Saturday, February 22, 2014

ஜீவனாம்சம்

அடி முதுகில் மூலாதாரச் சக்கரத்தில் குண்டலினி சர்ப்பமாகக் கிளம்பி துரியமெனப்படும் கபாலத்திற்கு விறுவிறுவென்று பயணப்படும் என்று குண்டலினி சக்தியேற்றம் பற்றிப் படித்திருக்கிறேன். சித்துவிளையாட்டுகள் புரிந்த சித்தபுருஷர்களுக்கு இது இலகுவாக சித்திக்குமாம். இன்று அதிகாலையில் யோகாவின் போது எனக்கு குண்டலினி பீறிட்டுக் கிளம்புவது போல ஆச்சர்யமாக இருந்தது. நாமொன்றும் சித்த புருஷனில்லையே என்று நினைத்துக்கொண்டிருக்கும் சிறிதுநேரத்திற்கெல்லாம் அடி முதுகில் வலி அதிகமாகி ”ஆஃபீஸுக்கு லீவு போடுடா ஆர்வியெஸ்” என்று அதட்டியது. அதன் அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டுக் கட்டையைச் சாய்த்து உட்கார்ந்துவிட்டேன். லீவ் கொடுத்த பாஸ் வாழ்க!

மொட்டை மரம் ஒன்றை அட்டையில் தாங்கிய நாவலொன்று ரொம்ப நாளாகப் படி படியென்று புஸ்தக அலமாரியிலிருந்து தீனமாய்க் கூப்பிட்டுக்கொண்டிருந்தது. வலித்த முதுக்குச் சப்போர்ட்டாகத் தலகாணியைக் கொடுத்துவிட்டு இன்று முடித்துவிடுவது என்று தீர்மானமாகப் படிக்க ஆரம்பித்தேன்.

சாவித்ரி இளம் வயதிலேயே கணவனை இழந்த கைம்பெண். அண்ணா மன்னியின் ஆதரவில் அவர்களுடன் ஜீவனம் நடத்துகிறாள். இதுதான் ஆரம்பம். அண்ணா வெங்கடேஸ்வரன் சாவித்ரிக்காக கோர்ட்டில் ஏதோ கேசாடுகிறான் என்று முதல் அத்தியாயம் தொடங்குகிறது.

அப்பா தாசில்தார். சாவித்ரியை ஒரு கிராம மிராசுதார் வீட்டில் மணம் முடித்துக் கொடுக்கிறார். பால்ய விவாகம் முடிந்து ”குடும்பம் பண்ண வயசாச்சு...” என்று ஆனப்புறம் பிறந்த வீட்டிலிருப்பவளை புக்ககத்திற்கு குடித்தனம் செய்ய நாள் பார்த்து அழைத்துப்போகிறார்கள். ”குழந்தை..,குழந்தை” என்று அந்த அப்பா, அந்த அம்மா என்று எல்லோரும் புக்ககத்தில் சாவித்ரியைத் தாங்கோ தாங்கென்று தாங்குகிறார்கள். ஒருநாள் இரவு முதன் முதலாக சாவித்ரி வைத்த ரசத்தை வண்டல் மட்டும் தங்கும்படி வைத்துவிட்டு அனைவரும் உறிஞ்சி மகிழ்கிறார்கள்.

கொழுந்தன் கணபதி ரொம்பவும் சின்னப் பையன். குறைந்த காலத்திலேயே “மன்னி..மன்னி..” என்று காலைக் கட்டிக்கொண்டு சாவித்ரியிடம் ஒட்டிக்கொள்கிறான். “இனிமே எல்லாமே சாவித்ரிதான்” என்று பண்ணையாள் மருதனிடம் மொதற்கொண்டு சொல்லி அவளிடம் சர்வ பொறுப்புகளையும் கட்டிவிட்டு கையொழிந்து புக்ககத்து அம்மா நிம்மதியாக அமர்கிறாள். ஆறு மாதமாக பொறந்தாத்துக்கு போகவில்லையே என்று அனுப்பிவைக்கிறார்கள். வந்த சாவித்ரிக்கு தந்தி வந்து புக்ககத்துக்கு ஓடுகிறாள். கணவன் க்ருஷ்ணமூர்த்தி வரப்பில் நடந்துபோகையில் கால் தடுக்கி கிணற்றில் விழுந்து இறந்துவிடுகிறான். ஆறு மாத காலத்திற்குள் கணவனை இழந்த சாவித்ரி புக்காத்திலிருந்து பொறந்தாத்துக்கு வந்துவிடுகிறாள்.

அப்பா இருந்த வரையில் சாவித்ரியின் புகுந்த வீட்டிலிருந்து ஜீவனாம்சம் வாங்கக்கூடாதென்று தீவிர கொள்கையுடன் இருந்தார். அண்ணா சாவித்ரியின் புக்காத்தில் ஜீவனாம்சம் கேட்ட தொகை கிடைக்கவில்லை என்று கோர்ட்டில் கேஸ் போடுகிறான். கேஸின் தீர்ப்பு வரும் வரையில் கதையை ஜவ்வாக இழுக்காமல் அந்த அப்பா செத்துப்போய் கடிதாசு வந்தவுடன் தீண்டலான சாவித்ரி துக்கம் கேட்க புக்ககத்திற்கு போவதோடு வாசகர்களிடம் ”என்னாகுமோ?” என்ற ஒரு எதிர்பார்ப்பைக் கிளப்பி முடித்துவிடுகிறார் கதாசிரியர்.

சி.சு.செல்லப்பாவின் ஜீவனாம்சம் என்கிற நாவல். புஸ்தகம் முழுவதும் சாவித்ரியின் எண்ண அலைகள் உரக்கப் பேசுவதுபோலவே கதை முழுதுவம் ஓடுகிறது. சீரியஸான கதையை வசனமாக எழுதுவதை விட வர்ணனைப் போல எழுதியிருக்கிறார். அண்ணா, மன்னி, அந்த அப்பா, அந்த அம்மா, க்ருஷ்ணமூர்த்தி, கணபதி என்று சொற்ப கேரக்டெர்கள்தான் கதையை நகர்த்துகிறது. மாமனார் மாமியார் என்கிற பதங்களை பயன்படுத்தாமல் அந்த அம்மா, அந்த அப்பா என்று எழுதியிருப்பது புதுமையாகவும் ஆத்மார்த்தமான நாட்டுப்பொண் இன்லாஸ் உறவையும் அற்புதமாக படம்பிடித்திருந்தது எனக்குப் பிடித்திருந்தது.

படித்து முடித்த பிறகு முதுகு வலி சொஸ்தமாகிவிட்டது. ஆனால், சாவித்ரியை நினைத்து மனசு வலித்தது

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails