Monday, October 23, 2017

ஓம் நமோ வாசுதேவாய:

”நீர்க்க ஒரு டம்பளர் குடும்மா” என்று இரவு டிஃபனுக்குப் பிறகு சாம்பு மாமா தன் தாயாரிடம் கேட்டு வாங்கி மோர் குடித்தார். “இன்னுமா கோபு வரலே...” என்று கேட்டுக்கொண்டே சமையல் உள்ளிருந்து வாசல் திண்ணையில் வந்து உட்கார்ந்தார். அங்கொன்றும் இங்கொன்றுமாக தெருவிளக்குகள் கண் சிமிட்டிக்கொண்டிருந்தன. தூங்கி வழிந்துகொண்டிருந்த ஒன்றிரண்டு பேர்களோடு அரசுப் பேருந்து கடமுடாவென்று கடந்து போனது.

”மாமா.. சாப்டாச்சா?” சரக்கென்று சைக்கிளிலிருந்து ப்ரேக் போட்டு நேரடியாக திண்ணையில் இறங்கினான் கோபு.
“வெத்தலை வாங்கிண்டு வந்தியாடா?”
“இதோ....” ந்யூஸ்பேப்பர் சுற்றிய பாக்கெட்டை நீட்டினான்.
ஈர வெற்றிலையை வேஷ்டியில் துடைத்து காம்புகளைக் கிள்ளி எறிந்துவிட்டு உள்ளங்கையில் வைத்துச் செல்லமாகப் புரட்டினார். ஆட்காட்டி விரலில் கொஞ்சமாக வாசனைச் சுண்ணாம்பு எடுத்து மை போல பாங்காகத் தடவினார். ஸ்பெஷல் சீவலையும் கொஞ்சம் பாக்கையும் அள்ளிப் போட்டு மடித்து வாய்க்குள் தள்ளிய பின்னர் அவர் கண்களில் சொர்க்கம் தெரிந்தது.
“மாமா.. இன்னிக்கி எதாவது கத இருக்கா?”
“ம்...நீ ஓடிப்போயி வெத்தலை வாங்கிண்டு வர்றத்துக்கு கூலியே கதைதானேடா... சொல்றேன்..”
“இண்ட்ரெஸ்ட்டிங்கா ஒண்ணு சொல்லுங்கோ”
“உத்தானபாதன் சுநீதின்னு ஒரு பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிட்டான். ஒரு தடவை கல்யாணம் ஆகியும் பொட்டிப் பாம்பா அடங்காம சுருசின்னு இன்னொருத்தியையும் இரண்டாம் தாரமா கல்யாணம் பண்ணிக்கிட்டான்...”
“உத்தானபாதன் யாரு மாமா?”
“அவன் ஒரு ராஜா. ஸ்வாயாம்பு மனுவோட பையன்... சுநீதி கர்ப்பமானாள். பின்னாலயே சுருசியும் கர்ப்பம் தரித்தாள்... உத்தானபாதனுக்கு இளையாள் மேலே பிரியம் ஜாஸ்தி... அவளோட அந்தப்புரத்திலேயே கிடந்தான். அப்படி கிடக்கும்போது ஒரு நாள் சுருசி கேட்டா... ராஜா.. இப்போ சுநீதியும் புள்ளையாண்டிருக்கா.. அவளுக்கு பிள்ளை பொறந்துதுன்னா அவ பையனைக்குதானே ராஜ்ஜியம்?”
“பொறக்கறது ஆம்பிளையா பொம்பளையான்னு அந்தக்காலத்துலேயே முன்னாடியே தெரியுமா மாமா?”
“இல்லடா... அதெல்லாம் தெரியாது.. சுருசி வம்பா கேட்டப்புறம்.. ராஜா என்ன பண்ணினான்... பொறக்கறத்துக்கு முன்னாடியே ஏன் நாம்ப அதைப் பத்திக் கவலைப்படுவானேன்னு... சுநீதிக்கு ஆம்பிளையாப் பொறந்தா காட்டுக்கு விரட்டி அடிச்சுடலாம்ன்னு சுருசிக்கு சமாதானம் சொன்னான்...”
“ஆம்பிளையே பொறந்திருக்குமே?”
“ஆமாம். சுநீதிக்கு துருவன் பொறந்தான்... பச்சக்கொழந்தைன்னும் பார்க்காமே.. உத்தானபாதன் ரெண்டு பேரையும் நாட்டி விட்டு அடிச்சுத் துரத்திட்டான். ரெண்டு பேரும் அழுதுண்டே காட்டுக்கு வந்து சில வருஷங்கள் இருந்தாங்க...”
“துருவன்னா? நட்சத்திரமா இருக்கான்னு சொல்லுவாளே.. அவனா?”
“ஆமாம். மேலே கேளு. துருவன் வளர்ந்து அஞ்சு வயசாச்சு. காட்டுல பசங்க கூட விளையாடிக்கிட்டே இருந்தான். தீபாவளி வந்தது. பசங்களெல்லாம் பட்டுக் கட்டிண்டு பட்டாசு வெடிச்சுது...”
“அப்பவே தீபாவளியெல்லாம் உண்டா?”
“ஒரு விசேஷம் வந்தது. தீபாவளின்னு வச்சுப்போமே..கதைக்கு இண்ட்ரெஸ்டிங்கா இருக்கும்..”
“சரி சொல்லுங்கோ..”
“அப்போ... துருவன் அம்மாக்கிட்டே ஒடிப்போயி.. எல்லோரும் பட்டு கட்டிக்கறா எனக்கும் வேணும்னு கேட்டான். உடனே சுநீதி.. அப்பா எங்கிட்டே பட்டு வஸ்திரம் வாங்க காசு இல்லேடா.. ஆனா உன்னோட அப்பாதாண்டா இந்த நாட்டுக்கு ராஜா.. அவர் கிட்டே போனா கிடைக்கும்னு சொன்னாளாம்..”
“பையன் நாட்டுக்கு ஓடினானா?
“ஆமாம். ஆனா அரண்மனைக்குள்ளே விடமாட்டேன்னு காவலாளியெல்லாம் தடுத்தானுகள். ராஜ சிசுன்னு அதோட முகக்களை சொல்லித்து. ஒரு வயசான காவலாளி.. டேய் இதைப் பார்த்தா ராஜகளையோட இருக்கு. இதுவே நாளைக்கு நமக்கு ராஜாவானாலும் ஆகும். உள்ளே அனுப்பிடுவோம். பின்னால பார்த்துக்கலாம்னு எல்லார்ட்டேயும் நைச்சியமாப் பேசி அரண்மனையோட சபா மண்டபத்துக்குள்ளே துருவனை அனுப்பிட்டான் ...”
“துருவன் போய் அப்பா ராஜாவைப் பார்த்தானா?”
“பிரம்மாண்டமான மண்டபத்துக்குள்ளே நுழைஞ்சான். உத்தானபாதன் பக்கத்துல சுருசி. ரெண்டு பேரும் பட்டு பீதாம்பரம் கட்டிண்டு பிரமாதமா உட்கார்ந்துருக்கா.. நடுவுல சோமாஸ்கந்தர் மாதிரி அவா பையன் உத்தமன் உட்காண்டிருந்தான். துருவன் இதைப் பார்த்துட்டு இருபது முப்பது படியேறி ராஜா பக்கத்துல உட்கார்ந்துக்க ஓடினான். உடனே சுருசி அவனைப் பிடிச்சு கீழே தள்ளினா... டமடமன்னு பதினைஞ்சு படி உருண்டு கீழே விழுந்தான் துருவன். எழுந்து நின்னுண்டு அப்பா பக்கத்துல நா உட்காந்துக்கணும்னு அதிகாரமா கேட்டான்...”
“பாவம் மாமா! சின்னப் பையன்..ச்சே... அவளும் ஒரு அம்மாதானே!”
“கேளு... துருவன் கேட்டத்துக்கு சுருசி.. காட்டுக்கு போயி நாராயணனை ஸ்தோத்ரம் பண்ணு. அவன் காட்சி கொடுத்தா.. என்னோட வயத்துல நீ புள்ளையா பொறக்கணும்னு வேண்டிக்கோ.. அப்ப பார்க்கலாம்னு விரட்டினாள்”
“கொழந்தை காட்டுக்கு வந்து அம்மாட்ட அழுதான். நாம என்ன தப்பு பண்ணினோம். என்னை ஏன் அரண்மனையிலிருந்து விரட்டினா?ன்னு விக்கி விக்கி அழுதான். அதுக்கு சுநீதி அழாதேப்பா.. நீ என் வயத்துல பொறந்து என் பாலைக் குடிச்சியோன்னா.. அந்தப் பாபம்டா இது.. நான் எந்த ஜென்மத்துல எந்த குடும்பத்தை பிரிச்சோனோ.. அது தொடர்ந்து வருதுடான்னு சொல்லிட்டு மூஞ்சில அறைஞ்சுண்டு அழுதா...”
“ரொம்ப வருத்தமா இருக்கு.. மாமா..”
“நான் என்ன பண்ணனும் இப்போ.. அந்த நாராயணன் எப்ப வருவார்னு கேட்டான் துருவான்.. அதுக்கு சுநீதி.. கொழந்தே நீ நிர்ஜனமானக் காட்டுக்குப் போயி தபஸ் பண்ணினா நாராயணன் வருவார்னு சொன்னா.. உடனே விறுவிறுன்னு நிர்ஜனமான காட்டுக்குள்ளே புகுந்து இப்ப எப்படி நாராயணனைக் கூப்பிடறதுன்னு யோசிச்சுண்டு நின்ன துருவனுக்கு நாரதர் காட்சிகொடுத்தார். அவர்கிட்டே துருவன் நாராயணனை எப்படிப் பார்க்கலாம்னு கேட்டார்... நாரதர்.. ஓம் நமோ வாசுதேவாய:ன்னு மூல மந்திரத்தை உபதேசம் பண்ணினார். அடுத்த கணமே தபஸை ஆரம்பிச்சானாம் துருவன்”
“அவ்ளோ குட்டிக் கொழந்தையா இருந்தாலும் பயமில்லையா துருவனுக்கு?”
“ஊஹும்.. அவம்மா பயப்பட்டாளாம். அவள்ட்ட நாராயணன் நாமம் சொல்லும் போது புலி சிங்கம் கரடியெல்லாம் என்னை நெருங்கிக் கடிக்குமான்னு தைரியம் சொல்லிட்டு தபஸை ஆரம்பிச்சார்... நாலு மாசமா பண்ணினார். அஞ்சாவது மாசத்துலேர்ந்து தபாக்கினி மேல் லோகத்தை சுட்டுப் பொசுக்க ஆரம்பிச்சது. எல்லோரும் நாராயணன் கிட்டே ஓடினாங்க.. யாரும் பயப்பட வேண்டாம். துருவனோட தபம்தான் இப்படி சுடறதுன்னு விஷ்ணு அபயம் அளிச்சார்..”
“தவம் பண்ணினா மேல்லோகம் பத்திக்குமா மாமா?”
“ஊஹும். வீரியம் அவ்ளோ பெரிசு. கால் அமுக்கி விட்டிண்டிருந்த லக்ஷ்மி விஷ்ணுவை ஏன் சுடறத்துன்னு கேட்டா. அதுக்கு நாராயணன் என்னோட பக்தன் ஒருத்தன் தபஸ் பண்றான். அதுதான் இவ்ளோ சூடா இருக்குன்னார். உங்க பக்தன் அங்கே பூஜை பண்ணும்போது உங்களுக்கு இங்கே என்ன வேலைன்னு கேட்டாள் லக்ஷ்மி. திருமால் விழிச்சார். தேவி மேலும் அவனுக்கு எவ்ளொ வயசாகறதுன்னு கேட்டாள். நாராயணன் சிரிச்சுண்டே அஞ்சு வயசுன்னார். லக்ஷ்மிக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்து அஞ்சு வயசேயான உம்ம பக்தன் அங்கே தபஸ் பண்றான்.. நீர் இங்க வந்து ஒய்யாரமாப் படுத்துண்டு பொழுதைக் கழிக்கிறேள்னு... திட்டினாள். “
“தாயார் தாயார் மாதிரிக் கேட்ருக்கா...”
“ஆமாம். அதுக்கு நாராயணன் அங்கே தபஸ் பண்றவன் ராஜாவோட பையன். நான் உடனே ஓடிப்போயி கவனிச்சா ஸ்வாமி கூட பணக்காரனா இருந்தா உடனே வரார்னு ஊர்மக்கள் நினைக்குமே...”
“கெட்டுது.”
“தாயார் சிரிச்சாளாம். புறப்படுங்கோன்னு பெருமாளை விரட்டினாள். அவர் வந்து துருவனுக்கு நெடுநாள் பூமியை ஆளும் வரம் கொடுத்தார்.”
“கதை முடிஞ்சுதா?”
“இப்பதான் சுவாரஸ்யமே இருக்கு.. தவத்தை முடிச்சிண்டு காட்டுலேர்ந்து வர்ற புத்ரனை வரவேற்க உத்தானபாதனும் சுருசியும் கூட எல்லையிலே காத்திருந்தாளாம். அவம்மா சுநீதியும் இருந்தாளாம். தவம் முடிஞ்சு வர்ற பையனைக் கட்டிக்கணும்னு வந்த சுநீதியை உதறினானாம் துருவன். தூக்க வந்த அப்பா உத்தானபாதனையும் தள்ளிவிட்டு..நேரே சுருசியின் கால்ல போயி விழுந்தானாம். அம்மா நீ என்னை பிடிச்சுத் தள்ளாட்டா.. எனக்கு நாராயணன் தரிச்னம் கிடைச்சிருக்குமான்னு அழுதானாம் துருவன்...”
“இப்படி சோதிச்சு ராஜாங்கம் குடுக்கறத்துக்கு பதிலா அப்பவே கொடுத்துருக்கலாமே”
”பக்தி எந்த வயசுலையும் வரலாம்.. அப்படி வந்து ஸ்வாமியை வேண்டினா... தாயார் குச்சிப் போட்டு அவரை நம்மகிட்டே அனுப்பி அருள்பாலிப்பாள். ”
கடைசி பஸ் அமைதியாக பஸ்டாண்ட் சென்றது. கோபுவிற்கு கண்ணில் லேசாகத் தூக்கம் எட்டிப்பார்த்தது. மாமா மொத்தமாக வெற்றிலையை வெளியே துப்பிவிட்டு கையோடு கொண்டு வந்திருந்த சொம்பிலிருந்து ஜலமெடுத்து வாய் கொப்பளித்தார்.
“குட் நைட் கோபு. நாளைக்கு வேற கதை.. சரியா?”
“தாங்க்ஸ் மாமா!”
பின் குறிப்பு: இன்னும் விஸ்தாரமாகச் சொல்லலாம். நேரமில்லை. மன்னிக்கவும்.

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails