Sunday, October 22, 2017

கைங்கர்ய ஸ்ரீமான்

இருபத்தைந்து முப்பது வருஷத்துக்கு முந்தைய கதை. பவானி சித்தியின் கைக்குள் கையை விட்டு செயின் போல கோர்த்துக்கொண்டு பெரியகோயிலுக்கு சென்றது நினைவில் முட்டுகிறது. தேரடியில் திருநாவுக்கரசுப் பிள்ளை (இந்த முறை சென்றபோது திருநாவுகரசு என்று 'க்'கில்லாமல், பெயருக்கு வலிக்காமல், போர்டு எழுதியிருந்தது) மளிகைக் கடையில் டைமன்ட் கல்கண்டும் கட்டிக் கல்கண்டும் தாயாருக்கும் கோபாலனுக்கும் அர்ச்சனைக்காக வாங்கிக்கொண்டு கோபுரவாசல் கடக்கும் போது காற்று அள்ளும். சற்றே அசிரத்தையாக நடந்தால் ஆளை அரை இன்ச் ஒதுக்கும்.
கோபுரவாசலில் அருள்பாலிக்கும் சிறிய திருவடி ஆஞ்சுவை ஜெம்பகேச தீக்ஷிதர் தீந்தமிழில் கம்பனின் "அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி..."யோடு தீபாராதனை தரிசித்து கோயிலுள் நுழைவது மனசுக்குள் இனம்புரியாத ஒரு இன்பத்தைக் கொடுக்கும். ஜெம்பகேச தீக்ஷிதர் என்னுடைய தமிழ் ஆசான். பவானி சித்தியின் "தம்பி.. பெரியகோயிலுக்கு கிளம்பு" என்ற வார்த்தையை நான் என்றும் தட்டியதில்லை.
இராப்பத்து பகல்பத்து காலங்களில் பெருமாள் புறப்பாடுக்கு நானும் பவானி சித்தியும் தி.பிள்ளை கல்கண்டு வாங்கிக்கொண்டு “கோபாலா..கோபாலா..” என்று ஓடுவோம். கோபாலன், தீக்ஷிதர், முன்னால் ஒரு கோஷ்டி, பின்னால் ஒரு கோஷ்டி, ஒரு தீவட்டி, பாதந்தாங்கிகள் எட்டு பேர், இரண்டொரு தீவிர வைஷ்ணவர்கள், நானும் பவானி சித்தியும் என்று குட்டியாக ஒரு பக்தர் குழாம். கோபாலனின் கையைப் பிடித்துக்கொண்டு ஏகாந்தமாக வாக்கிங் போவது போன்ற பெரிய பிரகார உலா. இப்போது நினைத்தாலும் துளசி வாசனையோடு சேர்த்து தீவட்டிவியின் கந்தமும் கலந்துகட்டி எழுகிறது.
போன பாராவின் இரண்டு கோஷ்டிகள் பற்றிதான் இப்போது எழுத வந்தேன். இதில் முன்னால் போவது பிரபந்த கோஷ்டி பின்னால் வருவது வேத பாராயண கோஷ்டி என்பதில் எனக்குச் சின்ன மெமரி தகராறு. கோபாலிடம் Rajagopalan Rengarajanகூப்பிட்டுக் கேட்டேன்.


“வெங்குட்டு.... பெருமாள் தமிழைத் தேடி போறார்... வேதம் அவர் பின்னால வருது..ன்னு தமிழ்க்கு பெருமையை ஏத்திச் சொல்லுவா... அதனால எப்பவுமே முன்னால போறது பிரபந்தம். பின்னால வர்றது வேதபாராயணம்..”
“எப்படியாவது இந்த தடவை பெரியப்பாவைப் பார்க்கணும் கோபால்...” என்று இரண்டு வருடங்களாக சொல்லிகொண்டிருந்தவனுக்கு இந்தமுறை வெண்ணைத்தாழியில் ராஜகோபாலனைச் சேவித்தபிறகு அந்த அதிர்ஷ்டம் கிடைத்தது. மன்னார்குடி அண்ணா ஸ்வாமி ஐயங்கார் வேத பாட சாலையில் பயின்றவர் ஸ்ரீஸ்ரீநிவாஸகோபாலாச்சாரியார். 1924ம் வருஷம் ஜனனம். கோபாலனின் பின்னால் வரும் வேத கோஷ்டியில் வருவார். நீண்ட வெளிர் தாடியும் வெண் தலையுமாக ஒரு ரிஷி கம்பீரமாக நடந்து வருவது போல இருக்கும். வேதம் கணீரென்று முழங்கியபடி வருவார். “கோபாலனோடு அவாளையும் சேர்த்து பிரதக்ஷிணம் வந்து நமஸ்காரம் பண்ணனும்.. அப்பதான் புண்யம்.” என்று பாட்டி சொல்லுவாள்.
”நமஸ்காரம் பண்ணிக்கிறேன்...”
“ம்... இப்படியே..”
“மாமியும் வரட்டுமே...”
“ம்.. பண்ணுங்கோ...”
குடும்ப சகிதம் தெண்டம் சமர்ப்பித்தேன். எழுந்து அபிவாதயே சொன்னேன்..
“நைத்ருப காஸ்யப கோத்ரக: ஆபத்ஸம்ப ஸுத்ரக::” சொல்லி முடிக்கும் முன் கட்டிப் பிடித்துக்கொண்டார்.
“நானும் நைத்ருப காஸ்யப... நாம ரத்த சம்பந்தம்.... க்ஷேமமா இருங்கோ..”
வீதிக்கு வந்தவுடன் கோபாலிடம் “திருப்திப்பா... ரொம்ப நாளா ஆசீர்வாதம் வாங்கணும்னு இருந்தேன்... தேங்க்ஸ்”
“வெங்குட்டு.. இன்னொன்னு தெரியுமா? 2014ல கிஞ்சித்காரம் ட்ரஸ்ட்... அதான் வேளுக்குடி ஸ்வாமி போஷகரா இருக்காரே.. அந்த ட்ரஸ்ட் இவருக்கு “கைங்கர்ய ஸ்ரீமான்..”ன்னு பட்டம் கொடுத்து கௌரவிச்சிருக்கா..”
“ ஆஹா.... கோபால் உனக்கு பெரியப்பா... மாதவன், வெங்கடேசனுக்கெல்லாம் அவங்களோட அப்பான்னு நினைக்கும் போது எவ்ளோ பெருமையா இருக்கும்!! ”
அந்த குடும்பத்துக்கு மட்டுமா பெருமை? எங்கள் ஊருக்கே பெருமை!!

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails