Monday, October 23, 2017

குத்துக்கல் ஏறி பிச்சை கேட்காதே!

பட்டினத்துப்பிள்ளை ஒரு மண்டலம் மத்தியார்ஜுனம் என்று அழைக்கக்கூடிய திருவிடைமருதூரில் தங்கி.. சிவநாமா சொல்லி... தபஸ் பண்ணினார். தினமும் மனதை ஒருமுகமாகக் குவித்து மகாலிங்கத்தைத் துதிப்பார். அப்புறம் கொஞ்ச நாழில அப்படியே சமாதி நிலைக்குப் போய்விடுவார். இப்படி தினமும் நடக்கும். அப்போதைய ராஜா ஒருத்தன் நித்யமும் பட்டினத்துப்பிள்ளையிடம் ஆசீர்வாதம் வாங்க ஆவலா வருவான். முக்கால்வாசி நேரம் அவர் சமாதி நிலையிலே இருப்பார். பக்கத்துலேயே பொறுமையா நின்னு பார்த்துட்டு அரண்மனைக்கு போய்டுவான்.

ஒரு நாள் அவன் வர்ற வேளையில இவர் கண்ணைத் தொறந்துண்டு தேமேன்னு உட்கார்ந்திருந்தார். ராஜாவும் வந்து பக்கத்துலேயே நின்னுண்டிருந்தார். திரும்பி நம்பளைப் பார்த்து ஆசீர்வாதம் பண்ணுவார்னு நிக்கறான்..நிக்கறான்... அவர் கண் பார்வை எங்கேயோ நிலைகுத்தி இருக்கு. இவனைக் கடைசி வரைக்கும் திரும்பிப் பார்க்கவே இல்லை. ராஜாவுக்கு தான்னு அகங்காரம். மூக்கு மேலே கோபம் வந்தது. “இந்த தேசத்து ராஜா நா... இவ்ளோ நேரம் நிக்கறேன்.. என்னைத் திரும்பி பார்க்கலை. நீரும் உருப்படியா எதுவும் செய்யறா மாதிரி தெரியலை..இப்படி என்னையும் பார்க்காமே.. ஆசீர்வாதமும் பண்ணாமே.. என்னத்தை நீர் கண்டீர்?”ன்னு சுள்ளுன்னுக் கேட்டான். பட்டினத்துப்பிள்ளை “நான் உட்கார நீ நிற்கக் கண்டேன்”ன்னு மந்தகாசமாச் சிரிச்சாரம்.
இப்படி பல நாள் தபஸ்ல ஒரு நாள் அர்த்தஜாமத்துல சமாதிலேர்ந்து விழிப்பு வந்தது. சரீரத்துக்கு பலம் வேண்டி... சாப்பிடணும்னு தோணித்தாம். பிக்ஷை எடுத்து சாப்பிடலாம்னு வீதிக்கு போனார். அமாவாசை மாதிரி தெருவே இருண்டு கிடக்க... ஒரே ஒரு வீட்ல மட்டும் வெளக்கு எரிஞ்சது. கடகடன்னு குத்துக்கல் ஏறி படிதாண்டி ரேழி வரைக்கும் போயிட்டார். அங்கே தூண்ல சாஞ்சிண்டு கையை ஏந்திண்டு பிக்ஷைக்கு நின்னார். திடீர்னு அப்படியே சமாதிக்கு போயிட்டார். அந்த வீட்ல அப்பதான் திருடன் கொள்ளையடிக்க கன்னம் வச்சுட்டானு கொல்லைப்பக்கமா அஞ்சாறு பேர் துரத்திண்டு ஓடியிருக்கான். வாசல் திண்ணையில தூக்கம் வராம படுத்திண்டிருந்த பசங்களும் கிளம்பி கிழக்கு மேற்கா ஓடினான்கள்.
அப்படி ஓடிண்டிருந்த பசங்கல்ல ஒருத்தன் ரேழியைப் பார்க்கும் போது பட்டினத்துப்பிள்ளையைப் பார்த்துட்டான்கள். கையை நீட்டிண்டு சமாதில நின்னவரைப் பார்த்ததும் “டேய் எல்லோரும் ஓடிவாங்கோ... திருடன் ஆம்புட்டுனுட்டான்.. வந்து அடிங்கோடா...”ன்னு கூப்பாடு போட்டான். எல்லாருமா சேர்ந்து அடிச்சான்கள். அவர் வாயே பேசலை. எல்லாத்தையும் வாங்கிண்டார். கை ஓஞ்சு போனப்புறம் நிறுத்தலாம்னு சுத்தி நின்னு அடிச்சிண்டிருக்கும் போது அந்தக் கூட்டத்துல விவேகி ஒருத்தன் “டே.. இவ்ளொ அடி அடிக்கிறோம்.. அப்படியே நிக்கறானே.. யோகியா இருப்பானோ...”ன்னு சந்தேகம் கிளப்பினான். எல்லோரும் பயந்து போயி உடனே நிறுத்தினான்கள்.
தலையைக் குனிஞ்சுண்டே “எல்லாரும் அடிச்சு முடிஞ்சாச்சா?”ன்னு கேட்டார். ஒரு பயலும் வாயைத் திறக்கலை.
தனது வலதுகையால இடது முதுகுல பொளேர் பொளேர்னு அஞ்சாறு தடவை அறைஞ்சுண்டார். எல்லோரும் வச்ச கண் வாங்காம அவரையே பார்த்துண்டிருந்தான்கள்.
“இவ்ளோ வருஷத்துக்குப்புறமும்.. இந்த அர்த்தராத்திரிலே... மகாலிங்கம் எனக்கு என்ன பாடம் சொல்லிக்கொடுக்கறான்னா.. இனிமே குத்துக்கல் ஏறி பிச்சைக்கேக்காதேடா பாபின்னு....”ன்னு சொல்லிண்டே வீதியில இறங்கி விடுவிடுன்னு நடந்து போயிட்டாராம்.
பின்னால ஒரு நாள் அதே மகாராஜா அவரைத் தேர் கொண்டு வந்து அரண்மனைக்கு அழைச்சானாம். “நா இனிமே குத்துக்கல் ஏற மாட்டேன். வேணும்னா என் காலைக் கேட்டுக்கோ”ன்னு திரும்பி தபஸ் பண்ண ஆரம்பிச்சுட்டாராம்.
உள்ளுக்குள்ள சத் வஸ்துவைப் பார்க்கணும்னு வைராக்கியம் வந்தவனோட சரீரத்துக்கு சாப்பாடுன்னு ஒண்ணு வேணுமா?ன்னு ஆத்ம கேள்வியை எழுப்பிக் கொண்டு.... விடை தேடும்முன் சமாதி நிலையில் சிலையானார்.

அடிக்குறிப்பு: Inspired by Sri Anantharama Deekshithar's Discourse on Bhagavatha Sapthaagam!

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails