Monday, October 26, 2015

ண்ணீ...

வடபழனி பஸ்ஸ்டாண்ட் அருகில் நம்ம வீடு வசந்தபவன் திருப்பத்திலேயே நந்து சாரின் பேச்சுக்குரல் என் காதுகளுக்கு மட்டும் கேட்க ஆரம்பித்தது. குரங்குகளைக் கூண்டில் அடைத்து வெந்நீர் பாய்ச்சுவது, தவளையின் ஒவ்வொரு கால்களாக வெட்டி குட்டையில் விடுவது, கௌ ஷிட்டை சாப்பிட்டு மர உச்சிக்குச் சென்ற சிறகொடிந்த பறவை, சமயத்துக்கு வேலை செய்யாது வெறுப்பேற்றும் சுலபமான வேலைகள் என்கிற அடிப்படை விதி கொண்ட மர்ஃபீஸ் லா என்று பல மானேஜ்மெண்ட் பாடக்கதைகளை எங்களுக்குப் புகட்டியவர் நந்து சார். இந்தியன் எக்ஸ்பிரஸில் தேநீர் நேரங்களை சுவை நேரமாக்கியவர்.
எங்கள் வீட்டில் இந்த வருஷம் கொலு இல்லை என்றவுடன் முதல் அழைப்பு ஸ்ரீமதி ஜெயந்தி நந்தகுமார் மேடத்திடமிருந்து வந்தது. வெத்திலை பாக்கு வாங்கிக்க இன்று சென்றோம். கலகலவென்று அரை மணிக்கு மேல் பேசிக்கொண்டிருந்தோம். அழகான கொலு. மானஸா இரண்டு திருப்புகழ் பாடினாள். வழக்கம் போல நந்து சாரின் காமெடி கலந்த பேச்சில் நாங்கள் சொக்கிப்போய் கிடந்தபோது கடிகார முட்கள் ஒன்றையொன்று நூறு மீட்டர் ஓட்டம் போல விரட்டிப் பிடித்தன.
”பொதுவாகவே கலர் வேறுபாடு தெரியாதவர்கள் ஆண்கள்” என்று தீபாவளி பட்டிமன்ற தலைப்பில் நந்து சார் பேசினார். ”எந்த கலர்?” என்ற பெண்களின் கோரஸான க்ராஸ் எக்ஸாமினேஷனில் ”புடவை.. ப்ளௌஸ்...சட்டை... பேண்ட்....மேட்ச்சிங் காண்ட்ராஸ்ட்டிங் கலர்ஸ்....” சாதுர்யமான பதில் ஆண்வர்க்கத்தினருக்கான திறமையான வக்காலத்து. பல சப்ஜெக்ட்டுகளில் நிறைய பேசியதில், குழந்தைகள் செய்யும் எதையும் மகோன்னதமாக்கும் தாய்தகப்பனின் மனநிலையை படம் பிடிக்கச் சொன்ன கதை ஒன்று சாம்பிளுக்கு இங்கே.
அது இங்கா குடித்துவிட்டு தரையில் தவழும் குட்டிக் குழந்தை. “ண்ணீ” மட்டும் தான் அதுக்குச் சொல்லத் தெரியும்.
“காக்கா எதுக்காக சுத்தித்து...”
“ண்ணீ...”
“ஓ.. தண்ணீக்காகவா.... பேஷ்.... எப்போ சுத்தித்து?”
“ண்ணீ....”
“ஓ.. இன்னிக்கா... வெரி குட்... வெரி குட்... அந்த பானைக்குள்ளே என்ன இருந்தது?”
“ண்ணீ....”
“ஓ.. தண்ணீ இருந்ததா... எவ்ளோ ப்ரில்லியண்ட்!!!”
இந்த ரீதியில் கதை முழுவதையும் நாமே அமைத்துக்கொண்டு குழந்தையைப் பாராட்டுகிறோம். இதில் “ண்ணீ...”தான் கதைக் கரு. நாமளே திரைக்கதை எழுதிக்கிட்டோம்...
ஸ்வீட், சுண்டலுடன் கிளம்புவதற்கு முன்னர் அவரது மொட்டை மாடியில் வெண்டைக்காய் விண்ணைப் பார்க்க தலைகுப்புற நின்றதைப் பார்த்து ஆனந்தப்பட்டோம். பிறைச்சந்திரன் பக்கத்தில் பத்தொன்பது மாடி கட்டிடங்களுக்கு மத்தியில் வெட்கத்தோடு எட்டிப்பார்த்தது. இருபுறமும் வானுயர்ந்த கட்டிடங்கள் எழும்பியதில் இவர்களது மொட்டை மாடியில் காற்று பிய்த்து உதறுகிறது. என்னைப் போல் அரைகுறை சொட்டையர்கள் அரை மணி அங்கே நின்றால் வலுவான தென்றலால் முழு மொட்டையர்கள் ஆகும் அபாயமிருக்கிறது. கயத்துக்கட்டில், ஸ்வாமி ஹரிதாஸ் கிரி இல்லையென்றால் உடையாளூர் கல்யாணராமன்... சரி... அப்புறம் கொஞ்ச நேரம் சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர்வாள்... இன்னும் வயசாகவில்லையோனோ (எனக்கு)... எஸ்பிபி டூயட்ஸ்... இப்படி எதுனா ராத்திரி பூரா செவிக்குளிர கேட்க ஹேதுவான இடம்.
திரும்பும்போது அசோக்பில்லருக்கு முன்னால் ட்ராஃபிக் ஜாம். பத்து பதினைந்து நிமிடங்களுக்கு மேல் இன்ச் கூட நகரவில்லை. ஷேர் ஆட்டோ ட்ரைவர் புகாரி ஓரத்திலிருந்து நடந்து போய் மீடியனைத் தாண்டி அந்தப் பக்கம் எட்டிப்பார்த்தார். வண்டி இடுக்குகளில் மனையாளுடன் நுழைந்த இருசக்கரக்காரர் பொறியில் சிக்கிய எலி போல மாட்டிக்கொண்டு முன்னாலும் போக முடியாமல் பின்னாலும் எடுக்கமுடியாமல் அவஸ்தைப்பட்டார். “விட்ருங்க...” என்ற பெண்டாட்டி பேச்சை தப்பாமல் கேட்டார்.
“என்னண்ணே பிரச்சனை? ஆக்ஸிடெண்ட்டா?” என்று வேவு பார்த்துத் திரும்பிய ஆட்டோகாரரைக் கேட்டேன்.
“அதெல்லாமில்லீங்க... லாரிக்காரருக்கும் பஸ்காரருக்கும் சண்டை”
“என்ன சண்டை?”
“ஏதோ... லாரிக்காரரு பஸ்காரரை அடிச்சிட்டாராம்.... பஸ்காரரு வண்டி எடுக்கமாட்டேங்கிராரு”
“உங்களுக்கு எப்படித் தெரியும்?”
என்னுடைய அந்தக் கடைசி கேள்வியில் டரியலாகி “போடா.. போக்கத்தவனே.. அப்புறம் ஏன் என்கிட்டே கேட்டே” என்கிற பார்வையால் என்னைக் குத்திக் குடைந்தார். க்ளைமாக்ஸில் உயில் எழுதாத அப்பா, உயிர் பிரியும் தருவாயில் மரணப்படுக்கையில் குடும்பத்தினர் சுற்றி நிற்க, பேசத் தவிப்பது போல அவஸ்தையில் ஏதோ பேச வந்தார்.
நான் ஸ்நேகமாகச் சிரித்துக்கொண்டிருக்கும் போதே முன்னால் வண்டிகள் நகர்ந்தன. பொறியில் சிக்கிய இருசக்ராதி விட்டு விடுதலையாகி விர்ர்ர்ரென்று பறந்தார். ஆட்டோகாரர் வண்டி எடுக்க ஓடினார். தப்பித்தேன். சிக்னலில் இகோஸ்போர்ட் ஒன்று ஓரத்தில் நின்றிருக்க அதைத்தாண்டி மாநகர பஸ் நின்றிருந்தது. நாலைந்து ஜீப்புகளில் போலீஸ் கூட்டம். லாரியைக் காணோம்.
”நான் உட்பட எல்லோரிடமும் கதை சொல்ல ஏதோ ஒன்று இருக்கிறது”

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails