Thursday, November 27, 2014

கங்கைக் கிணறு

காவிரிக்கரை ஓரமா பெரிய க்யூ. கையில் மஞ்சப்பையோடு கூன் விழுந்த சுமங்கலிக் கிழவி, கைக்குழந்தையோடு ஒரு ஒத்தை ரூபா பொட்டுக்காரி, காதில் ஹியரிங் எய்டோடு நடை தளர்ந்த பெரியவர், வெற்று மார்போடு கறுப்பு வஸ்திர ஐயப்ப சாமி என்று பெரிசும் சிறுசுமாய்க் கலந்து கட்டி வாசுகிப் பாம்பாய் வரிசை நின்றது.

பதினோரு மணிக்குச் கொஞ்சம் சுறுசுறுப்பாக நகர்ந்தது வரிசை.

“காலேலே அந்தப் புளியமரம் தாண்டி ரெண்டு பர்லாங்கு ஜனம் நின்னுச்சி... ரோட்ல காரு பஸ்ஸு போவமுடியலை..” கழுத்து வழியே கழண்டு விழும் மோஸ்தரில் கதர் சட்டை போர்த்திக்கொண்டிருந்த தாத்தா பக்கத்து ஐயப்ப சாமியிடம் கதை சொல்லிக்கொண்டிருந்தார்.

“நீங்க எப்போ வந்தீங்க?” பின்னாலிருந்து மெல்லிசாக குரல் விட்டேன்.

“இப்போதான்.. பத்தரை மணிக்கு...”

கதை கேட்ட ஐயப்ப சாமி பெருசை ஏற இறங்க பார்த்துவிட்டு விரோதமாக மூஞ்சியைத் திருப்பிக்கொண்டது.

திருவிசநல்லூரில் ”கங்காவதரண மகோத்ஸ்வம்” நேற்று விமரிசையாக நடந்தது. மேற்படி டயலாக்கில் பெரியவர் சொன்ன புளியமரத்தடியில் சேப்பாயியை சொருகிவிட்டு ஐயாவாள் மடத்துக்கு குடும்ப சகிதம் வந்துசேர்ந்தேன். நல்ல கூட்டம். ஒரு தசாப்தம் முன்னர் வந்திருந்தேன். இவ்வளவு தள்ளுமுள்ளில்லை. நேரே ஆறு ஒரு முழுக்கு. அப்புறம் நேரே கிணறு. ஸ்நானம். ஐயாவாள் தரிசனம். விடு ஜூட். இது பத்து வருஷத்துக்கு முந்திய சங்கதி. இப்போது க்யூ கட்டி நிற்கிறார்கள். நல்ல சங்கதி.

சின்னவள் “எப்டிப்பா கிணத்துக்குள்ள கங்கை ரிவர் வரும்?” என்று கையை இழுத்துக் கேட்டாள். பெரியவள் “என்னப்பா போங்கு கதையா இருக்குது?” என்று கைகொட்டிச் சிரித்தாள். க்யூ இப்போது அடிப் ப்ரதக்ஷிணமாக நகரக் கதை சொல்ல ஆரம்பித்தேன்.

“ஸ்ரீதர ஐயாவாள் திருவிடைமருதூர் மகாலிங்க ஸ்வாமியை தினமும் போய்ப் பார்த்துட்டு தீபார்த்தியை கண்ணுல ஒத்திண்டு வருவாராம்... அவரோட இஷ்ட தெய்வம் மகாலிங்கம்...”

“இப்ப வரும்போது பார்த்தோமே.. அந்தப் பெரிய கோயிலா?”

“ஆமா.. அந்த நாலு ரோட்டுல ரைட் சைட்ல நாம உள்ள புகுந்துட்டோம்”

“எவ்ளோ பெரிய கோயில்!” சின்னவள் விழிகள் விரித்து கண்ணால் கோயிலின் அகலநீளம் அளந்தாள்.

“ஆம்மா.. அவருக்கு அந்த ஸ்வாமி மேல அவ்ளோ பக்தி.. டெய்லி வருவார்..”

“அந்த சிவன்தான் அவர் தலையில் இருக்கிற கங்கையை அவர் கிணத்துக்கு கொண்டு வந்துட்டாரா?” பெரியவள் அட்வான்ஸாக கதைக்குள் போனாள்.

“ஊஹும். பொறுமையாக் கேட்டா சொல்றேன்.” என்றதும் பின்னாலிருந்து இடதுகைக்கு வந்தாள். வலது கையைப் பிடித்துத் தொங்கிக்கொண்டு சின்னவள் “ம்.. சொல்லு..” என்றாள்.

“ஸ்ரீதர ஐயாவாளோட அப்பாவுக்கு ஒரு நாள் சிரார்த்தம் வந்துது. தெவசம். வாத்யார்ளாம் ஆத்துக்கு வர்றதுக்குள்ளே இவர் போய் இதோ இந்தப் பக்கம் இருக்கே இந்த காவேரி.... இதுல குளிக்க வந்தார்...”

“இந்த இடத்திலேயே வா?” என்று ரெண்டு புளிய மரத்துக்கு நடுவே கணுக்காலளவு தண்ணீர் ஓடும் காவேரியைக் காட்டி கேட்டாள் சின்னவள்.

“ஆமா.. இந்த இடத்துலதான்.. இதுலேர்ந்து நேரா அந்த சந்து வழியா அவாத்துக்குப் போய்டலாம்...”

“ம்.. அப்புறம்...”

“குளிச்சுட்டு ஈரவேஷ்டியை சுத்திண்டு மடியா ஆத்துக்கு போயிண்டிருந்தார். அப்போ இந்தத் தெரு முக்குல ஒரு வயசான ஆள்.. ஒல்லியா.. ”

“இங்கயா?” என்று தெருவோர முல்வேலிக்கு அருகே கையைக் காட்டிக் கேட்டாள் சின்னவள். “ஆமா இங்கதான்.. கதையைக் கேளு...” என்று தொடர்ந்தேன்.

”அவன் ஐயா பசிக்குது.. சோறு தர்றீங்களா?ன்னு கெஞ்சினான். ஐயாவாள் தர்மிஷ்டர். அதாவது உடனே ஹெல்ப் பண்ணிடுவார். அவனைப் பார்த்ததும் அவருக்கு பாவமா இருந்தது.. அவன் திரும்பவும் அவரைப் பார்த்து சாமி நாலு நாளா சாப்பிடலை.. பசி வயித்தைக் கிள்ளுது சாமி..ன்னு கையால வயித்தைப் பிடிச்சிண்டு கேட்டான்... அவர் உடனே அவனை வாப்பான்னு அவராத்துக்குக் கூட்டிண்டு போனார்... தெவசத்துக்கு சமைச்ச சாதத்தையெல்லாம் இந்தக் கிழவனை உட்கார வச்சுப் போட்டார். அவன் பரமதிருப்தியா சாப்டுட்டு போனான். இதை தெவசத்துக்கு ப்ராம்ணார்த்தத்துக்கு சாப்பிட வர்ற ரெண்டு பேர் திண்ணையில உக்காந்துண்டு பார்த்துண்டிருந்தா..”

“அவாளுக்கு சாப்பாடு இல்லையா?”

“சாப்பாடு இல்லைன்னு கிடையாது. தெவச சாப்பாடு வாத்யார் கூட வர்றவாதான் சாப்பிடணும். வேற யாரும் சாப்பிடக்கூடாது. அதனால.... நாங்க தெவசம் பண்ணி வைக்க வரமாட்டோம்னு வாத்யார் கூட வர்றவாள்ளாம் சொல்லிட்டா...”

முன்னாடி போய்க்கொண்டிருந்த பெரியவர் காதை இந்தப் பக்கமும் கண்ணை முன்னாடியும் வைத்திருந்தது நான் அமைதி காத்த ஒரு நிமிடத்தில் தெரிந்தது. திரும்பித் திரும்பி பார்த்தார். ஸ்நானம் செய்த ப்ரம்ம தேஜஸ் கிழவர் ஒருவர் நெற்றியில் நீறு பூசி பக்திமணம் கமழ எதிர்ப்பட்டார். கை கூப்ப வேண்டும் போல் இருந்தது.

“ம்.. சொல்லு..” சின்னவள் பற்றியிருந்த என் கையை இழுத்தாள்.

“ஐயாவாள் ரொம்ப வருத்தமா எப்படி சிரார்த்தம் பண்ணப்போறோம்னு வாசத் திண்ணையில உட்கார்ந்துண்டிருந்தப்போ.. மூனு பேர் அவாத்துக்கு வந்து உள்ள வாங்கோ தெவசம் பண்ணி வைக்கிறேன்னு சொன்னாளாம்... அந்தத் தெருவுல இருக்கிறவாளுக்கு ஒரே ஆச்சர்யம். வந்த மூணு பேரை அந்த ஊர்ல யாருமே அதுக்கு முன்னாடி பார்த்ததில்லையாம்.... யாருன்னே தெரியலையே.. கும்மோணத்துலேர்ந்து வந்திருப்பாளோன்னு குசுகுசுன்னு பேசிண்டிருந்தாளாம்... ரெண்டு ஹவர் கழிச்சு அந்த தெருக்காரா ஐயாவாள் ஆத்து ஜன்னல்ல எட்டிப் பார்த்தா....”

இந்த மாதிரி இடத்தில் எப்பவும் ஒரு pause கொடுப்பது எனது வழக்கம். பசங்க ரெண்டுத்துக்கும் ஆர்வம் தாங்க முடியாம...

“பார்த்தா.. “ பெரியவள்.

“பார்த்தா...” இது சின்னவள்.

கேட்டார்கள். மூன்றாவதாக “பார்த்தா...” முதுகுக்குப் பின்னாலிருந்து வந்தது. கேட்டது சங்கீதா.

”பிரம்மா, விஷ்ணு, சிவன் மூன்று பேரும் சாப்பிட்டிண்டிருந்தாளாம்.. விஷ்ணு இலையில உட்கார்ந்துண்டு விஷ்ணுவே சாப்டாராம்... எட்டிப் பார்த்தவாளுக்கு ஒரே ஆச்சர்யம்... இருந்தாலும் ஐயாவாள் ஏதோ கண்கட்டு வித்தை பண்றார்னு நினைச்சுண்டு சாயந்திரமா ஐயாவாள் கிட்டே நீங்க அனாச்சாரம் பண்ணிட்டேள். இதுக்கு பிராயச்சித்தம் பண்ணினாதான் இனிமே உங்காத்துக்கு வைதீக காரியத்துக்கெல்லாம் வருவோம்னு சொல்லிட்டா... என்ன ப்ராயச்சித்தம்னு ஐயாவாள் கேட்டார்... அதுக்கு இன்னிக்கே நீர் கிளம்பி கங்கையில் போயி ஸ்நானம் பண்ணிட்டு திரும்பி வரணும். அப்போதான் உம்மை சேர்த்துப்போம்னு சொன்னா...”

“ஃப்ளைட்ல போய்ட்டு வந்துருக்கலாமே” என்று கேள்வி கலந்து பேசினாள் சின்னவள்.

“அப்போ அப்படியெல்லாம் வசதியில்லே... ரொம்பவும் நொந்து போய்.. திண்ணையிலேயே அன்னிக்கி ராத்திரி படுத்து தூங்கிட்டார்... அப்போ கனவுல சிவன் உம்மாச்சி வந்து.. ஸ்ரீதரா கவலைப்படாதே.. நாளைக்கு உங்காத்து கொல்லப்பக்க கிணத்துல கங்கையை வரவழைக்கிறேன்.. நீ அதுல குளிச்சு உன்னோட பாவத்தைப் போக்கிக்கிறேன்னு இவாள்ட்ட சொல்லு...ன்னு பேசிட்டு மறைஞ்சுபோய்ட்டார்... கண்ணை முழிச்சுப் பார்த்தா இன்னும் விடியலை.. விடிஞ்சதும் இவர் தெருக்காராளைக் கூப்பிட்டு.. இன்னிக்கி எங்காத்து கிணத்துல கங்கை வரா.. அதுல குளிச்சு நான் பாவத்தைப் போக்கிக்கிறேன்... நீங்களும் வேணுமின்னா பாருங்கோ...ன்னு சொன்னார்...”

“ஓ.. உடனே அண்டர்க்ரௌண்ட்ல கங்கை ஓடி வந்து இந்த கிணத்துல பூந்துடுத்தா..” பெரியவள் கதை முடித்தாள்.

“ம்.. அப்படியெல்லாம் சாதாரணமா வந்துடுமா? ஊர்ல உள்ளவாள்லாம் கிணத்தைச் சுத்தி நிக்கறா.. அதல பாதாளத்துல தண்ணி கிடக்கு...”

“கங்கே.. வந்துடுன்னு... கூப்ட்டாரா?” சின்னவள் கேட்டாள்.

“ஆமா.. வெறுமன இல்லே... கங்காஷ்டகம் படிச்சார்....எட்டுல அஞ்சாவது ஸ்லோகம் சொல்லி முடிச்சவுடனே.. கிணத்துக்குள்ளேர்ந்து குபுகுபுன்னு ஜலம் வழிஞ்சி தெருவெல்லாம் ஓடித்தாம்... ஊர்ல இருக்கிறவாளுக்கும் சேதி தெரிஞ்சு ஓடி வந்து பார்க்கறாளாம்.... அவரோட மகிமை தெரிஞ்சு போய் எல்லோரும் அவர்ட்ட எங்களை மன்னிச்சுக்கோங்கோ...ன்னு கன்னத்துல போட்டுண்டு நமஸ்காரம் பண்ணினாளாம்.... அதான் கதை...”

“அது கங்கை தண்ணின்னு எப்படிப்பா தெரிஞ்சுது...” கேள்வியின் நாயகியாக சின்னவள் கேட்டாள்.

“கங்கை ஆற்றில விடும் மங்கல பொருட்கள்லாம் அதுல மிதந்து வந்துதாம்.. அப்புறம் அந்த தண்ணி வித்தியாசமா இருந்ததாம்....” என்றதும் சமாதானமானாள்.

இதோ வந்துவிட்டோம். உள்ளே நுழைந்தோம். கிணற்றுக்கு பந்தல் போட்டு பூ மாலையெல்லாம் சூடியிருந்தார்கள். கிணற்றின் மேலே நாலு தொண்டர்கள் ஏறி நின்று தண்ணீர் இறைத்து பக்தர்கள் தலையில் ஊற்றி சேவை புரிந்துக் கொண்டிருந்தார்கள். காலையிலிருந்து தொப்தொப்பென்று கிணற்றுக்குள் விழுந்து எழுந்த வாளி ஓரத்தில் நசுங்கியிருந்தது. நான் கிணற்றுக்குப் பக்கத்தில் இருந்த பத்து நிமிடத்தில் ஐநூறு பேர் குளித்திருக்கலாம். முக்கால் கிணறு தண்ணீர் குறையாமல் தளும்பிக்கொண்டிருந்தது.

குளித்துவிட்டு கிணற்றடிக்குப் பக்கத்து மாடியில் உடை மாற்றிக்கொண்டோம். சிலர் தர்ப்பணம் செய்துகொண்டிருந்தார்கள். நெற்றிக்கு வெள்ளையடித்த ஒரு மாமா குங்குமம் தேடிக்கொண்டிருந்தார். மூன்று விரல் பிரித்து பட்டையடித்துக் கொண்டிருக்கலாம். ஐயாவாள் மடத்திற்குள் நுழைந்து தரிசனம் செய்தோம். வெளிக் கதவுக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த பெரியவர் அன்னதானத்திற்கு வசூல் செய்துகொண்டிருந்தார். யத்கிஞ்சிதம் கொடுத்தேன். ரசீதிற்கு அட்ரெஸ் போட்டு அழகாகத் தந்தார்.

வெளியே பரபரப்பாக அன்னதானம் நடந்துகொண்டிருந்தது. பக்தர் கூட்டம் அலைமோதியது. சமூக ஏற்றத்தாழ்வில்லாமல் அனைவரும் சமத்துவமாக நின்றுகொண்டிருந்தனர். பார்க்கப் பரவசமாயிருந்தது.

ஒவ்வொரு வருடம் கார்த்திகை அமாவாசை இந்தக் கிணற்றில் கங்கை வருகிறாள் என்பது ஐதீகம். இன்றளவும் பொய்க்காமல் நடக்கிறது. காவிரி வறண்டாலும் இக்கிணற்றுக்குள் வரும் வற்றாத ஜீவநதி கங்கை வறண்டு போவதில்லை. அடுத்த வருடம் கார்த்திகை அமாவாசை உங்கள் காலண்டரில் குறித்துவைத்துக் கொள்ளுங்கள். புண்ணியம் கிடைக்கட்டும்.

8 comments:

Yaathoramani.blogspot.com said...

இதுவரை அறியாதது அறிந்தேன்
பகிர்வுக்கு நல்வாழ்த்துக்கள்
( நேரடியாகவே போய்ப்பார்க்கட்டும் என்றுதான்
படம் போடலியோ ? )

sury siva said...

அடியேன் இல்லக்கிழத்தியை பெற்றெடுத்த மாமியார் கிழவி
தனது 90வது வயது வரை ஒவ்வொரு வருடமும் போயிட்டு வருவாராம்.

எனக்கென்னவோ தஞ்சையில் அவ்வளவு வருஷம் இருந்தபோதிலும் அங்கே செல்ல இயலவில்லை.

அடுத்த வருஷமாவது போகலாம் என்று இருக்கிறேன்.

அதற்குள் போகாமல் இருக்கவேண்டுமே !!

சுப்பு தாத்தா.

'பரிவை' சே.குமார் said...

இந்த செய்தி இரண்டு தினங்களுக்கு முன்னர் முகநூலில் படித்தேன்... அதை அழகான கதை போல சொல்லியிருக்கிறீர்கள்.
அருமை அண்ணா...

துளசி கோபால் said...

புதுத் தகவல்.

கிடைக்குமான்னு தெரியலை. எல்லாம் அவன் செயல்.

Anonymous said...

-//அடியேனின் தகப்பனாரின் நினைவு வந்தது. சிறு பிராயத்தில் இந்த நிகழ்வை விவரித்து இன்னும் நினைவில் உள்ளது. சுப்பு தாத்தா நூறாண்டு வாழ்க. எல்லாம் தெரிந்த துளசி மாமிக்கு இந்த முடவன் முக்கும் சித்திக்கட்டும்.//-

ப.கந்தசாமி said...

அனுபவித்து ரசித்தேன்.

ADHI VENKAT said...

அன்புடையீர்,

வணக்கம். தங்களின் வலைப்பதிவுகளில் சில, இன்றைய வலைச்சரத்தில், வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்களால் பாராட்டிப் புகழ்ந்து, அடையாளம் காட்டப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

பாராட்டுகள். வாழ்த்துகள்.

இணைப்பு:http://blogintamil.blogspot.in/2015/06/9.html

கீதமஞ்சரி said...

சொன்ன விதம் அருமை. சுவாரசியம் குறையாமல் பக்கத்தில் நின்று கதைகேட்பது போலவே இருந்தது.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails