Saturday, May 9, 2015

ரம்மிய நடனம்

நூற்றுக்குத் தொன்னூறு சதவிகிதம் “சலங்கையிட்டாள் ஒரு மாது...”வை சிறுமியரும் “உலக வாழ்க்கை நடனம் நாம் ஒப்புக்கொண்ட பயணம்..”மை செந்திலகமிட்ட வீரச் சிறுவர்களும் ஆடி பள்ளி ஆண்டு விழா மேடையை ரணகளப்படுத்துவார்கள். ”வீய்ங்..வீய்ங்...” விசிலடிச்சான்குஞ்சுகளின் அழிச்சாட்டியம் தாங்கமுடியாது. சில சமயங்களில் ஃபோகஸ் லைட் படக் படக்கென்று கண் சிமிட்டும். பல சமயங்களில் கூம்பு ஸ்பீக்கர் “கூ...”வென்று பெருங்குரலெடுத்து காதைக் கிழித்து அலறும். சிலபல சமயங்களில் சலங்கையில் மாதுவும் ஒப்புக்கொண்ட பயணமும் “ழ்..ழ்...ழ்...”ழென்று ஸ்பீக்கர் நாக்கோடு இழுத்துக்கும்.

இவையெல்லாம் இல்லாத பாவராகதாளமான பரதநாட்டியக் கச்சேரியை இன்று சாயங்காலம் கண்டு களித்தேன். ராணி சீதை ஹால். கொஞ்சம் ஆசுவாசமாய் மூச்சு விட்டால் ஸ்பீக்கரில் ”ஸ்...”கேட்கிறது. ஒலியமைப்பு பிரமாதம். அறை மிதமான குளிரூட்டப்பட்டிருந்தது. சொற்ப ரசிகர்கள் ஆர்வமாயிருந்தார்கள். சீர்காழி சிவசிதம்பரம் சீஃப் கெஸ்ட். கணீர்த் தமிழில் பேசினார். கடைசியில் “மனித்த பிறவியும் வேண்டுவதே இம் மாநிலத்தே”வை நறுவிசாக ஆலாப் செய்தார். ”வர்ற ஆகஸ்ட்டில் கலாக்ஷேத்ராவில் என்னோட டான்ஸ் இருக்கு” என்று பேசிய சிக்கல் வசந்தியம்மாவுக்கு வயசு எழுபதாம். நடனமாடப்போகிறேன் என்கிற அவரது அறிவிப்பே என்னை மிரட்டி முட்டியை ஒரு தடவை பிடித்துவிடச்சொல்லிக் கேட்டது. நடிகை ஸ்ரேயா ரெட்டி கெஸ்ட்களில் நட்சத்திரம்.


முதலில் ஒரு அம்மாவும் பொண்ணும் சலங்கை பூஜை போட்டார்கள். அவர்கள் பெயரை மறந்ததற்கு வல்லாரை ஒரு மண்டலம் சாப்பிடலாம் என்று இருக்கிறேன். மன்னிக்க. முருகனின் மயில் வாகனம் போன்றும் பிள்ளையாரைப் போலவும் அபிநயம் பிடித்தது தத்ரூபமாக இருந்தது. பார்வையாளராக உட்கார்ந்து மகள் ஆடுவதை பார்க்கும் அன்னையர்கள் மத்தியில் அவரும் சேர்ந்து மேடையில் ஆடியது வியப்பூட்டியது. பாராட்டத்தக்கது. ஆடற்கலையை ஊக்கப்படுத்திய அவருடைய கணவருக்கு ஒரு ராயல் சல்யூட்.

நிகழ்ச்சி முழுவதையும் தொகுத்தளித்த கணேஷ் தீந்தமிழால் அசத்தினார். கந்தபுராணம், திருவாசகம், தேவாரம், ஊத்துக்காடு வேங்கடகவி என்று பலவிதமான செய்திகளை தங்குதடையில்லாமல் தந்து பார்வையாளர்களைப் பந்தாடினார். ஆட்டத்திற்காக சென்றாலும் இவரது பேச்சு ஆட்டத்தின் இடைவெளிகளை சுவையாக நிரப்பியது. நல்ல தமிழ் தொகுப்பாளர் வேண்டுவோர் இவரை அணுகவும். பக்கவாத்தியம் வாசித்தவர்கள் கர்நாடக இசைக்கச்சேரி செய்தார்கள். பாட்டா, பேச்சா, நடனமா என்று கச்சேரியின் இயல்பு மாறிக்கொண்டே இருந்தது இந்த நிகழ்ச்சியின் சிறப்பு. லீலாலயா நாட்டிய அகாதமியின் குரு திருமதி சந்திரிகா திருப்பதியின் ஏற்பாடுகள் பாராட்டத்தக்கது. நட்டுவாங்கத்தில் நடனமாடியவர்களை கட்டுக்குள் வைத்திருந்தார்.

Ravindran Narayanan னின் இரு புதல்விகளும் ஆனந்த நடனமாடினார்கள். பிள்ளைகள் ஆடுவதை பெருமிதமாக பார்த்தபடியிருந்தார் Srividhya Ravindran. க்ருஷ்ணன் பாட்டுக்கு கோலாட்டாம் ஆடிய விஜய்ஸ்ரீயின் கைகளில் அப்படியொரு நளினம். குழு நடனத்தில் தனியே தெரிந்தார். ரம்யஸ்ரீ இதில் சீனியர். ஓரிரு வருடங்களுக்கு முன்னர் வாணி மஹாலில் சலங்கை பூஜைக்கு குடும்பத்தோடு சென்றிருந்தேன். இப்போது ரம்யாவிற்கு நடனம் அகஸ்மாத்தாக வருகிறது. உலகம் என்ற பதத்திற்கு அபிநயம் பிடிக்கும்போது தலைக்கு மேலே கையை ரம்யா வட்டமடிப்பதில் பூமி சுழல்கிறது. சபாஷ்.

பரத முனிவர் பார்த்திருந்தால் பரவசப்பட்டிருப்பார். நாட்டியத் தாரகைகள் Ramyashri Ravindran னும் விஜய்ஸ்ரீயும் மேன்மேலும் மேடையேறி புகழ்பெருக தில்லையம்பலவானனை ப்ரார்த்தித்துக்கொள்கிறேன்! வாழ்க!! வளர்க!!

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails