Monday, February 1, 2016

லா... லா.. லா... நிலா...

”பிரதர் இன் லா... சிஸ்டர் இன் லா.... மதர் இன் லா.. ஃபாதர் இன் லா.. தவிர பாக்கி எல்லா லாவும் போட்டு கவிஞர் இந்தப் பாட்டை எழுதியிருப்பார்”னு வயலின் ஒழுகும் வான் நிலா பாட்டு பற்றி எம்மெஸ்வி எஸ்பிபியிடம் சொன்னாராம். வேற ப்ரோக்ராம்ல பாடும் நிலாவே அதைச் சொன்னது. விஜய்யில் இன்று இளமைத் துடிப்போடு எஸ்பிபி வான் நிலா பாடினார். மனசுக்கு வயசில்லை போல அவரின் குரலுக்கும் வயசில்லை. தேவகானம். காதுகளுக்கு மோட்சம்.

வான் நிலா..நிலா..அல்ல வாசித்த அமல் நரம்பு வாத்தியங்கள் வாசிக்கும் போது நமது நாடி நரம்புகளில் இசை ஊறுகிறது. “வான் நிலா...நிலாவல்ல.. எஸ்பிபி கொல்றான்....” என்கிற சத்யாவின் குறுஞ்செய்தி வந்து பாதி பாட்டில் குத்தியது. சரண “லா..”க்களுள் நுழைந்த எஸ்பிபி தேனை வாயில் தேக்கி வைத்திருந்தார். காதுக்குள் பாய்ந்த அது கள்வெறி ஏற்றியது. சரணங்களின் இறுதிகளில் செவி வழியாக நெஞ்சுக்குக் கொக்கி போடும் ஸோலோ வயலின் ஸோல் டச்சிங். எம்மெஸ்விக்கு சாஷ்டாங்க நமஸ்காரம்.

எஸ்பிபியின் வழுக்கும் குரலில் பாட்டு நம்மை அப்படியே மலர்கள் சூழ்ந்த ஒரு சோலைக்குள் கொண்டுச் செல்ல செல்ல...பரிமளமான புஷ்பக விமானத்தில் அலேக்காகத் தூக்கிக்கொண்டு பறக்கிறது.... ஒரு வித மயக்கம் ஏற்பட்டுக் கிறக்கத்துடன் சொக்கி கண் மூடுகிறோம்... அப்போது வீசு தென்றலாய் அமல் வயலின் வாசிக்கிறார். திரும்பவும் பூமிக்கே திரும்பக்கூடாது...கூடாது..கூடாது... என்று கண் மூடி மேகத்தினுள்ளே புகுந்து....புகுந்து....மேனிக்கு ஜில்..ஜில்..இன்னும் மேலே..இன்னும் மேலே...பஞ்சாய் பறந்து கொண்டிருந்தபோது... ஒரு வயலின் இழுப்பில்.... பட்டென்று கண் திறந்தால்..... கண்ணெதிரே ஸ்வர்க்கம்... கல்பதருவின் கீழே அமர்ந்திருக்கும் எஸ்பிபியைச் சுற்றி கந்தர்வர்கள் கோஷ்டியாய் நின்று கானத்தைக் கேட்டுச் சுகிக்கிறார்கள். அந்தக் கூட்டத்தில் ஒருவனாய் நானும் எட்டிப்பார்க்கிறேன்...... இதைப் படிக்கும் நீங்களும்.. .

”வண்ணம் கொண்ட...” பாடிய பையன் கட்டையெல்லாம் சரியாக எடுத்து ஸ்ருதி பிசகாமல் அக்ஷர சுத்தமாகப் பாடினாலும்.....“ஏதோ.. சரியில்லை.. ஸ்ருதியெல்லாம் இருக்கு... கமகம் இருக்கு... ஆனா.. ஏதோ ஒண்ணு மிஸ்ஸிங்....” என்று புதிராய்ப் பார்த்த சங்கீதாவிடம் சொன்னேன் “எஸ்பிபி.. ஜேசுதாஸ்.. பாடினதை யார் பாடினாலும் அந்தப் பாட்டு ஒரு மாத்து குறைஞ்சா மாதிரிதான் தெரியும்.... சின்னோண்டு கமகம் விட்டுப் போனாலும் பழகின காதுக்குப் பாட்டு ருசிக்காது... அவங்களோட பன்ச் அப்படி....” என்றேன்.

அமலை திரும்பவும் ஃபிடில் வாசிக்கச்சொல்லிவிட்டு பாட்டுத் தலைவன் பாடினான் அந்தப் பாட்டைத்தான்.....

“வண்ணம் கொண்ட வெண்ணிலவே... திரும்பவும் கொல்றான்...” என்று நான் சத்யாவிற்கு மறு ஓலையாக எஸ்ஸெம்மெஸ் தட்டிவிட்டேன்.

சங்கீதத்தை ரசிக்கத் தெரியாதவர்கள் வாலும் கொம்பும் இல்லாத விலங்கினங்கள் என்று பர்த்துரு ஹரி சொன்னாராம். எஸ்பிபியை ரசிக்கத் தெரிந்தவர்கள் யாவரும் மனுஷ்யர்களே!

‪#‎பாடும்_நிலா_பாலு‬

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails