாங்க...”

“கார்த்திகை அமாவாசை ஸ்நானத்துக்காக ஊருக்கு போனீங்களா?”

”நா அங்கினயேதானே இருக்கேன்”

“ஓ! எவ்ளோ நாளா? அதான் இங்க ரொம்ப பார்க்கமுடியல்லை. இங்க யாரும் இருக்காங்களா?”

“வீட்லலெல்லாம் இங்கதான் இருக்காங்க.. ஊர்ல கொஞ்சம் பங்கு இருக்கு..”

“எவ்ளோ ஏக்கரு?”

”ஏக்கரெல்லாமில்ல தம்பி. ஒம்பது மா இருக்கு. இந்த வருசம் நட்ருக்கேன்.” சொல்லும் போதே பிரகாசமடைந்தார்.

”நடவு ஜனம் கிடைக்குதா?”

”எங்க... கும்மோணத்துக்குப் போய்டறானுவ...கட்டட வேலைக்குன்னா ஐநூறு வருதாம்.. இல்லீன்னா கவர்மெண்ட்டுல டெய்லி வேலை வாய்ப்புத் திட்டத்துல போய் கையெளுத்துப் போட்டுப்பிட்டு காசு வாங்கிட்டு சினிமாவுக்குப் போயிடறானுங்க...”

”அச்சச்சோ.. நடவு கூலி எவ்ளோ”

”நூத்தி பத்து ரூவா. அதுவும் மெல்லமா பத்து மணிக்கு வருதுங்க.. அஞ்சு மணிக்கு போர் செட்டுல காலைக் களுவ ஆரம்பிச்சுடுதுங்க.. என்னான்னு கொஞ்சம் அதிகாரமாக் கேட்டா மறுநாளிக்கு ஆளு கிடையாது..”

”நான் பங்குக்கு போய்ட்டிருந்தப்ப நடவுன்னா ஆறு மணிக்கு ஆரம்பிச்சுடுவோம். சின்ன ஐயிரு வந்துட்டாருன்ன நடவு ஜனத்துக்கு குஷியாயிடும்....”

”ஏன்?” முகமலர்ந்து கேட்டார் கண்டக்டர்.

“நானு எல்லோருக்கும் ரெண்டு பொட்டலம், ரெண்டு டீ வாங்கிக் கொடுப்பேன்.”

வாய் விட்டுச் சிரித்தார்.

”நாத்து நட்டு... களை பறிச்சு..” எண்ணங்கள் வயலுக்கு என்னை இழுத்தது.

“நாத்து நடறதா? அந்தக் காலமெல்லாம் மலையேறிப்போச்சுது. இப்பெல்லாம் ’கேக் நாத்து’”

“அதென்ன கேக் நாத்து?”

“பாயைப் போட்டு அது மேலே விதெ நெல்லைத் தெளிச்சு வைக்கலைப் போட்டு மூடிடறது. முளை வுட்டு வளர்ந்ததும் அப்படியே கேக் மாதிரி எடுத்து வந்து நட்டுக்கிறது...”

“என்ன போட்ருக்கீங்க?”

“ஆயிரத்து ஒம்பது ரகம்.”

“எவ்ளோ நாள்?”

“நூத்தம்பது நாளு...”

“களையெடுக்க எவ்ளோ கேட்கறாங்க?”

“களையெடுக்க ஆளு போடறதில்லை. களைக்கொல்லி வாங்கி தெளிச்சுவுட்டேன். நல்லாதான் இருக்கு”

“நாங்க விவசாயம் பண்ணும் போது அதெல்லாம் போடமாட்டோம்.... பயப்படுவோம்.. ”

“ஆமா.. பயிரை அளிச்சுப்புடும்னு மாட்டோம்.. இப்பெல்லாம் அட்வான்ஸுடு ஆயிப்போச்சு தம்பி...”

“இப்படி நீங்க களையெடுக்கெல்லாம் ஆளை விடலைன்னா அப்புறம் அந்த ஜனமெல்லாம் சாப்பாட்டுக்கு எங்க போவும்?”

“ஆயிரத்தைனூறு ரூவா ஆவும். பதினைஞ்சு ஆளை இறக்கணும். நானென்ன பண்ணையா வச்சுருக்கேன்.”

எனக்கும் நியாயமாகத்தான் பட்டது. அடுத்துச் சொன்னதுதான் பெரிய அதிர்ச்சி.

“ரோட்டோரத்து பங்கு இருக்கறவனெல்லாம் ப்ளாட் போட்டுட்டான். ஃபாரின் போன ஐயருங்கெல்லாம் ஆயிரத்துக்கு வித்துட்டுப் போனவங்க அதே இடத்தை லட்சக்கணக்குல குடுத்து வாங்கிக்கிட்டு திரும்ப வர்றாங்க...”

”ரோட்டோர பங்கெல்லாம் சாகுபடி பண்றதில்லையா?”

”போய்ப் பாருங்களேன்.. “

“அறுப்புக்கெல்லாம் ஆளுங்க கிடைக்குதா?”

“அறுப்புக்கெல்லாம் இப்ப ஆளே கிடையாது. எல்லாம் மெசினுதான். வேலிக்கணக்கா வச்சுருக்க பண்ணையாருங்களே ஒரே நாள்ல அறுப்பை முடிச்சுடுட்டுக் களத்துக்கு கொண்டு போய்டறாங்க தம்பி..”

“அப்படியா? நெல்லு புடிக்க வண்டி கட்டிக்கிட்டுக் குடோனுக்குப் போறீங்களா?

”அதெல்லாமில்லை. சிறு குறுன்னு எந்த விவசாயியிருந்தாலும் நம்ம களத்துக்கு வந்து நெல்லு புடிக்கிறாங்க..”

“என்ன ரேட்டுக்கு போவுது?”

”நம்ம பங்குல இந்த வருசம் போட்டது சன்ன ரகமில்லை. ஆயிரத்து ஒம்பது ரகம். மூட்டை எளுநூத்திச் சொச்சத்துக்கு எடுத்துக்கிறாங்க..”

”எவ்ளோ கிலோ?”

“அறுவது கிலோ... ஃபர்ஸ்ட் குவாலிட்டியெல்லாம் ஆயிரத்துச் சொச்சத்துக்குப் போவுது..”.

என் அடுத்த ஐந்து நொடி மௌனத்தில் எங்கள் பங்கில் நடந்த நாத்து, நடவு, களை பறிப்பு, அறுப்பு என்று டிவியெஸ் ஃபிஃப்ட்டியில் பறந்து சென்று மூன்று போகம் விவசாயம் பார்த்த நினைப்பு தலைக்கு மேலே பிடித்த முறத்திலிருந்து நெல் தூற்றுவதுபோலச் சுழன்றடித்தது. என் மௌனத்தை இந்த உரையாடலின் முற்றுப்புள்ளியாக எடுத்துக்கொண்டு...

”சரி தம்பி... பொறவு பார்ப்போம்... காரு துடைச்சுட்டு நீங்க ஆஃபீஸுக்குக் கிளம்பணும்...” கிளம்பிய அவருக்கு லேசாக கால் சறுக்கித் தடுமாறினார்.

“பார்த்து...” என்று பதறினேன்.

“ம்... ரொம்ப வருசத்துக்கப்புறம் விவசாயம் பண்ணப் போனேன். வரப்புல கால் வச்சதும் வளுக்கிட்டுது. ஓடி வந்து புடிச்ச ரெண்டு ஆளுங்க கேட்டாங்க.. ‘பட்டணத்துக்குப் போனப்பொறவு நடக்க மறந்துப் போச்சா”ன்னு. நாஞ்சொன்னேன் ’எப்படி நடந்துக்கணும்னே நொம்ப பேருக்க அங்கின மறந்துபோச்சு’ன்னு.” என்று சொல்லிச் சிரித்துவிட்டு பால் வாங்கப் போனார்.

யானை கட்டி போரடித்த தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்று புகழப்பட்ட தஞ்சை ஜில்லாவிலிருந்து வந்து ஐடியில் கால் வைத்துவிட்ட எனக்குப் பிறகு எம் பொண்ணுங்களுக்கெல்லாம் இதெல்லாம் என்னன்னு தெரியாமேப் போய்டும்... “நான் விவசாயம் பண்ணப் போறேன்”னு விஜய் டிவியில் ஒருத்தர் போல்டா சொன்னா மாதிரி எனக்குத் தெகிரியமாச் சொல்ல முடியலை.

விவசாயம் பெரிய வேலைதான். மகோன்னதமான வேலை. அன்னதானம் செய்பவர் அன்னதாதா(அன்னdhadha) என்று அழைக்கப்படுவார். ஐடி, ரியல் எஸ்டேட் என்று திடீர்ப் பணக்காரனாக ஆயிரம் வாய்ப்புகள் தேடிவந்தாலும் இன்னமும் ஆடிப் பட்டம் தேடி விதைத்துக்கொண்டிருக்கும் விவசாயிகள் அன்னதாதாக்கள். அனைவருக்கும் என் அனந்த கோடி நமஸ்காரங்கள்.

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails