Monday, October 26, 2015

ருத்ரமாதேவீஈஈஈஈஈஈஈஈ....

”ருத்ரமாதேவீஈஈஈஈஈஈஈஈ....” என்ற சன் டிவியின் காது கிழிக்கும் விளம்பர அலறலின் போது வாசலில் வந்தார் ரவி. தொப்பையின் அளவைக் காட்டும் சிவப்புக் கலர் டீஷர்ட். தொளதொளா பாண்ட். அவர் கூட ஒரு கையாள். தேசலான உருவம். பாக்கியராஜ் கண்ணாடி. ஹோண்டா ஆக்டிவாவின் பின் சீட்டிலிருந்து எதிரியின் தலையைச் சீவ முதுகிலிருந்து அருவாள் உருவும் அடியாள் தோரணையில் குதித்து இறங்கினார்.
நான் வாசலுக்கு வந்தவுடன் ரவி நேரே வேலையில் இறங்கினார்.
“சார்.. இப்பவே அறுத்துடலாம்...”
“ம்... அளவு சரியா எடுத்துட்டீங்களா?”
“கீள கால் பாகத்துலேர்ந்து அரையடி.... “
“ரோடு மட்டம் சரியா இருக்கும்ல...ரசமட்டம் வச்சுப் பார்த்தீங்களா?”
“ம்... ட்யூப் பிடிச்சு பார்த்து...இதோ.. சுவத்துல குறிச்சு வச்சுருக்கேன்....” கட்டை சுவற்றில் ஏரோ போட்டிருந்தார். ஹார்ட் வரையாததுதான் பாக்கி.
ரவி...வெல்டிங் ரவி. ரவிச்சந்திரன். கார் ஷெட் க்ரில் கதவை அறுக்க உபகரணங்களுடன் காலையில் வந்திருந்தார். கையாளுக்கு தேடும் கண்கள். தெருவில்.. பக்கத்து மாமரத்தில்... எதிரிலிருக்கும் அடி பைப்பில்..... தெருமுக்குக் கடையில்..... காய்கறி வாங்கிச் செல்லும் குடும்பஸ்த்ரீ.... என்று காணும் இடங்களிலெல்லாம் கண்களை பச்பச்சென்று விதைத்தார். கடைசியில் க்ரில் கதவைக் காதலி போல பார்த்துக்கொண்டிருந்தார். ரவியும் நானும் இடதும் வலதுமாய் கதவை சுற்றிச் சுற்றி வந்து திட்டம் வகுக்கும் போதெல்லாம் கையாள் கதவைக் காதலித்துக்கொண்டிருந்தார். க்ரில் கதவை அறுப்பது ஏன்? என்ற ஆதாரக் கேள்வி இப்போது உங்களுக்குள் எழுந்திருக்கலாம்.
”சாலை சடங்கு” பற்றிய பின் வரும் பாராவை இந்திய சாலைகளின் பவுசு தெரிந்தவர்கள் ஸ்கிப்பலாம். ஐஏஎஸ் எக்ஸாமுக்கு போல படித்துதான் ஆகவேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. இரண்டு நிமிடம் எக்ஸ்ட்ரா டைம் ஒதுக்கமுடியும் என்பவர்கள் முன்னேறிச் செல்க.
தேர்தலுக்கு முன்னர் சாஸ்திரத்துக்கு ரோடு போடுவது அரசியல் சம்பிரதாயம். அந்த சடங்கை செய்யும் போதெல்லாம் ஏற்கனவே கல்லும் கப்பியுமாக கிடக்கும் ரோடை கரண்டிவிட்டு போடாமால் அதன் மேல் லாரி லாரியாய் ரப்பிஷ் கொட்டி.... ஜல்லியடித்து.... வெல்லப்பாகு போன்ற தார் ஊற்றி ஒரு முறை ரோடுக்கு வலிக்காமல் நீவி விடுவார்கள். தூறலில் ரோடு கரைந்து போய் ரீ டெண்டரில் திரும்பவும் போடுவார்கள்.... வருஷம் மும்மாரி பெய்தால் மூன்று முறை பாசமாய் பாகு காய்ச்சி ரோடு. இப்படி ரோடு மேலே ரோடு போட்டு ரோட்டோர வீடுகளை பாதாளத்தில் இறக்கிவிட்டார்கள். ஒரு நாள் காலை வீட்டை விட்டு வெளியே வந்தால் தலைக்கு மேலே ரோடு ஓடும். அப்புறம் மொட்டை மாடிக்கு ஓடிப் போய் ரோட்டில் இறங்கவேண்டிய அதிர்ஷ்ட நிலைக்கு தள்ளப்படுவோம்.
கட். போன பாராவுக்கு முந்தின பாராவில் வந்த வெல்டிங் ரவி க்ரில் கதவில் சாக்பீஸால் குறித்துக்கொண்டிருந்தார். ஆறும் ஆறும் பன்னிரெண்டு அடியுள்ள கோட்டைக் கதவுகள் போன்ற இருபக்க க்ரில் கதவு. தலையில் தங்க வேல் குத்தியிருக்கும். ரவி கோடு போட்டு அவரது திறமையைக் காட்டிவிட்டு “சாக்பீஸ்ல குறிச்ச இடத்துல அறுத்துடுங்க...” என்று திரும்பினார். மறுகணம் கையாள் சுதர்சன சக்கரம் பொருத்திய கட்டருடன் க்ரில் கதவில் உரசி தீபாவளிக்கு முன்னரே மத்தாப்பூ விட ஆரம்பித்தார்.
அரை மணி கழித்து எட்டிப்பார்த்தால் குளத்துக்குள் கோடாலியைத் தொலைத்த விறகுவெட்டி போல கன்னத்தில் கைவைத்து குந்தியிருந்தார்.
“கட்டர் சக்கரம் அறுத்துக்கிச்சு சார்.. அதை கயட்டறது கஸ்டம். ரவியைக் கூப்பிட்டிருக்கேன்...” என்று ஏயெம்ஸி எடுத்தவர்கள் கேஸ் ரெஜிஸ்தர் செய்து வெண்டருக்காகக் காத்திருப்பது போல உட்கார்ந்திருந்தவுடன் உதவிக்குச் சென்றேன். கீ போர்டில் டைப் அடித்த கை ஸ்பானர் பிடித்தபோது தவித்தது. உபகாரம் செய்துவிட்டு உள்ளே சென்றுவிட்டேன்.
ரவி வந்தது தெரியாது. தீபாவளிக்கு ரேழியில் எரிமலை கொளுத்துவது போல ஒளி கண்ணை மறைக்க அறுத்த இடத்தில் ஒரு கம்பி வைத்து வெல்டிங் வேலை நடந்துகொண்டிருந்தது. ரவி மறைந்துவிட்டார்.
மீண்டும் தொழில் ரீதியான பேட்டி கொடுத்தார் கையாள். நிறைய பேசினோம். இனி ரவி காசு வாங்கத்தான் வருவார் என்று நினைத்தது போலவே வேலை முடியும் தருவாயில் வந்து தட்சிணை வாங்கிக்கொண்டார்.
கையில் நோட்டுகளை எண்ணிக்கொண்டே டிவியெஸ் ஐம்பதில் வந்த தெரிந்தவரிடம் பேசிக்கொண்டிருந்த ரவி ஆக்டிவாவைக் கிளப்பும் வரை க்ரில் ஸ்நேகிதமான என்னிடம் கையாள் சித்த நேரம் மனம் விட்டுப் பேசிக்கொண்டிருந்தார்.
“பாஹுபலிக்கப்புறம் எல்லோரும் சரித்திரப் படம் எடுக்கிறாய்ங்க....இல்ல சார்....”
“ஆமாங்க... ஒரு ட்ரெண்டுதானே”
“இருந்தாலும் இது ரொம்ப ஓவருங்க...”
“எது?”
“அனுஸ்காவ வச்சு ருத்ரமாதேவின்னு குஸ்திப் படம் எடுக்கறதெல்லாம்..”
“ஏன் ஓவரு?”
“அளகா இருக்கிறவங்கள வச்சு பாரின்ல ஆடவிட்டு டூயட்டு எடுக்காம.....தடிப்பசங்க முன்னாடி குதிரல ஓடவிட்டு ஈட்டி எறியச் சொல்றாங்களே.... எந்தக் கூமுட்டையாவது இதை பார்ப்பானா...” படபடப்பாகப் பேசினார்.
“ம்... சரிதான்.. இருந்தாலும் அவங்களுக்கு வயசாயிடிச்சுங்களே... கதாநாயகி மாதிரியெல்லாம் இனிமே நடிக்க வைக்க முடியுமா? வீரமான பொம்பளையாதானே நடிக்க வச்சுருக்காங்க....”
”என்ன சார் இப்படி சொல்லிட்டீங்க.... நைட் சோவுக்கு நா போறேன்ல...”
எந்த கூமுட்டையாவது பார்ப்பானா?ன்னு சொன்ன வாயின் ஈரம் காயறத்துக்கு முன்னாடி...... என்று கேட்க வாயெடுத்தேன். ”போலாமா?” என்று ஆபத்பாந்தவனாக ரவி வந்துவிட்டார். விஜயகாந்த் வில்லனை உதைக்கும் ஸ்டைலில் பின்னால் காலைத் தூக்கிப் போட்டு பில்லியனில் ஏறிப் பறந்துவிட்டார் கையாள்.
இது போன்ற வெறித்தனமான ரசிகர்கள் இருக்கும் வரை அனுஸ்காவை யாராலும் அசைச்சுக்கமுடியாது.

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails