Monday, February 1, 2016

குரு... தி போலீஸ்...

குருக்ஷேத்திரத்தில் துரியோதனனின் பதினோறு அக்ஷௌஹிணி சேனை போல வெளியூர் பஸ்கள் மதுரவாயல் பைபாஸில் படைதிரட்டி நின்று கொண்டிருந்தன. ஆகாயத்தில் மழைப் போர் மேகங்கள். திருவண்ணாமலை.. விழுப்புரம்...திண்டிவனம்... கும்பகோணம்.. இராமநாதபுரம்... சேலம்... மயிலாடுதுறை....திருச்சி.. வெளியூரிலிருந்து கோயம்பேடு உள்ளே நுழைய இமாலய வரிசை. கக்கத்தில் தோல் பையோடு சில கண்டக்டர்கள் கீழே இறங்கி கதை பேசிக் கொண்டிருந்தார்கள்.

நசநசவென்று மழைத் தூத்தலில் கையில் துணிப்பையோடும் இடுப்பில் குழந்தையோடும் தலைவிளக்கு அணைத்து நிறுத்திய பஸ்ஸிலிருந்து இருட்டில் இறங்கி தீபாவளி கொண்டாட சிலர் கரை ஒதுங்கிக்கொண்டிருந்தார்கள். குழந்தைக்குப் பதில் மூட்டையை இடுப்பில் சுமந்தவர்கள் சில தெம்பான ஸ்த்ரீகள். ஆண்கள் கைவீசி பௌருஷம் ததும்ப கம்பீரமாக பீடுநடை போட்டு நடந்து ரோடு கடந்தார்கள். குறைந்தது ஐம்பது போலீஸார் அந்த சுற்றுவட்டாரத்தில் போக்குவரத்துப் பணியில் மும்முரமாக இருந்தார்கள். 

அம்பத்தூரிலிருந்து போரூர் அடைவதற்கு அந்த மதுரவாயல் பைபாஸுக்குப் பக்கத்தில் பத்தாறு வேஷ்டிக்கு அங்கவஸ்திரம் போல ஒரு குட்டி பைபாஸ். காரில் எண்பத்தெட்டு போட்டு அந்தகரணம் அடித்துக் காண்பித்து ஆர்டிஓ அசர லைசன்ஸ் எடுத்திருந்தாலும் இங்கே ஓட்டுவதற்கு கைதேர்ந்த ஞானம் வேண்டும். பகவத் கிருபை அவசியம். கால் செண்டருக்கு செல்லும் ஜீப்புகள் அலைகடல் படகாய் ப்ரேக்குக்கும் ஆக்ஸிலேட்டருக்கும் அல்லாடும். ஆயிலி ஐட்டம் சாப்பிட்டவர்கள் வாமிட் எடுத்துவிடும் அபாயம் நிரம்பிய பயணம். கூரிய பார்வையோடு “என்னை முத்தமிடாதே” ஸ்டிக்கரை முத்தமிடாமல் இருக்க நமது ப்ரேக் செயல்படும் தூரத்தில் வந்து கொண்டிருந்தேன்.

அரை கிமீ தூரத்திற்கு அனைவரும் இடது ஓரமாக நிற்க, ”என் வழி தனி வழி” என்று ஒரு ஆட்டோ வலதுபுறத்தில் மின்னலாய்ப் பறந்தது. கண்ணிலிருந்து மறைந்தாலும் உலகமதிர ”டொர்ர்ர்ர்ர்”ரியதில் காது படபடவென்று உதறியது. எதிர்சாரியிலிருந்து சென்னைக்குள் சங்கமிக்கத் துடிப்பவர்கள் ஆட்டோவைக் கடந்து உள்ளே செல்ல அனிமா சித்தி (ராதிகா அல்ல!) வாய்த்திருக்கவேண்டும்.

மழைக்காலத்தில் சென்னையில் கார் ஓட்டுபவர்களுக்கு தினம் தினம் ஜானுவாசம். நூறு மீட்டருக்கு பத்து நிமிஷம். இருநூறு மீட்டரில் ரோட்டுக்கு நடுவில் போலீஸ் தொப்பி தெரிந்தது. “L" ஒட்டி தடம் அழியாமல் பிரிக்கப்பட்ட “L"க்குப் பின்னால் சேப்பாயி தரையில் தவழ்ந்து அப்போலீஸை அடைந்ததும் உட்கார்ந்துவிட்டது. 

கார் ஜன்னலுக்கு வெளியே நின்றிருந்த அவர் மார்பில் “குரு” என்று பேட்ஜ் குத்தியிருந்தார். சின்ன வயசு. இருபத்தாறு இருபத்தேழு இருக்கும். மழை இன்னமும் ஊசித் தூத்தல் போட்டது. எப்போது வேண்டுமானாலும் கடப்பாரை இறங்கும் என்ற நிலை. ஜன்னலை இறக்கிக் கேட்டேன்

“எவ்ளோ நாழியா நிக்கிறீங்க?’

விகல்பமாய் சிரித்தார்.

“எவ்ளோ நாழியா?”

“மத்தியானம் ஒரு மணிலேர்ந்து. கொஞ்சம் கூட குறையவே மாட்டேங்குது.....”

“இப்பவே மணி எட்டாவுது? எப்போ கிளம்புவீங்க?”

“ஒன்பது... பத்தாயிடும்.....சொல்லமுடியாது....”

“ஒன்வே பண்ணிட வேண்டியதுதானே?”

“கிழிஞ்சுது... அப்புறம் போரூர் சிக்னல்லயே தேங்கி நிக்கும்....”

என்னுடன் பேசிக்கொண்டே இரண்டு கையையும் துடுப்பாக்கி அந்தப் பக்கத்தில் வண்டிகளை துரிதப்படுத்தித் துரத்திக்கொண்டிருந்தார். என்னுடைய பக்கமும் க்ளியராகி நகர்த்தப் போகிறேன். ஏதோ தோன்றியது. கியருக்கு இடது கையை கொண்டு போவதற்குள் வலது கையை வெளியே நீட்டி “அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துகள் சார்...”

திரும்பி வலது கையை நீட்டி “தேங்க்ஸ் சார்... உங்களுக்கும் தீபாளி வாழ்த்துகள்..” சந்தோஷமாகக் குலுக்கினார்.

மனசுக்கு நிறைவாக இருந்தது. இன்னும் இரண்டு மணி நேரமாவது தெம்பாக வேலை செய்வார். இப்பவும் எனக்கு அவரது துறுதுறு முகம் கண்முன்னே வருகிறது.

நரகாசுரனை கிருஷ்ணர் வதம் பண்ணியதற்கான காரணம் புரிகிறது. அடுத்தவர்களுக்கு சேவை செய். உதவிபுரி. இன்பமாக இரு. பரோபகாரார்த்தம் இதம் சரீரம்.

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails