Monday, February 1, 2016

கணபதி முனி - பாகம் 37: கன்னிப் பெண்ணின் திருமண வயது

பிருந்தாவனில் பண்டிதர்கள் மாநாடு தர்பங்கா மஹாராஜா தலைமையில் நடைபெற்றுக்கொண்டிருந்தது. விசாலாக்ஷிக்கு பயம். மாநாட்டை எட்டிப் பார்த்தால் நாயனா புனித யாத்திரையை மறந்துவிடுவார். என்ன செய்வது? என்று அவர் யோசித்துக்கொண்டிருக்கும் வேளையில் நாயனா...

“விசாலாக்ஷி... தர்பங்கா மஹாராஜா இருக்கும் எவ்விடத்திலும் பண்டிட் சிவகுமாரும் இருப்பார். அவர் எனது ஆப்தர். எப்படியும் அவரைச் சந்திக்க வேண்டும்.. ” என்று கண்களில் ஆவல் பொங்க தெரிவித்தார். 

”நீ சற்று நேரம் இங்கேயே இரு....” என்று மாநாடு நடக்குமிடத்திற்கு விடுவிடுவென்று தனியாகச் சென்றார். வாசலில் வாழை மரமும் மாவிலைத் தோரணம் கட்டி திருவிழாக் கோலம் பூண்டிருந்த மாநாட்டு மண்டபத்தில் நல்ல கூட்டம். வித்வத்திலும் செல்வத்திலும் நிரம்பியவர்கள் நடமாட்டம் அதிகமிருந்தது. கதவோர தூணில் சாய்ந்துகொண்டு வாசல் காவலில் இருப்பவன் கணபதி உள்ளே நுழையும் போது கையை நீட்டி மறித்தான். ”பண்டிதர் சிவகுமார் உள்ளே இருக்கிறாரா?” என்று உள்ளே எட்டிப் பார்த்துக்கொண்டே கேட்ட நாயனாவை அவன் கண்டுகொள்ளவேயில்லை. ”சிவகுமார் இருக்கிறாரா?” என்று மீண்டும் அவனைக் கேட்டார். 

“நீர் பண்டிதரா?” என்று வாசலை மறைத்துக்கொண்டு எகத்தாளமாகக் கேட்டான் வாயிற்காப்போன். கணபதிக்கு கோபம் வந்தது. பொறுத்துப் பார்த்துவிட்டு “அப்பனே! நீ சொல்.. யார் பண்டிதர்?” என்று கேட்டார்.

“தலையில் டர்பன் கட்டியிருப்பவர்களே பண்டிதர்கள்.. உங்களிடம் அது இல்லையே” என்று கிண்டலாகச் சிரித்தான். பதிலுக்கு அவர் பேச மீண்டும் அவன் குதர்க்கமாகப் பேச வாக்குவாதம் வலுத்தது. நாயனாவும் வாயிற்காப்போனும் காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டவுடன் வேடிக்கைப் பார்க்க ஒரு கூட்டம் கூடியது. வாசலுக்கு நேரே மேடையில் மஹாராஜாவுக்குப் பக்கத்து இருக்கையில் பண்டிதர் சிவகுமார் அமர்ந்திருந்தார். 

வாசலில் நடக்கும் இந்த ரகளையால் அவர் கவனம் அங்கே திரும்பியது. அங்கே காவ்யகண்டர் சூடாகப் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டார். மேடையிலிருந்து இறங்கி ஓட்டமும் நடையுமாக நாயனாவைப் பார்க்க விரைந்தார். வாயிற்காப்போனை கடிந்து கொண்டு நாயனா பக்கத்தில் சென்று கட்டியணைத்துக்கொண்டார். “சௌக்கியமா?” என்று குசலம் விசாரித்து அவரை உள்ளே அழைத்துச்சென்றார். மேடையில் ஏற்றி மஹாராஜாவுக்கும் மற்றும் அங்கிருந்த கனவான்களுக்கும் “இவரே நவத்வீப நாயகன்... காவ்ய கண்ட பட்டம் பெற்ற கணபதி முனி” என்று பிரமாதமாக அறிமுகம் செய்தார்.

மாநாட்டீன் அன்றைய தலைப்பு “கன்னிப்பெண்களின் திருமண வயது என்ன?”. நமது தேசத்தின் பல மாநிலங்கள் பல திக்குகளிலிருந்து வந்த மஹா பண்டிதர்கள் அவர்களது வாதங்களை முன் வைத்துப் பேசினார்கள். மண்டபத்தில் பார்க்குமிடமெல்லாம் டர்பன் கட்டிய பண்டிதத் தலைகளாக இருந்ததால் ஒவ்வொருவருக்குமான கால அவகாசம் மூன்றே நிமிடங்கள் ஒதுக்கப்பட்டது. விவாதத்தில் தீப்பொறி பறந்தது. இறுதியில் தர்பங்கா மஹாராஜா கணபதி முனியின் அரும்பெருமைகளை எடுத்துரைத்து அங்கு குழுமியிருந்த பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தினார். 

“இவர் காவ்ய கண்ட கணபதி முனி. சொல்லாற்றலும் கவித்துவமும் நிரம்பியவர். தவ சிரேஷ்டர். இப்போது இவர் இதற்கான முடிவை அறிவிப்பார்” என்றதும் கூட்டத்திலிருந்து கரகோஷம் கிளம்பியது. 

”ஹிந்து சமுதாயத்தில் திருமணம் என்பது இயற்கையிலேயே சம்பிரதாயமான சடங்கு. ஆனால் இஸ்லாமியர்களின் படையெடுப்புகளினால் இந்தச் சடங்கில் மாசு படிந்துள்ளது. கறைப்பட்டுள்ளது. எட்டு வயது நிரம்பிய சிறுமிக்கு திருமணம் செய்யவேண்டும் என்று நமது முன்னோர்களின் சமுதாய சட்டங்களில் எங்குமே இல்லை. நாம் மீண்டும் இதை புராதன முறைக்கே மாற்ற வேண்டும். ஒரு பெண் புஷ்பவதியான பின்னர் அதிலிருந்து மூன்று வருடங்கள் கழித்து திருமணம் நடத்துவது ஹேதுவாக இருக்கும். அதுவே உசிதம்.”

ஏனைய பண்டிதர்கள் போல மூன்று நிமிடங்களே பேசி தீர்ப்பளித்தார். அங்கு குழுமியிருந்த பண்டிதர்கள் அனைவரும் அதை ஒருமனதாக ஆமோதித்தனர். இதுவே இனி சட்டமாக இருக்கும் என்றும் அங்கீகரித்தனர்.

நிகழ்ச்சி நிரலில் அடுத்தது இலக்கிய விவாதம். மஹா மஹோ உபாத்யாய ஹரிப்ரஸாத சாஸ்திரி தலைமையேற்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அனைவரும் காவ்யகண்டரை தலைமை நாற்காலியை அலங்கரிக்க கை கூப்பினார்கள். பண்டிதர்கள் காவ்யகண்டரின் இலக்கிய புலமையை நுகர விரும்பினார்கள். அன்று அவர் ஆற்றிய சொற்பொழிவு பண்டிதர்களின் நீங்கா நினைவுகளில் ஒன்றானது. 

விழா நிறைவுற்ற போது கணபதியி இறுதியுரை ஆற்றினார். நவத்வீப பரீஷத்தற்குப் பிறகு தனக்கு ஏற்பட்ட பல அனுபவங்களை சுவையாகத் தொகுத்தார். தனது பழைய நண்பனின் நினைவுகூறலை இரசித்துக் கேட்டார் பண்டிட். சிவகுமார். 

விசாலாக்ஷியுடன் 1916ம் ஆண்டு மார்ச் மாதம் நாயனா மந்தேசா திரும்பினார். மந்தேசா ராஜா இன்னும் கொஞ்ச நாள் அங்கே தங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். கணபதி மட்டும் மந்தேசாவில் இன்னும் கொஞ்ச நாள் தங்க தீர்மானித்தார்.

*

மந்தேசாவில் தங்கியிருந்த கணபதி முனி தீவிரத் தபஸில் இருந்தார். வேத ஆராய்ச்சியில் ஈடுபட்டார். நாட்கள் வேகமாக நகர்ந்தது. திருமணம் பற்றிய கணபதியின் கருத்துக்கு எதிராக அவரது உறவினர்கள் எட்டு வயது மகளான வஜ்ரேஸ்வரிக்கு மணம் முடிக்க முடிவு செய்தார்கள். கொல்லாடி கிராமம் கண்டி சிரஞ்சீவியின் புத்திரன் சோமயாஜுலுவிற்கும் வஜ்ரேஸ்வரிக்கும் பொருத்தம் கச்சிதம் என்று விசாலாக்ஷியும் ஒத்துக்கொண்டார். மந்தேசாவில் முகாமிட்டிருக்கும் கணபதிக்கு இந்தச் செய்தி தெரிவிக்கப்பட்டது. அவர் இதை எதிர்க்கும் மனோ நிலையில் அப்போது இல்லை.

பெற்றோரின் தலையாய கடமையான பெண்ணின் திருமண வைபவத்தை சீக்கிரம் முடித்துவிட்டால் தன்னுடைய தவத்திற்கு இடையூறு இல்லாமல் இருக்கும் என்று எண்ணிய விசாலாக்ஷியின் ஏற்பாடாக இருந்ததால் கணபதி எதுவும் வாயைத் திறக்கவில்லை. 1916ம் வருடம் மே மாதம் அவர்களது திருமணம் நடந்தது. பின்னர் பெண்ணும் மாப்பிள்ளையும் பகவான் ஸ்ரீ ரமணரின் ஆசீர்வாதத்துக்காக திருவண்ணாமலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

திருவண்ணாமலை செல்லும் வழியில் நெல்லூரில் நாயனா இறங்கிக்கொண்டார். அங்கே பி.என். சர்மாவின் தலைமையில் ஆந்திரர்களுக்கான மாநாடு நடந்துகொண்டிருந்தது. அம்மாநாட்டின் ஒரு அங்கமாக டி.ஆர். ராமச்சந்திரைய்யா பிரதான இருக்கையில் அமர்ந்து நெறிப்படுத்த சனாதன தர்மம் பற்றியும் பண்டிதர்களுக்கிடையே ஒரு மகா கலந்துரையாடல் நடைபெற்றது. 

சனாதன தர்மம் பற்றியும் சம்பிரதாயங்கள் பற்றியும் நாயானா அக்கூட்டத்தில் பேசினார்.
“இடத்துக்கு இடம் காலத்துக்கு காலம் சம்பிரதாயங்கள் மாறுகின்றன. இதனை மறுத்து கோபமடைதல் கூடாது. ஆணி வேரான அமரத்துவம் வாய்ந்த வேத தர்மம் பாதுகாக்கப்படுவது போதுமானது. இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் “வேத சாஸ்திர சம்பிரதாயம்” என்று தலைப்பிடப்பட்டிருப்பது தவறாகப்படுகிறது. எப்பொழுதும் மாறும் தன்மையுடைய சம்பிரதாயத்தை ஸ்திரமான வேத தர்மத்தோடு சேர்ப்பது நியாயமாகாது” என்றும் இன்னும் நிறைய விஷயங்கள் அதைப்பற்றியும் விஸ்தாரமாகப் பேசினார்.

தீர்மானங்களை தொகுத்து ”வேத சாஸ்திர சம்பிரதாயம்” என்று பெயரிட்ட அந்தப் பண்டிதர் நாயனாவின் ஆலோசனைகளை ஏற்க மறுத்தார். தலைமை தாங்கியவர் நாயனாவின் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை ஏற்றுக்கொள்ளச் சொன்னார். பழமைவாதிகளான சில பண்டிதர்கள் நாயனாவின் புரட்சிகரக் கருத்துகளை ஏற்றுக்கொள்ளவில்லை. சாதூர்யமில்லாததால் அவர்களால் நாயனாவின் முன் வந்து விவாதம் செய்யவும் துணிவில்லை. ஆகையால் நாயனா சனாதன தர்மத்தை எதிர்க்கும் கலகக்காரர் என்று பண்டிதர்களிடையே வதந்தி பரப்பினார்கள். ஆனால் நாயனா இதையெல்லாம் கண்டு கொள்ளவில்லை.

நாயனா மந்தேசாவுக்குத் திரும்பி வேத ஆராய்ச்சியையும் ஸ்ரேயஸான தவத்தையும் தொடர்ந்தார்.

மூன்று வருடங்களாக தனது குருவைச் சந்திக்கவேண்டும் என்று தவித்துக்கொண்டிருந்த தேவவிரதன் அக்டோபர் 1916ம் ஆண்டு மந்தேசா வந்தார். நாயனாவைக் கண்டவுடன் அமைதியும் அகவொளியும் கிடைக்கும் என்று மகிழ்ந்தார். மந்தேசா ராஜாவுக்கு சந்தோஷம். தேவவிரதன் மீது அவருக்கு அளவில்லா பாசமும் மரியாதையும். தேவவிரதனும் நாயனாவும் சேர்ந்துகொண்டு பரசுராமர் விஜயம் செய்த இடத்திற்கு சென்றார்கள். மந்தேசாவின் அருகில் இருக்கும் மகேந்திரகிரிதான் பரசுராமர் தவமியற்றிய இடம். 

மகேந்திரகிரியில் அருள்பாலிக்கும் தெய்வத்தின் பெயரும் கோகர்ணேஸ்வரர்தான். கோகர்ணத்தில் கணேசர் பிரதிஷ்டை செய்தது போல இங்கு பரசுராமர் பிரதிஷ்டை செய்து பூஜை செய்தார். 

நாற்புறமும் அடர்ந்த காட்டுக்கு மத்தியில் இருந்தது மகேந்திரகிரி. ஒவ்வொரு வருட சிவராத்திரியின் போது ஊர்மக்கள் கால்நடையாக மலையேறி சிவ தரிசனம் செய்வார்கள். மற்ற நாட்களில் சிவன் சிவனேன்னு தனியாக இருப்பார். காட்டு விலங்குகள் நடமாடும் என்பதால் கூட்டமாக இல்லாமல் தனியாக செல்ல அச்சப்படுவார்கள். பாறைகளுக்கும் நெடிதுயர்ந்த மரங்களுக்கும் நடுவில் ஓடும் ஒரு ஒத்தையடிப் பாதையை சிவராத்திரிக்கு முன்னதாக மந்தேசா மஹாராஜா செப்பனிடும் கைங்கர்யம் செய்வார். மேலும் ஆயுதமேந்திய சில வீரர்களை காவலுக்கும் அமர்த்தி சேவார்த்திகளுக்குத் திருப்பணி செய்வார்.

அந்த மகேந்திர மலையில்....

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails