Saturday, February 22, 2014

கும்பகோண குப்பன் கவிதை

நேற்று கொஞ்ச நாழி நகுலனின் கவிதைகள் படித்துக்கொண்டிருந்தேன். தமிழ் ரசிகப்பெருமக்களுக்கு வசன கவிதைகளை அந்த முண்டாசுக்காரனே புழங்கவிட்டுப் போனதுதான்.

ரொம்பவும் அக்மார்க் இலக்கியத்தனமான கவிதைகள் மூளைக்குள் சென்று அந்தந்த கவிதா வார்த்தைகளின் உவமான உவமேயங்களைத் தேடிக் குடைந்து கவி இன்பத்தைக் கிளறிவிடுவதற்குள் வாய் பிளந்து கண்ணை அசத்திக்கொண்டு வந்துவிடுகிறது. ”துண்டுச் சீட்டில்” நான் பகிர்ந்த சில தஞ்சை கமருதீனின் கவிதைகள் எளிமையான சொற் ப்ரயோகங்களில் வாசகனின் சிந்தனையைத் தூண்டி சீண்டி விளையாடுபவை. அதனால் இங்கே அமோக வரவேற்பைப் பெற்றது. நகுலனின் “ராமச்சந்திரன்” என்ற கவிதையைக் கீழே தருகிறேன்.

ராமச்சந்திரன்
==========
ராமச்சந்திரனா
என்று கேட்டேன்
ராமச்சந்திரன்
என்றார்
எந்த ராமச்சந்திரன்
என்று நான் கேட்கவுமில்லை
அவர் சொல்லவுமில்லை
.

இத்தோடு முடிகிறது. நகுலனின் கவிதையில் கை வைக்க யாருக்கும் உரிமையில்லை. இருந்தாலும் அந்த அதிகப்பிரசங்கித்தனமான காரியத்தில் ஈடுபட கை துடித்தது. இந்த வார்த்தையைக் கடைசி வரியாகச் சேர்த்தேன். மேற்கோள் குறிகளுக்கு இடையில் “ப்ரபோ!”. ஏதோ ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி வந்து வாசற்கதவைத் தட்டிவிட்டுப் போன திருப்தி எனக்கு கிடைத்தது. ஃபுல்ஸ்டாப்போடு நகுலன் முடித்ததில் கவி ஃபார்மட் ரசிகர்களுக்கு ஆயிரமாயிரம் அர்த்தங்கள் தொனிக்கலாம். கவிதை தெரியாதவனின் கடைசி வரி என்று அந்த ப்ரபோவைப் பாவித்துக்கொள்ளுங்கள். அடிக்க வராதீர்கள்!

இப்படியெல்லாம் சர்ச்சையில் ஈடுபடாமல் டவுசர் போட்டக் காலத்திலிருந்து ஊரில் என்னொத்த போக்கிரிப் பசங்கள் பாடி வந்த கவிதையை கீழே தருகிறேன். முதலடி எடுத்த எழுத்தில் கடைசி வரி வரை அதே எழுத்தில் எழுதினால்தான் அது சிறந்த கவிதை என்று கவித்துவ தண்டால் எடுத்திருக்கிறேன்.

கும்பகோணத்தில்
குறுக்குத் தெருவில்
குடியிருந்த
குப்பன்
குரங்கைக்
_ண்டியில்
குச்சியால்
குத்த
குரங்கு
குபீரென்று
குளத்தில்
குதித்து
கும்பியைக்
குளப்பியது!

#கவிதா_விலாசம்!

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails