Monday, October 23, 2017

நியோகம்

ஐந்தாவது வேதமாகிய மஹாபாரதத்தை விதம்விதமான நடையில் கோணத்தில் பலர் எழுதியதைப் படித்திருக்கிறேன். எந்த புத்தக சந்தையிலும் தேடித் தேடி வாங்குகிறேன். மஹாபாரதம் எப்பவுமே விழி விரியச் செய்கிறது. துவாபர யுக மனிதர்களின் வாழ்வும் சமுதாய தர்மங்களும் அவைகள் காட்டும் வழிமுறைகளும் வாழ்வியலின் எழிலையும் அவலத்தையும் ஒருசேர பிரதிபலிக்கிறது. இன்று வரையில் எதனோடும் ஒப்புமைப்படுத்திப் பார்க்கும்படியான இளமையோடு இருப்பது இந்த இதிகாசத்தின் பெருமை. இப்படியெல்லாம் வாழலாமா? என்று நினைப்பதை விட ”இப்படியெல்லாமா வாழ்ந்தார்கள்!” என்ற நுட்பமும் நுணுக்கமும் லேசாகப் புரிகிறது.
புராண காலத்தில் காட்டிலும் நாட்டிலும் நாம் நடமாடினால் சந்திக்கும் மாந்தர்களைப் போல பீஷ்மர், கிருஷ்ண த்வைபாயணர், துரோணர், அஸ்வத்தாமன், பீமன், யுதிஷ்டிரன், அர்ஜுனன், திருதிராஷ்டிரன், கர்ணன், குந்தி, கிருஷ்ணன், பலராமன், ஜராசந்தன், கம்சன் என்று மஹாபாரதத்தின் அனைத்து கதாபாத்திரங்களையும் பக்கங்கள் எங்கும் எழுத்துரூபத்தில் உலவவிட்டிருக்கிறார் எஸ்.எல். பைரப்பா. 928 பக்க தலைகாணி சைஸ் பருவத்தில் 675ல் இருக்கிறேன். 110 வயதில் பீஷ்மர்108/109 வயதில் காட்டிலிருக்கும் ஆஷ்ரமத்தில் வசிக்கும் வியாசரைப் பார்த்து “நியோக முறை” தருமமா? அதர்மமா? என்று போர் துவங்குவதற்கு ஒரு நாள் முன்பு விஜாரிக்க வருகிறார்.
"நீதானே என்னைக் கூட்டி வந்து நியோகத்தின் விதிமுறைகள் சொல்லி பணிய வைத்தாய்?” என்று வியாசர் கேட்டுவிட்டு நியோகத்தின் விதிமுறைகளாக பீஷ்மர் சொன்னவற்றை எழுதியிருக்கிறார். இப்படி ஒரு முறை வியாசரின் முப்பாட்டன் வசிஷ்டர் கல்மாஷபாதன் என்ற அரசனின் மனைவிக்கு நியோக முறையில் வீரியதானம் செய்தார் என்கிற உபகதையும் வருகிறது. நியோக முறைக்கு பீஷ்மர் வியாசருக்கு நியமமாகப் பின்பற்ற வேண்டியவைகளை மட்டும் இப்போது பட்டியலிடுகிறேன். மொத்த புத்தகத்தையும் முடித்துவிட்டு என்னுடைய பார்வையை எழுதுகிறேன்.
1. நள்ளிரவு நேரமாக இருக்கவேண்டும்.
2. ஆண், பெண் இருவரும் உடல் முழுக்க நெய் தடவியிருக்கவேண்டும்.
3. இருவரிடையேயும் பேச்சு வார்த்தை ரொம்பவும் குறைவாக இருக்க வேண்டும்.
4. முழுக்க உணர்ச்சி வசப்படாமல், மருத்துவர் நோயாளியின் வாயைத் திறந்து மருந்தைப் புகட்டுவது போல இருந்துவிட்டு திரும்பவேண்டும்.
5. அவன் அவளையோ, அவள் அவனையோ திரும்பிப் பார்க்கக் கூடாது.
6. நியோகம் நடந்த பிறகு மனதில் கிஞ்சித்தும் மகிழ்ச்சியின் எண்ணம் இருக்கக்கூடாது.
7. ஒருவேளை அப்படி மனத்தில் ஏதாவது ஒரு எண்ணம் இருக்குமேயானால் அது அருவருப்பாக மட்டுமே இருக்க வேண்டும். 
8. தன் புலன்களையெல்லாம் ஆண் கட்டுப்படுத்தியிருக்கவேண்டும்.

ராஜா இல்லாத ஒரு தேசத்தைக் காப்பாற்றும் பொருட்டு க்ஷத்திரியர்களின் பழக்கமாக இருந்த நியோக முறையில் சந்ததி உற்பத்தி செய்துகொள்ளும் முறையை வெகு சுவாரஸ்யமாகவும் அழகாகவும் பைரப்பா எழுதியிருக்கிறார்.
அற்புதமான அபாரமானப் படைப்பு!!

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails