Saturday, February 22, 2014

சுமை

சுமை
=====
குதிரைவண்டியா அது? கண்ணைச் சற்று இடுக்கிக்கொண்டு பார்த்தேன்... ஆமாம்.. அப்படித்தான் தெரிகிறது.. பக்கத்திலிருந்த ஜிப்பா சொன்னார் “இது குதிரையில்ல...கோவேறு கழுதை...”. சிரித்தவரின் பல் கழுதையோடது மாதிரியே இருந்தது. ஸ்டேஷனிலிருந்து வருவோரை சகாய கூலியில் ஏற்றிக்கொண்டு முதுகில் சாட்டையால் அடிபட ஓடுவது மாதிரி வேகமாக நடக்கும். இந்த ராவேளையில் லொங்குலொங்கென்று ரெண்டு சிங்கிள் அடிக்கும். ஓட்டுபவனுக்கு ஒரு கட்டிங்கிற்கு ஆச்சு.

ப்ருஷ்ட பாகத்தில் வைக்கோல் குறுகுறுக்க ஏறி உட்கார்ந்தாச்சு. காலையிலிருந்து தீனியாகக் கொள்ளு வைத்தானோ இல்லையோ..சாட்டையால் உரிமையோடு விர்ர்விர்ரென்று விசிறி விசிறி அடிக்கிறான். சிலது முதுகிலும் சிலது கட்டையிலும் படுகிறது. படீர் படீர்னு அடிக்கையில் என் நெஞ்சில் சுளீர் சுளீரென்று விழுகிறது. தெனம் தெனம் நமக்கு நாக்கால் விழும் அடிகள் போலவே இருக்கிறது. இழுக்கும் குதிரையோ கழுதையோ என்னைப் போலவே ஜென்மம் எடுத்திருப்பதாகத் தோன்றியது. அன்பின் வழியது உயிர்நிலை. சொன்னது யாருப்பா? வழியெங்கும் பள்ளமும் மேடுமாக தடுமாறியது. கனைத்தது. கொஞ்சம் எக்கிப் பார்த்ததில் அது அழுதது போலக்கூட இருந்தது. கழுதையோ குதிரையோ சாட்டையடி வலிக்காதா?

சொற்ப தூரம் கடந்ததும் குதிரைக்கு கால் லேசாக நொடித்தது. சுளீர். மின்னல் போலத் தாக்கினான். பதறினேன். இறங்கிவிடுவோமா என்றெண்ணும் போது அதற்காக அதை அடித்துத் துன்புறுத்துவானோ என்ற பயம் எழும்பாமல் உட்காரவைத்தது. மனசு கனத்தது. சித்தர்கள் போல உடம்பை இக்கணமே இலவம் பஞ்சாகிக்கொள்ள முடியாதா என்று ஏக்கம் ஒருபுறம். காயமே இது பொய்யடா... காற்றடைத்த பையடா என்றார்களே.. அப்படி காற்று மட்டும் அடைத்திருக்கும் பையாகாதா என்று மனசு கிடந்து அடித்துக்கொண்டது. சீக்கிரம் போனால்தானே பொங்கிக் கொட்ட முடியும் என்ற அவசரம் ஒருபுறம்.

எவ்வளவோ நிகழ்வுகளில் இப்படித்தானே இருதலைக் கொள்ளி எறும்பாக மாட்டிக்கொண்டுவிடுகிறோம். அதுவும் கழுத்தில் கிடக்கும் கயிற்றால் கட்டுண்டு கிடக்கிறது, எனக்கும் அப்படியே! இன்னும் ரெண்டு தெரு கடந்தால் வந்துவிடுவோம். நம்முடைய எழுபது கிலோ பாரம் இறங்கினால் அதன் சுமையில் பேர் பாதி குறைந்துவிடும். அதற்கப்புறம் அடிக்காமல் விடுவானா அந்த வண்டிக்காரன்?

வாசலில் பூட்டு தொங்கியது. ஆளை எங்கே காணோம்? தெருவின் இரண்டு பக்கமும் கண்களால் அலசினேன். கதவிடுக்கில் லெட்டர் எதுவும் தொங்குகிறதா என்று பார்த்தேன். ஊஹும். இல்லை. இன்னும் கொஞ்சம் கழுத்தை இறக்கிப் பார்த்ததில் ஜன்னலோரத்தில் கைலி அவிழ கிடந்தான். ச்சே.

வெறுத்துப்போய் வாசல் படியிலேயே உட்கார்ந்தேன். ஓரமாய்க் கிடந்தவன் வாயிலிருந்து கோழை வடிந்தது. நாயொன்று மோப்பம் பிடித்து விலகி ஓடியது. தெருக்கோடியில் பார்த்தேன். வண்டியை விட்டு கயிற்றை அவிழ்த்து கழற்றிவிடப்பட்ட குதிரையோ கழுதையோ லாம்ப் போஸ்ட்டில் கட்டப்பட்டிருந்தது. அதன் சுமை இறங்கியதில் எனக்கு மகிழ்ச்சிதான். யார் சுமையை யார் சுமப்பார்?

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails