Monday, February 1, 2016

வயதான பையன்

நேற்று வேணியின் காதலனோடு, ஏர்போர்ட் காம்பௌண்ட்டை ஒட்டி கங்கை போல ஓடிக்கொண்டிருந்த மழை நீரை லாவகமாகத் தாண்டி, அப்பாவுக்காக ஆர்.ஏ.புரம் ஏவிஎஸ் க்ளினிக் சென்றிருந்தேன். ஏவிஎஸ் புகழ்பெற்ற ந்யூரோ. சென்னையில் விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய ந்யூரோ வித்தகர்களில் ஒருவர். சாய் பாபா டிவோட்டி. பிரதி வியாழக்கிழமை மருந்து மாத்திரைகளோடு பொருளாதாரத்தில் தீனமானவர்களுக்கு இலவச மருத்துவம் பார்ப்பவர். “RVS... எப்பவுமே Pity, Beauty, Memory are short lived" என்று ஆசானாக வாழ்வின் சூட்சுமங்கள் பேசுவார்.

முதுகில் ஸ்டீல் ராடு போட்டு நான்கு நான்காகக் கட்டிப்போட்டிருந்த இருபது ஸ்டீல் சேர்களில் பெரும்பாலும் காலியாகக் கிடக்க அப்பாவோடு உள்ளே நுழைந்தேன். ஏவிஎஸ் பர்ஃபெக்‌ஷனிஸ்ட். ஏனோதானோன்னு பார்க்கமாட்டார். சப்ஜாடாக விஜாரிப்பார். முதல் தரம் உள்ளே நுழைபவர்களுக்கு அதிக நேரம் எடுத்துக்கொண்டு கேஸை அலசி ஆராய்வார். சமுத்திரத்தை விட சின்னதாக பொறுமை இருப்பவர்களுக்கு சௌகரியமான இடம். க்ளினிக்கில் கண்படும் இடங்களிலெல்லாம் ஸ்ரீநிவாசப்பெருமாள், நடராஜர், பாபா, மஹா பெரியவா... தங்க ஃப்ரேமுக்குள் தரிசனம் தருவார்கள்.

இருக்கையில் சாய்ந்து கொண்டு வாத்தியாரின் வேணியின் காதலனைப் புரட்டிக்கொண்டிருந்தேன். “வாராந்திரி ராணி”யில் தொடராக வந்தது என்றும் இக்கதையில் வரும் வேணியை எங்கும் பார்த்திருக்கலாம் என்ற முன்னுரையில் பெப் கொடுத்து கதையை மின்னலென நகர்த்தியிருந்தார். பக்கங்கள் பறந்துகொண்டிருக்க என் கால் முட்டியைப் பதம் பார்த்து யாரோ பக்கவாட்டில் நகர நிமிர்ந்தேன். இப்போது எங்கும் தலை தெரிய எல்லா சேர்களும் நிறைந்திருந்தன.

எதிரில் ஒரு பையன்?..... இல்லை..... ஆள்?... இல்லையில்லை... சரியாக கணிக்கமுடியாதபடி வித்தியாசமான குள்ள உருவம். அமைதியாக கையில் மொபைலை வைத்து விளையாடிக்கொண்டிருந்தது. தலை சொட்டை. நெற்றியில் விபூதிக் கீற்று. மேட்ச்சிங்கில் சிரத்தை காட்டாத பாண்ட் ஷர்ட். கேண்டி க்ரஷ் விளையாடுவதற்கு என்ன வயது? எட்டிலிருந்து எண்பது வரை ஆட்காட்டி விரல் அரை இன்ச் தேய விளையாடுகிறார்கள். மேய்ந்த கண்ணை இழுத்து புஸ்தகத்தில் விட்டு மீண்டும் சுஜாதாவின் வரிகளுக்குள் மூழ்கினேன். வேணி குடிகார அப்பனுடன் தனது குட்டித் தங்கையான குட்டியின் படிப்புக்காக படாதபாடு படுகிறாள். ”இஸ்கோலுக்கு போயி நல்லா படிக்கணும்டி... நா என்னா வேணா ஒனக்காவ செய்வேண்டி...” என்று உளம் உருகினாள்.

மீண்டும் தலையைத் தூக்கும் போது அந்த குள்ள உருவம் இன்னமும் மொபைலில் மூழ்கியிருந்தது. வெள்ளையும் சொள்ளையுமாக பக்கத்தில் இளமை ததும்ப அமர்ந்திருந்தவர் தகப்பனார் போலிருந்தார். கை நிறைய ஃபைல் ஃபைலாய் ரிப்போர்ட்டுகள். ”அடுத்தது கிரீஷ் போலாம்...” என்று அவர்களை உள்ளே கூப்பிட்டார்கள். என்னைக் கடந்து போகும் போது அந்த வித்தியாசத்தைப் பார்த்தேன். முகத்தில் யௌவனம் அழிந்து போய் எழுபது வயது கிழக்களை கட்டியிருந்தது. ஆனால் நடவடிக்கையிலும் நடக்கையிலும் ஃபைவ் ஸ்டார் காட்டினால் பட்டென்று கை நீட்டும் குழந்தைத்தனம் இருப்பது அப்பட்டமாகத் தெரிந்தது.

ஏதோ பொறி தட்டியது. சிந்தனையைச் சிதற விடாமல் மீண்டும் வேணியின் வாழ்வியல் போராட்டங்களில் பங்கெடுத்துக்கொண்டேன். வாத்தியார் தன்னுடைய பாணியில் பரபரப்பாக நகர்த்தியிருந்தார். பெங்களூருவின் நிறைய இடங்களில் வேணி பவனி வந்து கதை பறந்தது. எங்களது முறை வந்து உள்ளே நுழைந்தோம். அப்பாவிற்கு பேசிக்கொண்டிருந்த போது 

“உங்களுக்கு முன்னாடி ஒரு பையன் வந்தான்ல ஆர்விஎஸ்?... “ என்றார் கேள்வியாக....

“அது பையனா சார்?”

“ஆமாம். அவனுக்கு progeria,,,,,"

"அப்டியா? அப்டின்னா?”

“ஹிந்தி படம் ‘பா’ல அமிதாப்க்கு இருக்கிற வியாதி..... அபிஷேக் தூக்கி அமிதாப்ல இடுப்புல வச்சுண்டிருப்பானே.... ”

“ஓ.. சின்ன வயசுலேயே வயசான மாதிரி ஆயிடுமே... அதுவா...”

“ஆமாம். எக்ஸாக்ட்லி... சுருங்கின தோலைப் பிடிச்சு இழுத்தா ஒரு ஜான் அளவுக்கு வெளியே வரும்.. இங்க பாருங்க.. இந்த மாதிரி.....” மொபைலில் காட்டிய ஃபோட்டோவில் கையில் கிள்ளி இழுத்த சதை சாரதா பாட்டியின் சாஃப்ட் ஸ்கின் மாதிரி எலாஸ்டிக்காய் அந்தப் பையனின் தோல் இழுபட்டிருப்பது தெரிந்தது.

“பையனுக்கு பதினாலு வயசு... ஆனா இப்போ அவனுக்கு அறுபது வயசு மாதிரி.. அதாவது அவனோட அங்க அவயங்களுக்கு அறுபது வயசு... மனசுல டீன்.. வயசுல டீன்... ஃபிஸிக்கலா ஓல்ட்..”

“அச்சச்சோ.. அப்ப ஷுகர்.. பிபி.. நெர்வ்ஸ் ப்ராப்ளம்.. இப்படி வயசான வர்ற வியாதியெல்லாம்....”

“ம்.. கிட்னி ஃபெயிலியர், கண் பார்வை மங்கிப்போய்டும், ஏற்கனவே தோல் சுருங்கிடிச்சு... இப்படி வரிசையா வயசானப்புறம் வரும் வியாதியெல்லாம் வரும்.... அவனுக்கு ஃபிட்ஸ் வருதுன்னு என்கிட்டே வந்தாங்க.. நாந்தான் ட்ரீட் பண்ணினேன்.. இப்போ அவனுக்கு ஃபிட்ஸெல்லாம் இல்லை... ஆனா. ப்ரோஜெரியா.... சீக்கிரம் போய்டுவான்...”

”இதுக்கு ட்ரீட்மெண்ட்?”

“ஊஹும்... ஒண்ணும் கிடையாது.... மெடிகேஷன்ல கொஞ்ச நாளைக்குத் தள்ளிப் போடலாம்.. அவ்ளோதான்...” சொல்லிவிட்டு ஆதரவாக சாய்பாபாவைப் பார்த்துக்கொண்டார்.

குழந்தைத்தன்மை எவ்ளோ பெரிய வரம். ”இப்பவே வாங்கிக்கொடு”ன்னு உருண்டு பெரண்டு அடம் பிடிச்சது.. வெயில் மழை பார்க்காமல் ஆட்டம் போட்டுச் சுற்றியது... அந்த சாந்தசொரூபியானப் பையனை ஒரு முறை நினைத்துப்பார்த்துக்கொண்டேன்... பாவம். அவனை விட அவன் பெற்றோர்களுக்கு எவ்வளவு பெரிய வேதனை. வலி. 

மனிதப் பிறவி எடுத்து ஒவ்வொரு பருவமும் க்ரேஸ்ஃபுல்லாகக் கழிப்பது எத்தனை கடினம். 

குழந்தைகளைப் போற்றுவோம். கொண்டாடுவோம். குழந்தையாய் வாழ விடுவோம்.

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails